Wednesday, May 15, 2019

கூட்டத்திலே கோவில் புறா

மதுரை அழகப்பன் நகர் தாண்டி வரும் பைக்காராவிலில் இறங்கி இடதுபுறம் செல்லும் பாதையில் சென்றால் கொஞ்ச தூரத்திலேயே விவசாய நிலங்கள் ஆரம்பித்துவிடும் (எண்பதுகளின் மத்தியில். இப்போது எல்லாவற்றையும் ப்ளாட் போட்டு விற்றிருப்பார்கள்). வரப்பு வழியாக நெடுக நடந்தால் தூரத்தில் ஒதுங்கியிருந்தது சரவணா டூரிங் தியேட்டர். அங்கே தான் நானும் என் நண்பர்களும் சேர்ந்து இரண்டாம் ஆட்டத்திற்குப் போய் இதய கோவில் படம் பார்த்தோம். 1985-இல் வந்த படம். சரவணாவுக்கு ஒரு வருடம் கழித்து கடைசிச் சுற்று ரிலீஸில் வந்தது. சரவணாவில் ஒரு வசதி - கம்புகள் ஊன்றி கூரை பிரமிடைக் கவிழ்த்து வைத்திருந்ததால் சுவர்களின்றி காற்றோட்டமாக இருக்கும். சுற்றி கட்டிடங்கள் எதுவும் இல்லாததால் ஜில்லென்ற காற்றுக்குப் பஞ்சமே இருக்காது. நான் பார்த்தது 1986-இல். இப்போது தியேட்டர் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இதய கோவில் படம் பார்த்தது ஒரு அற்புத அனுபவம். சரவணாவில் பெரிய ஸ்பீக்கர் பெட்டிகளை ஒவ்வொரு கம்பிலும் கட்டியிருந்ததாலும், இரவு இரண்டாம் ஆட்டம் என்பதால் வேறு அரவம் எதுவுமில்லாமல், ஒலி மகா துல்லியமாகக் கேட்டது. இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் மகா இனிமைமயான பாடல்கள். இசை மழையில நனைந்த ஆனந்த அனுபவத்தைத் தந்தது. இதை இன்னும் மணிரத்னம் இயக்கியது என்பதை நம்பாமல் இருக்கிறேன். வழக்கமாக கிராமத்துப் பின்னணியில் இரட்டைக் கதாநாயகிகளுடன் சுந்தரராஜன் (மெ.தி.கதவு வகையில்) படமெடுப்பார். மணிரத்னத்தின் படங்களில் இது மகா எளிய படம். இளையராஜாவின் ராஜாங்கத்தில் பாலுவின் இனிய குரலில் மோகனின் நல்ல நடிப்பில் நன்றாக அமைந்த படம்.

இதயம் ஒரு கோவில் பாடலை பாலு தனிப் பாடலாகப் பாடியிருந்தாலும், அதையே இன்னொரு முறை ராஜாவும் பாடி அதில் மட்டும் ஜானகியும் குரல் கொடுத்திருப்பார். ஊரோரமாய் ஆற்றுப் பக்கத்தில் சித்ரா. மற்றபடி பெண் குரலில் வேறு பாடல்களே இல்லாத ஆணாதிக்கப் படம்! :)

இது சிறந்தது, அது சிறந்தது என்று வரிசைப்படுத்த முடியாதபடி எல்லாப் பாடல்களும் மிகவும் அருமையான பாடல்கள். எல்லாம் நல்ல பாடல்களாக இருந்தாலும் நான் அந்த பதின்ம வயதில் அடிக்கடி போகும்போதும் வரும்போதும் முணுமுணுத்துக்கொண்டிருந்த பாடல் இந்தப் பாடல். ரொம்பப் பிடித்த பாடல். இரவில் கேட்பதற்கு இனிய ராஜாவின் எத்தனையோ பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலில் இசையும் குரலும் போட்டி போட்டுக் கொண்டு கபடி ஆடும். இரண்டாம் சரணம் முடிந்ததும் பாலுவும் ராஜாவும் ஒரு விளையாட்டு விளையாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடலில் ஒன்றைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். நீங்கள் யாராவது கவனித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. வழக்கமாக ஒலிக்குத்தான் எதிரொலி கேட்கும் இல்லையா? பாடல் ஆரம்பத்தில் "கூட்டத்திலே கோவில் புறா" என்று பாலு அழைத்து நிறுத்துவார் இல்லையா? ஒரிஜினல் ட்ராக்கை ஹெட்போனில் கேட்டுப் பாருங்கள். அவர் ஆரம்பிப்பதற்கு முன்பே அந்த வரி எதிரொலியாக முதலில் கேட்கும்! :-) அதே போல் "யாரை இங்கு தேடுதம்மா” என்று அவர் பாடுவதற்கு முன்பாகவே அது எதிரொலியாகக் கேட்கும்! சாதாரணமாக ஸ்பீக்கரில் கேட்கும்போது யாரும் இதை கவனிக்க வாய்ப்பே இல்லை. சந்தேகமிருந்தால் இது ஒரிஜினல் ட்ராக் - ஹெட்ஃபோனில் கேட்டுப் பாருங்கள்! :-)

https://www.youtube.com/watch?v=NpW5tM3IgFI

நான் பாடும் மெளனராகம் பாட்டின் மெளனராகம் வார்த்தையே பின்னாளில் மெளனராகம் படத் தலைப்புக்குத் தூண்டுகோலாக இருந்தது என்று மணிரத்னம் சொல்லியிருக்கிறார். மணிரத்னத்திற்கு இந்தப் படம் எடுத்தது நல்ல அனுபவத்தைத் தரவில்லை, தயாரிப்பாளர் கோவைத் தம்பியின் அதீத தலையீட்டால். மணியைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கவில்லை என்ற காரணத்திற்காக. படத்திற்காக நிறைய சமரசங்களைச் செய்யவேண்டிய கொடும் அனுபவமாக இருந்தது என்று பரத்வாஜ் ரங்கன் எழுதிய புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். கோவைத்தம்பி அதைப் பார்த்துக் கடுப்பாகி மணிரத்னத்திற்கு வாய்ப்பு கொடுத்தற்கு வருந்துவதாகச் சொல்லியிருக்கிறார். மூன்று படங்கள் எடுத்திருக்கவேண்டிய நேரத்தையும், செலவையும் இந்த ஒரு படத்திற்காக மணிரத்னத்தால் செலவழிக்க நேர்ந்தது என்றும் சொல்லியிருக்கிறார். எப்படியோ படம் வெளிவந்த மட்டில் ரசிகர்களாகிய நமக்கு மகிழ்ச்சி. மணி ரத்னம் இன்றும் படமெடுக்கிறார். கோவைத் தம்பி?

இளையராஜா முதன்முதலில் பாடலாசிரியராக அவதாரம் எடுத்ததும் இந்தப் படத்தின் இதயம் ஒரு கோவில் பாட்டெழுதித்தான். ராஜா தனது மனைவி திருமதி. ஜீவாவிற்கு இந்தப் பாடலை அர்ப்பணித்திருக்கிறார். பாடலிலும் அடிக்கடி ஜீவன் என்ற வார்த்தை வரும். ராஜா சாமியாரின் ஆன்மீகக் காதல்!

கூட்டத்திலே கோவில் புறா கமாஸ் ராகத்தில் அமைந்த பாடல்! இளையராஜா சரணங்களுக்கு இடையே வரும் கோரஸ் குரல்களில் ஸ்வரம், ஜதி என்று ராகத்தின் எல்லைகளையும், ஆழங்களையும் பயன்படுத்துவதைப் பற்றி அருமையான கட்டுரை ஒன்று இந்த வலைப்பூவில் பார்த்தேன். எத்தனை அருமையான தகவல்கள்! http://geniusraja.blogspot.com/2011/10/ இசைப் ப்ரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரை!

முதல் தடவை இந்தப் பாட்டை வானொலியில் கேட்டதும் அசந்து போக வைத்த பாட்டு. எளிமையான ஆனால் அருமையான காட்சியமைப்பு. கிராமத்து இரவுகளில் பாடல் கச்சேரியின் இனிமையையும் திறந்த வெளிக் குளுமையையும் எல்லாவிதத்திலும் கொண்டுவந்து ராஜா பாலு கூட்டணி போட்டு அசத்தியிருப்பார்கள். இன்றைய தலைமுறைக்கு இப்பாடல் கேலிக் கூத்தாகத் தெரியலாம். ஆனால் அன்றைய கிராமங்கள் அப்படித்தான் இருந்தன.

இந்தப் பாடலைக் கேட்ட போதெல்லாம் புத்துணர்ச்சியும், உற்சாகத்தையும் தந்து புல்லரிக்கவைத்த பாட்டு. இப்போதும் அந்த உற்சாகம் என்னைப் பற்றிக் கொள்கிறது. இதைப் பாடி பல வருடங்கள் ஆகிறது. நிறைய தயக்கத்துடன் முயற்சி செய்து பாடியது. பிழைகளைப் பொருத்தருள்க.





Saturday, May 11, 2019

நீ ஒரு காதல் சங்கீதம்

காதல் என்றாலே பம்மல்.உவ்வேக்.சம்பந்தம் என்று காத தூரம் ஓடும் இலக்கிய எழுத்தாளினி, படிப்பாளினி உஷாவிற்கானது இல்லை இப்பதிவு! ;-)

எண்பதுகளின் இறுதியில் "எஸ்பிபி மாதிரியே பாடறான்” என்றுதான் புதிதாக மனோவின் குரல் அறிமுகம். சில பாடல்களில் பாடுவது பாலுவா மனோவா என்று சாதாரணமாக் கேட்டுப் பிரித்தறிந்துவிடமுடியாத அளவு மனோ பாடியிருப்பார். மதுரை சுப்ரமணியபுரத்தில் இருந்தபோதுதான் ராஜாதி ராஜா வந்தது (1989). பாலுவுக்குப் பதில் எல்லாப் பாடல்களுமே மனோ. வித்தியாசமாக ஜூனியர் பாலையா மாதிரி ஜூனியர் பாலு குரல். அப்புறம் ஒரே படத்தில் ரெண்டுபேரும் பாடியிருப்பதும் தொடர்ந்து நடந்தது. என்னதான் இருந்தாலும் நகல் நகல்தானே. ஆனாலும் மனோ அருமையான பாடகர். பாலுவைப் போலப் பாடாமல் மனோவைப் போலவே பாடிய பிரமாதமான பாடல்கள் இருக்கின்றன. எளிதாக சில பத்துப் பாடல்களைப் பட்டியலிட்டுவிடலாம். அதில் ஒரு பாட்டைப் பற்றியே இந்தப் பதிவு.

நாயகன் தமிழ்த் திரையுலக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் (1987). நாயகனின் வித்தியாசமான சுவரொட்டிகள். பீரியட் ஃபில்ம் என்ற அளவில் அதன் பாடல்களுக்கும் பின்னணிக்கும் ராஜா உபயோகித்த இசைக்கருவிகள், பாடகர்கள் (ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, டி.எல். மஹாராஜன்) என்பதெல்லாம் ஒரு வித்தியாசமான பேரனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுத்தது. படத்தின் தீம் இசையாக வரும் தென்பாண்டிச் சீமையிலே - ராஜா ‘யார் அடிச்சாரோ’வாகவும் கமல் ‘யார் அடித்தாரோ’வாகவும் பாடியிருக்க - பரத்வாஜ் ரங்கனின் நேர்காணலில் இதைப் பற்றி மணிரத்னத்திடம் கேட்க அதற்கான காரணத்தை மணிரத்னம் விளக்கியிருப்பது கூகுள் தேடலில் எளிதாகக் கிடைக்கும், தேடியெடுத்துக்கொள்ளுங்கள், நான் கொஞ்சம் பிஸி! - படம் நெடுகத் தேவையான இடங்களில் அதன் ட்யூனை ராஜா உபயோகித்திருப்பார்.

கமல் இளம் வயதில் முதிய வேடத்தில் நடித்த அல்லது வாழ்ந்த இரண்டு படங்கள் முக்கியமானவை - சலங்கை ஒலி, நாயகன். நாயகனில் வேலுநாயக்கரின் நடுவயது வேடத்திற்கு தலையில் வழுக்கைக்காக முடியை வழித்துக்கொண்டு, அப்புறம் மொத்தமாக மொட்டையடித்து, கொஞ்சூண்டு முடிவளர்ந்த நிலையில் 1988 ஜனவரியில் ‘சத்யா’ :-). இப்போதிருக்கும் பணவசதியும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் சாத்தியங்களும், தொழில்நுட்பமும் அப்போதிருந்திருந்தால் நாயகன் உலக அளவில் பேசப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. கமலின் வேலுநாயக்கர் பாத்திரப் படைப்பு, கமலின் நடிப்பு பற்றியெல்லாம் ஆயிரக்கணக்கானவர்கள் எழுதிக் குவித்திருப்பதால் திரும்பவும் சிலாகிக்கவேண்டியதில்லை.

இளையராஜா ஒரு மந்திரவாதி. அவரது ஆர்கெஸ்ட்ரா கண்டக்ட் செய்யும் கோல் ஒரு மந்திரக் கோல். அதை வைத்து சில குறிப்பிட்ட பாடல்களுக்கு மட்டும் மந்திரம் போட்டு ஆரம்ப இசையிலேயே ஒரு தெய்வீகத்தன்மையைக் கொண்டுவைத்து, அதிர்வுகளை ஏற்படுத்தி, அப்படியே கேட்பவர்களைத் தன்னிலை இழக்கச் செய்துவிடுவார். இது கமல் படங்களுக்கான பாடல்களுக்கு அடிக்கடி நிகழும். மற்றவர்களுக்கு எப்போதாவது நிகழும். அப்படிப்பட்ட மந்திரப் பாடல்களில் ஒன்றான, மனோவின் சிறந்த பாடல்கள் என்று பட்டியலிட்டால் நான் முதலிடம் கொடுப்பதுமான பாட்டு "நீ ஒரு காதல் சங்கீதம்". இது கல்யாணி ராகமா, அல்லது ஷ்யாமா கல்யாணி ராகமா என்று Lalitha Ram போன்ற விற்பன்னர்கள்தான் சொல்லவேண்டும். ரெண்டும் பூ, புய்ப்பம் மாதிரி என்று சொன்னாலும் தேவலை!

நீ ஒரு காதல் பாடல் அமைக்கப்பட்ட காட்சிகள், பாடலுக்கு முந்தைய காட்சிகள் எல்லாம் தமிழ்ச் சினிமா கண்டிராத, அபாரமான உணர்வலைகளையெழுப்பும், மிகவும் அழுத்தமான காட்சிகள். சரண்யாவைக் கமல் சந்திக்கும் சூழல், அந்த மணிரத்னச் சுருக்க உரையாடல்கள், அதைத் தொடரும் காட்சிகள், இருவரும் மறுபடியும் சந்திப்பது, திருமணம் என்று “காட்சி ஊடகம்” என்ற கலையைச் செம்மையாகப் பயன்படுத்திக் காண்பித்த காட்சிகள். நாயகன் படத்தை காஞ்சிபுரத்தில் பாலாஜி வீட்டில் தீபாவளிக்குச் சென்றிருந்தபோது முதல்நாள் மாலைக்காட்சிக்குப் போய்ப் பார்த்தேன்.

நீ ஒரு காதல் சங்கீதம் ஒரு உன்னத பாடல். புலமைப் பித்தனின் ஆழமான, உணர்வுப் பூர்வமான வரிகளைத் தாங்கியது. வழக்கமான தமிழ்ச் சினிமாக்களின் மரத்தைச் சுற்றிக் "காற்றைப் புணரும்” (phrase courtesy: Kamal) நடன அசைவுகள் இல்லாது, நாயகியும், நாயகனும் முத்தம் கொடுக்கும் அரை நொடிக்கு முன்னால் கேமரா முன்பு ரெண்டு பூக்களை உரசும்படி க்ளோசப்பில் காட்டும் கண்றாவிக் காதல் காட்சிகள் இல்லாமல், ஒரு கவிதை மாதிரி இப்பாடலைக் காட்சியாக்கியிருப்பார் மணிரத்னம். ‘கடற்கரைக் காற்றே வழியை விடு, தேவதை வந்தாள் என்னோடு’ என்று கடற்கரைக் காற்றில் எதிரொலிக்கும் அற்புத வரிகளைவிட ஆழமாக ஒரு பெண்ணை நேசிப்பதையும், பூவைப் போலத் தாங்குவதையும் யாரால் எழுதிவிட முடியும்! இசையமைத்துவிட முடியும்! காட்சியாக்க முடியும்! நடித்துவிடவும் முடியும்!

பாடலின் ஆரம்ப இசையே அப்படியே நம்மை உள்ளிழுத்துக்கொண்டுவிடும். மனோவின் சீரான, நிதானமான குரல், அதைத் தொடரும் சித்ராவின் கெஞ்சும்/இறைஞ்சும், லேசாக விசும்பும் (சரண்யாவின் பாத்திரப்படைப்பைப் பிரதிபலித்து, அந்தப் பாத்திரத்தின் மனநிலையைப் பிரதிபலித்து) குரல், பின்னணியில் வாத்தியங்களின் சாகசங்களோடு இளையராஜாவின் இசை - எந்த அரவமும் இல்லாத இரவில் இந்தப் பாடலைக் கேட்பது ஒரு out of the world experience-ஐத் தரும்.

இந்தப் பாடலைத்தான் முதன்முதலில் சென்ற வருடம் ஸ்ம்யூலில் பாடிக் கணக்கைத் துவக்கினேன்! Stop blaming me! :-)

சமீபத்தில் இந்தப் பாடலை மறுபடியும் பாடிப் பார்த்தேன். தட்டையாக இருந்தது. நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று விட்டுவிட்டேன். Ravpri என்கிற சக ஸ்ம்யூலியன் பற்றி ஏற்கனெவே நிறைய எழுதியாகிவிட்டது - எனது மானசீக mentor, guru and inspirer. நான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துத் திக்கித் திண்டாடிப் பாடுவதையெல்லாம் ப்பூவென ஊதித் தள்ளிவிட்டு அலட்டாமல் பாடுவதில் மன்னி (மன்னருக்குப் பெண்பால்)! தமிழ்ப் பாடல்களில் ஒரு வசதி. சங்கீதம் தெரியாவிட்டாலும் இசை தெரிந்தவர் பாடியதைக் கேட்டுக் காப்பியடித்து ஒப்பேற்றிவிடலாம். முதல் சரணத்தில் ‘வானம்பாடி..’ என்று அவர் பாடியிருப்பதை அப்படியே காப்பியடித்து ‘காதல் காதல்’ என்று சமாளித்தேன். அடுத்த சரணத்தில் நான் தான் ஆரம்பிக்கவேண்டும். ஸ்ருதி ஒழுங்காக இருக்கிறதா என்று தெரியாமல் திண்டாடியபோது எனது வரிகளை விட்டுவிட்டு அவர் பாடிய வரிகளுக்குத் தாவி எப்படிப் பாடியிருக்கிறார் என்று கேட்டுவிட்டுப் பிறகு rewind செய்து ‘செவிவழி’ பயிற்சியோடு அப்படியே பாடித் தப்பித்தேன். அப்படியும் சரியாக வரவில்லை. ஆனால் இந்த ட்ரிக்கெல்லாம் ஓரளவுக்குத்தான் உதவும். பாடலைப் பாடி முடித்துவிட்டுக் கேட்கும்போது ‘வாய்மொழி’ என்பதை எவ்வளவு தட்டையாகப் பாடியிருக்கிறேன் என்பதை அவர் அதை எப்படி ஒரு nuance-உடன் பாடியிருக்கிறார் என்று கேட்கும்போதுதான் புரிந்தது. இதிலிருந்து நான் அறிந்துகொண்ட நீதி: ஒழுங்காகப் பாடவேண்டுமானால் பயிற்சி தேவை. பயிற்றுவிப்பும் தேவை - என்பதே. பார்க்கலாம். இப்படியே சங்கீதம் தெரிந்தவர்களுடன், நன்றாகப் பாடக்கூடியவர்களுடன் தொடர்ச்சியாகப் பாடி, என்றைக்காவது ஒரு நாள் ஓரளவுக்காகவாவது சரியாகப் பாட வந்து, யாராவது ஒருவராவது நல்லா பாடியிருக்கே என்று சொல்லும்போதுதான் ஜென்ம சாபல்யம் அடைவேன்! :-) "அப்படிச் சொல்லிட்டா இந்தப் பாட்டோட பாடறதை நிறுத்திடுவியா?" என்று கேட்டால் நிறுத்த மாட்டேன்! இப்பாடல்களையெல்லாம் நான் இங்கே உங்களுடன் பகிர்வதே, இப்பாடல்களை நான் ரசிப்பது ஏன் என்பதற்கும், Ravpri போன்ற திறமையாளர்களின் குரல்களை நீங்களும் கேட்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான்.

இனி நீ ஒரு காதல் சங்கீதம்… வாய்மொழி சொன்னாலும், விழிவழிப் பார்த்தாலும், செவிவழி கேட்டாலும் தெய்வீகம்!


Saturday, April 27, 2019

20


I love BCT because of the endless opportunities it offers to make a dent on status quo! What started as a plain canvas 20 years ago has evolved into a beautiful (state-of-the-) Art-work! #WeAreBCT #Selfie #AtWork#me #Selfienation #smile Bahwan CyberTek
ஐந்திணைகளையும் கொண்டிருக்கும் தாய்நாட்டையும், பெற்றோர், உற்றோர், நட்புகளையும் விட்டுவிட்டு புலம்பெயர்ந்து பாழ்நிலம் - பாலை என்றறிந்திருந்த இடத்தை வாழ்நிலமாய்க் கொள்ள விமானமேறிச் சென்று இறங்கி ஒரு சிறிய அலுவலகத்தில் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையும், முகங்களெங்கும் பிரகாசமும், வென்று தீர வேண்டும் என்ற தீர்க்கமான, தீவிரமான பாவனைகளுடனும் கூடியிருந்த சிறு குழுவொன்றில் இணைந்து 20 வருடங்களுக்கு முன்னால் துவங்கிய பயணம் இது. ஓமானின் மஸ்கட்டிலிருந்த ஐந்தரை வருடங்களும் ஒரு ரோலர் கோஸ்டர் சாகசப் பயணம் போல வேகமாய்ச் சென்றன. ஓமான் அனுபவங்களைப் பற்றி ஏற்கெனவே வலைப்பதிவுகளில் நிறைய எழுதியிருக்கிறேன் (ஓமானே மானே!).
புலம்பெயர்வது என்பது வேர்களையும், வளர்த்த மரக்கிளைகளையும் துறந்து காற்றில் திக்கு தெரியாமல், அனாதையாகப் பறக்கும் இலைகளுக்கு ஒப்பானது. மதுரை விளாங்குடியிலிருந்து ஆட்டோவில் ஏறி பெங்களூருக்குச் செல்வதற்காக உட்கார்ந்து - அது வரை கூட்டுக்குடும்பமாக இருந்து பெற்றோர், தாத்தா பாட்டியென்று சுற்றிக் கடவுளர்களுடன் இருந்ததுபோலிருந்த, கோவில் போலிருந்த இல்லத்தை விட்டுக் - கிளம்பியபோது அவர்களின் கையசைப்பைப் பார்க்கத் திராணியில்லாமல் மறுபக்கம் திரும்பிக்கொண்டு விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைக்காமல் எதிர்காற்றை வெறித்துப்பார்த்துக்கொண்டு ரயில் நிலையம் சேரும்வரை எதுவும் பேசாமலிருந்த அந்த நாள் இன்னும் நினைவிலிருக்கிறது. அந்த இழப்புகளின் வலியும், வடுவும் நிரந்தரமாக ஆழ்மனதில் தங்கியிருக்கும் ஒன்று. வலியில்லாமல், தியாகம் செய்யாமல் எதையும் பெற்றுவிடமுடியாது என்பது வாழ்க்கைப் பாடம்!
நேர்காணலின் போது என்னை வேலைக்கு அழைத்துச் சேர்த்த என் மேலாளர் நிறுவனத்தைப் பற்றியும் ஊர், நாட்டைப் பற்றியும் ஒன்றும் அறியாது நிச்சயமின்றி இருந்த என்னிடம் சொன்ன ஒரே வாக்கியம் "இது ஒரு வெற்றுக் காகிதம். நீ என்ன ஓவியம் வரையவேண்டும் என்று நினைக்கிறாயோ அதை வரைந்துகொள்" என்று சொன்னதும் மேலும் தாமதிக்காமல் சேர்ந்த வேலை இது. இதை வேலையாக நினைத்ததில்லை. சலித்ததில்லை. வாழ்வின் பிரதான அங்கமாகிப்போன அன்றாட நிகழ்வு Bahwan CyberTek
தகவல் தொழில்நுட்பத்துறையின் மிகப்பெரிய வரமே மாற்றமே நிரந்தரமாக இருப்பதுதான். மற்ற எல்லாத் துறைகளையும் விட அதிவேக மாற்றங்கள் நிகழ்வது இங்கே. கல்லூரிப் படிப்பை வைத்து வாழ்நாள் முழுதும் ஓட்ட முடியாது. ஒருவர் தனது அறிவையும் திறமையும் தினந்தினம் மேம்படுத்திக்கொள்ளவேண்டிய புதுப்பித்துக் கொள்ளவேண்டிய கட்டாயமுள்ள துறை, வேலை இது. அசந்து அடுத்த மாதம் பார்த்துக்கொள்ளலாம் என்று சாய்ந்து உட்கார்ந்தால் 'பெரிசு ஏதோ அந்தக் காலத்தைப் பத்திப் பொலம்புது' என்று நம்மைத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு முன்னால் மொத்த கூட்டமும் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்க நேரிடும். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. சுருக்கமாக வாத்தியார் பாணியில் சொல்வதானால் ஜல்லியடித்தல் ரொம்பநாள் தாங்காது!
இந்த வாழ்க்கை அளித்ததைப் பட்டியலிட்டு மாளாது. குடும்பம் வேறு வேலை வேறு என்று பார்க்கத் தேவையில்லாத ஒரு பெரிய குடும்பமாகப் பாவிக்கவைத்த நிறுவனம் இது. வேலைக்குச் சேர்ந்த ஓரிரு ஆண்டுகளிலேயே சம்பளம் போதவில்லை, மேடை சரியில்லை, மைக்கில் எக்கோ அடிக்கிறது என்று அடுத்தடுத்து வேறு நிறுவனம், வேறு வேலை என்று தவளை போல் தாவித்தாவிச் செல்வதையே 'மாற்றம்' என்றும் 'முன்னேற்றம்' என்றும் கருதுபவர்கள் நிறைந்த தொழிலில் திறமையான நபர்களைக் கண்டுபிடித்து வேலைக்குச் சேர்ப்பது சவால் என்றால் அவர்களைத் தக்கவைப்பது இன்னும் பலமடங்கு பெரிய சவால். அப்படிப்பட்ட பெரும் சவால்களை எதிர்கொள்ளும், மூளையை மூலதனமாக வைத்து வருவாய் ஈட்ட வேண்டிய தொழிலில் ஈடுபட்டிருக்கும் எங்கள் நிறுவனத்தில் சராசரிக்கும் மேலான அளவில் 10 வருடங்களுக்கும் மேலாக, 15 வருடங்களுக்கும், ஏன் 20 வருடங்களாக இன்னும் கடமையுணர்ச்சியுடன் நிறுவனத்தின் பல்வேறு நிலைகளில், பதவிகளில் ஆட்கள் பணிபுரிகிறார்கள் என்பதற்கு இருக்கும் நேர்மறைக் காரணங்கள் பல.
இது ஒரு பெரும் குடும்பக் கட்டமைப்பு - ஒரு வார்த்தைகூட பேசாது லேசாகக் குனிந்த தலையுடன் தேனீர்க் கோப்பைகளைக் கொண்டுவந்து சத்தமெழுப்பாமல் மேசை மீது வைத்துவிட்டுச் செல்லும் பணியாட்களின் பெயரையும் நலனையும் மனதில் வைத்திருக்கும், அக்கறையுடன் விசாரிக்கும், "அதெல்லாம் முடியாதுப்பா. இது நிறுவன பாலிஸி, இதான் நடைமுறை. ஸாரி" என்று கண்ணைச் சந்திக்காமல் மறுப்பு சொல்லாமல், கையை விரிக்காமல், உண்மையாகவே பணியாட்களின் தனிப்பட்ட வாழ்வுச் சிக்கல்களைத் தீர்க்க முயலும் - அது பணியாளர்களின் தகுதிக்கு மீறியதாகவே இருந்தாலும் - மேலதிகாரிகள் இருக்கும் நிறுவனத்தைவிட்டுச் செல்ல சுலபத்தில் எப்படி மனம் வரும்? எனது தனிப்பட்ட அனுபவத்திலேயே அளவிடமுடியாத, தாங்கமுடியாத பெரும் துயரத்தைச் சந்திக்க நேர்ந்தபோது அதில் பங்கெடுத்துத் தோள்கொடுத்துத் தாங்கிக்கொண்ட நபர்களை விட்டுவிட்டு எப்படி விலக முடியும்? எனக்கிருப்பது போல் இங்கு இருக்கும் ஒவ்வொரு நெடுநாள் பணியாளர்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவம் நிச்சயம் இருக்கும்.
அதற்காக இங்கு பாலும் தேனும் 24 மணி நேரமும் ஓடுகிறது என்று சொல்லவில்லை. இங்கும் சவால்கள் இருக்கின்றன, பிரச்சினைகள் இருக்கின்றன. குறைகளில்லாத மனிதன் ஒருவனைக் காட்டுங்கள், நான் குறைகளில்லாத நிறுவனத்தைக் காட்டுகிறேன். அப்படி மனிதர்கள் உருவாக்கும் எந்த நிறுவன அமைப்பிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினையில்லாத மனிதன் இல்லை, பிரச்சினையில்லாத குடும்பமோ சமூகமோ நாடோ இல்லை. பிரச்சினையில்லாத நிறுவனமும் இல்லை. அதுதான் இயற்கை. கல்லைப் பார்க்கிறோமா, சிற்பத்தைப் பார்க்கிறோமா என்பது பார்க்கிறவரின் பார்வையில்தான் இருக்கிறது.
A job is a love-hate relationship between the employee and the employer. Sustaining in it depends on how much one loves his/her job and the people they work with than how much they hate what they're doing and whom they're working for. People always quit their managers, not the company!
20 நபர்கள்கூட இல்லாமல் சிறு குழுவாக ஆரம்பித்தது 2000 கடந்து 3000 தாண்டி விருட்சமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் பிரம்மாண்டமாக வளரும்.
அதற்குள் 20 வருடங்களாகிவிட்டதா என்று பிரமிப்பாக இருக்கிறது. ஆரம்ப நாட்களில் உழைத்ததுபோலவே இன்றும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். போதும் என்று மனம் சோம்பித் தேங்கிவிடவில்லை.
இப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்கக் கனவு கண்ட நிறுவனத் தலைவிக்கும், அவருக்கு வலதுகரமாக இருந்து வாகனத்தைச் செலுத்தும் இயந்திரம் போல உந்து சக்தியளித்து செலுத்தி, நகரவைத்து, ஓட வைத்து, எழும்பிப் பறக்கவும் வைத்த தலைமை முதன்மை அதிகாரிக்கும், உடன் கைகோர்த்து ஒரே நோக்கத்துடன் உழைத்த ஆயிரக்கணக்கான சக பணியாளர்களுக்கும், பின்னணியில் அவர்கள் செய்திருக்கும் தியாகங்களுக்கும், இந்தக் கூட்டு முயற்சியை வரவேற்று வாழ்வளித்த வாடிக்கையாள நிறுவனங்களுக்கும் 20 வருடங்களை நிறைவு செய்யச் சில வாரங்களே மீதமிருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
🙏👍💐
(பெரிய) பி.கு. முகநூலிலிருந்து தற்காலிகமாக வெளியேறி இரண்டு வாரங்கள் ஆகின்றது. இத்தற்காலிகப் பிரிவு முழுமையாக முடிந்துவிடவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் இந்த இருவார விலகலில் உணரமுடிந்தது.
வெறும் வெட்டிப்பேச்சும், மீம்ஸ் போடுவதிலும் நேரத்தை விரயம் செய்துகொண்டிருக்கும் இடத்தைவிட்டு விலகினால் அதில் எந்த உணர்வுப் பூர்வமான பந்தமும் இருக்காது. நான் இணையத்தை அப்படிப்பட்ட ஒரு இடமாக நினைத்ததில்லை. முகநூலை அப்படி நினைத்ததேயில்லை. எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் உறவுகளுக்கும், நட்பு வட்டத்திற்கும் மதிப்பு கொடுக்கும், பெறும் ஒரு மெய்நிகர்சன உலகாகவே இதுவரை கருதி வந்திருக்கிறேன்.
ஆனால் 20 ஆண்டு இணைய வாழ்விலும், புழக்கத்திலும் கற்றதும் பெற்றதும் பல. இழந்தது நேரம் மட்டுமே. இதனால் கிடைத்த நட்புகளை அவ்வளவு எளிதாக உதறிவிட்டு விலகியிருக்கமுடியாது. இது உணர்வுப் பூர்வமான பந்தம். வெறும் கேளிக்கையும், வெட்டிக்கூச்சலும் அல்ல. இதைத் தவிர்ப்பதால் பெறக்கூடியது ஒன்றும் இல்லை. இருப்பதால் இழக்கக்கூடியதும் ஒன்றும் இல்லை. உலகைச் சுருக்கிக் கையில் கொடுத்து, தொலைதூரத்தில் இருக்கும் நட்புகளையும், உறவுகளையும் விரல் நுனியில் காட்டி, உரையாட வைத்து, இருபது முப்பது வருடங்களுக்கும் மேலாக எங்கிருக்கிறார்கள் என்று தெரியாமலிருந்த பழைய, பால்ய நட்புகளையும் உறவுகளையும் மறுபடியும் கண்டெடுத்து, கண்டுபிடித்து இம்மெய்நிகர்சன உலகில் உரையாடி, பார்த்துப் பேசி, எழுதிப் படிக்கச் செய்யும் சாத்தியத்தை ஏற்படுத்திய தொழில்நுட்பத்தை உதறுவது மடமை என்று மட்டும் புரிகிறது.
இங்கும் நட்பும், அன்பும், நேசமும், பாசமும் இருக்கிறது. புதிய உறவுகள் முகிழ்க்கின்றன. இந்த வெட்டி அரட்டை மடமா அல்லது நிகழுலகிற்குச் சமமான மெய்நிகர்சன உலகா என்பதும் நம் கண்ணோட்டத்தில் மட்டுமே இருக்கிறது.
இதைவிட்டு விலகியதில் பெருமை இல்லை. திரும்பியதில் வெட்கமில்லை. மறுபடியும் நட்புச் சூழலுக்குள் வந்ததில் மகிழ்ச்சியே!

Saturday, April 06, 2019

கற்பூர பொம்மை

வசந்த் முதன் முதலில் இயக்கி 1990 இல் வெளிவந்த கேளடி கண்மணி படத்திற்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. நன்றாக ஓடிய பெருவெற்றிப் படம் அது. பாடும் நிலா மூச்சு விடாமல் (அப்படிப் பாடவில்லை என்று அவரே பல நேர்காணல்களிலும் இசை நிகழ்ச்சிகளிலும் சொல்லிவிட்டு அவரே மூச்சு விடாமல்) பாடிய மண்ணிலிந்த காதலன்றி பாடல் பட்டி தொட்டியெங்கும் எல்லா வானொலிகளிலும் மூச்சு விடாமல் ஒலிபரப்பித் தீர்த்தார்கள்.
நன்றாக தம் கட்டி முழு சரணத்தையும் பாட முடிகிறதா என்று நானும் என் அண்ணனும் சில வாரங்கள் முயன்று பார்த்திருக்கிறோம். மூச்சுவிடாமலும் பாடினோம். நான் பாடியது நீரில்லாக் கிணற்றுக்குள் விழுந்து தீனமாகக் கேட்கும் வகையில் கத்தும் பூனையின் குரலில் இருந்தது.
பாலு, கீதா, ராதிகா, ரமேஷ் அர்விந்த், அஞ்சு, ஸ்ரீவித்யா, மற்றும் சோகமான கதையம்சம் நிரம்பிய படம். இசைஞானியின் இசையில் முத்து முத்தான பாடல்கள். பாலுவின் கதாபாத்திரப் பெயர் ARR (A.R. Rangaraj!)  இன்னும் சில சுவாரஸ்ய தகவல்கள் (உதவி கூகுளாண்டவர்). நீ பாதி நான் பாதி (சக்கரவாக ராகத்தில்), தென்றல்தான் பாடல்களை ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். மண்ணிலிந்த காதலன்றி பாடல் கீரவாணி ராகத்தில் அமைந்ததாம். இந்தப் பாடல் தவிர, படத்தின் மொத்த இசைக் கோர்வைகளையும் உருவாக்க இசைஞானி எடுத்துக்கொண்டது 45 நிமிடங்கள் மட்டுமேயாம்!
வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து என்று ஆண்டாள் பாடலை ஜானகி மனம் நெகிழும் வண்ணம் பாடியிருக்கிறார். இதே பாடலை பாலு அவர் பாணியில் பாடியதும் யுட்யூபில் இருக்கின்றன. ரெண்டையும் ஆயுசு பூராக் கேட்டுக்கொண்டேயிருக்கத் தோன்றும்.
இப்படத்தின் பிரபலப் பாடல்கள் எல்லாம் எனக்குப் பிடித்திருந்தாலும், பாலு ஒரு காட்சியில் இசைப் பின்னணி எதுவும் இல்லாமல், உடைந்த குரலில், கண்ணாடியைக் கழட்டிவிட்டு, "முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீதானம்மா.. கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று” என்று சில வரிகள் மட்டுமே பாடிய கற்பூர பொம்மையொன்று பாடல் என்னைப் பல நாட்கள் தூங்கவிடாமல் செய்தது. மனதைப் போட்டுப் பிசைந்தது. இதயத்தில் சொல்லமுடியாத வலியையும், துயரத்தையும் எழுப்பியது.
பாடல்கள் என்றாலே வேகம், அல்லது காதல் என்று விரும்பும் அந்த வயதில் (20) ஏனோ காரணத்தால் இந்தப் பாடல் தான் என் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தது. கற்பூர பொம்மை என்பதை என்ன அர்த்தத்தில் மு.மேத்தா எழுதியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு அந்தக் கற்பூர பொம்மை நான் மிகவும் நேசிக்கும் குழந்தைகள், பெண்கள், ஆண்களை நினைவூட்டியது. நான் நேசிக்கும், என்னை நேசிக்கும் ஜீவன்களை இழக்க நேரிட்டால் எழப்போகும் தாங்கவொண்ணா வலியைக் கற்பனை செய்ய வைத்தது. இனம்புரியாத தவிப்பை எழுப்பியது. கற்பூரம் எரியாவிட்டாலும் காற்றில் கரையும். அதுபோன்றுதான் மானுட வாழ்வும். நானும், நான் பேரன்பு கொண்ட உயிர்களும் கற்பூரம் போன்று என்றோவொரு நாள் காற்றில் கரைந்துபோகப் போகிறோம் என்ற நிதர்சனத்தை உணர்ந்தாலும் ஏன் இறைவன் இப்படி இவ்வளவு அலகிலாப் பிரேமை கொள்ளச் செய்கிறான் என்று பெரும் ஆதங்கதங்கத்தையும் எழுப்புகிறது கற்பூர பொம்மை.
அன்பையும், நட்பையும், காதலையும் இழப்பதுபோன்று ஒரு கொடுந்துயரம் வேறில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஏன் அப்படித் தோன்றுகிறது கேட்டால் என்னிடம் பதிலில்லை.
முழுப்பாடலையும் பி.சுசீலா அருமையாகப் பாடியிருப்பார். ஆனால் என்னைத் தாக்கியது பாலு பாடியிருக்கும் சில வரிகள்.
இந்தப் பாடலை உருவாக்குவதற்கு ஊக்கியாக இருந்தது இரண்டு பாடல்களாம். ஒன்று Albela என்ற படத்தில் ஸி. ராமசந்திரா இசையமைத்த Dheere Se Aaja Ri Ankhiyon Mein என்ற பாடல். இரண்டாவது அன்னை படத்தில் ஆர். சுதர்சனம் இசையமைத்த 'பூவாகி காயாகி’ பாடல்!
இதைப் பாடியது மனதில் கரைபுரண்டு ஓடும் எண்ண அலைகளுக்கு ஒரு வடிகாலாக. எனக்குப் பாட வருகிறதோ இல்லையோ, எனது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த முயற்சி உதவியது. கூட இணைந்து பாடிய இசை தேவதையாக நான் கருதும் ravpri க்கும் எனது சிரந்தாழ்ந்த வந்தனங்கள்.


Saturday, March 02, 2019

மெளனமான நேரம்

சலங்கை ஒலி படத்தைப் பற்றி பல நூறு பேர் அக்குவேறு ஆணிவேறாக பல முறை பிரித்து மேய்ந்துவிட்டார்கள். புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை என்று நினைத்தால் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் ஏதாவது ஒன்று மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. எனக்கு இந்தப் படத்தின் இயக்குநர் கே.விஸ்வநாத்தைப் பற்றி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. கமல் என்ற மகாநடிகனை விஸ்வரூபம் எடுக்கவைத்ததில் முதன்மையானவர் கே.விஸ்வநாத். 1980-1990 என்ற பத்தாண்டு காலகட்டத்தில் கமல்ஹாஸனின் திரையுலக வாழ்க்கையின் பல முக்கிய மைல்கற்கள், பல சாதனைகள் எட்டப்பட்டன. 25-35 வயதுக்குள் பல உச்சங்களைத் தொட்டிருக்கிறார். வேறு எந்த நடிகராலும் செய்யமுடியாத சாதனைகளைச் செய்திருக்கிறார் - சிவாஜியால்கூட. இதே வயது காலங்களில் இருக்கும் / இருந்த தலை, தளபதி, விரல் வித்தை, பிக்கப் நடிகர், என்று ஒரு பெரிய பட்டாளமே இருந்தும், கமலின் சாதனைகளின் ஒன்றின் பக்கத்தில்கூட எவராலும் நெருங்கமுடியவில்லை. சலங்கை ஒலி செய்தபோது அவருக்கு 29 வயதுதான் . சரியாக 3 வருடங்கள் கழித்துப் புன்னகை மன்னன், விக்ரம் (1986), 1987-இல் நாயகன், 1988-இல் சத்யா. இன்னும் வரிசையாக, அருமையான படங்கள். அவருடைய கலைப் பயணத்தின் உச்சம் இந்தக் காலகட்டத்தில்தான்.
சலங்கை ஒலியின் தெலுங்கு மூலம் சாகர சங்கமம். கமலின் திறமைகளை முழுவதும் வெளிக்கொண்டுவந்து உளியால் தத்ரூபமாய்ச் செதுக்கப்பட்ட சிற்பம் போல உருவாக்கப்பட்டது சலங்கை ஒலி. விஸ்வநாத் ஒரு தேர்ந்த சிற்பி. நூறு கோடி, இருநூறு கோடி என்று செலவில்லை. வீணாய் பணத்தை வாரியிறைத்து பிரம்மாண்ட செட்டுகள் இல்லை. வெளிநாட்டில் குத்துப் பாடல்கள் இல்லை. நாயகிகளில் கவர்ச்சியில்லை. ஒரு கதையைத் திறமையாய்ப் பின்னி, கச்சிதமாய்க் காட்சிகளை அமைத்து, பெரும் பட்டாளம் இல்லாமல், தேர்ந்த கலைஞர்களை ஒன்று சேர்த்து வடித்த சிலைக்கு உயிர்கொடுக்கும் ஜீவனாய் இளையராஜாவின் இசையை வைத்து இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் விஸ்வநாத். இந்தப் படம் திரைத்துறையில் நுழைய விரும்புபவர்களுக்கு ஒரு பாடம்.
தளபதி படத்தை நட்புக்கு அடிக்கடி உதாரணம் காட்டி நண்பேண்டா என்று மீம்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தப் படம் சரத்பாபு - கமல் இடையேயான நட்பை, அதன் இன்னொரு பரிமாணத்தை அழகாகச் சத்தம் போடாமல் காட்டியிருக்கும். சலங்கை ஒலியில் அதிகம் பேசப்படாமல் போனது இந்த நட்பு மட்டும்.
நாட்டியக் கலை, சிறந்த படமாக்கம், கதை, இயக்கம், இசை என்பதற்கு மட்டுமல்ல - காதலுக்கும் இந்தப் படம் ஒரு சிறந்த பாடம். சொல்ல எவ்வளவோ விஷயங்களிருக்கின்றன. பாடல்கள் ஒவ்வொன்றையும் செதுக்கித் தந்திருக்கிறார் இசைஞானி. எல்லாப் பாடல்களுமே முத்து முத்தான பாடல்கள் என்றாலும், 'மெளனமான நேரம்' பாடலைப் பற்றிச் சொல்லியாகவேண்டும். காதல் என்பதை பல விதமாகத் திரைப்படங்களில் காட்டியிருக்கிறார்கள். பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், விடலைப் பருவக் காதல், வயசாளிகளின் காதல், வன்முறைக் காதல் என்று எத்தனையோ வகை. ஆனால் காதலை நடிப்பு என்று சொல்லமுடியாதபடி அற்புதமான கோணங்களில் திரையில் இயல்பாக வெளிப்படுத்திய ஒரே கலைஞர் கமல்ஹாஸன் என்று தயங்காமல் சொல்வேன்.
ஓம் நமசிவாயா பாடலை ஷைலஜா ஆடியவிதத்தை விமர்சித்துப் பத்திரிகையில் எழுதிய கமலை மன்னிப்புக் கேட்கக் கோரி அலுவலகத்திற்கு ஆடிட்டர் மகனுடன் வரும் ஷைலஜாவிடம் கமல் பரதம், கதக், கதக்களி என்று எப்படி ஆடவேண்டும் என்று பாடமெடுக்கும் புகழ்பெற்ற காட்சியை மறக்கவே முடியாது. ரஜினிக்கு 'என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என்ற காட்சி எப்படி இன்று வரை பேசப்படுகிறதோ, கமலுக்கு சலங்கை ஒலியின் இந்தக் காட்சியைச் சொல்லலாம். (ஸாரி, கேவலமான ஒப்பீடுதான்!). ஷைலஜாவுக்குப் பாடம் புகட்டி முடித்ததும் உடைந்த குரலில் நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துச் சொல்வார்.
யதோ ஹஸ்த ததோ திருஷ்டி
யதோ திருஷ்டி ததோ மன
யதோ மன ததோ பாவ
யதோ பாவ ததோ ரச
Where the hands(hasta) are, go the eyes (drishti);
where the eyes are, goes the mind (manah);
where the mind goes, there is an expression of inner feeling (bhaava)
and where there is bhaava, mood or sentiment (rasa) is evoked.
“கண்ணு, மனசு, பாவம் செய்யற கலைகளோடயே கலக்கணும். அப்பத்தான் ரச சித்தி கிடைக்கும்” என்று சைலஜாவிடம் கமல் சொல்வது, நாட்டியக் கலைக்கு என்று மட்டுமல்ல. நாம் வாழ்வில் எடுத்துக்கொள்ளும் எந்த முயற்சிக்கும் பொருந்தும். "உன் கண்ணு பார்வையாளர்கள் மேல, மனசு அவங்க அடிக்கப்போற அப்ளாஸ்ல, ஆசை கெடைக்கப்போற பட்டங்கள்ல” என்று ஷைலஜாவிடம் சொல்வதும் எல்லாருக்கும் பொருந்தும். கலையோ, விளையாட்டோ, வேலையோ - இலக்கை அடைவது என்பது அப்ளாஸ்களிலும், பட்டங்களிலும், விருதுகளிலும், ப்ரொமோஷன்களிலும், பேங்க் பாலன்ஸிலும் இல்லை. அது வெற்றியல்ல.
என்னைக் கேட்டால் இது காதலுக்கும் பொருந்தும் என்று சொல்வேன். கண், மனம், உடலின் ஒவ்வொரு அசைவும், சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், உணர்வுகளும் காதலிப்பவரை நோக்கிக் குவிந்திருக்கும்போது காதல் உன்னத நிலையை அடைகிறது. புற அழகில் வீழ்ந்து அல்லது படுக்கையில் வீழ்த்தும் எண்ணத்துடன் பழகுவது காதல் அல்ல. இச்சை.
இதுவரை யாரையும் காதலித்ததில்லை என்று சொல்பவர்களில் 99% பொய் சொல்கிறார்கள். 1% இன்னும் நடக்க, பேச வராத குழந்தைகள்.
என்ன ஒரு அற்புதமான உணர்வு அது! காதல் என்றாலே பாலினக் கவர்ச்சி என்று புறந் தள்ளிவிடுபவர்களின் சங்காத்தம் எனக்கு வேண்டாம். 30 - 35 வயதில் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல் காலத்தை ஓட்டுபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது எனக்கு. காதல் என்றால் உடனே கிளம்பி புதுக்கவிதைகளாய் எழுதுவதும் அல்ல. ‘காதல் என்றால் இனக்கவர்ச்சி, ஹார்மோன்களின் விளையாட்டு, அதெல்லாம் ஒன்றுமேயில்லை, கடைசியில் படுக்கையில்தான் முடியும்' என்று புறங்கையை வீசும் இண்டலெக்சுவல்களுக்கு - I feel sorry for you guys!
மெளனமான நேரங்கள் மிகவும் அரிதாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில்தான் இருக்கிறோம். மிகவும் இரைச்சலான உலகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதிகாலையிலும் அதிமாலையிலும், இரவுகளிலும் வரும் இந்தியத் தொலைப்பேசி அழைப்புகளில், பின்னணியில் எப்போதும் வாகனங்களின் இரைச்சல் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன. தொலைக்காட்சிகள் இரைகின்றன. யாராவது ஆட்கள் இரைந்துகொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடர்ச்சியான அ-மெளன உலகில் இத்தனை கோடிப் பேர் பைத்தியம் பிடிக்காமல், பாயைப் பிறாண்டாமல் இருப்பதே உலக அதிசயம். அனைத்து அரவங்களும் அடங்கிய மெளனமான நேரங்களில்தான் மனம் விழித்துக்கொள்கிறது. அப்படி விழித்துக்கொள்ளும் மனம், காதலிக்கும் இன்னொரு மனத்துடன் உரையாடத் தொடங்கிவிடுகிறது. அந்த உரையாடல் நேரம், காலம், தொலைவு என்று என்ற வரையறைகளும் இல்லாமல் முடிவற்ற வெளியில் பயணிப்பதைப் போல் கட்டற்றுப் பாயும் வெள்ளம் போல் செல்கிறது. அந்த உரையாடல் முடிவற்றதாக இருக்கக்கூடாதா என்று இரு மனங்களும் ஏங்கிக்கொண்டேயிருக்கின்றன. இப்படியான உணர்வுகளை அனுபவித்திருக்கிறீர்களா?
ஏதோ ஒரு ஜென் கதையில் - ஜென் துறவி வசிக்கும் கிராமத்துக்கு நகரத்திலிருந்து அந்தி சாய்ந்ததும் வந்திருந்த ஒருவர் துறவியின் வீடு இருளில் இருப்பதையும், கிராமத்தில் விளக்குகளே இல்லாமலிருப்பதையும் கவனித்து ‘இவ்வளவு இருட்டாக இருக்கிறதே’ என்றாராம். அதற்குத் துறவி ‘இது இரவல்லவா?’ என்றாராம். நாம் இருளைப் பகலாக்க மெனக்கெட்டு ஒளி மாசு ஏற்படுத்தி இயற்கையின் இயல்பைப் பிறழச் செய்துகொண்டிருக்கிறோம். அதேபோல் அமைதியான, மெளனமான நேரங்களையும் கலைத்து ஒலி மாசால் நிரப்பிக்கொண்டிருக்கிறோம்.
இந்தப் பாடல் ஓர் அழகியல் கவிதை. தமிழ்த் திரைப்படங்களிலிருந்து தலைசிறந்த 10 காதல் பாட்டுகள் என்று பட்டியலிடச் சொன்னால் அந்தப் பத்துமே கமல்ஹாசன் படங்களிலிருந்து அமையக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அதில் மெளனமான நேரம் நிச்சயம் இடம் பெறும்.
மாடிவீட்டு முன்னால் இருக்கும் முற்றத்தில் மெளனமாக நிற்கும் கமல், வெட்கத்துடன் நிற்கும் புதுமாப்பிள்ளை சரத்பாபு. பின்னணியில் கரிய வானும் தொங்கும் முழுநிலாவும். இங்கே புதுப்பெண்ணை மெள்ளமாக அழைத்து முதலிரவு அறைக்குள் விடும் ஜெயப்ரதா. சரத்பாபுவைக் கமல் அழைத்துக்கொண்டு வந்து அறையில் தள்ள, ஆளுக்கொரு கதவாக மெதுவாக மூட, தாழ்ப்பாளில் இருவரின் விரல்களும் உரசிக்கொள்ளும். வேறு யாராவது படமெடுத்திருந்தால், அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அறைக்கு வெளியேவே நாயகனும், நாயகியும் குத்துப்பாட்டு ஆடி, முதலிரவே கொண்டாடி முடிப்பது போல் விரசமாக இப்பாடல்காட்சியை எடுத்திருப்பார்கள். ஆனால் இங்கே இயக்குநர் விஸ்வநாத். ஒரு கலைஞன், கலாரசிகை இருவருக்குள் விதைந்து, துளிர்த்து, மொட்டு உருவாகி, மலரும் காதலை இருவரும் பேசிப் பேசி மாயாமல், பின்னணியில் இந்தப் பாடலை வைத்து, மெளனத்தை முன்னணியில் வைத்து எடுத்தார். இம்மாதிரி காதலின் உயர்வான நிலைகளில் வார்த்தைகள் தோற்கும் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.
பாடல் மிக மெதுவாக ஜானகியின் ஆரம்ப ஆலாபனையுடன் தொடங்கும். அது முடிந்ததும் ஒரு கனத்த மெளனம் நிலவும். பிறகு பல்லவியின் முதல் வரியை - மெளனமான நேரம் - என்று மெதுவாகப் பாடி நிறுத்த இன்னும் கொஞ்சம் மெளனம் - அந்த நொடிகளுக்கு மட்டும் மெளனத்தையே இசையாகத் தோன்றும்படி வைத்திருப்பார் இளையராஜா. அதைக் கேட்கும்போது நமது இதயத் துடிப்பும் கேட்கும். பிறகு புல்லாங்குழல் மொத்த மெட்டையும் தாங்கி இரவு நேரத் தென்றல் போலக் கொண்டு செல்லும். ஜானகி பல்லவியைத் தொடங்கும் விதம், பாலு முதற் சரணத்தை பாடும் விதம் - மொத்தப் பாடலும் ஒலிக்கும் விதம் - எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்தால் எங்கே அந்த இசையும் சொற்களும் குரல்களும் கமல், ஜெயப்ரதா காதுகளில் விழுந்து அந்த மெளனமான இரவு நேரத்தையும், காதலுணர்வுகள் அலைகளாக நிரம்பித் ததும்பும் இரு மனங்களையும் கலைத்துவிடக்கூடாதே என்ற எண்ண வைக்கும்.
சலங்கை ஒலியில் பாலு என்கிற அந்த அற்புதக் கலைஞன் வாழ்நாள் பூராவும் தோல்விகளையே சந்திப்பான். இந்தப் பாழாய்ப் போன காதலிலும் தோற்பான். மெளனமான நேரங்கள் மீது எனக்கு அதனாலேயே கோபமும் உண்டு! காதலர்களுக்குள் மெளனமான நேரங்கள் என்பது அலாதியானதொரு அனுபவம். ஆனால் அது காதலைத் தெரிவித்தபிறகுதான். காதலையே சொல்லாமல் மெளனமாக இருப்பதால் இழப்புகளே மிஞ்சும். காதலில் இணைந்த மனங்கள் அறுபடுவதில்லை. ஆனால் மனங்களின் சங்கமம் மட்டும் காதலை முழுமை செய்வதில்லை. யதோ, திருஷ்டி, மன, பாவ, ரச என்று எல்லாமும் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும்.
நான் அந்த பாலுவாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று யோசித்ததுண்டு. என்ன செய்திருப்பேன்? இப்படியொரு தேவதை கண் முன்னே இருக்க, தூரத்தில் பராக்கு பார்த்துக்கொண்டு, தேரையும், சக்கரங்களையும் சுற்றி வராமல், விரலால் தரையில் கோலம் போடாமல், ஓரக்கண்ணால் பார்க்காமல், நேரத்தை விரயம் செய்யாமல், நேராக அவளிடம் போய் ‘I think I love you’ என்று தயங்காமல் சொல்லியிருப்பேன். ஆனால் அவள் என்னை விரும்புகிறாளா என்று தெரியாமல் சொல்ல மாட்டேன். அது எப்படித் தெரியும் என்றால் - தமிழில் சொல்வதானால் - ஃபீலிங்ஸ்!  தெரியும். அதுவும் சும்மா சொல்ல மாட்டேன். என் விரல்களால் அவள் கூந்தலை ஊடுருவி, அந்த அழகு முகத்தினை என் இரு கைகளில் தாங்கி, அவள் கண்களைத் தீர்க்கமாகப் பார்த்து, நிதானமாக, ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்வேன். அவளுக்கு ஒரு வேளை ஆங்கிலம் தெரியாதென்றால் தமிழில் சொல்வேன்! 
ஆதலினால் காதல் செய்வீர் என்று சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் வலி மட்டுமே மிஞ்சும். காதல் வயப்பட்டவர்களின் உலகு வேறு. அவர்களின் மொழி வேறு. அவர்களின் உணர்வுகளும் வேறு. அதற்கு அக, புற எல்லைகள் கிடையாது. காலம் கிடையாது. காதல் என்றால் என்ன, உணர்வுகளின் கலவையா? வலியா? அவஸ்தையா? இது என்று சொல்லவியலாத, எவ்வளவு மொழிப்புலமை இருந்தாலும், எவ்வளவு வார்த்தை ஜாலங்களால் வர்ணித்தாலும், இன்னும் ஏதோ கொஞ்சம் சொல்ல / செய்ய விட்டுப்போன நிறைவற்ற உணர்வைத் தருவது காதல். மொழிகளின் எல்லைகளைக் கடந்த நிலை அது. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடக்கும் மாயாஜாலத்தைக் கோர்வையாக எப்படிச் சொல்வது?
இவ்வளவு எழுதினாலும் சொல்ல நினைத்தது திருப்தியாக வரவில்லை. சரி. விட்டுவிடுவோம்.
**
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த்துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
**
இந்தப் பாடலைப் பாட விரும்பாதவர்கள் யார்! ஸ்ம்யூலில் புகழ்பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பாடியிருக்கிறார்கள். இதை ஏற்கனவே ஓரிரு முறை முயற்சி செய்து நொந்துபோய் விட்டுவிட்டேன். இந்தமுறை ravpri-யின் குரலில். கல்லெடுத்து அடித்தாலும் பரவாயில்லை என்று சேர்ந்துகொண்டேன். நிறைய இவரின் குரலைப் பற்றிச் சொல்லியாகிவிட்டது. இந்தப் பாடலின் ரெண்டே ரெண்டு இடத்தில் இவர் பாடிய விதத்தை மட்டும் சொல்லியாகவேண்டும். பல்லவியின் இறுதியில் ‘ஏனென்று கேளுங்கள்’, அப்புறம் முதல் சரணத்தின் இறுதியில் ‘நீ வந்து ஆதரி’. இதில் என்ன இருக்கிறது என்றால் கேட்டுப் பார்க்கவும்! எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டே இருக்க முடியாது!
நான் ரொம்பவும் ஈடுபாட்டுடன் பாடுவதாக நினைத்துக்கொண்டு, அவலை நினைத்து உரலை இடித்த கதையாகிவிட்டது! இன்னும் பயிற்சி எடுத்து முயற்சி செய்திருக்கலாம். இரண்டாம் சரணம் முடியும்போது தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட ரயில் மாதிரி ஸ்ருதியிலிருந்து புரண்டு விட்டேன். மன்னிச்சு!