Sunday, September 12, 2004

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி - "அப்பாவியின் கனவு"

*** ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி -அப்பாவியின் கனவு ***

முன்னுரை:

சிறு வயதில் மாஸ்கோ பதிப்பகம் பால் வெண்மைக் காகிதங்களை வாசனை பிடித்துக் கொண்டு நிறைய கதைகள் படித்திருக்கிறேன். அவ்வயதிலிருந்தே ரஷ்ய மொழிபெயர்ப்புக் கதைகள் மீது பெரும் ஈர்ப்பு எனக்கு உண்டு. கதைகளை வாசித்து இன்புறுவது தவிர அதை இலக்கியம், உலக்கியம் என்றோ அவர் இலக்கியவாதி இவர் இலக்கிய வியாதி என்றோ எந்த வகைப் படுத்துதல்களும் இல்லாத வாசிப்பு மட்டும் நோக்கமாய்க் கொண்ட எளிமையான வாசகனாகவே இருந்தேன். இருக்கிறேன். ரஷ்யா என்றாலே கடும் பனிப் பொழிவுக் காலங்களும், ஸ்லெட் வண்டிகளும், பைன் மரங்களும், தோல் ஆடை, தொப்பியணிந்த மனிதர்களும், புசுபுசுவென்ற நாய்களும் பூரிக் கன்னங்களுடன் குழந்தைகளும், கருப்பு வெள்ளை ஓவியப் புகைப்படங்களும் நினைவுக்கு வரும் வகையில் இக்கதைகளின் பாதிப்பு சிறுவயதிலிருந்தே என்னில் உண்டு. தமிழில் வெளிவந்துள்ள தலைப்புகள் நினைவில்லாத பல ரஷ்ய கதைகளைப் படித்திருக்கிறேன். அவற்றை எழுதிய எழுத்தாளர் பெயர் எதுவும் நினைவிலில்லை. ஆனால் கதைகள் நினைவிலிருக்கின்றன. மாறுதலாக எழுத்தாளர் பெயர் நினைவிலிருந்து அவர் எழுத்துகளை நினைவு வைத்துக் கொள்ள முடியாத தவித்ததும் உண்டு. அதில் முதன்மையானவர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி. அவர் ருஷ்ய இலக்கிய உலகின் மாபெரும் எழுத்தாளர் என்று பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன். அவர் எழுத்துகளை நினைவுறுத்திக் கொள்ள முடியவில்லை என்று சொன்னேன். உண்மைதான். அவரது புத்தகங்களை - ரஷ்யக் கதை என்ற ஒரே காரணத்திற்காகவே - படித்தது மிகச்சிறு வயதில் - பதிமூன்று அல்லது பதினான்கு வயதிருக்கலாம். அவ்வயதுச் சிறுவர்கள் படிக்கும் எழுத்துகள் அவரது எழுத்துகளில்லை என்று இப்போது மறுவாசிப்பின் போது தெரிகிறது. அப்படியே படித்தாலும், அவ்வெழுத்துகளின் முழு வீச்சையும் உணர்ந்து கொண்டிருக்க முடியாது என்றே நான் இன்றும் கருதுகிறேன். தீவிர இலக்கியங்களை குமுதம், விகடன் மாதிரி போகிற போக்கில் படித்துக் கொள்ள என்னால் முடியவில்லை. என்னைப் பொருத்தவரை நான் இவ்வகைப் படைப்புகளைப் படித்து உணர்ந்து கொள்ள மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. சடசடவென்று படித்துக் கொண்டு பக்கங்களை என்னால் புரட்டிக் கொண்டு செல்ல முடியவில்லை. மிகுந்த பொறுமையுடன், இடையூறுகெளெதுவும் இன்றி, ஒவ்வொரு வார்த்தையும் படித்து, பலமுறை மறுபடியும் மறுபடியும் படித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இம்மாதிரியான தீவிர எழுத்துகளில் வரும் ஒரு கதையை படிக்கும் நேரத்தில் ஒரு பத்து ஜனரஞ்சகக் கதைகளை வாசித்துவிடுவேன். இல்லாவிட்டால், விடுமுறைக்காக ஊருக்குச் சென்று மஸ்கட் திரும்பும் போது பெட்டியில் பாதியிடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் பழைய குமுதம், விகடன் புத்தகங்களில் பாதியை படித்து முடித்து விடுவேன் (சமீப காலமாக இம்மாதிரி பழைய இதழ்களை அள்ளி வரும் வினோத பழக்கத்தின் காரணமாக என்னை 'பழைய பேப்பர்க் காரன் வந்துட்டான்யா' என்று ஊரில் கேலி செய்கிறார்கள்). "ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும்" என்ற - இருபது வருடங்களுக்கு முன்பு வாங்கிய - புத்தகம் கண்ணில் பட்டது. 'ஆஹா. பள்ளியில் படிக்கும் போது வாசித்ததாயிற்றே. என்ன படித்தோம் என்று மறந்து விட்டதே" என்று எடுத்து வாசித்ததில் முந்தைய வாசிப்பில் புரியாத பல பரிமாணங்களை விளங்கிக் கொள்ள முடிந்தது. எழுத்திலும் நடையிலும் உள்ள வித்தியாசங்களை இனம் கண்டு கொள்ள முடிந்தது. இந்த வாசிப்பனுபவத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ·ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளையும், குறு நாவல்களையும் குறித்து ஒரு சிறு வரைவுக் கட்டுரை - உங்கள் பார்வைக்கு.
"அப்பாவியின் கனவு"
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல, மேட்ரிக்ஸ் திரைப்படத்தை இப்போது உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறென். தாவிக் குதிக்கையில் அந்தக் காட்சியை உறையச் செய்து, பலப்பல கோணங்களில் காட்டுவார்கள். அந்த ஒரு மைக்ரோ வினாடியில் அந்த இயக்கத்தின் நிலையைக் காட்டுவார்கள். பிரதான பாத்திரத்தோடு அதைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் பல பாத்திரங்கள், பொருள்கள் என பலவற்றின் இயக்கத்தையும் நிறுத்தி மொத்த உலகத்தையும் அந்த ஒரு மைக்ரோ வினாடி நிறுத்திக் காட்டுவார்கள். நாமும் சற்று கடிகாரத்தை நிறுத்திவிட்டு திரையில் நிலைபெற்றிருக்கும் ஒவ்வொன்றையும் ஆற அமர கவனித்துப் பார்த்து உள் வாங்கிக் கொள்ளலாம். 'அப்பாவியின் கனவு' படிக்கும் போது பல முறை மாட்ரிக்ஸ்ஸில் வரும் உறைந்த காட்சிகளைப் போன்று, உறைந்த காட்சிகளை நிதானமாகப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 'கவனிப்புத் திறமை'க்குச் சவால் விடும் புற இயக்கங்களின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுத்து ஒரு எழுத்தாளனானவன் எந்த அளவிற்கு உள்ளும் புறமும் இயக்கங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதை ஜே.ஜே. சில குறிப்புகள் படித்தபோது விளங்கிக்கொண்டேன். ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துகளைப் படித்தபோது உறுதிப்படுத்திக் கொண்டேன். இரண்டும் வேறுவிதமான எழுத்துகள் - வேறுவித பின்புலன்களில் எழுதப்பட்டவை. இப்போது 'அப்பாவியின் கனவு'க்கு வருவோம். அப்பாவியின் கனவு ஒரு புனைகதை. என்ன கதை என்று சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் 'இவ்வுலகத்தின் துயரங்களையும், துன்பங்களையும் பார்த்து மனம் வெறுத்த ஒருவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து மேசை மீது தோட்டா நிரப்பிய கைத் துப்பாக்கியைத் தயாராய் வைத்துக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதையும், அதற்கு முன்பாக அவன் வாழ்ந்திருக்கும் வாழ்க்கையைப் பற்றியும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் உறங்கி, ஒரு கனவு காண்கிறான். அது ஒரு அற்புதக் கனவு. அதில் அவன் இன்னொரு உலகைக் காண்கிறான். துயரங்களில்லாத, துன்பங்களில்லாத மகிழ்ச்சியான உலகு அது. இருங்கள். சொர்க்கத்தைச் சொல்லவில்லை. அதுவும் ஒரு பூமிதான். அதிலும் அவன் இருக்கிறான். இவ்வுலகில் இருப்பது போன்றே அவ்வுலகிலும் மனிதர்களும், விலங்கினங்களும், பறவையினங்களும், செடிகொடிகளும், மலைகளும் பள்ளத்தாககுகளும், கடல்களும், நதிகளும் நிரம்பியுள்ளன. ஆனால் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கும் உலகம் அது. ஒருவருக்கொருவர் அன்பு காட்டிக் கொண்டு ஆதரவாக இருக்கும் உலகம் அது. கவலை என்றால் என்னவென்றே தெரியாத உலகம் அது. அக்கனவு கலைந்து விழிக்கும் அவன் திடுக்கிட்டு, வாழ வேண்டிய, வாழ்ந்து மற்றவர்களிடம் அன்பு காட்ட வேண்டிய அவசியத்தை, அப்படி வாழ்வதன் மூலம், கனவில் கண்ட பொற்காலத்தை இந்த உலகமும் அடைந்து விடும் என்ற நிதர்சனத்தை, தீர்க்க தரிசனத்தை, உணர்ந்து, மேசை மீதிருக்கும் துப்பாக்கியைத் தட்டிவிட்டு, கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, வாழும் உத்வேகத்துடன் எழுகிறான்'. இதுதான் அப்பாவியின் கனவு என்ற கதை. ஆனால் இதை இப்படிச் சாதாரணமாகக் குறிப்பிட்டுவிடமுடியவில்லை. இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
கதை முழுதும் தற்கொலை செய்ய முடிவெடுத்த அம்மனிதனின் சிந்தனைகளே வியாபித்திருக்கின்றன.
"இந்தப் பூமியில் வாழ்கின்ற திறமையை இழந்துவிடாமலேயே மனிதர்கள் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தீமையே மனிதனின் இயற்கையான நிலைமை என்பதை நம்ப முடியாது, அதை நான் நம்ப மாட்டேன்" என்ற வரிகளில் எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வியல் நடைமுறைகள் குறித்த அவரது அதீத நம்பிக்கை பிரதிபலிக்கிறது. தன்மை ஒருமையில் எழுதும்போது இது ஒரு வசதி. புனைக் கதையாகவே இருந்தாலும், முற்றிலும் புனையப் பட்டதாக இல்லாமல், நெடுகிலும், எழுத்தாளனது அனுபவங்களையும், சித்தாந்தங்களையும், நம்பிக்கைகளையும் கதையின் பாத்திரங்கள் மூலமாக வாசகர்களிடம் சேர்ப்பித்து விடுவதோடு அல்லாமல், வாசிப்பவனையும், அதிலும் எழுத்தாளரது அலைவரிசையை ஒத்த அலைவரிசை கொண்டவனாக இருக்கும் பட்சத்தில், அதில் அமிழச் செய்து விடுவது சுலபமாகி விடுகிறது.
ஆரம்பத்தில் ஏகப்பட்ட கழிவிரக்கச் சிந்தனைகளுடன் கதை துவங்குகிறது. "நான் ஒரு அப்பாவி. அவர்கள் இப்பொழுது என்னைப் பைத்தியக்காரன் என்று கூறுகிறார்கள். நான் எப்பொழுதும் போல் அவர்களுக்குக் கோமாளித் தனமாகத் தோன்றாமலிருந்தால் அது எனக்குப் பதவி உயர்வாக இருக்கும் - ஆனால் நான் இனிமேல் அதைப் பொருட்படுத்துவதில்லை - அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தால் கூட இப்பொழுது அவர்கள் எல்லோருமே எனக்கு மிகவும் வேண்டியவர்க்ள் - ஏதோ ஒன்று அப்பொழுது தான் அவர்களை எனக்கு மிகவும் நெருக்கமாகச் செய்கிறது என்பது உண்மையே. நான் அவர்களோடு சேர்ந்து சிரிப்பேன் - என்னைப் பார்த்து அல்ல, அதாவது அவர்களை நான் நேசிப்பதால் - அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நான் மிகவும் வருத்தமடையாதிருந்தால் நானும் சிரிப்பேன். உண்மை என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அது எனக்குத் தெரிகிறது. ஓ! உண்மையைத் தெரிந்த ஒரே ஒரு நபராக இருப்பது எவ்வளவு கஷ்டமானது! ஆனால் அவர்கள் இதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். இல்லை, அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். நான் ஒரு அப்பாவி மாதிரி தோன்றுவது எனக்கு அதிகமான வருத்தத்தைக் கொடுப்பதுண்டு. அப்பாவி மாதிரியல்ல, நான் அப்பாவிதான். நான் எப்பொழுதுமே அப்பாவியாகத்தான் இருந்து வந்திருக்கிறேன், நான் பிறந்த நாளிலிருந்தே அது எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்"
"நான் எப்படிப்பட்ட அப்பாவி என்பது உலகத்துலுள்ள எல்லாரையும் காட்டிலும் எனக்குத்தான் மிகவும் நன்றாகத் தெரியும் என்பதை அவர்களில் எவரும் அறிந்திருக்கவோ, ஊகித்திருக்கவோ மாட்டார்கள். அவர்களுக்கு இது தெரியாது என்ற உண்மைதான் என்னை மிகவும் அதிகமாகப் புண் படுத்தியது. ஆனால் அதற்கு நானே முற்றிலும் பொறுப்பு. நான் எப்பொழுதுமே மிகவும் ஆணவத்தோடியிருந்தபடியால் இந்த உண்மையை நான் எவரிடத்திலும் ஒத்துக் கொள்வதில்லை. வருடங்கள் உருண்டோடியபோது என்னிடத்தில் ஆணவமும் பெருகியது. நான் ஒரு அப்பாவி என்பதை எவரிடமாவது ஒத்துக் கொள்வதற்கு நான் என்னை அனுமதித்திருந்தால் அந்த இரவிலேயே என் தலையில் சுட்டுக் கொண்டு செத்துப் போயிருப்பேன் என்று நம்புகிறேன்."
தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவனின் மனத்தில் அலைபாயும் எண்ணங்களை அற்புதமாக எழுதியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. கடலின் கொந்தளிப்பைப் போல கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனத்தின் சீரற்ற சிந்தனைப் படலங்களை, பல பரிமாணங்களில் சொல்கிறார். ஒவ்வொரு வாக்கியத்தையும் சில முறை இரண்டு தடவை படிக்க நேர்ந்ததற்கும் இதுவே காரணம். வாசித்து வரும் போது நம்முள் கோர்வையாக விரிந்து படரும் புரிந்து கொள்ளலுக்குச் சவாலாக சட் சட்டென்று சிந்தனை மாறுகிறது - கிளைகிளையாகத் தாவிச்செல்லும் குரங்கைப் போல, வழித்தடத்தை, திசையை சட்டென மாற்றிப் பறக்கும் தட்டானைப் போல, பறக்கும் பாதையைத் தொடர்ந்தால் கண் வலிக்கச் செய்யும் வெளவாலின் பறக்கும் தடம் போல. அதைப் பிடித்துக் கொண்டு கூடவே தொங்கிச் செல்வது சவாலே. அவன் கண்ட கனவு சிறிய அளவில் துவங்கிப் பெரிதாக விரிந்து செல்கிறது. கனவுகளில் நனவுகளில் நாம் பயன்படுத்தும் நேர அளவுகோல்கள் பயனற்றவை; அர்த்தமற்றவை என்ற உண்மையை எவ்வளவு சிறப்பாகக் கையாண்டு அவன் கண்ட அந்த பொற்காலம் பற்றிய கனவை தஸ்தயேவ்ஸ்கி எழுதியிருக்கிறார்! கனவுகளில் பல லோகங்களுக்கு அவன் சஞ்சாரம் செய்து அண்டப்பெருவெளியில் பறந்து சென்று அந்த இன்னொரு பூமியை அடைகிறான். அப்பயணத்தை விளக்குகையில் கால நேரங்களுக்கு அப்பாற்பட்டு அது செல்வதை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். கனவைப் பற்றிச் சொல்லுமுன் ஒரு முன்னுரையாக, நாம் சாதாரணமாகக் காணும் கனவுகளின் தன்மையைத் தொட்டு, நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.
"கனவுகளில் சில சமயங்களில் நீங்கள் பெரும் உயரத்திலிருந்து கீழே விழுகிறீர்கள் அல்லது கத்தியால் குத்தப்படுகிறீர்கள் அல்லது அடிக்கப்படுகிறீர்கள். ஆனால் நீங்கள் துள்ளிக்குதித்து கட்டில் கம்பின் மீது மோதிக் கொண்டால் தவிர வலியை ஒரு போது உணர்வதில்லை. அப்படி மோதிக்கொள்கின்ற பொழுது நீங்கள் வலியை உணர்வீர்கள். அது உங்களை நிச்சயமாக உறக்கத்திலிருந்து எழுப்பிவிடும்" என்று தொடங்கிவிட்டு பின்பு அவன் கனவு காணத்துவங்குவதை இப்படி விவரிக்கிறார்
"நான் இறந்துவிட்டேன், முற்றிலும் இறந்துவிட்டேன் என்ற எண்ணம் திடீரென்று முதல் தடவையாக எனக்குத் தோன்றியது. சிறிதும் சந்தேகமில்லாதபடி அதை அறிந்தேன். என்னால் பார்க்க முடியவில்லை, அசைய முடியவில்லை; ஆனால் என்னால் உணர முடிந்தது, சிந்திக்க முடிந்தது. சீக்கிரத்திலேயே இதற்கு என்னைச் சரிபடுத்திக் கொண்டேன். வழக்கமாகக் கனவுகளில் நடப்பதைப் போல அந்த உண்மையை மறுக்காமல் ஒத்துக் கொண்டேன்".
பின்பு அந்தப் புதிய உலகிற்குப் பறந்து செல்கிறான் அவன். அங்குப் பாவம் செய்யாத மனிதர்களைச் சந்தித்து அவர்களுடன் சஞ்சரிக்கிறான். சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து அம்மக்கள் வீழ்ச்சியடைந்தார்கள்! அந்தப் பூமியில் அவன் பாவத்தைப் பரப்பி அதன் விழைவாக, பொய்மையும், சூதும் பெருகி, அவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். பிரிவுகள் ஏற்பட்டன. அவமானம் என்ற ஒன்றை அறிந்து அதை நற்பண்பாக ஆக்கிக்கொண்டார்கள். கெளரவம் என்று ஒன்றை உருவாக்கிக்கொண்டார்கள். பல மொழிகள் பேசத் துவங்கினார்கள். துயரமடைந்தார்கள். முந்தைய மகிழ்ச்சியான காலகட்டங்கள் எல்லாமே கட்டுக்கதை என்று சொன்னார்கள், அதில் எல்லா நம்பிக்கையையும் இழந்து விட்டார்கள். இப்படி மாறிப்போன அந்த நல்லுலகத்திற்கு அவனே காரணம் என்று நினைத்து துன்பப்பட்டு அவர்களாலும் அவன் துன்பப்பட விரும்புகிறான். அவனை அவர்கள் பைத்தியக்கார விடுதியில் பூட்டிவைப்பதாக அறிவித்ததும் அவன் அந்த நீண்ட கனவிலிருந்து விழித்துக் கொள்கிறான். தற்கொலை எண்ணத்தை உடனடியாகக் கைவிட்டு அவன் வாழ விரும்புகிறான். பாவமறியாத, துன்பங்களறியாத சமூகம் என்பது முன்பு எப்போது ஒரு காலகட்டத்தில் இருந்து பின்பு எல்லாவற்றையும் மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்டு, பிரிவுகள் ஏற்பட்டு, பல பரிணாம வளர்ச்சிகளைக் கடந்து இப்போதைய நிலையில் இருக்கிறான் என்று சொல்லாமல், மனிதர்கள் ஒத்த மனத்துடன் முயன்றால், முனைந்தால் கனவில் கண்ட நல்லுலகத்தை இவ்வுலகத்திலேயே ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற அவரது சித்தாந்தமே 'அப்பாவியின் கனவு'-ஆக விரிகிறது.
***

No comments: