Monday, July 09, 2007

Bowling for Columbine



Bowling for Columbine 2002-இல் வந்த படம். 2004-இல் வந்த Fahrenheit 9/11 -ன் வெப்பமே இன்னும் தணியவில்லை. இப்போது Bowling for columbine-ஐப் பார்த்து மண்டை காய்ந்து போயிருக்கிறேன். இரண்டு செய்திச்சுருள்களையும் நிறைய விதத்தில் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது.

1970-இல் பிறந்த எனக்கு நம்மூர் அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகள் - அதிக ஈடுபாடில்லாததால் - புகையாகவே மனதில் நிற்கும். துக்ளக்கை வாசிப்பவன் என்ற முறையில் சில விஷயங்களில் அரசியல்வாதிகளின் மாறுபடும் நிலைகளையும், மாற்றி மாற்றிப் பேசுதல்களையும் -1970-இல் சொன்னது; 1977-இல் சொன்னது; 1984-இல் சொன்னது என்று நான் அறிந்திராத அவர்களது 'வரலாற்றுச் சிறப்புகளையும்' - வெளிக்கொணர்ந்து தொடர்பு படுத்தி - முகத்திரையைக் கிழிக்கும் சோ-வின் "நினைவுத் திறன்" மிகவும் பிடிக்கும் (யய்யா.... வகையான அவல் கிடைச்சாச்சு... மண்டகப்படியை நடத்துங்க.....!!!)

அதே போல் அமெரிக்கா பற்றியோ, ஈராக் யுத்தம், ஒஸாமா, 9/11 போன்றவற்றைப் பற்றித் துணுக்குகளாக அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கும் செய்திகளை மட்டுமே வைத்து அரைகுறை பிம்பங்களை மனதில் உருவாக்கிக்கொண்டிருக்கும் எனக்கு மைக்கேல் மூரின் இந்த இரண்டு செய்தித் தொகுப்புகளும் நிறைய விஷயங்களைத் தெளிவு படுத்தி, தொடர்பு படுத்தி, மொத்தமாகப் பார்க்கும் Big Picture-ஐக் கொடுத்தன என்றால் மிகையாகாது. அநியாயத்துக்கும் அநியாயமாக இந்த ஆளுக்குத் தில் இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் மீடியாக்களை இந்த அளவுக்கு 'அவுத்து' விட்டிருக்கிறார்கள். நேர்காணல்களில் சற்றும் பயமில்லாது முகத்துக்கு நேராக நேரிடையாகக் கேட்கும் கேள்விகளும், தொகுத்திருக்கும் உண்மைச் சம்பவங்களும் - மிகவும் திறமையாகக் கையாண்டிருக்கிறார் மூர்.

மை.மூர் எழுத்தாளர்; பத்திரிகையாளர்; இயக்குனர் என்று முப்பரிமாணங்களிலும் கலக்கியெடுத்திருக்கிறார்.

வளர்ந்த நாடான அமெரிக்காவில் எந்தவித உள்நாட்டுச் சண்டையோ, வேறு தலைபோகும் பிரச்சினைகளோ இல்லாதிருக்கும்போது ஏன் ஒவ்வொரு வருடமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிக் கொலைகள் நடக்கின்றன? படம் முழுவதும் ஊடுருவியிருப்பது அவர் எழுப்பியிருக்கும் "Are we a nation of gun nuts or are we just nuts?" என்ற கேள்வியே! உடனடியாக எல்லாரும் சொல்லும் சப்பைக்கட்டு விடைகள் :

அ) அதிக அளவில் புழங்கும் ஆயுதங்கள் - துப்பாக்கி வாங்குவது எளிது
ஆ) ரத்தக்கறை படிந்த வரலாறு - இயற்கையாகவே இருக்கும் சண்டை குணம்
இ) சினிமா போன்ற ஊடகங்களில் அதிக அளவு முன்னிலைப் படுத்தப்படும் வன்முறைகள்

இவை மட்டும் காரணமல்ல என்பதை உணர்ந்துகொண்டு இதற்கு விடை காணும் முயல்கிறார். அம்முயற்சியே Bowling for columbine-ஆக உருவெடுத்திருக்கிறது.




அமெரிக்காவின் கொலம்பைன் பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்ட சம்பவத்திலிருந்து துவங்குகிறது படம். அப்பாவி அமெரிக்க பொதுஜனத்தை சதா சர்வகாலமும் பயமுறுத்தியே தொழில் நடத்தும் அரசியல்வாதிகளையும், ஊடகங்களையும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். இதற்கு அமெரிக்க முதற் குடிமகனிலிருந்து கடைக்குடிமகன் வரை யாரும் தப்பவில்லை.

பயத்தினடிப்படையில் எழுப்பப்பட்டிருக்கும் அமெரிக்க சமூக வாழ்க்கையின் அவலங்களைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது.

துப்பாக்கிச் சூடு நடந்த பள்ளியில் படித்த தீவிர காயங்களால் ஊனமடைந்த மாணவர்களில் இருவரை - துப்பாக்கிகள் விற்றுக்கொண்டிருக்கும் K-Mart அங்காடிக்கு அழைத்து வந்து - அவர்களிடம் காட்டி துப்பாக்கி விற்பனையை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் தர்ணா செய்கிறார். நம்மூராக இருந்தால் அவரையும் அந்தப் பையன்களையும் 'ஆபிஸ் ரூமுக்குக்' கூட்டிக்கொண்டு போயிருப்பார்கள்.

அந்த K-Mart அதிகாரி (Mary Lorenz) அவகாசம் கேட்டுக்கொண்டு தலைமைப் பொறுப்பு இருப்பவர்களிடம் பேசிவிட்டுத் திரும்ப வந்து 'இனிமேல் துப்பாக்கிகளை விற்பதில்லை என்று எங்களது நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது' என்று அறிவிக்க - அவர்களைப் பாராட்டி மூரும் அந்தப் பையன்களும் கைதட்டிவிட்டுக் கிளம்புகிறார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்கிறது!

கேள்வியை எப்படி நோண்டிக் கேட்பது என்று மூரிடம் கற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது. தமிழாக்கம் செய்யாத சில சுவாரஸ்யமான உரையாடல்கள்:

Michael Moore: Now wait a minute... The Constitution says you've got the right to bear arms. What do you think 'arms' means?
John Nichols: Well it's not like these... [waves his arms]
John Nichols: It means we ought to have handguns if we want to.
Michael Moore: What about nuclear weapons? Should you be able to have weapons-grade plutonium?
John Nichols: [pauses] ... Well I think that oughta be restricted.
Michael Moore: Why not use Gandhi's way? He didn't have guns, and he beat the British Empire.
John Nichols: I'm not... familiar with that.

***

Michael Moore: This was my first gun. I couldn't wait to go out and shoot up the neighborhood.

***

அமெரிக்காவில் மக்கள் எல்லாரும் வீட்டின் கதவுகளை அடைத்துவிட்டு உள்ளே அடைந்திருக்கிறார்கள். (வத்திராயிருப்பில் எங்கள் வீட்டு வாசலில், தெருவில் நின்றுகொண்டு பார்த்தால் கொல்லைப்புறக் கொனேயில் இருக்கும் வேப்பமரம் தெரியும் - அது நினைவுக்கு வருகிறது - இப்போது நம்மூரிலும் கதவைப் பூட்டாமல் திறந்து வைத்திருக்க முடியாது போல - பகலிலும். பூட்டியிருந்தாலேயே ஆட்டையைப் போட்டுவிடுகிறார்கள்). பாதுகாப்பு குறித்த பயம் பிரதான காரணம். அழைப்பு மணி அடித்ததும் கையில் துப்பாக்கியோடுதான் கதவைத் திறப்பார்கள் என்ற ரீதியில் அமெரிக்காவைக் காட்டிவிட்டு, மற்ற நாடுகளில் நிலவரம் எப்படி என்று சோதனை செய்கிறார். ரொம்பத் தூரம் போவானேன் - ஆற்றுக்கு அந்தாண்டை இருக்கும் கனடாவில் போய் பார்க்கலாம் என்று அங்கு சென்று பார்க்க, கனேடியர்கள் கதவைப் பூட்டுவதே இல்லை என்றறிகிறார். அதை உறுதி செய்ய ஒரு வீட்டின் கதவைத் தள்ள அது திறந்துகொண்டு உள்ளே வீட்டுக் காரர் 'Yes' என வினவுகிறார். அவரிடம் கதவைப் பூட்டுவதில்லையா எனக் கேட்க அவர் 'எதுக்கு?' என மறுகேள்வி எழுப்புகிறார். அவரிடம் அத்துமீறி நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு மூர் சொல்வது "Thank you for not shooting me"!

Marilyn Manson-ஐ பேட்டி காணுகையில் நிகழும் உரையாடலில் ஒரு பகுதி.

Michael Moore: If you were to talk directly to the kids at Columbine or the people in that community, what would you say to them if they were here right now?
Marilyn Manson: I wouldn't say a single word to them, I would listen to what they have to say and that's what no one did.

Terror Alert Elevated என்று சிவப்பு மஞ்சள் என்று தினமும் ஜிங்குச்சா அடித்து மக்களை பயமுறுத்தும் அமெரிக்க ஊடகங்களையும் அரசையும் கேலியுடன் இப்படிக் குறிப்பிடுவார் மூர் "The media, the corporations, the politicians... have all done such a good job of scaring the American public, it's come to the point where they don't need to give any reason at all." அதைத் தொடர்ந்து அவர் காட்டுவது திருவாளர் புஷ் "Today the Justice Department did issue a 'Blanket Alert'. It was in recognition of a general threat that we received. This is not the first time the Justice Department has acted like this. I hope it's the last, but given the attitude of the evil-doers, it may not be." என்று திருவாய் மலர்ந்ததை!

"It was the morning of April 20th 1999, and it was pretty much like any other morning in America. The Farmer did his chores. The milkman made his deliveries. The President bombed another country whose name we couldn't pronounce. Out in Fargo, North Dakota, Cary McWilliams went on his morning walk. Back in Michigan, Mrs Hughes welcomed her students for another day of school. And out in a little town in Colorado, two boys went bowling at 6 in the morning. Yes, it was a typical day in the United States of America.

Yes, it was a glorious time to be an American."

வன்முறையைக் காட்டும் அமெரிக்க ஹாலிவுட் படங்களால் அமெரிக்காவில் துப்பாக்கிச் சாவுகள் அதிகம் என்ற பிம்பம், கனேடியர்களும், ஏன் மற்ற நாடுகளில் ஹாலிவுட் படங்களை ரசித்துப் பார்க்கிறார்கள் என்ற உண்மையின் மூலம் உடைபடுகிறது. கனேடியர் ஒருவரிடம் மைக்கேல் மூர் "அமெரிக்காவில் ஏன் துப்பாக்கிச் சாவுகள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்க அவர் சொல்வது "May be they like killing each other!"

நேஷனல் ரைஃபிள் அஸோஸியேஷன் காரர்கள் ஊர் ஊராகச் சென்று ஊர்வலம் நடத்துகிறார்கள் - துப்பாக்கிக் கலாசாரத்தைப் பரப்பி. கொலம்பைன் பள்ளியில் அந்த அசம்பாவிதம் நடந்தும் அந்த ஊருக்கு அவர்கள் வருகிறார்கள். அவர்களது 'மாநாட்டை' எதிர்த்து பெற்றோர்கள் கூட்டம் கூட்டி, உயிரிழந்த மாணவர்களின் படங்களைத் தாங்கி, நாத் தழுதழுக்கப் பேசியும் மாநாடு நடக்கிறது! NRA-யின் தலைமை அதிகாரி Charlton Heston-யை மைக்கேல் மூர் சந்தித்துக் காணும் பேட்டி இந்தத் தொகுப்பிலேயே ஒரு முக்கியமான அம்சம். அவரை அவரது வீட்டிலேயே (வீடா அது? கோடநாடு எஸ்டேட்!) சந்தித்து கேள்விகளால் துளைத்தெடுக்க கிழவர் தடுமாறுகிறார். இறுதியில் அவரிடம் 'நீங்கள் Columbine மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களா?' என்று மூர் கேட்க, அவர் திடுக்கிட்டு மறுத்துவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு எழுந்து போக, அவரிடம் ஒரு ஐந்தாறு வயதிருக்கும் பெண் குழந்தையின் படத்தைக் காட்டி 'இந்தப் படத்தைப் பாருங்கள். துப்பாக்கிக்குப் பலியான சின்னப் பெண். இதைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்' என்று சொல்லச் சொல்ல அவர் உள்ளே சென்றுவிட, அந்தப் படத்தைக் கீழே சாய்த்து வைத்துவிட்டு வெளியேறுகிறார் மூர். நம்மை ஒரு பலத்த சோகம் கவ்விக் கொள்வதை மறுக்க முடியவில்லை.

மைக்கேல் மூர் படங்களைக் குப்பை என்று நிறைய விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

என்னுடைய பார்வையில், நான் பார்த்த வரையில் உண்மை சார்ந்த படத் தொகுப்புகளை நேர்த்தியாகத் தயாரிப்பதில் அவரது திறமை அசாத்தியமானது. நானெல்லாம் துண்டு துண்டாகச் செய்திகளை வாசித்துவிட்டு மறந்து போகும் ஆசாமி. அத்துண்டுகளைத் தொடர்பு படுத்தி கோர்வையாக நம்மிடம் முழு பரிமாணத்தையும் காட்டும்போது அடடா என்று பிரமிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

இந்தத் தொகுப்பு ஆஸ்கர் மற்றும் பல்வேறு விருதுகளை வென்றது!

Healthcare Industry-யின் அவலங்களை வைத்து சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் விவரணப்படம் - Sicko - அதைப்பற்றி இன்னொரு நாள் ஒரு கண்ணோட்டம் எழுத முயல்கிறேன்.

நம்மூரில் ஒரு படமாவது இம்மாதிரி எடுக்கவேண்டும் என்பது என் கனவு! இதற்கு அரிதாரங்களோ அலங்காரங்களோ தேவையில்லை. தேவை உண்மையை ஒளிவு மறைவின்றிச் சொல்ல முடியும் சுதந்திரம். அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அப்படியே படத்தை எடுத்தாலும் அது வெளிவருமா என்பது சந்தேகம். அப்படியே வெளிவந்தாலும் அதை 'வந்தேறிகளின் சதி' என்று சுலபமாகத் திரித்து அதில் பார்ப்பனீய மூலக்கூறுகளை 'உருவாக்கி' - கடைசியில் 'போட்டுத் தள்ளி' விடுவார்கள் என்பது மட்டும் பளீரென்று உறைக்கிறது.

பார்க்கலாம்!

***

3 comments:

Unknown said...

Interesting post. I remember one Docu-fiction by name "Project Outsourced" produced in 2004, on similar themes. Directed by one Mr Krishnan S. it never saw the light. It was filmed entirely at Trivandrum, purposely so, to highlight the communists ruling the State there. for more info: www.projectoutsourced.com/

Senthil said...

thalaiva..interesting...!!

Anonymous said...

Good post.