Monday, August 15, 2011

சுதந்திரம்

புதுக்கவிதை என்று வாக்கியங்களை உடைத்துப் போட்டு எழுதும் படிக்கட்டு கவிதை எழுதுவதில் ஒரு வசதி. யாப்பிலக்கணம் போன்ற கஷாயங்கள் எதையும் குடிக்காமல் தமிழ்ப்புதுக்கவிதை அகராதியில் கிடைக்கும் மேகம், இதயம், உள்ளம், உயிர், ஆத்மா, காதல், கண்ணீர், விழிகள், ரோஜா, பூக்கள், புஷ்பம் (ரெண்டும் வேற வேற), மென்மையானவள், ஓருடல், நோக்கினாள், பிரிவு போன்ற பத்து நூறு வார்த்தைகளைக் குலுக்கிப் போட்டு பள்ளி கல்லூரி முதல் வேலை அலுவலகம் என்று எதிலாவது காதலிக்க இயலாது போன யாராவது ஒரு பெண்ணை எண்ணி மாய்ந்து மாய்ந்து அரைப் பாரா ஒன்றை எழுதி, உடைத்துப் போட்டு நாலைந்து தடவை சொல்லிப் பார்த்தால் (மனசுக்குள்) நன்றாக இருப்பது போல் தோன்றினால் போதும். புதுக்கவிதை ரெடி. கூகுளில் Tags கொண்டு தேடினால் எவனாவது புகைப்படம் போட்டுவைத்திருப்பான். அதையும் கவிதைத் தலைப்பில் வைத்துவிட்டால் மதி! எழுதி போஸ்ட் செய்ததும் லேசாகப் புல்லரித்து பிடரியில் கிறுகிறுஎன்று இருக்கும். இடுகை இட்ட அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அக்கவிதையை நானே நாற்பது முறை படித்துப்பார்த்துக்கொண்டு ஆஹாவும் சொல்லிக்கொள்ளத் தோன்றும். அந்த வார்த்தைப் படிகளுக்குள் எனக்கு மட்டும் புலப்பட்ட சிறப்பான கவித்துவ வெளிப்பாடு படிப்பவர்களுக்கு அம்புட வேண்டுமே என்று கவலையாக இருக்கும். இருந்தாலும் கவிதைக்குப் பொருள்விளக்கம் சொல்வது கவிஞனுக்கு இழுக்கல்லவா? கவித்திமிர் கர்வம் தெறிக்க கொஞ்ச நேரம் இருந்துவிட்டு எவனாவது கமெண்ட் போடுகிறானா என்று வழிமேல் விழிவைத்துக்காத்திருந்து பார்த்துவிட்டு இன்னும் நாலைந்து முறை திரும்பக் கவிதையைப் படித்துவிட்டு பெருமூச்செறியும் புதுக்கவிஞனின் வாழ்க்கை புதினமானது (கவித்தும்ங்க).

காதல் வறண்டு போன தினங்களில் அரசு விடுமுறை தினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு கவிதை எழுதத் தோன்றும். தமிழ்ப்புத்தாண்டன்று (ஜனவரியிலும் ஏப்ரலிலும்) ரெண்டு கவிதை. தீபாவளியையும் Global Warming கையும் புத்தாடை வாங்கமுடியா ஏழ்மையைப் பற்றியும், பால்ய தீபாவளி நினைவுகள் பற்றியும் நாலைந்து தீபாவளிக்குக் கவிதைகள். வேறு ஏதுவும் தோன்றா சமயத்தில் போன தீபாவளிக்குப் போட்ட கவிதையை மறு வெளியீடு (எவன் படிச்சிருக்கப் போறான்? அப்படியே படிச்சிருந்தாலும் எவனுக்கு ஞாபகம் இருக்கும்?).

திடீரென்று பார்த்தால் ஆகஸ்ட் 15 வந்துவிடும். அடடா... வீட்டு நினைவுகள். Swades போன்ற படங்கள். ரோஜாவில் வரும் தமிழா தமிழா பாடல். அல்லது ஏஆர்ரஹ்மானின் வந்தேஏஏஏஏஏ மாதறம்ம்ம்! எல்லாவற்றையும் யூட்யூபில் பத்து தடவை பார்த்துவிட்டு அரசியல்வாதிகள், ஊழல்கள், “இருட்டில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை” எல்லாம் நினைவுக்கு வந்து தேசபக்தி கொழுந்து விட்டு எரிய தோள்கள் தினவெடுக்க, நெஞ்சம் விம்ம netflix-இல் new arrivals எதையாவது பார்த்துவிட்டு புதுக்கவிதை எதுவும் தோன்றாமல் தமிழ்நாட்டு மழை போல கவிதையூற்று சுத்தமாக வறண்டிருந்தாலும் எழுதாமலிருந்தால் இணையத்தில் மறந்து விடுவார்களே என்பதால் சத்யத்திற்கு

என் இனிய தாயகத்திற்கு இன்றைக்கு
இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்
சொல்லும் அதே நேரத்தில்
எல்லைக்கப்பாலிருக்கும்
முன்னாள் சகோதர உறவுகளுக்கு
நேற்றைக்கான தாமத
இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்

என்று ஒரு மொக்கை புதுக்கவிதை எழுதி...Twitter, FaceBook இன்ன பிற இணைய இத்தியாதிகளில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு உறங்கச் செல்லும் பண்டிகைப் புதுக்கவிஞர்கள் உள்ளிட்ட அனைத்து நல்லிதயங்களுக்கும்

இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்!

***