Tuesday, September 07, 2004

மனதுக்குள் ஒரு பயணம் # 1

மனதுக்குள் ஒரு பயணம் # 1

நடந்து சென்று கொண்டிருக்கிறேன். நல்ல மதியவெயில். என் நெடிய நிழல் காலடியில் ஒளிந்து கொண்டிருப்பதைக் குனிந்து பார்க்கிறேன். நிழலும் காலடியிலிருந்து எட்டி என்னைப் பார்க்கிறது. எங்கும் நிசப்தம். என்னைச் சுற்றி நிகழும் இயக்கங்களின் சத்தங்கள் என் காதுகளில் ஒலிக்கவில்லை. என்னுடைய இச்சிந்தனையை மட்டும் உள்குரலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நெற்றியில் எண்ணையில் பட்டையிட்டது போன்று வியர்வை. ஒரு துளி மட்டும் விடுவித்துக்கொண்டு நிலத்தில் விழுந்து உலர்ந்து காணாமல் போவதைப் பார்க்கிறேன்.

நிர்மலமான நீல வானம். எதிரே நண்பன். என் மனத்தின் குரல் அவனுக்குக் கேட்கிறதா என்று தெரியவில்லை. நான் அவன் கண்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். அவன் என் கண்களைச் சந்தித்த வினாடி தலையைக் கவிழ்ந்து கொண்டான். அவனது நிழல் மூலமாக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரிகிறது. இப்படி இருளில் நின்று கொண்டு, வெளிச்சத்திலிருப்பவர்களைப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் என்றிலிருந்து மனிதனுக்கு வந்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

இவ்வுலகத்திற்கான எனது பங்களிப்பை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவை இதோ தெரு ஓரத்தில் அனாதரவாக நிற்கும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கவனிப்பாரற்று கிடக்கிறது. இதில் எனக்கு வருத்தமில்லை. நான் குப்பையை எனது பங்களிப்பாகக் கொடுக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதை 'குப்பை'யாகப் பார்ப்பது அவர்கள் பார்வையில் உள்ள கோளாறு.

மற்ற நேரங்களில் என் மனதைப் பெருக்கி வெளியே தள்ளும் குப்பைகளை இவர்கள் கோபுரத்தில் வைத்துக்கொண்டு கொண்டாடுவது எனக்கு வினோதமாக, ஆரம்பத்தில் வியப்பளித்து கொண்டிருந்தது. பின்பு இதை நான் பழகிக் கொண்டுவிட்டேன் என்று சொல்வதில் எனக்குள் ஒரு குற்றவுணர்வு இன்னும் இருக்கிறது.

இவர்களுடைய எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்யமுடியாது என்பது தெரியும். எனக்குத் தெரியும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள முற்படாமல் என்னைத் துரத்துகிறார்கள். அவர்களின் பசிக்கு என்னைத் தின்னச் சொல்வது என்ன் நியாயம் என்று யாரிடம் கேட்பது? நான் தனியனாக இவ்வுலகில் இருக்கும் பட்சத்தில் இம்மனிதர்கள் எவரிடமும் என் மனத்தின் நம்பிக்கைகளையும், சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வது என்பது சாத்தியமேயில்லை.

என்னைப் போலவே இதோ இந்த நாய் சாலையின் ஓரத்தில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்கிறது. உடலெங்கும் பொட்டுபொட்டாக முடி உதிர்ந்து, விலா எலும்புகள் துருத்திக்கொண்டு, வாயைத் திறந்து நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு, மெல்லிய வால் இன்னும் மெலிந்துபோய் பின்னங் கால்களிடையே விட்டுக்கொண்டு, வளைந்த கால்களுடன் மெதுவாய் நடந்து சென்று கொண்டிருப்பதை கவனிக்கிறேன். அது அதன் நிழலைப் பார்த்துக் கொண்டு செல்வது போல் தோன்றுகிறது. நிழல் அதைச் செலுத்துகிறதா அல்லது அது நிழலைச் செலுத்திக் கொண்டு போகிறதா என்று தெரியவில்லை. அது தலையைச் சற்றுகூட தூக்கி எதிரே உள்ளவற்றைப் பார்க்காமல், ஆயிரமாயிரமாண்டுகள் இச்சாலையில் நடந்து பழகியதுபோல் மெதுவாய் நடந்து போகிறது. மனிதர்கள் சாலைகளில் விரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் புறப்படுமிடமும் சேருமிடமும் தெரிந்திருக்கிறது. தீர்மானமாய்ச் சென்று கொண்டிருக்கிறார்கள். அன்றாட புறவாழ்க்கை அலைச்சல்களை அலைந்து திரிந்து முடித்துக் கொண்டு தங்குமிடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களாக அவர்களுக்குக் கட்டிக்கொண்ட தங்குமிடங்கள். நானும் இந்த நாயும் புறப்படுவது சேருவது என்று ஒன்றுமில்லாமல், திரும்பச் செல்கிறோமா அல்லது போய்க் கொண்டிருக்கிறோமா என்று புரிந்து கொள்ள முடியாமல், இலக்கின்றி, முடிவும் ஆரம்பமும் இன்றி, தங்குமிடங்கள் என்று எந்தத் தற்காலிகப் பெட்டிகளிலும் அடைந்துகொள்ளும் உத்தேசங்களின்றி நடந்துகொண்டிருக்கிறோம்.

எங்கள் சிந்தனைகளின் ஆதாரம் ஒன்றுதான். எங்களுக்கு இந்தப் புற இயக்கங்களில் நாட்டமில்லை. நான் துருத்திக்கொண்டிருக்கும் என் விலா எலும்புகளை வருடிவிட்டுக்கொண்டேன்.

அனுமானங்களில் வாழும் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பது இவர்களுக்குப் புரிந்திருக்கிறதா என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. நண்பன் என்னைக் கடந்து சென்றுவிட்டான் என்பதை என் முன்னே என்னை முறைத்துக்கொண்டிருந்த நிழல் இல்லாததிலிருந்து உணரமுடிகிறது. இவர்கள் அபாயங்களின் கடைவாயில் எப்போதும் விழுந்து கொண்டிருக்கிறார்கள். அனுமானங்கள் இவர்களை விழுங்கி ஒவ்வொரு கணமும் ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னால் விரக்தியாகச் சிரிக்கத்தான் முடிகிறது. நான் சிரிப்பதைப் பார்த்து இவர்கள் தங்களது அனுமானங்களை இன்னும் விரிவுபடுத்திக்கொண்டு அவற்றுள் இன்னமும் ஆழத்தில் விழுகிறார்கள். அவற்றுள் மூழ்கிக் காணாமலேயே போய் விடுகிறார்கள். அவர்களைத் தேடி வெளியிலெடுப்பது என் வேலையில்லை.

இவர்கள் ஒவ்வொருவரைச் சந்திக்கும்போது இவர்கள் கண்களிலிருந்து விகாரமாய்ப் பிளந்துகொண்டு காத்திருக்கும் அனுமானங்களை நான் புறக்கணித்துப் போவதில் இவர்களுக்கு அதீத சினம். இச்சினத்தின் வெம்மை என்னைத் தீண்டாது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இன்னும் சினமடைகிறார்கள். உரக்கக் கத்துகிறார்கள். ஆனால் நான் தான் புறச் சத்தங்கள் கேட்பதிலிருந்து எனது செவிகளைத் தப்புவித்து விட்டேனே? இவர்கள் எவ்வளவு உரக்கக் கத்தினாலும் மூடிக்கொண்டிருக்கும் என் செவிகளைத் தாண்டி என்னைச் சேரப்போவதில்லை. இதை நினைக்கையில் என்னையறியாமல் என் உதடுகளில் நெளியும் ஏளனப் புன்னகை அவர்களைச் சுட்டெரிக்கிறது. அவர்களின் அனுமானங்களின் வெம்மையை எனது ஏளனப் புன்னகை எரித்துக் கொன்று விடுகிறது. இதன் காரணமாகவே என் முன்னால் அவர்கள் நிற்பதே இல்லை. எனது நண்பர்கள் உள்பட.

விரல்கள் ஒருபோது ஒரே அளவில் யாருக்கும் அமைந்திருப்பதில்லை என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள். நான் எனது விரல் நகங்களை ஆரம்பத்தில் வெட்டிச் சீராக்கிக்கொண்டிருந்தேன். அதற்காகச் செலவிட்ட நேரம் அதிகம் என்பதை உணர்ந்ததிலிருந்து நகங்களைச் சீந்துவதில்லை. அவை கோபித்துக்கொண்டு வளருகின்றன. வெகுவேகமாக வளர்ந்து என்னைப் பயமுறுத்த முயற்சிக்கின்றன. இம்முயற்சிகளை கீறல்களில் கசியும் இரத்தத்திலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் இன்னமும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. இரத்தம் என்னை பயமுறுத்துவதில்லை. நான் நிறைய கீறல்கள் பட்டாகிவிட்டது. நிறைய இரத்தம் பார்த்தாகிவிட்டது. என் உடலிலிருந்து இரத்தம் முழுவதும் வெளியேறிவிட்டாலும்கூட நான் பயப்படப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். என் சிந்தனைகளுக்கு இரத்தம் தேவையில்லை. கீறல்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது. கோபித்துக் கொண்டு வளர்ந்த நகங்கள் பயந்தன. அவை என்னிலிருது விலகிச் செல்லச் செல்ல பலவீனமடையத் தொடங்கியதை உணர்ந்தன. அவையே நான் கவனிக்காத பல சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உடைந்து கொண்டு விழுந்துவிடுகின்றன. என் நகக்கண்களுக்குள் அடங்கி ஒடுங்கி விடுகின்றன. அப்போதாவது என்னிடம் நல்லபெயர் கிட்டும் என்ற நப்பாசையில் அவை இப்படி நடந்து கொள்வதை நான் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் அவற்றின் ஜாலங்களை நான் ஒரு போதும் கண்டுகொள்வதில்லை. அவை இன்னும் சீற்றமடைந்து நகக் கண்களைக் குத்தி இரத்தம் வரச்செய்கின்றன. யாருக்கு வேண்டும் இந்த இரத்தம்?

இரைச்சலுடன் விழுகிறது அருவி. நீரின் ஆவேச நர்த்தனங்கள். சீராக நடனமாடுவது போன்ற ஓசை எழுப்பிக்கொண்டு விழும் அருவியின் தாரைகளை நன்கு கவனித்தீர்களென்றால் அதன் ஒழுங்கீனம் உங்கள் கண்களுக்கு ஒருவேளை புலப்படலாம். ஒழுங்கான ஓசையை எழுப்பி உங்கள் காதுகளை அடைப்பதோடு, அதன் ஒழுங்கற்ற தன்மையை, நீங்கள் கவனிக்கவொட்டாமல் உங்கள் மனதுகளையும் அடைத்துவிடுகிறது இப்பொல்லாத அருவி. நீங்கள் அருவிகளைப் பார்ப்பதே இல்லை அவற்றை தூரத்திலிருந்து பார்த்ததும், ஓசையில் மயங்கி, ஓடிப்போய் சரணாகதி அடைந்துவிடுகிறீர்கள். அருவிகளின் பிரம்மாண்ட வாய்களுக்குள் புகுந்து அடைக்கலம் தேடிக்கொள்ளும் உங்களால் அதன் ஒழுங்கீனத்தை உணரவே முடியாது. நான் அதன் பிரம்மாண்டத்திலும், ஓசையிலும் மயங்கி விழுந்து விடுவதில்லை. தூரத்தில் அதன் அழகு என்னைப் பரவசம் கொள்ளச் செய்தாலும், அதை நெருங்க நெருங்க பரவசம் விலகி, ஒரு ஜாக்கிரதை உணர்வை நான் மனத்துள் நிரப்பிக் கொள்கிறேன். அதை மிகவும் அருகிலும் நெருங்கி விட மாட்டேன். அப்படி ஒருவேளை தவறுதலாக நெருங்கி விட்டேனென்றால் என்னை உள்ளிழுத்து மயக்கிவிடும் என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். வெகுதூரத்திலும் இல்லாமல், அதனிடம் சரணடையும் அருகாமையிலும் இல்லாமல் இந்த இடத்தில் நின்று கொண்டு அதைப் பார்ப்பது எவ்வளவு நன்மை பயத்திருக்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். எனது கவனிப்பைத் தாங்கமுடியாமல் அருவி இன்னும் ஓசை எழுப்புகிறது. எம்பித் தெளிக்கும் துளிகளிலிருது அதன் இயலாமையையும் ஆவேசத்தையும் நான் கண்டுகொள்கிறேன். எனது தீவிரப் பார்வையில் அது தடுமாறுகிறது. இந்தத் தடுமாற்றம் அதன் ஒழுங்கீனத்தை இன்னும் அதிகப் படுத்துகிறது. என்னுள் எழும் பரிதாப உணர்வை எதிர்பார்த்தே அது இப்படி அடங்காமல் விழுகிறதோ என்று எண்ணி நான் சுதாரித்துக் கொள்கிறேன். அருவி மீது குற்றமில்லை. அது படர்ந்து விழுந்து கொண்டிருக்கும், யாரும் பார்க்க முடியாத ஒழுங்கற்ற பாறைகள் முழுக் காரணம். இதை நான் சொன்னால் எள்ளி நகையாடுவார்கள். அவர்கள் அருவிகளின் திரைக்குப் பின்னே ஒளிந்து கொண்டு ஓலமிடுகிறார்கள். அவர்களது ஓலத்தினை அருவியின் ஒழுங்கான ஓசை மறைத்துவிடும். ஒழுங்கற்ற பாறைகளுடன் சேர்ந்த ஒழுங்கற்ற இவர்களை மறைத்து ஓசையிடும் இந்த அருவியின் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.

அனுமானங்களில் அரித்துக்கொண்டிருக்கும் மனங்களுடன் ஒரு கூட்டமென்றால், எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டு, நிகழ்காலத்தை இகழ்ந்து கொண்டிருக்கும் கூட்டம் இன்னொரு பக்கம்.

இறந்த காலத்தில் வாழப்போகும் நான் நிகழ்காலத்தைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், எப்போதோ பிறந்த எதிர்காலத்தை ஏன் பார்க்கவேண்டும்? இதிலிருந்து தெரிகிறதா நான் ஏன் தனியனானேன் என்று?

No comments: