Tuesday, April 22, 2008

National G(Sh)ame?

செய்தி:

இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் செயலர் கெ.ஜோதிகுமரன் இந்திய ஹாக்கி அணியில் வீரர்களைச் சேர்ப்பதற்காக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. ஐந்து லட்சம் ரூபாய் வரை ஜோதிகுமரன் லஞ்சம் பெற்றதை அத்தொலைக்காட்சி நிறுவனம் அப்பட்டமாய் படம் பிடித்துக் காட்டியது. இதனையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் 1994 ஆண்டுமுதல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஹாக்கி சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.கில் இந்திய ஹாக்கி வரலாற்றில் இது ஒரு துரதிர்ஷ்ட அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவிற்கே பெருமை தேடித் தந்த அந்த ஜோதிகுமரன் இவர்தான்!



'துரதிர்ஷ்ட அத்தியாயம்' என்று குறிப்பிட்ட அந்த எம்.எஸ்.கில் எப்படிப்பட்ட உத்தமர்? அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு அந்த வழக்கு பத்து பதினைந்து வருடங்களாக நடப்பதாக நினைவு. அவரால் எப்படி தொடர்ந்து பதவியில் இயங்க முடிகிறது? 120 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் ஒரு தேசிய விளையாட்டைத் திறம்பட நிர்வகிக்க வேறு ஆட்களே இத்தனை ஆண்டுகளாகக் கிடைக்கவில்லையா?

பிரபுஜி வேறு உணர்ச்சி வசப்படாமலிருப்பது நல்லது என்று சொல்கிறார். ஆனால் எனக்கு என் வாழ்நாளில் இதுவரை உபயோகிக்காத எனக்குத் தெரிந்த அனைத்துத் "தூய தமிழ் வார்த்தைகளையும்" இப்போது உபயோகிக்கவேண்டும் போல இருக்கிறது.

அவர்கள் இருவரையும் கப்பைக் கால்களை அகட்டி நிற்க வைத்து ஹாக்கி மட்டையை வைத்து ஹாக்கி பந்தை அவர்களது பந்துகள் மீது ஒரு பெனல்ட்டி ஸ்ட்ரோக் அடிக்க வேண்டும் போலிருக்கிறது.

காசுக்காக கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு தேசத்தைக் கூட்டிக்கொடுக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

இந்தியாவின் மானத்தோடு விளையாடும் இவர்கள் மாதிரி - ஜந்துகள் புழுக்கள் என்று இவர்களைக் குறிப்பிட்டு அந்த வாயில்லா ஜீவன்களை அவமானப்படுத்த விரும்பவில்லை - $#%^*@-கள் எப்போது வேட்டையாடப்படுவார்கள்?

++++

Friday, April 18, 2008

மாக்கள்!



இந்தியன் படத்தில் எரிந்த மகளை வண்டியில் போட்டு எடுத்துக்கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக நாய் மாதிரி அலைவார் கமல். வைட்டமின் 'ப' கண்ணில் படாதவரைக்கும் மனிதர்களைப் பன்றிகள் போல நடத்தும் மருத்துவமனையில் அவர் அல்லாடிக்கொண்டிருக்க அங்கே மழையில் நனைந்துகொண்டு இறந்துபோவார் மகள். அக்காட்சியைப் பார்க்கும்போது கொழுந்துவிட்டெரியும் தீயின் நடுவில் நின்ற உணர்வு எழுந்தது.

இதையொட்டிய சமீபத்தில் படித்த செய்தியொன்றை நாளிதழ்களில் படிக்க நேரிட்டபோதும் தீயின் நடுவில் நிற்கவேண்டியிருந்தது. அச்செய்தி:

பெரம்பூர் மாநகராட்சியில் பிரசவத்திற்கு வந்த தாயும் சேயும் சரியான சிகிச்சையின்றி மரணமடைந்தனர். அப்பெண்ணின் வயசாளியான தாயார் மரித்துப் போன பச்சிளங் குழந்தையை ஒரு கையில் வைத்துக்கொண்டு உயிருக்குப் போராடிய மகளை மீன்பாடி வண்டியில் ஏற்றி இரவெல்லாம் அலைந்து திரிந்தாராம்.

இரண்டே வரிகளில் இது இருந்தாலும் பெருங்கூட்டத்தின் நடுவே நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்ட உணர்வைத் தந்து கூசிக் குறுகச் செய்தது இந்தச் செய்தி. பிரசவச் சிக்கல்களில் தாயும் சேயும் மரித்தார்களா அல்லது தகுந்த சிகிச்சையின்றி மரித்தார்களா என்பது உண்மை வெளியில் வரும்போது தெரியும்தான். ஆனாலும் அரசு மருத்துவமனைகள் இயங்கும் லட்சணத்தை நேரில் பார்த்த அனுபவத்தைக் கொண்டு பார்க்கப்போனால் அவர்களுக்குத் தகுந்த சிகிச்சைக் கிடைக்காது போயிருக்கும் என்பதைத்தான் நம்பவேண்டியிருக்கிறது.

கொந்தளிக்கும் மனதுடன் வார்த்தைகளைக் கோவையாக எழுத வரவில்லை. ஆனாலும்..

மனிதன் மிருகங்களைவிட மிகவும் கேவலமானவன் என்று அடிக்கடி நிரூபணமாகும் சம்பவங்களில் இந்த அசம்பாவிதமும் ஒன்று.

மனசாட்சியைக் கொன்றுவிட்டு பணத்திற்காக அலையும் பேய்களினால் நிரம்பியிருக்கும் அத்தியாவசியச் சேவை இயந்திரங்களை எந்த அரசும் கவனிக்காமல் இப்படி பொதுமக்களின் உயிரை உதாசீனப்படுத்தி துச்சமாக மதித்து எதிர்கட்சி, ஆளும்கட்சி, கடந்த ஆட்சி, இந்த ஆட்சி என்று வெட்டியறிக்கைகளை விட்டுக்கொண்டு வெள்ளை வேட்டி சட்டையில் கறைபடாமல் வியர்க்காமல் இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பொதுமக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்து நாட்களை ஓட்டி காசுகளை எண்ணும் காவாலிக் கூட்டத்தினை நினைத்தால்........

அறுபத்தோரு ஆண்டுகளில் ஒரு எழவுக் கட்சியும், எந்த எழவு பிரதமரும், எழவு முதல்வரும் இன்ன பிற எழவுப் பெருச்சாளித் தலைவர்களும் ஒரே ஒரு துறையை - அதுவும் போக்கிடமற்ற ஏழை மக்களுக்கான - உயிர்காக்கும் சிகிச்சை முதல் எல்லா சிகிச்சைக்கும் அவர்கள் தஞ்சமடையவேண்டிய - ஒரே ஒரு மருத்துவ துறையைக்கூடவா - சிறப்பாக இயங்க வைக்க முடியவில்லை? என்ன கேவலம் இது!

இப்படிப் பட்ட சம்பவங்களை அனுமதித்துக்கொண்டு எப்படி இவர்களால் எந்தக் கூச்சமுமின்றி அடுத்தவேளைச் சோற்றைத் தின்ன முடிகிறது?

இவர்களுக்கு ஓட்டுப் போட்டு பதவியில் அமர வைத்த முதுகெலும்பற்ற கோழைகளான நம்மைப் போன்ற மக்களைத்தான் செருப்பாலடிக்க வேண்டும். ம்ஹும்.. மக்களா நாம்... மாக்கள்!

ச்சீ!

***