Tuesday, September 07, 2004

மனதுக்குள் ஒரு பயணம் # 2

மனதுக்குள் ஒரு பயணம் # 2

தடித்த சிந்தனைகளின் வசப்படும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நாக்கு தடித்து வார்த்தைகள் குழறுவதுபோல், மனம் தடித்த தருணங்கள் உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருந்திருக்கும். அதென்ன தடித்துப் போன மனம்? ஆமாம். மனம் தடித்துத்தான் போகிறது சில சந்தர்ப்பங்களில். சாலை நிறுத்தத்தில் கையேந்தும் மழலையைப் பாராது புறக்கணித்துச் செல்கையிலும், பளீரிடும் கண்களுடன் நம்மையே குறுகுறுப்பாகப் பார்த்து, காதுகளை அசைத்து, துடிப்பாக வாலாட்டிக் காத்திருக்கும் நோஞ்சான் நாயைப் பார்த்துக்கொண்டே முழு வடையையும் தின்று, டீ குடித்துச் சாவதானமாகச் செல்கையிலும், செருப்பின்றி வயிறொட்டி பலவீனமான ரிக்க்ஷாக் காரனை அதட்டி அவனுடைய பலவீனமான ரிக்ஷா வண்டியில் அமர்ந்து கொண்டு செல்கையிலும், சாலையைக் கடக்கக் காத்துக் கொண்டிருக்கும் குருடரை முந்திக் கொண்டுச் சாலையைக் கடக்கையிலும், நமக்குக் காய்கறி விற்றுவிட்டு, கனமான கூடையை முயன்று, தடுமாறி, தலையில் ஏந்திச் செல்லும் வயதான பெண்மணியை கைகட்டி வேடிக்கை பார்க்கையிலும், ஆத்திரம் கண்ணை மறைக்க, சிறு தவறு செய்துவிட்ட குழந்தையைக் கன்னத்தில் அறைந்து, கனத்த விழிகளுடன் நம்மையே உதடு துடிக்க அது பார்க்கையில், ஆத்திரத்தை நியாயப்படுத்த தொடர்ந்து அதை முறைத்துப் பார்க்கையிலும், கையும் களவுமாகப் பிடிபட்ட தருணங்களில் பொய் சொல்லி சக மனிதனுக்கு அப்பொய் ஏற்படுத்தும் விளைவுகளைச் சற்றும் சிந்திக்காமல் தப்பிப்பதொன்றே குறிக்கோளாகச் செயல்பட்டு, அவன் விழிகளில் தெறிக்கும் உண்மையின் உஷ்ணத்தைச் சந்திக்கத் திராணியின்றி நிலம் பார்க்கையிலும் - இப்படி எத்தனை எத்தனை சந்தர்ப்பங்கள் -மனம் தடித்துத்தான் போய்விடுகிறது - நாம் அறிந்தே. அதன் மென்மையைச் சிறுகச் சிறுகக் கொன்று விடுகிறோம். மனத்தைக் கீழே தள்ளி மிதித்து மிதித்து உணர்வற்றதாக்கச் செய்யும் ஆணவமும், அகங்காரமும் நமக்குள்ளே எக்களித்துச் சிரிப்பதை நமது முகம் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். நம்மீது மண்டும் வெறுப்பை சுண்டுவிரலால் சுட்டி எறிந்துவிட நமக்கு இலகுவாக முடிகிறது.

அவன் எனது நண்பன். நடந்து செல்லும் யானையைச் சுற்றி அதன் அணிகலன்கள் எழுப்பும் ஓசைச் சத்தம் போன்று, அவனை நாங்கள் சுற்றிக் கொண்டு ஓசையெழுப்பிக் கொண்டிருப்போம். ஆனால் கவனம் பெறுவதென்னவோ அவன் தான். நாங்களில்லாவிட்டாலும் அவன் கவனம் பெறுவான் என்பது எங்களுக்குத் தெரிந்தேயிருந்தது. ஆகையால் எங்களால் அவனின்ல்லாமல் ஓசையெழுப்ப முடிந்ததில்லை. நாங்கள் ஓசை எழுப்பினால் ஆரம்பத்தில் கவனம் பெற்றாலும், அவனில்லை என்பதை கவனிப்பாளர்கள் உணர்ந்துகொண்ட அடுத்த வினாடியில் நாங்கள் பெற்ற கவனம் காற்றில் கரைந்துவிடும். இது இன்னும் அபாயம். அடுத்தமுறை நாங்கள் என்னதான் சத்தமாக ஓசையெழுப்பினாலும், அவர்கள் அவனில்லை என்று அனுமானித்துக்கொண்டு ஒரேயடியாக எங்கள் ஓசையைப் புறக்கணித்துவிடுவார்கள். அவர்களின் அப்புறக்கணிப்பு அவனுக்குரியதல்ல என்பதை அவன் உணர்ந்தேயிருப்பதால், அது அவனை வருந்தச் செய்வதில்லை என்பது இன்னும் கூடுதல் சோகம் எங்களுக்கு.

யானையின் உள்ளங்கால்களை நீங்கள் யாராவது வருடிப் பார்த்ததுண்டா? யானையின் மேல் கால்களைப் பரப்பி அமர்கையில் அதன் கூரிய முடிகள் உங்கள் தொடைகளைப் பதம் பார்த்ததுண்டா? அழகிய சிவந்த நாசித் துவாரத்திற்கப்பால் பாதாளமாய் ஓடும் தும்பிக்கையிலிருந்து வினாடிக்கும் குறைவான நேரத்தில் குபீரென்று பீறிட்டு அடிக்கும் தண்ணீரை முகத்தில் வாங்கிக்கொண்டதுண்டா? கால் பந்து அளவிலிருக்கும் சோற்றுருண்டையைக் கீழே விழுந்து விடாமல் கவனமாய் ஏந்தி அதன் செவ்வாய்க்குள் ஊட்டியதுண்டா? அதன் வாய்க்குள் சட்டெனத் தோன்றி மறையும் பெருங் கல்லின் அளவான பற்களைப் பார்த்ததுண்டா?

அதன் சீரற்ற கோடுகள் நிறைந்த தடித்த தோல் மடிப்புகளில் வழி தொலைந்து அலைந்து கொண்டிருக்கும் எறும்பினைப் பார்க்கிறேன். கட்டெறும்பு யானையை மிரண்டு ஓடச்செய்யும் என்பார்கள். இது மெல்லிய, கடிக்காத கருமையான சிற்றெறும்பு.

பூக்கூட்டம் போல ஓடிக்கொண்டிருக்கும் 'பிள்ளையார் எறும்பு'. சாரைசாரையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. என்னே சுறுசுறுப்பு! நான் அதைக் கூர்ந்து கவனிக்கிறேன். சில எறும்புகளின் முகத்தில் வெண்மை நிறத்தில் துருத்திக்கொண்டிருக்கும் உணவுத் துகள். சீரான, சுறுசுறுப்பான இயக்கத்தை அவை தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றன. என் வீட்டில் வாசலிலிருந்து கிளம்பி நேராக எதிரே இருக்கும் பெருமாள் கோயில் வெளியே பந்தலைத் தாங்கி நிற்கும் அந்த மூங்கிலின் பாதத்தில் சரணடைந்து கொண்டிருக்கின்றன. மாவிலைத் தோரணத்திலும், வாழை மரத்திலும் சாரிசாரியாக எறும்பு வரிசைகள். தெருவில் ஆள் நடமாட்டமில்லை. என் மனதில் இப்போது திடீரென்று பெருங்கவலை குடிகொண்டுவிட்டது. தெருவில் நடமாட்டம் நிகழும்போது இவை மிதிபட்டு, அறைபட்டுச் சாகும். கூட்டம் கூட்டமாக நசுக்கப்படும். தெருவில் கடந்துபோகும், மனிதர்களின், பிராணிகளின், வாகனங்களின் அடியில் நசுங்கிச் சாகும். எறும்பின் ஆயுசு எவ்வளவு நாள்கள் என்று யாரிடமாவது கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தெரு இன்னும் பரபரப்பாக இயங்கத் தொடங்கவில்லை. சாலையின் குறுக்கே ஓடும் அவற்றின் வழித்தடத்தை எப்படி மாற்றுவது என்று யோசித்தேன். நேரம் கடந்துகொண்டிருந்தது. தெருவில் சென்ற ஒருவனது கால்கள் வரிசையைக் கடந்த போது நான் மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டேன். அவை எறும்புகளைத் தொடாமல் தாண்டியபோது நிம்மதி பெருமூச்சுவிட்டேன். அடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தெரு முக்கில் தோன்றிய சைக்கிள் என் வீட்டைத்தாண்டிச் சென்றபோது வரிசையில் சலசலப்பு. நான் மெதுவாக எழுந்து சைக்கிள் சக்கரத்தின் பதிவை கவனித்தேன். சில எறும்புகள் அசைவற்றுப் புதையுண்டிருக்க, சில பாதியுடல்கள் புதைந்திருக்க மீதி உடல்களுடன் அல்லாடிக் கொண்டிருந்தன. இரு புறமும் அலைபாய்ந்தன எறும்புக்கூட்டம். சில வினாடிகள்தான். வரிசை மீண்டும் சேர்ந்து இயக்கம் பெற்றுவிட்டது. திரும்ப வந்து அமர்ந்தேன். இம்முறை கடந்தது ஒரு நான்குசக்கர வாகனம். இப்போது எனக்கு வரிசையே தெரியவில்லை. படுகொலை நிகழ்ந்த மைதானம் போன்ற அமைதி. சற்றே கூர்ந்து பார்க்கையில் கூட்டம் கூட்டமாக உடல்கள். ஆங்காங்கே படுகாயங்களுடன் அசைய இயலாது, ஒலியெழுப்பாது அல்லாடும் எறும்புகள். சக்கரங்களுக்கு மாட்டாது தப்பிப் பிழைத்தவை நகராமல் திகைத்து நிற்கின்றன. அதன் தலைகள் அங்குமிங்கும் தேடியலைய எனக்கு ஆயாசமாக இருந்தது. கையாலாகாத நிலையை எண்ணிச் சினம் எழுந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் சோகையானதொரு வரிசை உருவாகி மெதுவான இயக்கம் நிகழ நான் கவனத்தைத் திசை திருப்பினேன். இப்படி எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்கள் சத்தமின்றிப் பிரிகின்றன ஒவ்வொரு நொடியும் என்று நினைத்துப் பார்க்கிறேன். சிந்தனையிலாழ்கிறது என் மனம். நேரம் போனதே தெரியவில்லை. எறும்பு வரிசையைக் கவனித்த அடுத்த வினாடி திண்ணையிலிருந்து எழுந்து வீதிக்குச் சென்று கைகளை இருபுறமும் வீசி, அங்கு போக்குவரத்தைத் தடை செய்ய உரத்து என்னை அலற விடாமல் செய்தது எது என்று கேள்வி எழுப்பிக் கொண்டேன். அதைச் செய்வதால் அவர்கள் கேலி செய்வார்கள் என்ற வெட்கமா? அல்லது எனக்கு எதுவும் பேரிழப்பு நிகழ்ந்திருக்குமா? அந்த எச்சரிக்கையை எழுப்ப எனக்கு அதிக நேரமோ முயற்சியோ வேண்டியிருந்திருக்காது. நூற்றுக்கணக்கில் உயிர் நீத்துவிட்ட எறும்புகளைக் கட்டாயமாகக் காப்பாற்றியிருக்க முடியும். ஏன் செய்யவில்லை என்ற என் கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதி காக்கிறது என் மனம். இல்லையில்லை. நான் கேட்ட கேள்வியையே அது காதில் வாங்கிக்கொள்ளாமல் தடித்துப் போய் சுரணையற்றிருக்கிறது.

தெருவில் பையன்கள் குதித்து குதித்து விளையாடுகிறார்கள். என் கவனம் எறும்புகளிலிருந்து விலகி அவர்கள் மீது திரும்புகிறது. பையன்கள் குதூகலமாகவும், சுறுசுறுப்பாகவும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தெருவில் ஆங்காங்கே புதைந்திருக்கும் சிறு கற்களை அடிப்படையாக வைத்து அவர்கள் விளையாடுகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு குச்சி. பத்துப் பேர் கொண்ட அந்தக் குழுவில் ஒவ்வொருவனுக்கும் ஒரு முறை வைத்துக்கொண்டு மற்ற ஒன்பது பேரும் தெருவில் ஆங்காங்கே தென்படும் கல்லின் மீது குச்சியை வைத்துப் பரவி நிற்கிறார்கள். சட்டென்று இடம் மாற்றி வேகமாக ஓடி, பிடிக்கப்படும் முன் இன்னொரு கல்லின் மீது குச்சியை ஊன்றிக் கொள்கிறார்கள். அதற்குமுன் பிடிபட்டுவிட்டால், பிடித்தவன் கையில் குச்சியைக் கொடுத்துவிட்டு பிடிபட்டவன் மற்றவர்களைத் துரத்தவேண்டும். விளையாட்டு சூடு பிடித்துவிட்டிருந்தது. யானை வந்து கொண்டிருக்கிறது மணியோசையுடன். பாகன் யானையைக் கண்டுகொள்ளவே இல்லை. அதன் காதில் அங்குசத்தை மாட்டி வைத்துவிட்டு மூன்றாம் வீட்டுப் பண்ணையாரிடம் இறைஞ்சி பேசிக்கொண்டிருந்தான். அவன் முதுகும் யானையைப் போலவே வளைந்திருந்தது. அவன் இன்னும் வளைந்து கைகளைக் குவித்து வணக்கம் சொல்லிக்கொண்டிருக்க, பண்ணையார் பெரும் வயிற்றைச் சிரமப்பட்டுச் சுமந்துகொண்டு அவனை ஏறிட்டும் பார்க்காது எதிரே எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நீலம் கலந்து துவைத்த வேட்டியை அணிந்து மேலே துண்டு மட்டும் போர்த்தியிருந்தார். விரல்களிலும்,கழுத்திலும் தங்கம் மின்ன நெற்றியை திருநீறு ஆக்கிரமித்திருந்தது. பாகன் இப்போது கொஞ்சம் நம்பிக்கை இழந்திருந்தான் போல. திரும்ப எத்தனித்தவன் பண்ணையார் பின்புறம் இருந்து வெளிப்பட்ட அவர் மனைவியைக் கண்டு நின்றான். அப்பெண்மணி கையில் மரக்காலும் அதில் நெல்லும் இருக்க, துண்டை விரித்து நீட்டி அதை வாங்கிக்கொண்டு, இன்னும் குனிந்து பின்னால் நகர்ந்து வெளிவந்தான்.யானை இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தா என்று தெரியவில்லை. அதற்கு அதன் கண்ணில் மொய்த்துக்கொண்டிருந்த ஈக்களையும் கொசுக்களையும் விரட்டுவதே பிரதானமான வேலையாக இருந்தது. இப்போது பையன்களில் சிலர் அதன் பக்கவாட்டிலும் பின்புறமாகவும் வந்து தைரியமில்லாமல் குச்சிகளால் அதைத் தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். யானையின் வாலசைவிலும் தும்பிக்கை அசைப்பிலும், தலையின் குலுக்கல்களிலும் அவர்கள் பயந்து சிதறி, திரும்பக் கூடினார்கள். பாகன் அடுத்த வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தான். அழுத்திக் குத்திய பையனது கையிலிருந்து சட்டென்று யானை குச்சியைப் பிடுங்கிச் சுழற்ற அவன் அதிர்ச்சியின் உச்சத்தில் அலறிக் கீழே விழுந்து புரண்டு முழங்கால்களிலும் கைகளிலும் சிராய்ப்புகளைப் பெற்றுக்கொண்டு எழுந்து தலைதெறிக்க ஓட அவனைத் தொடர்ந்து மற்ற பையன்களும் ஏக இரைச்சலுடன் ஓட, அந்தக் களேபரத்தில் யானை 'ப்ர்' என்று ஒரு முறை பிளிற பாகன் திடுக்கிட்டுத் திரும்பினான். ஆங்காங்கே வீடுகளிலிருந்து தலைகள் வெளியே நீண்டு வேடிக்கை பார்த்தன. அவன் கண்களுக்கு ஓடிக்கொண்டிருந்த பையன்களும், யானையின் தும்பிக்கையில் ஊசலாடிக் கொண்டிருந்த குச்சியும் தென்பட, ஆத்திரமடைந்தான். விடுவிடுவென்று யானையை நெருங்கி, அக்குச்சியைச் சுலபமாக கையில் வாங்கி, அதன் தும்பிக்கையில் கடுமையாக அடித்தான். தும்பிக்கையைச் சுழற்றிக் கொண்டிருந்த யானை, அதன் உள்புறத்தில் குச்சியடி ஒரு முறை பட்டதும், உதறிப் பின்னால் நகர்ந்தது. பாகன் இன்னும் கடுமையாக அதை அடித்து, அங்குசத்தைக் கீழ் நோக்கி இழுத்தான். யானை இயக்கங்களை நிறுத்திச் சிலையாக நிற்க, பாகன் இன்னும் ஆத்திரம் தீராமல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான். பின்பு பயணத்தைத் தொடர்ந்து தெருவைக் கடக்கும்வரை பையன்களில் ஒருவரும் அவரவர் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருக்க பாகனுக்கும் யானைக்கும் காசோ நெல்லோ பழங்களோ பின்பு கிட்டவில்லை. யானையின் உள்ளங்காலைப் போன்று தடித்துப் போய் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த என் மனதை வெறுத்தேன்

வீட்டினுள்ளிருந்து அழைப்புக் குரல் கேட்க, சிந்தனை கலைந்து சட்டென எழுந்து உள்ளே சென்றேன், உள்ளங்கைகளில் ஒட்டிக் கொண்டிருந்த எறும்புகளின் நசுங்கிய உடல்களை ஊதிவிட்டுக்கொண்டு.

என்றாவது யாரிடமாவது இம்மாதிரி மனம் தடித்தத் தருணங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள தைரியம் இருக்கிறதா எனக்கு என்று என்னை நானே ஒருமுறை, வாழ்நாளில் ஒருமுறையாவது கேட்டுக்கொள்ள வேண்டும் - நம் மனம் தடித்ததாக இல்லாதிருக்கும் ஏதாவதொரு சமயத்தில் - என்று நினைத்துக் கொள்வேன்.

No comments: