Saturday, May 26, 2007

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் எங்களுதுடா!

"அருணாச்சலப் பிரதேசத்தில் இருப்பவர்களெல்லாம் சீனர்கள். சீனர்கள் சீனாவுக்குள் வர விஸா தேவையில்லை - அருணாச்சலப் பிரதேசம் சீனாவைச் சேர்ந்தது"

Image and video hosting by TinyPic

இந்தியா சீனாவுக்கு பயிற்சி பெறுவதற்காக 107 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விஸா வேண்டி விண்ணப்பித்திருந்தது. 107-இல் ஒருவர் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியர். அவருடைய விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்த சீனத் தூதரக அதிகாரிகள் நிராகரிப்புக்குக் குறிப்பிட்ட காரணம்தான் மேலே குறிப்பிட்ட செய்தி!!

'ஏற்கனவே மாநிலத்தின் பல பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துள்ளது. இப்போது மாநிலமே எங்களுடையது என்று சொல்கிறது. இது கண்டனத்துக்குரியது என்று அருணாச்சல மாநில முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக சர்வ வல்லமை பொருந்திய, வெளிநாடுகள் சீண்டிப் பார்க்கவே அஞ்சும் நம் தேசத்தை ஆளும் தலைவர்கள் கீழ்க்கண்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள் என்று ஊகிக்கிறேன்.

1. எல்லா செய்தித்தாள்களிலும் 'அருணாச்சலம் எங்கள் மாநிலம். அதில் கையளவு நிலத்தைக் கூட - 'ஏழைகளுக்கு இலவச நிலம்' போன்ற திட்டம் மூலமாகக் கூட - யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்' என்று நாள் தோறும் மத்திய அரசு அறிக்கை வெளியிடும்.

2. சீனாவின் அருணாச்சலப் பிரதேச ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா. சபையில் இந்தியத் தூதர் பிரச்சினை எழுப்புவார்.

3. அரசியல்வாதிகள் ராஜஸ்தானில் அடையாள உண்ணாவிரதம் இருப்பார்கள்

4. உள்நோக்கத்துடன் அருணாச்சல மாநிலத்தை சீனாவின் பகுதியாக வரைபடத்தில் சித்தரித்திருந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய அரசு கண்டனம் வெளியிடும்

5. 2020-இல் இந்தியப் பிரதமர் அருணாச்சல மாநிலத்திற்கு 'அமைதிப் பேருந்து' ஒன்றின் முதல் 'வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தைக்' கொடியசைத்துத் துவக்கி வைப்பார்.

6. IoAP-க்கும் CoAP-க்கும் சர்வதேச எல்லை ஒன்றை வரையறை செய்ய இந்தியாவும் சீனாவும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும்.

7. அனுதினமும் அந்தச் சர்வதேச எல்லையில் 'ஒப்பந்தத்தை மீறுவதாக' இந்தியா மீது சீனாவும், சீனா மீது இந்தியாவும் குற்றம் சாட்டிக் கொள்ளும்.

8. 'அருணாச்சல மாநிலத்தின் சட்டசபையைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் சீனா ஆக்கிரமித்துள்ளது. இப்போது சட்டசபையையும் சீனாவைச் சேர்ந்தது என்கிறது. இது கண்டனத்துக்குரியது' என்று அருணாச்சலப் பிரதேச முதல்வர் அறிக்கை வெளியிடுவார்.

9. 'அருணாச்சல மாநிலத்தில் நுழைவதற்கு இந்தியர்கள் விஸா வேண்டி விண்ணப்பிக்கும் நடைமுறை 2021 ஜனவரியிலிருந்து அமலுக்கு வருகிறது' என்று சீனா செய்தித் தாள்களில் செய்தி வரும்.

10. சீனப் பிரமர் இந்தியாவுக்கு விஜயம் செய்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு 'சந்திப்பு தோல்வி' என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பார்.

11. அஸாமில் நமக்குத் தெரியாமல் ஊடுருவிய சீனப்படைகளுடன் போரிட்டு ஐந்தாயிரம் படைவீரர்களைக் காவுகொடுத்து சீனப் படையை அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஓட ஓட விரட்டி வெற்றிபெற்றது இந்தியா!

12. அருணாச்சலப் பிரதேசத்தில் "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் எங்களுதுடா!" என்று 60-வருடமாகத் தமிழ்த் தி்ரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் நடிகர் ஆடிப்பாடி நடித்துப் படமாக்க விரும்பிய பகுதியில் படபிடிப்பு நடத்த சீன அரசு அனுமதி மறுத்துவிட்டது! ஆனால் பாடல் பெருவெற்றி பெற்று தமிழகத்தின் பட்டி தொட்டிகளெங்கும் டீக்கடைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

****

வயிறு எரிகிறது ஐயா! வயிறு எரிகிறது! இம்மாதிரி முதுகெலும்பேயில்லாத, முடிவு எடுக்கும் , கடும் நடவடிக்கை எடுக்கும் திராணியில்லாத தலைவர்கள் கையில் சிக்கி இந்தியா இப்படிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை நினைக்கையில் - ஏதோ ஒருவிதத்தில் இதற்கு நானும் ஒரு மறைமுகக் காரணகர்த்தன் என்று நினைக்கையில் - வயிறு எரிகிறது!

****
இந்தப் பிரச்சினை தொடர்பான கட்டுரை ஒன்று ரீடிப் தளத்தில் இங்கு இருக்கிறது.

Saturday, May 19, 2007

என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்!

தினமல் செய்தி: "மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைச்சர் (இப்படியா குழப்பமா எழுதறது?) வயலார் ரவி கொச்சி துறைமுகத்திற்குச் சென்றபோது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது" - அதற்கு இந்தப் படம்.



நான் செய்தியைப் படிக்காமல் படத்தை முதலில் பார்த்ததும் 'என்னவோ ஏதோ'வென்று பயந்து போனேன்.

வரவேற்பை இப்படியா முகத்தை வைத்துக்கொண்டு ஏற்பது அமைச்சர்? கஷ்டம்!

Friday, May 04, 2007

அன்புச் சங்கிலி?

இதைத் தான் அன்புச் சங்கிலி என்று சொல்கிறார்களா? :-)

Image and video hosting by TinyPic

படம் நன்றி: தமிழ்முரசு.காம்

Thursday, May 03, 2007

ஊற்றும் நெகிழ்வும்

ஸ்ரீரங்கத்தில் தனிமையில் அவர்களை விட மனமேயில்லை. அதிலும் வயது ஆக ஆக கவலை ரேகைகள் நிறையவே ஏறிக்கொண்டதால் ரொம்பவும் தவித்து, குளிர்காலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்களை அழைத்துவர முடிவாகிவிட்டது. கடந்த டிசம்பரில் விஸாவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் அனுப்பி, இணையத்தில் நாள் குறித்து, அம்மாவும் அப்பாவும் சென்னையின் அமெரிக்கத் தூதரகத்தில் நேர்முகத்திற்குச் சென்று விஸா கிடைத்தது என்று தொலைபேசி சொன்னதும்தான் நிம்மதியாக இருந்தது.

பிப்ரவரி 1-ம் தேதி அவர்களது 40-வது திருமணநாள். சென்னையிலிருந்து கிளம்பி பாஸ்டனுக்கு பிப்-1 பிற்பகல் வந்து சேர்ந்தார்கள். நல்லபடியாக வந்து சேரவேண்டுமே என்று கவலையாக இருந்தது - அம்மாவின் உடல்நிலையை நினைத்து. கூடப் பயணித்த இன்னொரு நல்ல தமிழ் உள்ளம் அவர்களுக்கு பிராங்க்பர்ட்டில் விமானம் மாறுவதற்கு உதவி செய்து பாஸ்டனில் விமான நிலைய வாசல்வரை வந்தது - அவருக்கு நன்றி சொல்லி கிளம்பி வீட்டுக்கும் வந்தாகிவிட்டது. குழந்தைகள் இருவருக்கும் தாத்தா பாட்டி அன்று வரப்போவது தெரியாது. அவர்கள் பள்ளியிலிருந்து திரும்பும்முன் வீட்டிற்குச் சென்றுவிடவேண்டும் என்று சற்று வேகமாகவே வண்டியை ஓட்டி வந்தோம்.

பெரியவள் சின்னவள் இருவரும் மூன்று மணிக்கு வருவார்கள். பெற்றோரது பெட்டிகளை தற்காலிகமாக ஒளித்துவைத்துவிட்டு, அவர்களை குழந்தைகளின் அறையில் அமரச்செய்து கதவை மூடிவிட்டு 'ஒண்ணுமே தெரியாதது' போல வரவேற்பறையில் அமர்ந்துகொண்டோம்.

முதலில் வந்தது சின்னவள் துர்கா. வழக்கத்துக்கு மாறாக நான் வீட்டில் அந்த நேரத்தில் இருப்பதைப் பார்த்துவிட்டு 'இன்னிக்கு ஆபீஸ் லீவா?' என்று கேட்க, 'ஆமா. லீவு விட்டுட்டாங்க. Early Release day today' என்றேன்! அவள் புத்தகப் பையை இறக்கிவைக்க அவளது அறைக் கதவைத் திறந்ததும் தாத்தா பாட்டியைப் பார்த்து ஒரே ஒரு கணம்தான் ஸ்தம்பித்து நின்றாள். பிறகு ஒரு கையால் வாயை மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டே அறையைவிட்டு வெளியே ஓடி வந்தாள். பிறகு அதே வேகத்தில் உள்ளே திரும்ப ஓடி சட்டெனத் தரையில் அமர்ந்து பையைப் பிரித்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்து அவள் அன்று பள்ளியில் செய்த சாகசங்களை விவரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தூரத்தில் பள்ளிப் பேருந்து வந்து நிற்க, பெரியவள் அக்ஷரா இறங்கி வருவது தெரிந்தது.

அக்ஷரா வரும் ஸ்டைலே தனி. ஆடிக்கொண்டே வருவாள். தரையில் கிடக்கும் சிறு கற்கள் உதைபட்டுப் பறக்கும். நீட்டிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளிலிருந்து சுள்ளிகளைப் பிய்ப்பாள். ஓரமாக உறைந்திருக்கும் பனிக்கட்டியை மிதித்து அது அசைகிறதா என்று பார்ப்பாள். வாய் ஏதாவது பாடலை முணுமுணுக்கும். நாங்கள் புன்னகையை அடக்கிக்கொண்டு அவள் கதவைத் திறந்து வரும்வரை காத்திருந்தோம். ஒவ்வொரு முறை அவள் வரும்போதும் அப்படியே படியிலேறி உள்ளே வர, என் மனைவி 'செருப்பைக் கழட்டிட்டு வா' என்று அவளுக்குச் சொல்லவேண்டும். வேண்டுமென்றே காலணியோடு உள்ளே வருவாள்! :-) இன்றும் அப்படியே வர, "shoe-வைக் கழட்டு" என்று அதட்டியதும் கழற்றிப் போட்டுவிட்டு உள்ளே வந்தாள். வேண்டுமென்றே புத்தகப்பையை இறக்கி நடு அறையில் போட - 'ஒன் ரூம்ல கொண்டு போய் வை' என்ற இரண்டாம் சம்பிரதாய அதட்டல் வர, எடுத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தாள்.

நாங்கள் மெதுவாக அவள் பின்னாலேயே போனோம். கதவைத் திறந்தாள். எதிரே தாத்தா பாட்டி அடக்கமாட்டாத சிரிப்புடன்! தொப்பென்று பையைக் கீழே போட்டுவிட்டு 'பாட்டீ' என்று அலறினாளே பார்க்கணும்! அப்படியே ஓடிச்சென்று இருவரையும் கட்டிப்பிடித்துக்கொள்ள அவள் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் அருவியாய் வர எங்களுக்கு அவளது உணர்வு வெளிப்பாடுகள் ஆச்சரியமாக இருந்தது. சிரிப்பும் அழுகையுமாய் தொடர்ந்து பல நிமிடங்கள் அந்த நிலை நீடித்தது. என் அம்மா 'எதுக்கு அழறே. அதான் வந்துட்டோமே' என்று மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டே இருந்தார்.

பிறகு 'Why didn't you tell before?' என்று என் மேல் பாய்ந்து சண்டை போட்டது தனிக்கதை.

ஆனால் அந்தக் கண்ணீரில் எனக்குள் சில ஊற்றுகள் திறந்தன போல உணர்ந்தேன்.


***