Thursday, December 11, 2008

கவித் தேவனை வணங்குவோம்



குழந்தைகளுக்கு இரவு தூங்கப் போகும்முன் பாட வேண்டும் அல்லது கதை சொல்லவேண்டும். பொதுவாக தாலாட்டுப் பாடல்கள் எதையாவது டேப் ரிகார்டரில் குறைந்த ஒலியில் ஓடவிட்டுவிடுவேன் - இரண்டாவது பாடல் முடியுமுன் சின்னவள் தூங்கிவிடுவாள். நேற்று ரிகார்டரை இயக்கியதும் “பாட்டு வேணாம். கதை சொல்லு” என்று அடம் பிடிக்க, யதேச்சையாக நினைவு வந்து குழந்தைகளுக்கு இந்தக் கதையைச் சொன்னேன்.

“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம் - பேரு காந்திமதிநாதன்”

“ம்”

”அவனுக்கு யாராச்சும் அவனைப் பத்தி பாராட்டிக்கிட்டே இருக்கணுமாம். ஒவ்வொத்தரா வந்து ராஜாவைப் பத்திப் பாடி கிஃப்ட் வாங்கிக்கிட்டுப் போவானாம்”

“ம்“

“யாரோ பாரதியாராமே, நல்லா பாட்டெழுதுவாராமே, அவரைக் கூப்பிடுய்யா”ன்னு சொல்லி பாரதி அங்க்கிளை வரச் சொன்னானாம்”

இப்போது லேசாக விழிகள் விரிய, குறுநகை தவழ “ம்”

“முண்டாசு கட்டி, கோட்டு போட்டுக்கிட்டு, கம்போட உள்ள வந்தாராம் பாரதி அங்க்கிள்”

“ம்ம்”

“மீசையை முறுக்கிவிட்டுட்டு யாரு என்னை வரச் சொன்னது என்ன வேணும்?ன்னு கேட்டாராம்”

”ஹிஹி ம்”

“ஒடனே ராஜா என்னைப் பத்தி ஒரு பாட்டுப் பாடுன்னு சொன்னாராம்”

”ம்”

”ராஜா சொன்னா கேட்டாகணுமேன்னு பாரதி ஓகே சொன்னாராம். அவரு பாட்டு சொல்றதுக்குள்ள ராஜா வந்து - பாட்டோட கடைசில பாரதி சின்னப் பயல்னு முடிக்கணும்னு கண்டிஷன் போட்டாராம்”

“பயல்னா என்ன?” என்று அவள் கேட்க பெரியவள் குறுக்கிட்டு “குட்டிப் பாப்பா” என்று விளக்கினாள்.

“அப்புறம்?”

“பாரதி அங்க்கிள் பார்த்தாராம். ஓஹோ இந்த ஆளு நம்மை இன்சல்ட் பண்ணப் பாக்கிறாருன்னு தெரிஞ்சுக்கிட்டு பாட்டுப் பாடினாராம் - காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப் பாரதி சின்னப்பயல்-னு பாடி முடிச்சாராம்”

அவர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க நான் “பார்-னா என்ன?”

“பாக்கறது”

“அதின்னா அதிகம் - அதாவது ஜாஸ்தி, பெரியன்னு அர்த்தம்”

“சரி”

“இப்ப பாரதி சின்னப் பயல்ன்றத பிரிச்சு படிச்சா பார்+அதி சின்னப்பயல் - இங்க பாருங்கய்யா இந்த ராஜா ரொம்பச் சின்னப் பயல்-னு பாடிட்டார் - ராஜா தப்ப உணர்ந்து அபாலஜைஸ் பண்ணி கிஃப்ட் கொடுத்து மரியாதையா அனுப்பிச்சார்”

ரெண்டும் தூக்கம் கலைந்து கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டன! அமுக்கிப் படுக்க வைத்து பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ஆத்மா ஒலிக்கோப்பை ஒலிக்க விட்டு அவர்களை கண்களை மூடிக்கொள்ளச் சொல்லிவிட்டு நானும் சின்னவள் கட்டிலில் அமர்ந்து அவளைத் தட்டிக்கொண்டே கண்களை மூட

மழைக்காலம்.
மாலை நேரம்.
குளிர்ந்த காற்று வருகிறது.
மலைக்காற்று நல்லது.
கடற்காற்று மருந்து.
வான் காற்று நன்று.
காற்று தேவனை வணங்குவோம்
காற்றே வா, காற்றே வா
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு
மனதை மயக்குகின்ற இனிய வாசனையுடன் வா
காற்றே வா காற்றே வா

என்று ஆத்மாவை ஊடுருவிச் செல்லும் குரலில் பாரதியின் வரிகள் உடலில் ரத்தம் ஓடுவதைப் போல ஒவ்வொரு வார்த்தையாக உள்ளிறங்க உடல் சிலிர்த்தது - வெளியில் நிஜமாகவே மழையும் காற்றும் வீசியடித்துக்கொண்டிருக்க, அந்த அனுபவத்தை இதற்கு மேல் விவரிக்க இயலவில்லை.

காலையில் எழுந்ததும் மறுபடியும் அதே நினைவு - அட. இன்று பாரதியார் பிறந்த நாள்!

பிறந்த நாளில் அந்தக் கவித் தேவனுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம்!

***