Friday, February 23, 2007

துக்ளக்கா சோ? # 2

Image and video hosting by TinyPic
துக்ளக் 37-ஆம் ஆண்டு விழாவின் நிறைவு உரையில் சோ தொடர்ந்து பேசியது இங்கே. நன்றி: துக்ளக்.காம்

***
இதெல்லாம் போதாதென்று ரிசர்வேஷன், ஒரு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதை எப்படியாவது மத ரீதியாகவும் கொண்டு வந்துவிட வேண்டும் என்றும் பார்க்கிறார்கள். அதை நேரடியாகச் செய்ய முடியாது. மத ரீதியான இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை. ஆகையால் அதற்கு வேறு ஏதாவது வழி கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு சச்சார் கமிட்டியை நியமித்தார்கள்.

"முஸ்லிம்கள்தான் நிறைய படிக்காமல் இருக்கிறார்கள் – என்று அக்கமிட்டி கூறியது. ஆனால் அதன் பிறகு ஒரு சென்ஸஸ் கணக்கே வந்திருக்கிறது. ஹிந்துக்களை விட, முஸ்லிம்களின் படிப்பு நன்றாக இருக்கிறது என்று. இப்பொழுது எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

இதற்கு முன்னால் சில சமுதாயத்தினர் வியாபாரத்தைத்தான் விரும்பினார்கள்.
ஹிந்துக்களில் செட்டியார்கள் வியாபாரத்தை விரும்பினார்கள். நாடார்கள் வியாபாரத்தை விரும்பினார்கள். மார்வாடிகள் வியாபாரத்தை விரும்பினார்கள். அவர்கள் எல்லாம் படிப்பதை விட வியாபாரத்தில் தங்கள் பையன்களை விடுவதில்தான் அவர்களுக்கு விருப்பம் இருந்தது. அப்பொழுதுதான் அவர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வார்கள் என்று நினைத்து அப்படிச் செய்தார்கள்.

அந்த மாதிரி முஸ்லிம் சமுதாயமும் கூட வியாபாரத்தையும், அந்த மாதிரி சேவைகளையும் – ஸர்வீஸஸ் – முக்கியமாக நினைத்தார்களே ஒழிய, படிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இப்பொழுது எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. முஸ்லிம்களும் மற்றவர்களுக்குச் சமமாக வந்து கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு சமூகமும் பாதிக்கப்பட்டு நிற்க வேண்டும் என்பது, நாட்டின் அமைதிக்கு நல்லதல்ல. ஆனால் அதற்காக, முஸ்லிம்கள் ஒரு ஓட்டு வங்கி, அதை நாம் இழந்து விடக் கூடாது என்பதற்காக, இவர்கள் செய்து வருகிற அட்டூழியங்களில் இதுவும் ஒன்று.

அஸ்ஸாமில் வெளிநாட்டவர் சட்டத்தை மாற்றினார்கள். எதற்கு? ஒருவர் இந்தியர் இல்லை என்றால் – நான் இந்த மாநிலத்துக்கு வந்து இவ்வளவு வருடம் ஆகிறது என்று அவர் நிரூபிக்க வேண்டும். அதை மாற்றி, அரசுதான் அவர் இந்தியரல்ல என்று நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்கள். இது செல்லுபடியாகாது என்று நீதி மன்றம் சொல்ல வேண்டிய தாகி விட்டது. இவர்கள் பங்களாதேசத்திலிருந்து வந்த அகதிகள். மேலும் யார் யார் வருகிறார்கள் என்று யாருக்குத் தெரியும்? இத்தனையும் எதற்காக? "இந்த மைனாரிட்டி ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அது தங்களிடம் கொஞ்சம் இருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கிடம் நிறைய இருக்கிறது. அதையும் பிடுங்கி விட வேண்டும் என்பதற்காக, எவ்வளவு தூரம் சமுதாயங்களுக்கிடையே பகைமையையும், துவேஷத்தையும், அவநம்பிக்கையையும் வளர்த்து வருகிறோம்' என்பது பற்றி கவலைப்படாமல் செயல்படுகிறார்கள்.

தீவிரவாதம் பற்றி பேசினால் கூட, பா.ஜ.க. ஒன்றுதான் தீவிரவாதம் பற்றி பேசுகிறது. தீவிரவாதம் பற்றி பேசினால், உடனே முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்கிறார்கள், காங்கிரஸாரும் மற்றவர்களும். தீவிரவாதத்தைப் பற்றி பேசினால், அது ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்க வேண்டும்? அப்படி என்றால் இவர்கள் தீவிரவாதமும், முஸ்லிம்களும் ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். அப்பொழுது யார் உண்மையான மதச்சார்பின்மைவாதிகள்? இவர்களா, பா.ஜ. க.வா?

தீவிரவாதத்தை பா.ஜ.க. தீவிரவாதமாகப் பார்க்கிறது. இவர்கள் முஸ்லிம்கள் என்று பார்க்கிறார்கள். ஆகையால் இவர்களைப் பார்த்துத்தான் முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மதச்சார்பின்மை கட்சிகள் என்று தங்களை சொல்லிக் கொள்கிற கட்சிகள்தான், தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம் மதத்தையும், முஸ்லிம்களையும் அடையாளம் காட்டுகிறார்கள். இந்தக் காரியத்தை பா.ஜ.க. செய்யவில்லை. இந்தக் காரியத்தை இவர்கள்தான் செய்கிறார்கள்.

காஷ்மீரை எடுத்துக் கொண்டால், "இன்று காஷ்மீரில் குண்டு வெடிப்பு இல்லை' என்றுதான் செய்தி வர வேண்டும். தினமும் ஏதாவது நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் பாகிஸ்தானுடன் இணைந்து ஏதாவது செய்ய வேண்டுமாம். பாகிஸ்தானிய உளவுத் துறையுடன் தகவல்களையெல்லாம் பகிர்ந்து கொண்டால் நமது கதி என்ன ஆவது?

அந்தத் தீவிரவாதிகள் எல்லாம் தப்பிப்பதற்கும், உள்ளே நுழைவதற்கும்தான் அது வசதி செய்து தருமே தவிர, தீவிரவாதிகளை அடக்கவா அது உதவும்? பாகிஸ்தானியர்கள்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறார்கள் என்பதும் தெரியும். அவர்கள்தான் பயிற்சியும் கொடுக்கிறார்கள் என்பதும் தெரியும். இருந்தும், நீங்களும், நானும் போலீஸ்காரர்களாகச் செயல்படுவோம் என்றால் என்ன அர்த்தம்? அதைச் செய்கிறார்கள். ஏனென்றால் பாகிஸ்தானுடன் உறவை "சரியாக' வைத்துக் கொண்டால் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்று இந்தியா நினைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் அப்படி அணுகுமுறை எதுவும் இல்லை.

முஸ்லிம்களில் எவ்வளவோ தேசியவாதிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். அப்துல்கலாமை விட்டு விடுங்கள். அவர் புகழ் பெற்றவர். ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். தேசத் தொண்டிலிருந்து பல துறைகளிலும் முஸ்லிம்களின் பணி இருக்கிறது –விளையாட்டுக்களில் கூட. பாவம் கெய்ஃப். மற்றவர்கள் விளையாட்டில் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வீட்டை யாரும் தாக்க வில்லை; கெய்ஃப் வீட்டை தாக்கினார்கள்.இவற்றை எல்லாமும் கண்டிக்க வேண்டும்.

நரேந்திர மோடி
அந்தக் காலத்தில் – முஷ்டாக் அலி காலத்திலிருந்து மொஹம்மது நிஸ்ஸார் காலத்திலிருந்து – இன்று வரை, கிரிக்கெட்டுக்கு முஸ்லிம்கள் நிறைய பேர் தங்கள் பங்கை செலுத்தி இருக்கிறார்கள். ஹாக்கியிலும், தங்கள் பங்களிப்பை முஸ்லிம்கள் செய்திருக்கிறார்கள். இங்கே ஒரு வாசகர் பேசும்போது சொன்னார் – கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்த முஸ்லிம்கள், அந்த குத்தகைப் பணத்தை ஒழுங்காகக் கட்டி வருகிறார்கள் என்று சொன்னார். மேலும் அவர்கள் எல்லாம் இந்த நாடு தங்களுடையது என்று நினைக்கிறபோது, அவர்களை விரோதிக்கிற வகையில், அவர்கள் மனதை பழுதாக்குகிற வகையில், அவர்கள் மனதில் வக்கிரம் தோன்றுகிற வகையில் நடந்து கொள்வது நல்லதல்ல.

இன்னொரு பக்கம், "பாராளுமன்றத்தை தாக்கிய அஃப்ஸலை தூக்கில் போடக் கூடாது; கருணை காட்ட வேண்டும்' என்கிறார்கள். எங்கேயாவது உண்டா இது? பாராளுமன்றத்தைத் தாக்கியதற்கு அவன் காரணமாக இருந்திருக்கிறான். அவனை தூக்கிலிடக் கூடாது. எத்தனை பேர் பாராளுமன்ற வளாகத்தில் இறந்தார்கள்? அவர்களின் மனைவிகள் எல்லாம் மெடல்களை திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள். அரசுக்கு வெட்கம், மானம்... வேண்டாம். இதைவிட அரசாங்கத்திற்கு ஒரு இழுக்கு உண்டா?

நான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தில் சுமார் 70 பேர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தேன். அவர்களில் ஒருவர் கூட அந்த பட்டத்தை திருப்பித் தரவில்லை. சும்மா எல்லோரும் "டாக்டர், டாக்டர்' என்று போட்டுக் கொள்கிறார்கள் என்று அப்படிச் செய்தேன். ஏழு வயது பையனுக்குக் கூட "டாக்டர்' பட்டம் கொடுத்தேன். என்னை மாதிரி ஒரு சமதர்மவாதியை உலகத்திலேயே பார்க்க முடியாது. அவர்கள் கூட திருப்பித் தரவில்லை.

எதற்குச் சொல்கிறேன் என்றால், அந்தளவுக்கு மனது நொந்து போய், வாங்கிய மெடல்களையே திருப்பித் தருகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அரசாங்கத்தை அவமதிக்க வேண்டும் என்று அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மனது நொந்துபோய் அப்படிக் கூறியிருக்கிறார்கள். "எங்களின் கணவன், பையன் ஆகியோர் இறப்பதற்குக் காரணமாக இருந்தவனுக்கு, நீங்கள் கருணை காட்டப் போகிறோம் என்று சொன்னால், எங்களுக்கு உங்கள் மெடல் வேண்டாம்' – என்கிறார்கள். இதை விட ஒரு தெளிவான தகவல் இருக்க முடியுமா? அப்படியும் இந்த அஃப்ஸல் விவகாரத்தை சிலர் விடவில்லை. அவனை தூக்கில் போடக் கூடாது என்று இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே நளினி விவகாரம் வேறு. "நளினியை விட்டு விட்டால் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்' என்று கலைஞர் சொல்கிறார். ஏன் என்றால் ராஜீவ் காந்தியின் உயிர் ஒன்றுமே இல்லை, பாருங்கள். போகட்டும்! தீவிரவாதம் பற்றி என்ன கேவலமான அணுகுமுறை பாருங்கள்? ஆகையால் இந்த அரசாங்கம் தொடர்ந்தால் வரக்கூடிய மிகப் பெரிய ஆபத்து, தீவிரவாதம் வளர்வதுதான். பெங்களூர் வரைக்கும் வந்தாகி விட்டது. இந்த மாநிலத்திற்கு வருவதற்கு இன்னும் ரொம்ப நாள் ஆகாது. பா.ஜ.க. ஆட்சியில்
இருந்தால் இந்த தீவிரவாதம் வராது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த மாதிரி அசடு வழிய மாட்டார்கள். மேலும் பா.ஜ.க. அரசு இருந்தால் உறுதியாக தீவிரவாதத்தை அடக்க முயற்சிக்கும் என்று தெரியும். அதற்கு தீவிரவாதிகள் பயப்படாமல் இருக்கலாம். ஆனால் தீவிரவாதத்திற்கு உதவுகிறவர்கள் எல்லோரும் அஞ்சும்படியாக அரசு நடக்கும். அந்த உதவிகள் எல்லாம் கிடைக்கவில்லை என்றால், இங்கு தீவிரவாதம் வெகுவாகக் குறைந்து விடும்.

தங்கும் இடம் முதற்கொண்டு, அவர்களுக்கு நிறைய உதவி தேவைப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு உதவினால் நம் கதி என்னவென்று உதவி செய்ய நினைக்கிறவர்கள் பயப்படுவார்கள். இந்த பயம் பா.ஜ.க. அரசிடம் இருக்கும்; ஜெயலலிதா அரசிடம் இருக்கும். மன்மோகன் சிங்கிடம் தீவிரவாதிகளுக்கு இந்த பயம் இருக்காது. கலைஞரிடமும் இந்த பயம் இருக்காது. சோனியா காந்தியின் தயவில்லாமல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தால் அவரும் தீவிரவாதிகளிடம் கடுமை காட்டுவார். ஆனால் இப்போது நிஜ பிரதமர் சோனியா காந்தி; நிழல் பிரதமர் மன்மோகன் சிங். ஆகையால் இப்படித்தான் நடக்கும்.

மன்மோகன் சிங் நல்லவர்; நேர்மையாளர். மாட்டிக் கொண்டு முழிக்கிறார். அவ்வளவுதான். ஆனால் பதவியை விடுவதற்கு மனதில்லை. பிரதமர் பதவி என்பது சாதாரண பதவி இல்லை. ஆகையால் விட்டு விடுவதற்கு மனது வரவில்லை. சரி, இதற்கெல்லாம் மாற்று என்ன?

தேசிய அளவில் பா.ஜ.க.தான் இந்த அரசுக்கு மாற்று வழி. இந்த மூன்றாவது அணி என்பது உருப்படாத சமாச்சாரம். தேர்தலில் மூன்றாவது வரும் அணிக்குப் பெயர் மூன்றாவது அணி. ஏற்கெனவே அந்த மூன்றாவது அணியில் இடம் பெற்றிருந்தவர்கள் பலவீனமாகி விட்டார்கள். முலாயம் சிங் பலவீனமாகி விட்டார்; மாயாவதி அந்த அணியில் சேருவாரா என்பது சந்தேகம்.

பிறகு மம்தா பானர்ஜி. அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தைப் பார்த்து நான் பிரமித்து விட்டேன். 25 நாட்கள் அதைத் தொடர்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நமக்குத் தெரிந்த உண்ணாவிரதம் என்பது – காலையில் டிஃபன் சாப்பிட்டு விட்டு, இனிமேல் உள்ளே தள்ள முடியாது என்ற அளவுக்கு சாப்பிட்டு முடித்து விட்டு, அங்கே போய் உட்கார்ந்தால், மாலை 4 மணிக்கு எழுந்து திரும்பவும் சாப்பிட ஆரம்பித்து விட வேண்டியதுதான். அப்படிப்பட்ட உண்ணாவிரதம்தான் நமக்குத் தெரியும். இப்படிச் செய்து விட்டு "வெற்றி... வெற்றி...உண்ணா விரதம் வெற்றி...' என்று சொல்லிக் கொள்ளும் காலத்தில், இந்த 25 நாள் உண்ணாவிரதம் ஆச்சரியம்தான். முன்பு காந்தி இருந்திருக்கிறார். பிறகு குஜராத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக மொரார்ஜி உண்ணாவிரதம்
இருந்தார். மொரார்ஜி உண்ணாவிரதத்தைத் தொடங்கி 17, 18 நாட்கள் கடந்த பிறகு, இந்திரா காந்தி கூறினாராம் – "அவர் செத்தால் என்ன ஆகிவிடும்?' என்று. அதற்கு
சந்திரசேகர், "அதன் பிறகு நாம் குஜராத்தை மறந்து விட வேண்டியதுதான்' என்று கூறியுள்ளார். அதன் பிறகுதான் எல்லோரும் விவாதித்து, குஜராத்தில் தேர்தல்களை நடத்துவது என்று முடிவெடுக்க, மொரார்ஜி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இதை சந்திரசேகரே பின்னர் என்னிடம் தெரிவித்தார்.

இந்த மம்தா பானர்ஜியின் உண்ணாவிரதத்தினால், அவருக்கு பெரிய அளவில் ஆதரவு கூடி விடும் என்று நான் நினைக்கவில்லை. மூன்றாவது அணியில் பிறகு யாரை வைத்துக் கொள்ளப் போகிறார்கள்? முலாயம் சிங் சைஃபராகிக் கொண்டிருக்கிறார். மாயாவதிக்கு இந்த அரசின் தயவு தேவை. தாஜ் வணிக வளாக வழக்கு இருப்பதால், அவரும் ஒன்றும் செய்யப் போவதில்லை. பிறகு யாரை வைத்துக் கொண்டு மூன்றாவது அணி? அதனால்தான் இது உருப்படாத விஷயம் என்று நான் சொல்கிறேன்.

காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க. என்று கூறும்போது, பா.ஜ.க.வில் என்ன பிரச்சனை என்றால், அதில் உள்ள உட்கட்சி மோதல். அக்கட்சி பெற்ற தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து, அதன் தலைவர்கள் இன்னும் மீண்டபாடில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அதனால் மீண்டும் பதவிக்கு வருவோம் என்பதையே அவர்கள்
மறந்து விட்டார்கள். "இந்தியா ஒளிர்கிறது' என்று கூறியதால், தோற்று விட்டோமோ என்று கூட அவர்களிடையே ஒரு அபிப்பிராயம். பத்திரிகைக்காரர்கள் அப்படி கிளப்பி விட்டு விட்டார்கள். ஏதோ கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் "இந்தியா ஒளிர்கிறது என்று சொல்கிறாயா, வா உன்னை தோற்கடிக்கிறேன்' என்று முடிவு செய்தது போல, பா.ஜ.க. தலைவர்கள் நினைத்துக் கொண்டு விட்டார்கள். அப்படியானால் குஜராத்தில் பா.ஜ.க. எப்படி வெற்றி பெற்றது? அங்கு இந்தியா ஒளிர்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு விட்டார்களா? மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் எப்படி பா.ஜ.க. வெற்றி பெற்றது? அங்கெல்லாம் இந்தியா ஒளிர்கிறது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்களா? அதுவல்ல உண்மை.

பா.ஜ.க.வுக்கு சரியான கூட்டணி அமையவில்லை. அவ்வளவுதான். இன்று எந்தக் கட்சியும் தனியாக நின்று வெற்றி பெறும் அளவுக்கு தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, இல்லை. பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் அந்த நிலையில் உள்ளது. குஜராத்தில் தற்போது நரேந்திர மோடி அந்த நிலைக்கு கட்சியைக் கொண்டு வந்திருக்கிறார். மற்றபடி எந்தக் கட்சியும் தனியாக நின்று வெற்றி பெறப் போவதில்லை. அதனால் கூட்டணிதான் முக்கியம். கூட்டணியை தேர்தல் நேரத்தில் தேடாமல், இப்போதே பா.ஜ.க. அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அத்வானி ஒரு உறுதிமிக்க தலைவர். பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படும் வேட்பாளரைப் பார்த்தால் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வர வேண்டும். மன்மோகன் சிங்கைப் பார்த்தால் பச்சாதாபம் வருகிறது. நம்பிக்கை வரவில்லை. அவர் நல்லவர். நாம் எல்லோருமே நல்லவர்கள்தான். நாம் யாருக்கும் கெடுதல் செய்யப் போவதில்லை. ஆனால் ஒரு பள்ளி ஆசிரியர் சொன்னால், அதற்கு கட்டுப்பட்டு நடப்பது போல, ஒரு பிரதமர் செயல்படுவது அந்தப் பதவிக்கு அழகல்ல. அதனால் அத்வானி போன்ற ஒருவர் பிரதமராக வந்தால், நமக்கே ஒரு தெம்பு வரும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவரும்தான் கூட்டணி அமைச்சரவையை நடத்தினார். ஒரே ஒரு குறை. பொழுது விடிந்து பொழுது போனால், யாராவது ஒருவரை ஜெயலலிதாவுக்கு தூது அனுப்பிக் கொண்டிருந்தார்கள். மற்றபடி அந்த ஆட்சி, கூட்டணி கட்சிகளுக்கு டான்ஸ் ஆடவில்லை. வாஜ்பாயின் அந்த ஆட்சி செய்த திட்டங்களின் பயன்களைத்தான், தற்போதை மத்திய அரசு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

என்னிடம் ஒருவர் ஒரு தகவலைச் சொன்னார். நம்பத் தகுந்த வட்டாரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். "லாலு பிரஸாத் யாதவ் ரயில்வே துறையில் மிகத் திறமையாகச் செயல்படுகிறார். நிர்வாகத்தை நிமிர்த்தி விட்டார்' என்கிறார்களே, அது பற்றிய விவரம் என்ன என்றும், அது போல வேறு ஓரிரு இலாகாக்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் கூறினார். "இவை அத்தனையும் பா.ஜ.க. ஆட்சியில் தொடங்கப்பட்டவை. இவை பற்றிய விவரங்களை நான் ஆதாரங்களுடன் கொண்டு வருகிறேன்' என்று கூறியிருக்கிறார். அது கிடைக்கும்போது நான் வெளியிடுகிறேன்.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், அது போல அர்த்தமுள்ள வகையில் செயல்படும் ஒரு அரசை வாஜ்பாய் அளித்தார். பொக்ரானில் அணுகுண்டை வெடித்தார். இந்த அரசுக்கு அதுபோல் தைரியம் வருமா? வாஜ்பாய் ஆட்சி அதைச் செய்தபோது, அதுபற்றி முன்கூட்டியே யாருக்கும் தெரியவில்லை. சாட்லைட் மூலம் அறிந்து கொள்ளும் வசதி அமெரிக்காவிடம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த அணுகுண்டு சோதனை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ரகசியமாக வைத்து, வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. "கூட்டணி தர்மம்' என்று எல்லோரிடமும் விவாதிக்கக் கூடிய விஷயமா இது?

மன்மோகன் சிங்காக இருந்தால், சோனியா காந்தியிடமிருந்து, கூட்டணி கட்சியினரிடமெல்லாம் கருத்து கேட்பார். அணுகுண்டு சோதனை நடத்தலாமா? என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருப்பார். இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால், நம்மால் தீபாவளி பட்டாசு கூட வெடிக்க முடியாது. ஆக, உறுதி உள்ள ஒரு அரசு அமைய வேண்டும். அப்படிப் பார்த்தால், பா.ஜ.க.தான் அந்த மாற்று சக்தி. அவர்களுக்குத்தான் வாய்ப்பும் உள்ளது. அதற்கு அவர்கள் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.

இந்த உமாபாரதி ஒரு சந்நியாசி. அவர் பா.ஜ.க.வுக்கு எவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தினார். துறவி அல்லவா? உண்மையையும் சேர்த்து துறந்து விட்டார். அவரை ஒருமுறை டெல்லியில் சந்திக்க வேண்டி வந்தது. அப்போது குருமூர்த்தியும் அங்கு இருந்தார். "எனக்கு எதிராக நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்களாமே?' என்று கேட்டார். "ஆமாம்' என்று சொன்னேன். குருமூர்த்தி வேறு இருந்ததால், "நமக்கு ஏன் வம்பு? என்று உண்மையைச் சொல்லி விடுவோம்' என்று சொல்லி விட்டேன். எந்த இடத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? "உங்களுக்கு எதிராக அவர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்' என்று குருமூர்த்தியும் சொன்னார்.

"ஏன்?' என்று உமாபாரதி கேட்டார். "உங்களை கட்சியிலிருந்து வெளியேற்றா விட்டால், பா.ஜ.க. செயல்பட முடியாது' என்று நான் பளிச்சென கூறி விட்டேன். இப்படி சொன்னதால் அவருக்கு என் மீது மிகவும் கோபம். "சரி. எத்தனை பெண்கள் நம்மை ஆதரிக்கிறார்கள். அதில் இவரது ஆதரவு இல்லாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது?' என்று விட்டு விட்டேன்.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், பா.ஜ.க.வில் இப்படிப்பட்ட கட்டுப்பாடின்மை காணப்படுகிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும் பெரும் காரணம் என்று நான் சொல்வேன். அனாவசியமாக பா.ஜ.க. தலைவர்களைப் பற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாக விமர்சனங்களை செய்யத் தொடங்கியது பெரும் துரதிர்ஷ்டம். ஆனால் பா.ஜ.க.வுக்கும் சரி, ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் சரி, இது இப்போது புரிய ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் தங்களின் தவறுகளை சரி செய்து கொண்டு வருகிறார்கள் என்று நினைக்கிறேன். விரைவில் இத்தகைய பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் பா.ஜ.க.வுக்கு ஒரு நல்ல எதிர்காலம் வரும் என்றுதான் நான் நம்புகிறேன்.

சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க. நன்றாகச் செயல்பட்டிருக்கிறது. யாருமே எதிர்பார்க்கவில்லையே! உத்திரப் பிரதேசத்தையும், பீஹாரையும் (பா.ஜ.க.) கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால் பயன் இல்லை. போன தேர்தலில் அது வேறு பிரச்சனையாகி விட்டது.

(தொடரும்)

6 comments:

Unknown said...

இந்த கட்டுரையை இட்டதற்கு நன்றி சுந்தர்

//முஸ்லிம்களில் எவ்வளவோ தேசியவாதிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். அப்துல்கலாமை விட்டு விடுங்கள். அவர் புகழ் பெற்றவர். ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். தேசத் தொண்டிலிருந்து பல துறைகளிலும் முஸ்லிம்களின் பணி இருக்கிறது –விளையாட்டுக்களில் கூட. பாவம் கெய்ஃப். மற்றவர்கள் விளையாட்டில் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வீட்டை யாரும் தாக்க வில்லை; கெய்ஃப் வீட்டை தாக்கினார்கள்.இவற்றை எல்லாமும் கண்டிக்க வேண்டும். அந்தக் காலத்தில் – முஷ்டாக் அலி காலத்திலிருந்து மொஹம்மது நிஸ்ஸார் காலத்திலிருந்து – இன்று வரை, கிரிக்கெட்டுக்கு முஸ்லிம்கள் நிறைய பேர் தங்கள் பங்கை செலுத்தி இருக்கிறார்கள். ஹாக்கியிலும், தங்கள் பங்களிப்பை முஸ்லிம்கள் செய்திருக்கிறார்கள். இங்கே ஒரு வாசகர் பேசும்போது சொன்னார் – கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்த முஸ்லிம்கள், அந்த குத்தகைப் பணத்தை ஒழுங்காகக் கட்டி வருகிறார்கள் என்று சொன்னார். மேலும் அவர்கள் எல்லாம் இந்த நாடு தங்களுடையது என்று நினைக்கிறபோது, அவர்களை விரோதிக்கிற வகையில், அவர்கள் மனதை பழுதாக்குகிற வகையில், அவர்கள் மனதில் வக்கிரம் தோன்றுகிற வகையில் நடந்து கொள்வது நல்லதல்ல. //

மிக நேர்மையான கருத்து இது.இவர்களை போல், கலாமை போல், ஜாகிர் கானைப்போல் இருக்கும் முஸ்லிம்கள் தான் நாட்டில் பெரும்பான்மையினர்.இவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்சலையும், காஷ்மீர் தீவிரவாதிகளையும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு இந்த அறிவுசீவிகள் ஆடுவதால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் இந்துசமூகத்துக்கும் இடையே நல்லுறவு கெடுகிறது. கலாமை எல்லாம் முஸ்லிம் பெயர் தாங்கிகள் என்று அழைக்கும் நிலை காணப்ப்டுவதை கண்டால் வேதனை தான் மிஞ்சுகிறது. இந்திய தேசபக்தி உடைய முஸ்லிம்களை அறிவுசீவிகள் இப்படி இழிவுபடுத்துவது அவர்கள் மனதில் இருக்கும் 'முஸ்லிம்கள் அனைவரும் தேசபக்தி அற்று இருக்க வேண்டும்' என்ற தவறான எதிர்பார்ப்பையே காட்டுகிறது.

இன்னொருபுறம் அடிப்படைவாத முஸ்லிம்கள் சிலர் தேசபக்தி உடைய பெரும்பான்மை முஸ்லிம் சமூக மக்களை தவறான மத விளக்கங்கள் கொடுத்து அவர்கள் மார்க்கத்திலிருந்து விலகியவர்கள் என்று பேசியும், எழுதியும் வருகின்றனர்.இந்த உட்பகையை முஸ்லிம் சமூகம் புறக்கணித்து செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

அடிப்படைவாதத்தை துறந்த இந்துவும், முஸ்லிமும், கிறிஸ்தவனும் சகோதரனாக இணைந்து தான் இந்தியாவை ஒரு நல்லரசாக உருவாக்க முடியும்.

Anonymous said...

//...மிக நேர்மையான கருத்து இது.இவர்களை போல்....////

ஆனால் பாருங்கள். ஈழப்பிரச்சினையில் மட்டும் தமிழருக்கு தன்னாட்சி வழங்கப்பட்டால் கிழக்கில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுவிடும் 'அபாயம்' இருக்கிறதென்று கருத்து சொல்வார்!!!

Sundar Padmanaban said...

செல்வன்.

//இந்த உட்பகையை முஸ்லிம் சமூகம் புறக்கணித்து செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.//

எனக்கும்.

அரசியல்வாதிகளின் நெருப்பு மூட்டிக் குளிர் காயும் இவ்விஷயத்தை நாமனைவரும் உணர்ந்தே இருக்கிறோம் என்றே நம்புகிறேன்.

ஏதோ உணர்வில் உந்தப்பட்டு துவேஷங்களைக் கக்கி வெறுப்பு வளர்த்து பிழைப்பு நடத்தும் ஆத்மாக்களை கடவுள் மன்னிப்பாராக.

//அடிப்படைவாதத்தை துறந்த இந்துவும், முஸ்லிமும், கிறிஸ்தவனும் சகோதரனாக இணைந்து தான் இந்தியாவை ஒரு நல்லரசாக உருவாக்க முடியும்.
//

ஆமாம். மற்ற நாடுகளுக்கு வல்லரசாகிறோமோ இல்லையோ நமக்கு நாம் நல்லரசாக இருப்பது முதலில் எய்தவேண்டியது. எப்போதும் வெல்வது மனிதமாக இருக்கட்டும்!

நன்றி.

Sundar Padmanaban said...

//ஆனால் பாருங்கள். ஈழப்பிரச்சினையில் மட்டும் தமிழருக்கு தன்னாட்சி வழங்கப்பட்டால் கிழக்கில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுவிடும் 'அபாயம்' இருக்கிறதென்று கருத்து சொல்வார்!!!
//

சொல்வாரா? சரி. சொல்றாரான்னு பார்க்கலாமே. அப்படியே சொன்னாலும் சொல்லிட்டுப் போட்டுமே. கனியிருப்பக் காய் கவர வேண்டாமே!

நன்றி.

Sundar Padmanaban said...

//ஆனால் பாருங்கள். ஈழப்பிரச்சினையில் மட்டும் தமிழருக்கு தன்னாட்சி வழங்கப்பட்டால் கிழக்கில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுவிடும் 'அபாயம்' இருக்கிறதென்று கருத்து சொல்வார்!!!
//

சொல்வாரா? சரி. சொல்றாரான்னு பார்க்கலாமே. அப்படியே சொன்னாலும் சொல்லிட்டுப் போட்டுமே. கனியிருப்பக் காய் கவர வேண்டாமே!

நன்றி.

dondu(#11168674346665545885) said...

//ஆனால் பாருங்கள். ஈழப்பிரச்சினையில் மட்டும் தமிழருக்கு தன்னாட்சி வழங்கப்பட்டால் கிழக்கில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுவிடும் 'அபாயம்' இருக்கிறதென்று கருத்து சொல்வார்//

முக்கியமாக தமிழர்கள் என்று புலிகளை மட்டும் அடையாளம் கண்டு கொண்டால் அப்படித்தான் கருத்து சொல்லப்படும். புலிகள் 24 மணி நேர அவகாசம் கொடுத்து முஸ்லிம்களை யாழிலிருந்து வெளியேற்றியதாக படித்துள்ளேன். ஆகவே அவ்வாறு அச்சம் தெரிவிக்கப்பட்டாலும் அது புரிந்து கொள்ளக் கூடியதே.

பை தி வே, நான் துக்ளக் மீட்டிங்கை பற்றி போட்ட பதிவை இப்போது பார்க்கும்போது வெளியே சில சமயம் லவுட் ஸ்பீக்கர் செய்த சொதப்பல் காரணமாகவிட்டுப் போனவை தெரிகின்றன. மிக்க நன்றி.

பார்க்க: http://dondu.blogspot.com/2007/01/37.html

அன்புடன்,
டோண்டு ராகவன்