Tuesday, July 15, 2008

'ஙே'யென்று விழித்தேன்! இருந்தாலும்....



இது வரை இந்தியன் ரயில்வே இணையத்தை உபயோகித்ததில்லை. இன்று முயன்ற போது சற்று தடுமாறிப் போனேன்!

குறைகள் இருந்தாலும் இந்த அளவுக்காவது சேவையை மேம்படுத்தியிருக்கும் இந்தியன் ரயில்வேக்கு வாழ்த்துகள். (http://irctc.co.in)

Saturday, July 12, 2008

(தமிழகக்) கரைமேல் பிறக்க வைத்தான் - எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்


காலையில் போனால் மாலையில் திரும்புவது நிச்சயமில்லாத வாழ்க்கைதான் - ஆனால் இந்நிச்சயமின்மை கடற் தாயினால்தானேயொழிய மூளை மழுங்கிய மனுச நாய்களினால் அல்ல. அன்றாட ஜீவனத்திற்குக் கடுமையாக உழைத்தால்தான் சோறு என்பது மீனவர்களின் விதி. அதிலும் தமிழக மீனவர்களின் நிலை பரிதாபமானது.

இலங்கை என்ற சிறிய அண்டைதேசத்தின் ராணுவத்தினர் அனுதினமும் நமது மீனவர்களைக் குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொல்கின்றனர். இங்கே தலைவர்களும் ராணுவமும் என்ன மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்களா? எது எதற்கோ போராட்டம் நடத்துகிற கேவலப் பிறவிகள் இதற்குப் போராட்டம் நடத்தவேண்டாமா? அப்படி வேறு என்ன முக்கியமான மயிர்பிடுங்கி வேலை இருக்கிறதய்யா உங்களுக்கு? சோறுதானே தின்னுகிறீர்கள்? அல்லது வேறு ஏதாவதா? முதுகெலும்பில்லா மண்புழுக்களா நீங்கள்?

தமிழக மீனவர்கள் கடலில் மீனைத்தான் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கடலில் மீன் அதிகம் கிடைக்கும் இடத்திற்குச் சென்று மீன் பிடிப்பது இயற்கையே. இதில் எல்லையைத் தாண்டிப் போகிறோமா என்று அவர்களது ஒட்டிய வயிற்றுக்குத் தெரிவதில்லை - கடலில் என்ன எல்லையைக் காட்ட லட்சுமணன் கோடா போட்டு வைத்திருக்கிறது? "எல்லைத் தாண்டி வந்தார்கள் சுட்டுக் கொன்றோம்" என்று அவர்கள் சொல்லலாம். இது வரை இந்திய கடற்படை எல்லை தாண்டி வந்த எத்தனை இலங்கை மீனவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறது? நானறிந்த வரையில் இல்லை. அப்படியிருக்க அவர்கள் ஏன் நம் மீனவர்களைக் கொல்ல வேண்டும்? இந்தியா இலங்கையைக் கண்டிக்க வேண்டாமா? எச்சரிக்க வேண்டாமா? நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இப்படி வெறியுடன் நடந்து கொள்ளும் இலங்கைக் கடற்படையினரைச் சுளுக்கெடுக்க வேண்டாமா?

பரம எதிரியாக இருக்கும் பாக்கிஸ்தான் ராணுவம்கூட நம் மீனவர்களை இப்படி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதில்லை - எல்லைதாண்டிச் சென்றால் சிறைபிடித்துத்தான் போகிறார்கள். இந்த இலங்கை ராணுவத்தினருக்கு இப்படிச் சர்வசாதாரணமாக நம்நாட்டு மீனவர்களைச் சுட்டுக்கொல்லும் தைரியத்தைக் கொடுத்தது யார்? எல்லை தாண்டி வந்திருந்தாலும் அவர்களைக் கைது செய்யாமல் சுடுவது எவ்விதத்தில் நியாயம்? ஐயா இந்தியத் தலைவர்களே, மாநில முதல்வர்களே - ஒரு வேளை கேட்பாரற்றுச் சாவது இலங்கைத் தமிழன் என்று தவறாக நினைத்து, வழக்கம்போலச் சும்மா இருக்கிறீர்களா?

போன வாரம் என்று நினைக்கிறேன். இஸ்ரேலில் ஒரு இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனியனை நடுரோட்டில் பாய்ண்ட் ப்ளாங் ரேஞ்சில் சுட்டுக் கொன்றார்கள். பாலஸ்தீனத்திலிருந்து எல்லை தாண்டி வந்ததற்காக அவனைப் போட்டுத் தள்ளவில்லை. கட்டட வேலைகளுக்காக உபயோகிக்க வைத்திருந்த கனரக வாகனமொன்றை ஓட்டிக்கொண்டிருந்தவன் அதே வாகனத்தைக்கொண்டு சாலையில் தாறுமாறாக ஓட்டி கார்கள் பேருந்து என்று கண்ணில் தென்பட்ட அனைத்தின் மீதும் மோதிச் சாய்த்து மூன்று பொதுமக்களைக் கொன்றுவிட்டு, இன்னும் மதம்பிடித்த யானைபோல வாகனத்தைத் தொடர்ந்து ஓட்டிக்கொண்டிருந்தான். இஸ்ரேலிய காவலர்கள், உளவாளிகள் விரட்டிச் சென்று வாகனத்தின் மீதேறி - எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று - அந்த நபரை - மேலும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுக்க - போட்டுத் தள்ளினார்கள். யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவில்லை. பேச்சு வார்த்தைக்குக் கூப்பிடவில்லை. அங்கேயே உடனடித் தீர்ப்பு!

இந்திய கடற்படை என்று ஒன்று செயல்படுகிறதா? இம்மாதிரி அபாயகரமான கடற்பகுதியைக் காக்காமல் வேறு எங்காவது சொந்தபந்தங்களுக்கு மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்களா? மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல நசுக்கித் தீர்க்க வேண்டாமா அவர்களை? அதைச் செய்யாமல் அவர்கள் கால்களை ஏனய்யா நக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

தன்னாட்டு மக்களை கொசு அடிப்பது போல தினமும் கொல்லும் ராணுவத்தை வரவழைத்து தன்னாட்டிலேயே பயிற்சி அளிக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்ன நடந்தாலும் தேமேயென்று கோழையாக இருப்பதை அஹிம்சை என்று தப்பாகத் புரிந்துகொண்டிருக்கிறார்களோ?

எனக்கு வருகிற ஆத்திரத்தை எப்படிக் கொட்டுவது என்று தெரியவில்லை. வாழ்நாளில் உபயோகிக்காத கெட்டவார்த்தைகளையெல்லாம் சொல்லித் திட்டவேண்டும் போல இருக்கிறது.

அவனவன் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு மூன்று வேளை தின்று கொழுத்துக்கொண்டு தினமும் ஒரு கலைநிகழ்ச்சி, அரைகுறை நங்கைகளில் தொப்புள் நடனங்கள், புதிய திரைப்படம் என்று பார்த்துக்கொண்டு பதவி நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கையில் அவர்களது செத்த தோலுக்கு நாட்டின் ஓரத்தில் வாழ்க்கையின் ஓரத்தில் அமர்ந்தபடி விழாமலிருக்கக் கடலுக்குத் தினமும் செல்லும் மீனவர்களின் துயரங்கள் உறைக்குமா?

நாட்டு மக்களைக் காக்கத் துப்பில்லாத அரசன் நாசமாய்த்தான் போவான். இவர்களெல்லாம் தலைவர்களா? த்தூ..... போங்கய்யா, போய் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளுங்கள்.

உங்களது தேசத்தில் இப்படி ஜந்துக்களைப் போன்ற வாழ்க்கையை வாழ்வதைவிட அண்டைய நாட்டின் ராணுவத்தினால் சுடப்பட்டுக் கடலில் சாவது எவ்வளவோ மேல்.

போய் அடுத்த தேர்தலுக்கான வியாபாரத்தைக் கவனியுங்கள்.

ச்சீ!

***