Thursday, September 18, 2008

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 3

ரிங் டோன் என்ற இம்சை போதாதென்று யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று காலர் டோன் என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். கைப்பேசியில் காலர் டோனும் ரிங்டோனும் சினிமாப் பாடல்களை வைத்துக்கொள்ளாதவர்கள் கற்காலத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் மட்டுமே. 'பேரக்கேட்டா அதிருதுல்ல' என்பதிலிருந்து 'You're the south end of the north side facing horse' என்பது வரை பல்வேறு காலர் டோன்கள் - அழைப்பவர் காலரைப் பிடித்து யார்ரா என்னைக் கூப்பிர்ரது என்று கேட்பது போல இருந்தது சிலவற்றைக் கேட்க. பால்ய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் மத்தியில் இருந்த டேபிளில் இருந்த காப்பிக் கோப்பைகளின் எண்ணிக்கையில் கைப்பேசிகளும் இருந்தன. திடீரென்று நாய் குலைக்கும் சத்தம் கேட்க ஒருத்தன் அவனது போனை லாவிக்கொண்டு 'வீட்லருந்துடா' என்று சொல்லிவிட்டு வாயருகில் கையை வைத்துக்கொண்டு பவ்யமாகப் பேசிக்கொண்டே எழுந்து அறையைவிட்டு வெளியே சென்றான். பெரிசுகள் கந்த சஷ்டி கவசமும் சுப்ரபாதமும் வைத்துக்கொண்டிருக்கின்றன.

சிலரை அழைத்தால் முழுப்பாடலே ஓடுகிறது. ரீமிக்ஸ்ஸே இல்லாத அசல் 'பொதுவாக என் மனசு தங்கம்' என்று மலேசியாவின் கணீர்க் குரல் பாடலைக்கூட இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். குழந்தையின் குரல், காதலி சிரிப்பது என்று வித்தியாசமான காலர் டோன்கள். சுவாரஸ்யமாக இருந்தாலும் சில நேரங்களில் மகா இம்சை. தொலைபேசியில் இண்ட்டர்வ்யூ செய்வதற்காக விண்ணப்பித்தவரை அழைத்தாலும் முழுப்பாடல் ஒலித்ததும்தான் 'அலோ யாருங்க' கேட்கிறது. எரிச்சல்! 1980-களின் இறுதியில் வேலை தேடி நிறுவனங்களை எம்மாதிரி அணுகவேண்டியிருந்தது என்பதையும் இப்போது நிறுவனங்கள் நல்ல வேலையாட்களை எவ்வாறு தாஜா செய்து அணுகவேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன்.

முக்கியமான சந்திப்புகளில்கூட கைப்பேசியை அணைத்தோ அல்லது ம்யூட் செய்தோ வைக்கும் நாகரிகம் 90% உபயோகிப்பாரிடம் இல்லை. கல்வியகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், ஆலயங்கள் என்று எல்லாவிடங்களிலும் கைப்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சிலர் இரண்டு மூன்று கைப்பேசிகளைக்கூட வைத்திருக்கிறார்கள். இருசக்கர வாகனத்தில் கழுத்தைச் சாய்த்துக்கொண்டோ அல்லது ஒரு கையாலோ பேசிக்கொண்டே ஓட்டுபவர்களைப் பார்த்தால் எனக்குத்தான் பயமாக இருந்தது. அலட்சியம்.

ஆனால் கைப்பேசி இன்று ஊடுருவியிருக்குமளவிற்கு வேறு எந்த மின்னணு சாதனமும் எல்லாத்தட்டு மக்களிடமும் ஊடுருவியிருக்கவில்லை என்று அடித்துச் சொல்வேன் - தொலைதொடர்பில் இது சந்தேகமில்லாமல் ஒரு மாபெரும் புரட்சி. கூலித் தொழிலாளியிலிருந்து கோடீஸ்வரன்வரை எல்லாரும் கைப்பேசி வைத்திருக்கிறார்கள். வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலைப்பற்றி குமுதம் பக்தியிலோ எதிலோ விஸ்தாரமான கட்டுரை வந்திருந்தது. அதில் மலையின் கீழேயிருந்து மேலே வயதானவர்கள் செல்ல டோலி சேவை புரியும் மூன்று கூலித்தொழிலாளர்களின் போட்டோக்களை வெளியிட்டு அவர்களது பைப்பேசி எண்ணையும் (முன்கூட்டியே அழைத்து ஏற்பாடு செய்ய) வெளியிட்டிருந்தார்கள். இது கைப்பேசி எந்த அளவு பயன்பாட்டிலிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.

மிஸ்டு கால் மாஃபியா என்றொரு கூட்டம் இருக்கிறது. கைப்பேசிச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த மி.கா.மா. பெரிய தலைவலியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மிஸ்டு கால்களுக்குக் கட்டணம் கிடையாது என்பதை வைத்துக்கொண்டு நம்மாட்கள் பேயாட்டம் ஆடுகிறார்கள். காலையில் எழுந்ததும் காதலிக்கு ஒரு மிஸ்டு கால். அதிலும் ஏகப்பட்ட சங்கேதங்கள். ஒரு தடவை, இரண்டு தடவை என்று மிஸ்டுகால்களின் எண்ணிக்கை அடிப்படையில் சங்கேத வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அலுவலகத்தை அடைந்ததும் ஒரு மிஸ்டுகால் வீட்டிற்கு. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் மிஸ்டுகால். காரியம் முடிந்ததும் மிஸ்டுகால் என்று ஒரு நூறு காரியங்களுக்கு மிஸ்டுகால் பயன்படுத்துவது நம்மூரில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்கிறேன்.

நான்கூட பொதுக்கழிப்பறையில் எனக்கு முன் நின்றவரின் எண்ணை வாங்கிக்கொண்டு ஐந்து நிமிடம் கழித்து ஒரு மி்ஸ்டு கால் விட (ஆச்சா?), ஐந்தாவது நொடியில் ஒரு மிஸ்டு கால் (ஆயிக்கிட்டே இருக்கு). 30வது நொடியில் இன்னொரு மிஸ்டு கால் (ஆச்சு) - ஆசாமி கதவைத் திறந்து வெளியேறிப் போனார்.

இன்னும் வரும்... அட அடுத்த பகுதியைச் சொல்றேங்க!

***

2 comments:

இலவசக்கொத்தனார் said...

//இன்னும் வரும்... அட அடுத்த பகுதியைச் சொல்றேங்க!//

:))

சுவாரசியமாப் போய்கிட்டு இருக்கு!! அட உங்க அனுபவத்தைச் சொன்னேங்க!! :))

Sundar Padmanaban said...

//சுவாரசியமாப் போய்கிட்டு இருக்கு//

வாருமய்யா, குசும்புக் கொத்தனாரே!