Wednesday, February 23, 2005

*** நினைவலைகள் - டைப் ரைட்டிங் ***

*** நினைவலைகள் - டைப் ரைட்டிங் ***

எண்பதுகளின் மத்தியில் பத்தாவது படிக்கும்போதே என் அப்பா (கிட்டத்தட்ட எல்லா அப்பாக்கள் மாதிரியே) வாரத்திற்கு இரு முறையாவது நினைவூட்டுவது "பரீட்சை முடிஞ்சதும் ஊர் சுத்த ஆரம்பிச்சுடாதே. ஒழுங்கா டைப் ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் கத்துக்கோ, ப்ளஸ் டூ முடிக்கறதுக்குள்ள அதையும் முடிச்சிட்டா டிஎன்பிஎஸ்ஸி இல்லாட்டி எஸ்எஸ்ஸில எக்ஸாம் எழுதி கடவுள் புண்ணியத்துல ஒரு கவெர்மெண்ட் குமாஸ்தா வேலைக்குச் சேந்துட்டியானா அப்றம் வாழ்க்கை பத்திரமாயிடும்" என்பதுதான்.

அரசாங்க வேலை என்றாலே என்னைப் பொருத்தவரை 'உவ்வேக்' சமாசாரம் - சில அலுவலகங்களுக்குப் போய் நிகழ்வுகளைப் பார்த்ததிலிருந்து (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் போன்றவை). என் அப்பாவே அவர் துறையில் நடக்கும் ஊழல்களைப் பற்றிக் கதைகதையாய் சொல்லுவார். 'அரசாங்க வேலையில் சேருவதற்குப் பதில் பாழுங் கிணற்றில் விழுவேனே' என்று மனதில் நினைத்துக் கொண்டேன். சொல்லவில்லை. ஆனாலும் அவர் சொல் மீது இருந்த மரியாதையால் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று மதுரை பெரியார் மேம்பாலத்திற்குக் கீழே ஓடும் தண்டவாளத்தை ஒட்டிய சந்தில் கீழே டீக்கடை, மெக்கானிக் கடைகளோடு முதல் மாடியில் இருளோவென்றிருந்த, தூசி வாடையடிக்கும் புராதான தட்டச்சுப் பயிற்சிப் பள்ளிக்கு ஓராள் மட்டும் செல்லக்கூடிய படிகளில் ஏறி.... ஏறும் போதே காதில் விழுந்த பட..பட..இரைச்சல் சத்தம் த்ரில்லாகவே இருந்தது.

உள்ளே மூன்று பக்கச் சுவர்களையொட்டி வரிசையாக வீற்றிருந்த தட்டச்சு இயந்திரங்களின் முன் வீற்றிருந்த மாணவர்கள். குழல் விளக்குகள். அவற்றை மொய்த்திருந்த பூச்சிகள். மரப்பாச்சிப் பொம்மைகள் போன்று தாவணிப் பெண்கள். இவர்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லவேண்டும்.

இந்த மாதிரி டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட், க்ளினிக்குகள், லேப்புகள், ஜெராக்ஸ் அல்லது ஸ்டூடியோ கடைகள், பல்பொருள் அங்காடிகள், சில ஆரம்பப் பள்ளிகள் என்று பெரும்பாலான இடங்களில் இந்த மரப்பாச்சி பொம்மைகளைக் குறைந்த கூலி கொடுத்து அமர்த்தி வைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட பார்க்கக் கூட ஒரே மாதிரி இருப்பார்கள். மால் ந்யூட்ரிஷன் பிரச்சினையால் முப்பதை நெருங்கினாலும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் போல இருப்பார்கள். பார்க்கவே பாவமாக மனது கஷ்டப்படும்.

இடது பக்கம் இருக்கும் அச்சிட்ட தாள்களைக் கழுத்தை லேசாகத் திருப்பிப் பார்த்துக் கொண்டே விரல்களால் விசைகளில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள். அவர்கள் விசைப்பலகையைப் பார்க்காமலே தட்டச்சுவதை சிறிது நேரம் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, உரிமையாளர்-ஆசிரியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு மறுநாளிலிருந்து வருவதாகச் சொல்லி (மாதம் முப்பது ரூபாய்) விடைபெற்று அன்றிரவு கனவில் விசைப்பலகையைப் பார்க்காது என் காதலிக்கு அதிவேகத்தில் கடிதமொன்றைத் தட்டச்சி அனுப்பினேன்.

மறுநாள் சாணித்தாள்கள் இரண்டினைக் குழல் போலச் சுருட்டிக்கொண்டு சென்று, a...s....d...f ஆரம்பித்தேன். முதல் சில நிமிடங்களுக்கு a......s......d......f...... ;.......l.......k.......j அடிக்க ஆரம்பித்து விரைவில் பொறுமை இழந்து a..s..d..f ;..l..k..j என்று வேகமாகி அரைமணி நேரத்தில் asdf ;lkj வந்துவிட்டேன்.

மாஸ்டர் தோளில் தட்டி, 'எல்லாரும் பண்ற மாதிரி உனக்கும் ஆர்வக் கோளாறாயிடுச்சா? பொறுமை இல்லையா? வேகம் முக்கியமில்லை இப்போ. தப்பு இல்லாம கீய பாக்காம நிதானமா அடிச்சுப் பழகு. வேகம் தன்னால வரும்' என்று அறிவுறுத்த, விரல்கள் சற்று நிதானப்பட்டன.

பயிற்சி ஆரம்பிக்கு முன், காகிதத்தை நுழைத்து நடு சென்ட்டரில் 2, அடுத்த வரியில் அதே பொசிஷனில் = அடித்து பிள்ளையார் சுழி போட்டு, காகிதத்தின் வலதோரத்தில் விசைப்பலகையில் தேடித்தேடி என் பெயரை எழுத்துக்கூட்டி அடித்துக்கொண்டு ஆரம்பிப்பேன்.

'இதையெல்லாம் பரீச்சைல அடிச்சா எல்லாத்தையும் க்ராஸ் பண்ணி பெயில் போட்ருவான். குடுக்கற ஷீட்டை அப்படியே ஈயடிச்சான் காப்பி மாதிரி அடிக்கணும். எக்ஸ்ட்ராவா ஒரு புள்ளி வச்சாக்கூட மார்க் போச்சு. பஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணலைன்னா டைப்ரைட்டிங் கத்துக்கறதே வேஸ்ட்டு' என்று எச்சரித்தார் மாஸ்டர்.

ஒரு வழியாக அனைத்து விசைகளையும் உபயோகிக்கும்படி பயிற்சிகளை முடித்துக் கொண்டு pack my box with five dozen liqour jugs வந்ததும், கட்டுரைகள் தட்டச்சும் பயிற்சியைத் துவங்கிவிட்டேன்.

பேரிளம் பெண்களுக்கு மத்தியில் இளம்பெண் மாதிரி கற்கால ரெமிங்டென்களுக்கு நடுவில் ·பேஸிட் மெஷின்கள் ஒன்றிரண்டையும் வைத்திருந்தார்கள். கருஞ்சாம்பல் கலரில் அழகாக புதிதாக அவை இருந்தன. சத்தமே கேட்காமல் பூவாக தட்டச்சும் போன்றிருந்தது. டக்கென்று அதைப் பிடித்துக் கொண்டு அடிக்க ஆரம்பித்ததும்தான் ஏன் யாருமே அம்மெஷினுக்குப் போட்டிபோடவில்லை என்று தெரிந்தது. ஸ்பேஸ் பார்-ஐத் தொட்டால் ஓர் இடம் மட்டும் காகிதத்தை நகர்த்தாமல் கரகரவென்று கேரியேஜ்-ஐ முழுவதும் இடப்புறம் தள்ளிவிட்டது. எவ்வளவு மெதுவாக அடித்தாலும் எழுத்துகள் இரண்டிரண்டு தடவை பதிந்தது, அல்லது பதியாமல் காகிதம் நகர்ந்தது. பக்கத்து ரெமிங்டன் காரன் நமுட்டுச் சிரிப்புச் சிரித்து எரிச்சலை இன்னும் அதிகப்படுத்த அதற்கப்புறம் ·பேஸிட் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

தட்டச்சு செய்யும் போது, எழுத்துக்களுக்கான அச்சுகள் எழுந்து லொட்டென்று சிறிய இடைவெளியில் காகிதத்தில் அச்சைப் பதிக்கும். அந்த இடைவெளியில் ஒவ்வொரு விரலாக வைத்து S U N D A R என்று பெயரை விரல்களில் அடித்துக் கொள்வேன்.

நிறையப் பிழைகள் செய்யும் நேரத்தில் ஆத்திரம் தலைக்கேறி மாஸ்டர் பார்க்காத சமயம் பார்த்து இரு கைகளையும் விசைப்பலகையில் வைத்து அனைத்து விசைகளையும் மொத்தமாக அமுக்க, அச்சுக் கம்பிகள் தேனீக் கூட்டம் போன்று மொத்தமாக எழும்பி கோர்த்துக் கொண்டு அடையாக நிற்கும். விட்டதும் ஒவ்வொன்றாக அதன் இடத்திற்குத் திரும்பும்.

கார்பன் காப்பி வைத்து அடிக்கக் கற்றுக்கொண்டது அடுத்த நிலை. இரு காகிதங்களை சிலிண்டரில் நுழைத்து லேசாக அதன் காதைத் திருகி, காகிதங்களின் இடைவெளியில் புது கார்பன் தாளைச் செருகி பின்பு மறுபடியும் காதைத் திருகி சரியான பொசிஷனில் வைத்துக் கொள்ள வேண்டும். புதுக் கார்பன் தாளின் வாசனையே தனி. அதன் முதல் பிரதி இன்னும் விசேஷம். அச்சுக் குண்டாக இருக்கும். கார்பன் தாளைத் தவறாகத் திருப்பி வைத்து அடித்து முடித்ததும் பிரதி விழாமல் போனதும் நிகழ்ந்திருக்கிறது.

கொடுத்த பயிற்சியைத் தவிர வேறு எதைத் தட்டச்சினாலும் மாஸ்டருக்குப் பழியாகக் கோபம் வரும். இருந்தாலும் காகிதங்களுக்குள் ஒளித்துக் கொண்டுவந்து இன்லாண்ட் கவருக்கு முகவரியைத் தட்டச்சுவது, நோட்டுப் புத்தக அட்டையில் ஒட்டுவதற்காக லேபிளில் பெயர் விவரங்களைத் தட்டச்சிக் கொண்டுபோவது போன்ற திருட்டுத்தனங்களின் த்ரில் தனி.

தட்டச்சுத் தேர்வு ஏதாவது ஒரு பள்ளியில் நடக்கும். மதுரை செளராஷ்ட்ரா பள்ளியை எங்களுக்குத் தேர்வு மையமாகக் கொடுத்திருந்தார்கள். அங்கு போய் பார்த்தால் ஏகப்பட்ட பயிற்சிப் பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள். வண்டி வண்டியாக தட்டச்சும் இயந்திரங்களைக் கொண்டுவந்து அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவழியாக என் மெஷினைக் கண்டுபிடித்து ஸ்டூலில் அமர்ந்துகொள்ள கரங்கள் நடுங்கின. எங்கும் அமைதி. திடீரென்று விசில் ஒன்று ஒலிக்க சடசடவென்று பனிக்கட்டி மழை பெய்வது போல் அனைவரும் அந்த நொடியில் தட்டச்ச ஆரம்பிக்க, பதற்றமாக இருந்தது. ஆனால் நான் தேர்வுக்காகப் பயிற்சி செய்தபோது கடைப்பிடித்தது முதல் ஐந்து வினாடிகளுக்கு மெஷினைத் தொடாது மனதை ஒருமுகப் படுத்துவதுதான். அதையே அன்றும் கடைப்பிடித்து, காதுகளைத் தற்காலிகமாகச் செவிடாக்கிக் கொண்டு விரல்களை விசைப்பலகையில் வைத்துச் சீரான வேகத்தில் தட்டச்சி முடித்தேன். பதினைந்து நிமிடத் தேர்வில் ஐந்து வினாடிகளை இழப்பது சற்று அதிகப்படியான ரிஸ்க்தான். ஆனால் முதல் வகுப்பில் தேறினேன். உயர்நிலையிலும்.

ஆங்கில தட்டச்சு முடித்ததும் தமிழ்த் தட்டச்சைத் தொடங்கியதும் ஓரிரு நாட்களிலேயே போதும் போதுமென்று ஆகிவிட்டது. 247 எழுத்துகளையும் இம்முட்டூண்டு விசைப்பலகையில் அடக்கி, அதைக் கற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமில்லை. யளனகபக, ட்மதாத என்று அடிக்கத் துவங்கி, எத்தனை அடிக்கவேண்டியிருந்தது ! கிட்டத்தட்ட எல்லா எழுத்துகளுக்கும் இரண்டிரண்டு விசைகளை அடிக்கவேண்டும். மண்டை காய்ந்து விட்டது. ஆனால் இந்தக் கஷ்டமெல்லாம், எழுத்துகள் எந்தெந்த விசைகளில் இருக்கின்றன என்று கற்றுக் கொள்ளும் வரைதான். ஆங்கிலத் தட்டச்சு செய்ய பக்கத்தில் மேட்டர் இருந்தால் மட்டுமே பார்த்து அடிக்கமுடியும். சொந்தமாக யோசித்து அடிக்கும் அளவிற்கு நான் பீட்டரில்லை. ஆனால் தமிழ்த் தட்டச்சில் அந்தச் சிரமமில்லை. சிந்தனை விரல்கள் வழியாகக் காகிதத்தில் இறங்கி நிறைத்துவிடும். நினைப்பதை அப்படியே அடிக்க முடியுமே. முதலில் பிடித்த திரைப்படப் பாடல்களாக அடித்துத் தள்ளினேன். எழுதுவதை நிறுத்தி அனைத்துக் கடிதங்களையும் தமிழில் தட்டச்சு செய்தே கையொப்பமிட்டு அனுப்பினேன். இதுஇதுதான் என்று கணக்கில்லாமல் தமிழில் நிறைய அடித்துத் தள்ளினேன். ஆங்கில உயர்நிலைத் தட்டச்சு முடித்திருந்ததால், தமிழில் நேரடியாக உயர்நிலைத் தேர்வு எழுதி, முதல் வகுப்பில் தேறினேன்.

எனது சுருக்கெழுத்துப் பயிற்சி சுருக்கென்று ஓரிரு தினங்களிலேயே முடிந்துவிட்டது. என்னால் சுருக்கெழுத்தில் கவனம் செலுத்தவே முடியவில்லை. Pitman என்னை pity man-ஆக ஆக்கிவிட்டது. :)

ப்ளஸ் டூ முடிக்கும்போதே தமிழ், ஆங்கிலத் தட்டச்சையும் முடித்தாகி விட்டது. பின்பு அப்பா ஒருமுறை கொண்டுவந்து கொடுத்த S.S.C விண்ணப்பதைப் பூர்த்தி செய்து அனுப்பி - ஏதோ ஒரு தேர்வு நடந்தது; போகவில்லை. கல்லூரி படிக்கையில் கொஞ்சம் தைரியம் பெற்று 'கவர்மெண்ட் ஜாப்லாம் வேணாம்ப்பா. எதாச்சும் ப்ரைவேட்டா சேந்துக்கறேன்' என்று சொன்னதும், என்னைத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்.

ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தட்டச்சைப் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன்.

தினமலரின் தீபாவளி மலருக்கு அப்போது மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பலாம். மதுரை பழங்காநத்தத்தில் தினமலர் அலுவலகம் இருந்தது. தினமும் நூற்றுக்கணக்கில் மணியார்டர்கள் வரும். டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் பகுதி நேர வேலைக்குத் தேவை என்று விளம்பரம் பார்த்து அன்று மாலையே சென்று கேட்டதில் தட்டச்சுத் தேர்வு ஒன்றை வைத்துச் சேர்த்துக் கொண்டார்கள். Foxpro மென்பொருளில் எழுதப்பட்ட ஒரு ஜன்னலைத் திறந்து கொடுத்து ஒரு பெரிய மணியார்டர் கட்டையும் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள. கிட்டத்தட்ட நானூறு மணியார்டர்கள் இருக்கும். வாசகர் பெயர், முகவரி, மணியார்டர் எண்ணை அடிக்கவேண்டும் அவ்வளவுதான். இரவு எட்டு மணியிலிருந்து மறுநாள் காலை நான்கு மணிவரை வேலை. என்னைப் போல இன்னும் சில நபர்களும் வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். நான் பத்து பதினொரு மணிக்கெல்லாம் முடித்துவிட்டு, பன்னிரண்டு மணிவரை தாக்குப்பிடித்துவிட்டு அதற்கப்புறம் சாமியாடத் தொடங்கி கடைசியில் தூங்கிவிட, மறுநாளுக்கான செய்தித்தாள் பதிப்பு அசுர வேகத்தில் நள்ளிரவில் அச்சிடப்படும்போது எழும் அதீதச் சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்துவிடுவேன். பகலிலும் விழித்திருந்து இரவிலும் வேலைபார்க்க விழித்திருந்த அந்த நாட்கள் நரகம். அதிகாலை இரண்டுமணிநேரம் மட்டுமே தூங்கக் கிடைக்கும். தூக்கம் பாதிக்கப்பட்டதால் பயங்கரமான கனவுகளில் உடல் தூக்கிப் போடும். தீபாவளிக்குச் சில நாட்கள் முன்பு தினமலர் வேலை முடிந்ததும், கையில் வாங்கிய நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் பட்ட கஷ்டம் கரைந்துதான் போனது.

கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்ததும் என் அதிவேகத் தட்டச்சும் திறனைப் பார்த்து "நீ கம்ப்யூட்டர் ·பீல்டுக்குப் போனா நல்லா வருவே" என்று அறிவுரை சொன்ன என் முதலாளிக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். ஒரு எக்ஸ்.ட்டி மெஷினைக் கொடுத்து, லோட்டஸ் 1-2-3-யைக் காட்டி "இதுல கணக்கு வழக்கெல்லாம் அடிச்சு வச்சுக்கோ" என்று சொல்லிவிட்டார். கணிணியை முன்பின் பார்த்ததில்லை. அதில் சினேகிதமான ஒரே விஷயம் அதன் விசைப்பலகை. மெதுவாக ஆரம்பித்துக் கற்றுக் கொண்டு, அப்புறம் வேர்ட் ஸ்டாருக்கு வந்து, பின்பு ப்ரின்ஸ் விளையாடும் வரை முன்னேறினேன்.

அதுவரை மறந்திருந்த தமிழ்த் தட்டச்சு தாஸ் (DOS)-க்கான பாரதி மென்பொருள் மூலமாக உயிர் பெற்றது. மறுபடியும் தட்டச்சத் துவங்கினேன். கணிணியில் தட்டச்சும் வேகம் இன்னும் கூடி 90 வார்த்தைகள் வரை அடித்தேன். பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் பிரமிப்போடு பார்த்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு என் விரல்கள் மாயாஜாலம் செய்வது போலிருக்கும். இன்றும் தட்டச்சும் திறமை இணையத்தில் புழங்குவதற்குக் கைகொடுக்கிறது. முதலில் மரத்தடியில் சேர்ந்து பாமினி எழுத்துருவைக் கொண்டு தட்டச்சி, கோப்பாக இட்டுக்கொண்டிருந்தோம். பின்பு திஸ்கி வந்ததும், எ-கலப்பையை வைத்து கொஞ்ச நாள் ட்ரான்ஸ்லிட்ரேஷன் முறையில் 'அம்மா'வை ammA என்று அடித்துப் பழகித் தொலைத்து, மறுபடியும் தமிழ்விசைப் பலகையை நிறுவிக்கொண்டு பழைய தமிழ்த் தட்டச்சு முறையில் அதே வேகத்தில் தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.

ஆரம்ப காலங்களில் அலுவலகத்தில் எதற்கெடுத்தாலும் என்னைக் கூப்பிடுவார்கள். செக்ரட்டரியை ஓரங்கட்டி "இவனை நேரடியா அடிக்கச் சொல்லு. ஷார்ட்ஹேண்டுக்கே வேலையில்லை" என்பார் மேலாளர். அது உயர்வு நவிற்சியாக இருந்தாலும், வேகம் எப்போதும் தனித்துக்காட்டுகிறது என்பதும் உண்மைதான். அலுவலகத்தில் "கீ போர்ட் நின்ஜா" என்று பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள்.

தட்டச்சுத் திறன் கணிணியை இயக்குவதற்கு எந்த அளவு கைகொடுக்கிறது என்பது முறையாகத் தட்டச்சும் பயிற்சி பெற்றவர்களுக்குத் தெரியும்.

பக்கத்து சீட் ஆசாமி ஆள்காட்டி விரல்களால் கோழி குப்பையில் தேடுவதைப் போலத் தேடித்தேடித் தட்டச்சுவதைப் பார்த்தால் தமாஷாக இருக்கும்.

இன்று நல்ல பதவியில் இருந்தாலும் தட்டச்சுவதைப் பொருத்தவரை அதே பழைய வேகம்தான். "So you can type without seeing the keyboard?" என்ற கேள்வியை என் கணித்துறை வாழ்வில் நூறு பேராவது கேட்டிருப்பார்கள். :)

"டைப்ரைட்டிங் கத்துக்கோ" என்று என்னைக் கற்றுக்கொள்ள வைத்த என் தந்தைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம்.

அன்புடன்

சுந்தர்.

Monday, February 14, 2005

*** நினைவலைகள் - சுத்தம் பார்க்கின் ***

முன் குறிப்பு:-

இக்கட்டுரையின் 'களன்' சிலருக்கு ஒவ்வாததாக இருக்கலாம். அதற்காக என்னை மன்னிக்க.

*** நினைவலைகள் - சுத்தம் பார்க்கின் **

அதிகாலையில் பார்வைக்குத் தட்டுப்படுவார்கள் அவர்கள். வீடுகளின் கொல்லைப்புறத்தில் அமைந்திருக்கும் எடுப்புக் கழிவறைகளருகே அவர்கள் பன்றிகளோடு உலவிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தெருவுக்குள் அவர்கள் காக்கி ட்ரவுசர், சட்டையுடனும், தலையில் முண்டாசுடனும், கையில் நீண்ட கழியுடனும் வருவார்கள. கழியின் நுனியில் முக்கோண வடிவில் பிரம்புச் சுள்ளிகள் பின்னப் பட்டிக்கும். மண்ணை லேசாகக் கூட்டி மலத்தின் மீது மூடி ஆங்காங்கே குவித்து வைத்துக் கொண்டே செல்ல, பின்னால் தொடரும் பெண்மணி தகரத்தினாலான - கொத்தனார் சிமிண்ட் பூசும் கரண்டி போலிருக்கும் - கரண்டியால் மண் மேடுகளைச் சுரண்டியெடுத்துப் பிரம்புக் கூடையில் அள்ளிப் போட்டு, தெருக்கோடியில் நிற்கும் டயர் சக்கர மாட்டு வண்டியின் முதுகிலிருக்கும் தொட்டியில் போடுவார். சூரியன் முழு வீச்சில் எழுவதற்குள் சுத்தப்படுத்தும் பணி முடிந்திருக்கும். கொல்லைப்புறத்தைச் சுத்தப்படுத்தும் பணியைப் பெரும்பாலும் பன்றிகளே செய்துவிடும். இவர்களும் தொடர்ந்து 'எடுத்து'ச் சுத்தப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள் - தினமும்.

கொல்லைப்புறத்திற்கு இரவில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்கப் பார்ப்பேன். அப்படியும் குளிர் இரவுகளில் குறைந்தது ஒரு முறையாவது செல்லவேண்டியிருக்கும். கையில் முட்டைவடிவில் கண்ணாடி பொருத்திய எண்ணை விளக்கை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் செம்பில் நீருடன் மெதுவாகச் செல்லவேண்டும். சுவர்க் கோழி, சில் வண்டுகளின் ரீங்காரம், தவளைச் சத்தம் இடைவிடாது கேட்க, இருளில் நடக்கையில் தூரத்தில் நாய் ஒன்று ஊளையிட்டு இயற்கை உபாதையை விரைவு படுத்தும். கொல்லைப்புறத்திலிருந்த பிரம்மாண்டமான புளிய மரம் ஊதல் காற்றில் தலைவிரித்தாடும் பேய் போன்று காட்சியளிக்கும். யாரோ பின்னால் வருவது போன்ற பிரமையோடு என் நிழலே பயமுறுத்தும்.

செடிகளூடே சென்று அமர்கையில் அடிவயிற்றைக் கிலி கவ்வும். பேய்க் கதைகள் நினைவுக்கு வந்து புளியமரக் கிளைகளில் அவை இறங்கி வருகிறதா என்று பார்ப்பேன். கிணற்றிலிருந்து வெள்ளை நிற ஆவிகள் எழுந்து வருகிறதா என்று பார்ப்பேன். திடீரென்று பின் பக்கம் புசு புசுவென்று குறுகுறுக்க, யாரோ மூச்சு விடுவதைத் தொடர்ந்து ஒரு மெலிதான உறுமலும் கேட்க அலறியடித்து, செம்பைக் கீழே போட்டுவிட்டு எழுந்து கொல்லைப் புறக் கதவை நோக்கிப் பாய்வேன். அந்தப் பன்றி எதுவும் நடக்காதது போல காரியத்திலேயே கண்ணாக இருக்கும். அவற்றுக்கெல்லாம் ஏன் பேய் பயம் இல்லை என்று நினைத்துக் கொள்வேன். காலையில் நான் அமர்ந்திருந்த இடத்தின் சுவடே இருக்காது. பின்பு கொஞ்சம் வசதி கூடியதில், கொல்லைப்புறத்தில் எடுப்புக் கழிவறை ஒன்றை தாத்தா கட்டினார். கதவு கிடையாது. மேலே திறந்தவெளி. சுவர் மீது செம்பு இருந்தால் 'உள்ளே ஆளிருக்கிறது'. செம்பை ஒரு நாள் யாரோ தூக்கிச் சென்றுவிட, தாத்தா கொல்லைப் புறத்தில் நின்று கொண்டு மொத்தத் தெருவின் கொல்லைப்புறத்திற்கும் கேட்கும் வண்ணம் தமிழிலுள்ள அனைத்து வசவுகளையும் வைதார். நான் யாராவது புதரிலிருந்து எழுந்து ஓடுவார்கள் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பின்பு செம்பு இருந்த இடத்திற்கு பழைய காம்ப்ளான் தகர டப்பா வந்து துருப்பிடித்து ஓட்டையாகும் வரை இருந்தது. உள்ளே அமரும் முன் எழுந்து பக்கவாட்டாகப் பார்வையை வீசினால் அதே வரிசையிலிருக்கும் மற்ற வீடுகளின் எடுப்புக் கழிவறைகள் தெரியும். ஆங்காங்கே விதவிதமான செம்புகள் சுவர் மீது வைக்கப் பட்டிருக்கும். பாதி அறுத்த பிளாஸ்டிக் கேன், தகர டப்பாக்கள், வாளிகள், இன்ன பிற.

ரவுடிப் பையன்கள்; சொல்பேச்சு கேளாதோர் என்று பெயரெடுத்திருக்கும் நண்பர் குழுவில் அவ்வப்போது இணைந்து கொல்லைப் புறத்தில் பன்றி வேட்டையாடுவதுண்டு. வேட்டை என்றால் கல்லெறிந்து துரத்துவது. இரண்டு நாள் வயதான ஒரு குட்டிப் பன்றியை எப்படியோ தனிமைப்படுத்தி, கையில் தூக்கிப் பார்த்தபோது அது குறுகுறுவென்று என்னைப் பார்த்து வீ வீ என கால்களை உதைத்துக் கொண்டு அலற, பிடறியைச் சிலிர்த்துக்கொண்டு உறுமிக்கொண்டு வந்துவிட்ட தாய்ப் பன்றிக்குப் பயந்து, அதை மெதுவாக இறக்கிவிட அது மானை விட வேகமாக ஓடி தாயின் வயிற்றுக்கடியில் நின்று கொண்டது. கல்லடி பட்டு நொண்டிக்கொண்டு சென்ற இன்னொரு குட்டியைப் பார்த்ததிலிருந்து வேட்டையை விட்டுவிட்டேன். 'குட்டில பன்னி கூட அளகா இருக்கும்' என்பது யாருடைய டயலாக் என்று தெரியவில்லை.

இயற்கையின் அவசர அழைப்புகள் நேரங்கெட்ட நேரத்தில் வந்து கழுத்தறுக்கும் போது எழும் கோபமும், இயலாமையும் மிகுந்த சங்கடத்தைத் தரக் கூடியன.

வத்திராயிருப்பு ஆரம்பப் பள்ளியில் படித்தபோது, பள்ளியிலும் கழிவறை வசதிகளில்லை. பையன்களுக்கு பள்ளியின் பின்பக்கச் சுவரையொட்டி மணல் ஓடிக் கொண்டிருந்த அர்ச்சுனா நதிதான் கழிப்பறை. சில நேரங்களில் அங்குச் செல்ல மறந்து போய் வீட்டுக்கு வரும் வழியில் உந்தப்பட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்து சேர்ந்து, பையைத் திண்ணையிலேயே எறிந்துவிட்டுக் கொல்லைப்புறத்திற்கு மின்னலாக ஓடியமர்ந்து விடுதலை பெற்றிருக்கிறேன்!

மூன்றாம் வகுப்பு படித்த அதே தெருப்பையன் அரைக்கால் சட்டையிலேயே ஆய் போய் வாத்தியார் பாதி வகுப்பில் வீட்டுக்கு அனுப்பி விட்டார். அப்படியே கால்களில் சந்தன அபிஷேகத்துடன் நடந்து வந்து வீடு சேர்ந்த கதையை நீண்ட நாட்கள் சொல்லிச் சிரித்தோம். அவனை 'ஓட்டைக் கு**' என்று பட்டப் பெயரிட்டு அழைத்தோம்.

87-ல் நாயகன் படத்தை தீபாவளியன்று முதல் காட்சி பார்த்துவிட்டு - பெரும்பாலான தியேட்டர் கழிவறைகளில் கால் வைக்கவே முடியாது - வெளியே வரும்போதுதான் சிறுநீர்ப்பை முழுதும் நிரம்பியிருப்பதை உணர்ந்தேன். அடுத்த அடி எடுத்து வைப்பதே பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. சிரிக்கவோ பேசவோ முடியவில்லை. எவ்வித ஒலியெழுப்புவதற்கும் லேசாகவாவது அடிவயிற்றை எக்க வேண்டும். அந்நிலையில் எக்கினால் வெடித்துவிடும் அபாயத்திலிருந்தேன். காலைக் காட்சியானதால் நடுப்பகலில் தெருவில் எங்கும் ஒதுங்க முடியவில்லை. கொடுமைக்கு ஒரு சந்து கூடச் சிக்கவில்லை. அருகிலிருக்கும் பொதுக்கழிப்பறைக்குக் குறைந்தபட்சம் இரண்டு கிலோமீட்டர்கள் செல்லவேண்டும். அந்நிலையில் பைக் ஓட்டுவதை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் ஐந்து நிமிடங்கள் கூடத் தாங்காது என்று தெரிந்து ஒவ்வொரு நிமிடமும் யுகமாகக் கழிந்தது. நான்காவது நிமிடத்தில் அனைத்து வெட்க, மான, அவமானங்களைப் புறந்தள்ளி அருகிலிருந்த வீட்டின் கதவைத் தட்டிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு - பெரிய மனது பண்ணி அனுமதித்தார்கள் - முடிந்து வெளியே வந்து படிக்கட்டில் நின்றுகொண்டு ஆழமாக மூச்சு இழுத்தேன் பாருங்கள். அப்படியே நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளலாம் போல இருந்தது. உச்சக் கட்ட விடுதலையென்பது இதுதானோ?. இதுமாதிரி மாட்டிக்கொண்டு தவித்த பல சந்தர்ப்பங்கள்!

முசிறியில் இருந்தபோது, தள்ளாத வயதில் 'ஒட்டன்' என்று அழைக்கப்பட்ட வயசாளியொருவர் வீட்டுப் பின்புறமிருக்கும் சாக்கடையை வாரித் தள்ள தினமும் வருவார். அங்கு கழிப்பறைகள் இருந்த வீடுகள் மிகச்சில. பெரும்பாலான வீடுகளில் கொல்லைப்புறத்தில் கிணற்றடியில் துவங்கி சாக்கடை ஒன்று இருபத்தைந்தடிக்கு நீண்டு நின்றுவிடும். அதற்கப்புறம் முட்புதர்கள. நீர் வடிந்து மண்ணில் கலந்துவிடும். வீட்டின் கழிவுகள் அதன் வழியாக வெளியேற, அதுவே கழிப்பறையாகவும் பயன்பட்டது. அடிக்கடி அடைத்துக் கொள்வதால், ஒட்டன் தினமும் வந்து அதைத் தள்ளி விடுவார். நிறைந்திருக்கும் சாக்கடையை அவர் தள்ளி முடித்ததும் தரை தெரியும்.

அவருக்குக் கூன் முதுகு. பாதத்திலிருந்து முதுகு வரை நான்கடி உயரமிருந்தார். நிமிர்ந்து நின்ற காலங்களில் ஐந்தரையடி இருந்திருக்க வேண்டும். முழங்கால் வரை கருப்பாக சாக்கடை அப்பியிருக்க, பாதங்கள் ஏதோ வேற்றுக்கிரக ஜந்து போன்று விரிந்திருக்கும் விரல்களுடன் அகன்றிருக்கும். சில வருடங்கள் கழித்து மதுரையில் E.T. திரைப்படத்தைப் பார்த்தபோது அவர் நினைவுதான் வந்தது.

அம்மா அவருக்கென ஒரு அலுமினியத்தட்டை கொல்லைப்புறத்தில் வைத்திருந்தார். தினமும் தூர்வாரி முடித்ததும், அவருக்குப் பழையதும் புதியதும் கலந்த சாதமும் குழம்பும் தட்டில் வைத்துத் தருவார். கிணற்றடியில் கைகளை நன்கு கழுவிக் கொண்டு குத்துக்காலிட்டு அமர்ந்து சாப்பிடுவார். அப்பா வருகிறாரா என்று அடிக்கடி வாசலை நோட்டம் விடுவது என் வேலை. சாப்பிட்டு முடித்து தட்டைக் கழுவி வைத்துவிட்டுக் கொல்லைப்புற முட்புதர்களூடே சென்றுவிடுவார். முட்செடி சிறிது நேரம் ஆடிக் கொண்டிருக்கும். அவர் எங்கிருந்து வருகிறார்? அவர் வீடு எங்கே இருக்கிறது? எதற்காகக் கொல்லைப்புறமாகவே வந்து செல்லவேண்டும் போன்ற பல கேள்விகளுக்கு நீண்ட நாள்களாக விடை கிடைக்கவில்லை.

திடீரென்று அவர் வருவது நின்றுவிட்டது. வீட்டுவேலை செய்ய வரும் காமாட்சியிடம் அம்மா கேட்டதில் விசாரித்துக் கொண்டு வந்து அவர் செத்துப் போய்விட்டதாகச் சொன்னாள். அப்பாவிற்குத் தெரியாமல் நான் இரண்டு நாள்கள் சாக்கடையைத் தள்ளிப் பார்த்தேன். முதல் சில வினாடிகளுக்கு லேசான அருவருப்பு உணர்வு எழ, 'நமது கழிவுக்கு நாம் ஏன் அருவருக்க வேண்டும்?' என்று கேட்டுக் கொண்டு, ஒரு வேலையாக அதை எடுத்துக் கொண்டு தள்ளினேன். கிணற்றில் வாளி நிறைய நீர் இறைத்து, ஒரே வீச்சு. அந்த வேகத்திலேயே தள்ளினால் மூன்றாம் வாளி நீரை வீசும்போது சாக்கடை சுத்தமாகி விடும்.

அவருக்கான அலுமினிய தட்டு நீண்ட நாள்கள் கொல்லைப்புறத்திலேயே இருந்தது. மழை நீர் மஞ்சள் நிறத்தில் தேங்கி பூச்சிகள் அதில் குடியிருந்தன.

யானை லத்தியைப் போடுவதற்காக அதன் பிருஷ்டத்தின் பின்னாலேயே ஒரு கோஷ்டி அலைந்து கொண்டிருக்கும். நானும் அதில் சேர்த்திதான். வாலைத் தூக்கி சிறுநீர் கழித்துவிட்டுப் போடும் லத்தி தரையைத் தொட்டதும்தான் தாமதம். 'யேய்...' என்று ஆரவாரத்துடன் எகிறிக் குதித்து அதன் மீது நர்த்தனமாடுவோம். லத்தியை மிதித்தால் 'படிப்பு' வரும் என்ற நம்பிக்கை. களிமண்ணை மிதித்திருந்தாலாவது குயவனுக்குப் பயன்பட்டிருக்கும் போல.

சில சமயங்களில் பள்ளி முடிந்து வீடு வந்து சேரும் முன்பே யானை தெருவுக்கு வந்துவிட்டுப் போயிருக்கும். ஏற்கெனவே போட்டு மிதிக்கப்பட்ட லத்தியின் மீது ஏமாற்றத்துடன் நடந்து சென்றிருக்கிறேன். காட்டழகர் கோயிலுக்குச் செல்லும்போது காட்டு யானைகள் என்றோ போட்ட லத்திகள் காய்ந்திருக்கும். பார்த்து மிதிக்காவிட்டால் உள்ளங்கால்களுக்குச் சேதம் நிச்சயம்.

சிறு வயதில் அறியாமையினால் எத்தனையோ தவறுகள் செய்திருக்கிறேன். அசுத்தம் செய்திருக்கிறேன். இன்று அனைத்து வசதிகளிருக்கின்றன. குழந்தைகளை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறோம். அக்ஷரா பிறந்ததும், என் அம்மா அவருடைய பருத்திப்புடவைகளில் சிலவற்றை எடுத்து துண்டு துண்டாக அறுத்து என் மனைவியிடம் கொடுத்திருந்தார். அப்புடவை தரும் சில்லிப்புச் சுகம் தாயின் மடிக்குச் சமானம். குழந்தையை அப்புடவையில் படுக்கவைத்தோம். குழந்தை அடிக்கடி கழியும் போது, துணி மாற்றிக்கொண்டே இருப்பார் மனைவி.

என் மடியை பலமுறை நனைத்திருக்கிறாள் அக்ஷரா. அம்மா 'பன்னீராபிஷேகம்; சந்தனாபிஷேகம் - கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்டா' என்பார். போதாக் குறைக்கு பாட்டி 'பருப்புத் துவையல் மாதிரி' என்று சிரிக்க, தங்கை 'ஐயே...' என்று அலறிக் கொண்டே ஓடுவாள்.

குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள். ஷாப்பிங் மால்-இல் பல மணி நேரம் செலவழித்ததும் திடீரென்று மூன்று வயது துர்கா கால்களை இடுக்கிக் கொண்டு 'ஐயோ.. ஒண்ணுக்கு வருது' என்று ஆணியடித்தாற்போன்று நின்றுவிட பரபரப்பாக கழிவறை தேடி ஓடுவதும் நடக்கிறது. குழந்தைகள் - நாமும் முன்பு இப்படித்தான் இருந்தோம் என்று நினைத்துக் கொள்கிறேன்.

எரிமேலியிலிருந்து பம்பைக்கு நடக்கையில் எங்கெங்கும் காற்றில் வியாபித்திருக்கும் மல நாற்றம். பேருந்து நிலையங்களின் பொதுக் கழிவறைகள். ரயில் பெட்டிக் கழிவறைகள். திரையரங்குகளின் இடைவேளையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு நுழையவேண்டியிருக்கும் கழிவறைகள்.. பேருந்திற்குக் காத்திருக்கையில் அருகில் நிற்கும் நபர் பேருந்தின் முதல் படிக்கட்டில் ஏறும் முன்பு புளிச்சென்று துப்பிவிட்டு ஏறுவது. திரையரங்குகளுக்குள் ஓர இருக்கை வரிசையிலிருக்கும் நபர்கள் துப்பி வைப்பது... மருத்துவ மனைகளின் கழிவு மலைகள்.. தனி அல்லது பொதுக்கழிவறை வசதிகளில்லா மக்கள் பயன்படுத்தும் பிரம்மாண்டமான ஆற்றங்கரையாகிய கழிவறை ; தெருக்களின் இருள் சந்துக் கழிவிடங்கள்; இவற்றைப் பார்க்கும்போது கழிவிடங்களின் மத்தியில் வாழ்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது.

இதற்காகத்தான் சொல்கிறார்களோ 'இந்தியர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள்' என்று? அருவருப்பைத் தாங்குவது எளிதாகி, அருவருக்காமல்கூட இருக்க முடிகிறது.

காவிரிக் கரையையே கழிவறையாகப் பயன்படுத்தும் மக்கள் அநேகம்பேர். காவிரி என்ன - எந்த நதியின் கரைகளும் தப்பியதாகத் தெரியவில்லை.

மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளிக்கச் செல்லும்போது, ஆங்காங்கே கரையில் நிழலாக அமர்ந்திருக்கும் பெண்கள் சட்டென எழுந்து கொண்டு நாங்கள் கடக்கக் காத்திருப்பார்கள். பரிதாபம். ஆண்களுக்கு நேரங்காலம் கிடையாதே. நாள் முழுதும் யாராவது ஆங்காங்கே அமர்ந்திருப்பார்கள். கவனமாக நடக்கவேண்டும். தவறினால் போச்சு.

'எங்கிட்டோ எவனோ கழுவின தண்ணிதான இங்கிட்டு வருது. இதுலயா குளிக்கறது?' என்று நண்பர்களிடம் விசனப்பட, 'அதெல்லாம் மண்ணு வடி கட்டிரும். இது சுத்தத் தண்ணி. இங்க பாரு' என்று சொல்லிவிட்டு உள்ளங்கைகளில் நீரை ஏந்தி உறிஞ்சிக் குடிக்கும் நண்பனைப் பார்த்து இமைக்காது யோசித்திருக்கிறேன்.

சில இடங்களில் இடுப்பளவு நீர். சில இடங்களில் முழங்காலளவு நீர். சில இடங்களில் மணல் மேடுகள். படித்துறையை ஒட்டித் தேங்கிய நீர். இதுவே ஆடிப்பெருக்கைத் தவிர்த்த காலங்களில் காவிரியின் வடிவம். எவ்வளவோ விளையாட்டுகள் விளையாடுவோம். ஓடியாடிக்கொண்டிருந்த நண்பன் இடுப்பளவு நீரில் திடீரென்று அசைவின்றி இருக்க, 'என்னடா?' என்றால் 'ஒண்ணுக்கடிக்கறேண்டா' என்று ஈயென இளித்தான். வேறு வழியில்லை. தண்ணீரிலில்லாவிட்டால் கரையில் போவான். எப்படியும் நதி அசுத்தமாவது நிற்கப் போவதில்லை. ஒவ்வொரு முறையும் நதியில் நீராடச் செல்கையில் இவற்றைப் பார்த்து வெறுத்துப் போயிருக்கிறேன்.

அதுவும் நல்ல வசதிகளோடு வாழ்பவர்கள் கூட நதிக்கரையில் அமர்வதைப் பார்த்து ஆத்திரம் பொங்கும். 'எனக்கு மட்டும் சக்தியிருந்தால், தரைக்கடியில் அதிவேகமாகச் செல்லும் மிருகம் ஒன்றைப் படைத்து, அதை நதிக் கரைகளினடியில் உலவ விட்டு விட வேண்டும். யாராவது உட்கார்ந்தால் போதும். அந்த மிருகம் மின்னல் வேகத்தில் அந்த நபரை அடைந்து, திடீரென்று வெளிப்பட்டு ***க் கடித்து வைக்க வேண்டும். அதிர்ச்சியில் ஆயுசுக்கும் அவன் உக்காரக் கூடாது' என்று கற்பனை செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் இரும்புக்கை மாயாவியின் இரும்புக்கையை மாட்டிக் கொண்டு பல்பைக் கழற்றி ஹோல்டரில் கை வைத்து மாயமாக மறைந்து, கரையில் அசிங்கம் செய்பவர்களின் ***யை நசுக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

மிகவும் உணர்ச்சிப் பெருக்குடன் 'காவிரித் தாய்' என்று நாம் முரசறைந்து சொல்லிக் கொள்வதைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது. 'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் *பிழைக்காதே*' என்று சொல்லி என்ன பிரயோஜனம்? தாயின் மீது மலமும் சிறுநீரும் கழிக்கும் பிள்ளைகள் நாம் - அசிங்கம்; அவமானம்.

அது சரி. ஏழை மக்களையும் குறைசொல்லிக்கொண்டேயிருக்க முடியாது. இருப்பதே தீப்பட்டி வீடு - அதுவே சிலருக்கு ஆடம்பரம் - இல்லாவிட்டால் எங்கே போவார்கள்? பொதுஜனங்களுக்கு வசதி வாய்ப்புகளை இன்னும் அதிவேகத்தில் அரசாங்கம் மேம்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. பள்ளியிலேயே சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதை ஒரு ஒழுக்கமாகவே பயிற்றுவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பள்ளியில் படிக்காதவர்களுக்கும்கூட சுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரசாரங்களை முடுக்கிவிட வேண்டும். கோயில் போன்று பல பொதுவிடங்களை கூசாது அசுத்தப்படுத்துபவர்களைக் கடுமையாக எச்சரித்துத் தண்டிக்க வேண்டும். நாம் முன் மாதிரியாக இருக்கும் பட்சத்தில், குழந்தைகள் தவறு செய்ய வாய்ப்பே இல்லை.

ஆனால் இப்போதைய நிலையில் குற்றம் பார்க்கின் மட்டுமல்ல - சுத்தம் பார்க்கினும் சுற்றம் இல்லாது போய்விடும் போல இருக்கிறது.

அன்புடன்
சுந்தர்

Formula One and WTA Title

Formula One and WTA Title

அரசல் புரசலாக குமுதத்திலும் விகடனிலும் சில கட்டுரைகளில் படித்ததோடு சரி. நடிகர் அஜீத் தயவால் நரைன் கார்த்திகேயனைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்தது. இப்போது 2005 க்ரேண்ட் ப்ரிக்ஸ் ·பார்முலா ஒன்-இல் தமது நாட்டுக் குழுவில் சேர்ந்து பங்குபெற ஜோர்டான் அவரை அழைத்திருக்கிறது. ரேஸ் வீரர்களின் கனவு ·பார்முலா ஒன்-இல் பங்கேற்பது. அதில் பங்கு பெறும் முதல் இந்தியன் நரைன் கார்த்திகேயன். அடுத்த மாதம் நடைபெறும் பந்தயத்தில் அவருடன் ஓட்ட இருப்பது போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ட்டியாகோ மான்ட்டிரோ. இரண்டு ·பார்முலா ஒன் அனுபவமில்லாத ஓட்டுனர்களை ஜோர்டான் தேர்ந்தெடுத்திருப்பது தற்கொலைக்குச் சமானம் என்று ·பார்முலா ஒன்-இல் பழம் தின்று கொட்டை போட்ட போட்டிக்குழு சொல்லிக் கொண்டிருக்கிறது. வெற்றியோ தோல்வியோ அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பதே பெரிய விஷயம்தான்.

நரைன் வெற்றி பெற வாழ்த்துவோம்.

***

கடைசி ஆட்டத்தில் ஏஸ் அடித்து ஜெயித்துவிட்டார் என்று அவரும் ரசிகர்களும் ஆர்ப்பரிக்க, அது ஏஸில்லை என்று கை தூக்கிய நடுவரை டிவி கேமரா மட்டும் கவனித்து ஆட்டத்தைத் தொடர்ந்தபோது, ஒரு நம்பரில் லாட்டரியில் முதல் பரிசு விழாமல் போனது மாதிரி இருந்தது. திரும்ப ட்யூஸ் வந்து - நம்மவர் கிரிக்கெட்டில் கடைசி ஓவர் வரை ஜெயிப்பதாக இருந்து கோட்டை விடுவார்களே அது போல - இவரும் விட்டு விடுவாரோ என்று கவலையாக இருந்தது. நல்ல வேளை விட்டு விடாமல் கேம்-ஐயும் செட்-ஐயும் கைப்பற்றி, முதல் WTA பட்டத்தையும் கைப்பற்றி, இந்திய மகளிர் டென்னிஸ்ஸில் புதிய அத்தியாயத்தையும் எழுதியிருக்கிறார் ஸானியா மிர்ஸா (மிஸ்ரா அல்ல).

அசப்பில் கங்குலியின் தங்கச்சி மாதிரி இருக்கிறார்.

அன்னா கார்னிக்கோவாவை கொஞ்சம் மறந்து ஸானியாவின் படம் இணையத்தில் உலவும் அளவிற்குக் கவர்ச்சியாகவும் இருக்கிறார்.

***

இந்தியாவில் மற்ற அனைத்து விளையாட்டுகளையும் பிருஷ்டத்தின் கீழ் அமுக்கி அமர்ந்து கொண்டிருக்கும் கிரிக்கெட்டின் கால் விரலிடுக்குகள் வழியாக ஸானியாவும் நரேன் கார்த்திகேயனும் எலிக்குஞ்சுகளாக தரிசனம் தந்திருக்கிறார்கள். இனிமேல் நமது விளையாட்டு ரசிகர்களும் மீடியாவும் அரசாங்கமும்தான் மனது வைக்க வேண்டும்.

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கிரிக்கெட்டை மட்டும் வெறித்தனமாகக் காதலிக்காமல், மற்ற விளையாட்டுகளையும் காதலிக்கவேண்டும்.

ஆனாலும்....

கிரிக்கெட் வீரர்கள் பணத்தில் புரண்டாலும் தென்னை மட்டை, சணல் பந்து, முள் ஸ்டம்பு வைத்துக் கொண்டு கிராமச் சிறுவர்கள் கூட விளையாட முடிவதால்தான் அது இந்த அளவு பிரபலமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

டென்னிஸ் அதிகமாகச் செலவு பிடிக்கும் சமாச்சாரம். கார் ரேஸ் - கேட்கவே வேண்டாம்.

அதிகப் பட்சம் தேய்ந்து போன சைக்கிள் டயரையும், துருப்பிடித்த ரிம்-ஐயும் தள்ளிக்கொண்டு ஓடும் ரேஸ் தான் நம் சிறுவர்களுக்குச் சாத்தியம். பழைய மோட்டார் சைக்கிள் டயர் அல்லது ஸ்கூட்டர் டயர் வைத்திருப்பவன் தாதா-பணக்காரன்.

நூறு மீட்டர் இடைவெளியில் எதிரும் புதிருமாக நின்று கொண்டு நேர்க் கோட்டில் ஓட்டிக்கொண்டு வந்து மோதச் செய்யும் விளையாட்டு விளையாடியிருக்கிறேன்.

சில சமயம் சைக்கிள் டயரின் விளிம்புக் கம்பி உடைந்திருந்து, அது லொடுக்கு பாண்டி போன்று காற்றில் எட்டு போட்டுக்கொண்டே கொண்டே ஓடி, எதிரே வரும் டயரை ஏமாற்றிவிட்டுச் செல்லும். கிட்டிப்புள், எறிபந்து, பேந்தா போன்ற விளையாட்டுகளுக்கும் யாராவது அவசரமாக உயிர் கொடுத்தால் தேவலை.

எதையோ சொல்ல வந்து நினைவலைகளுக்குத் தாவி விட்டேன்.

நரைன்-க்கும் ஸானியாவுக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.

அன்புடன்
சுந்தர்