Sunday, July 25, 2004

*** ஜே.ஜே.சில குறிப்புகள் பற்றிச் சில குறிப்புகள் -4 *** 

ஜே.ஜே. ஓமனக்குட்டியுடன் சுற்றுகிறான் என்று கேள்விபட்டதும், நிம்மதியின்றித் துடிக்கும் அவன் திருமண வாழ்விற்குத் திரும்பினால் சரியாகிவிடுவான் என்று பேராசியர் அரவிந்தாட்ச மேனன் நம்பினார். திடீரென்று சில நாள்களாக ஜே.ஜே.யையும், ஓமனக்குட்டியையும் காணவில்லை என்றதும் மேனன் சந்தோஷப்படத்தொடங்கினார். அவருடைய மகிழ்ச்சி வெகு சீக்கிரமே முடிவுக்கு வந்தது இரண்டு நாள்கள் கழித்து தனியே வந்து சேர்ந்த ஜே.ஜே.யினால். ஓமனக்குட்டியுடன் ஜே.ஜே. கொண்டிருந்த உறவு ஒரு ரயில்வே ஸ்டேஷனில், ஓமனக்குட்டி அவள் எழுதிய கவிதைத் தொகுப்பை ஜே.ஜே.யிடம் காட்டிக் கருத்துக் கேட்டதும் முடிவுக்கு வந்துவிட்டது. ஜே.ஜே. அவளுடன் இருப்பதைவிட, அக்கவிதைத் தொகுப்பைப் பற்றிய அவனது உண்மையான அபிப்ராயத்தைச் சொல்வெதென்று முடிவெடுத்ததே காரணம்! 

"உண்மை பயங்கரமானது. அது மனிதனைத் தனிமைப்படுத்திவிடுகிறது. உறவுகளை ஈவிரக்கமின்றித் துண்டித்து விடுகிறது. உலகின் விதூஷகக் குணத்தைக் கண்டு சிரிக்கும் நுட்பமான ஹாஸ்ய உணர்வு கொண்டவன் ஜே.ஜே. பெரும் துக்கத்தில் அவன் சிரிப்பான். ஆனால் அது சிரிப்பல்ல. பிராண்டல்களில் கசியும் ரத்தம். நண்பர்களுக்குக்கூட அந்த ரத்தத்தைத் துடைக்கத் தெரியவில்லை. மோசமான வதந்தியிலிருந்து கிடைக்கும் பரபரப்பையே அவர்கள் அடைகிறார்கள். மறைந்து நிற்கும் துக்கம் எவருக்கும் தெரிவதில்லை. 

தத்துவங்களை அவன் பார்த்துக்கொண்டே போகிறான். அவற்றிலிருந்து ஒரு ஒளிக்கீற்று வெளிப்பட்டு, இந்த உலக வாழ்வின் மீது- மாறி மாறிக் காட்சி தரக்கூடிய சிக்கல்களும், முரண்களும் நிறைந்த, தனது புதிய வெளிப்பாடுகளால் நம் ஆராய்ச்சி முடிவுகளைப் புறம் தள்ளிவிடுகிற கடல்போல், நிறங்களிலும், கொந்தளிப்புகளிலும், அமைதிகளிலும் விதவிதமான புறந்தோற்றங்களைக் கொள்கிற இவ்வுலகின்மீது பட்டு விளக்கம் பெற அவன் துடிக்கிறான். உண்மையின் கீற்றுகள். முழுமையாக ஏற்று மனம் ஒப்பிப் பின் தொடர எங்கு அவை குவிந்து கிடக்கின்றன? எங்கு அவை தொகுக்கப்பட்டிருக்கின்றன? தேடியவர்களில் கீற்றுகளை ஸ்பரிசிக்காதவனும் இல்லை. முழுமையாக ஸ்பரிசித்தவனும் இல்லை. ஒரு பகுதி புதிய பரிமாணங்கள். மறுபகுதி மீண்டும் சரிவுகள். இவனிலிருந்து ஒரு பகுதியையும் அவனிலிருந்து ஒரு பகுதியையும் சேர்த்து முழுமைபடுத்திவிடலாம் என்று கற்பனை செய்கிறோம். முழுமைக்கு அலையும் பேதை மனத்தின் சபலம் இது. மாறுபட்ட அடிப்படைகளை எப்படி இணைக்கமுடியும்?" 

நமக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றிய நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டே போகும்போது, தெரிந்தவரைப் பற்றிய உண்மைகளுக்கும், நமது நம்பிக்கைகளுக்கும் உள்ள தூரம் புறச்செயல்களாலும், போலித்தனங்களாலும் அதிகமாகிக்கொண்டே போய், உண்மை நம்பிக்கைக்கு எதிராகத் திரும்பும் தருணத்தில் நாம் பலமிழந்து போகிறோம். போக்கிடமில்லாது தவிக்கிறோம். உறவுகள் முறிவது இத்தருணங்களில்தான். நேரெதிராக நிற்கும் நிலைகளில் அவரவர் நம்பிக்கைகள் அவரவர்க்குச் சரியெனத் தோன்ற உண்மை நடுவே நின்று கைகொட்டிச் சிரிக்கிறது. ஆனால் வெவ்வேறு நிலைகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு உண்மையைப் பார்க்க முடிவதில்லை; விருப்பமுமில்லை. இது என்னுடைய சிந்தனை ஓட்டங்கள். சார்புநிலை எடுத்துக்கொண்ட பின் வேறு எந்த விவாதங்களாலும் எனது நம்பிக்கையைத் தகர்க்கமுடிவதில்லை. எனது வாழ்வின் கடந்த சம்பவங்களை எடுத்துக்கொண்டு பார்த்தால், எனது நம்பிக்கைக்கு எதிரான நிலையை எதிர்கொள்ள மறுத்து, நம்பிக்கையின் உச்சத்திலேயே வாசம் செய்திருக்கிறேன் என்றும், எதிர்நிலையின் ஆழத்திற்குச் சென்று உண்மையைக் கண்டுபிடித்து, என் நம்பிக்கையோ, எதிர் நிலையின் நம்பிக்கையோ மாற்ற எந்த அளவு முயற்சித்திருக்கிறேன் என்றும் என்னை நானே கேட்டுப்பார்த்தால் வெட்கமே மிஞ்சுகிறது. இவ்வுணர்வு என்னில் எதிர்நிலை கொண்டிருக்கும் உங்களுக்கும் தோன்றலாம். இருவருக்கும் இப்படித் தோன்றும் பட்சத்தில், நமது வெட்கச் சுவர்களை உடைத்து, நாமிருவரும் உண்மையைக் காண்பதற்கு வழிவகை செய்வது எது என்று நமது இருவருக்கும் தெரியாததால் வாய்மூடி மெளனியாக இருக்கவே பிரியப்படுகிறோம். எனது இந்தப் புரிந்துகொள்ளலை, சுந்தர ராமசாமி வேறுவிதமாக ஜே.ஜே.சில குறிப்புகளில் சொல்கிறார். அதைப் பார்ப்போம். 

"மனித மனத்தின் கூறுகள் மிகப்பயங்கரமான அடர்த்தி கொண்டவை. பெரிய பள்ளத்தாக்கு அது. ஆழம். இருட்டு. அடர்த்தி. கண்களுக்குப் புலப்படாத தொலைதூரங்கள். இவற்றை வகைப்படுத்தமுடியாத ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு நிமிஷமும் இந்த உலகை முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. அந்தரங்கமான காரணங்கள் பல இருக்க, வேறொரு வெளிப்படையான காரணம் சொல்லிக்கொண்டு, முகமூடிகள் அணிந்து, உடலை இழுத்துப் போர்த்திக்கொண்டு, இருட்சுவர்களில் சாய்ந்து, ஆயுதங்களை உடலுக்குள் மறைத்து, முகங்களில் புன்னகைகளுடன் பீறிடுகின்றன. கருத்துகளை உற்பத்தி செய்கின்றன; புணருகின்றன; குழந்தைகளை உற்பத்தி செய்கின்றன. இயந்திரங்களை உருவாக்குகின்றன. இவற்றின் ஆணைப்படி இயந்திரங்கள் இடையறாது அசைந்து கத்திக்கொண்டே இருக்கின்றன. சிக்கல்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. வியாக்கியானங்களைப் பிறப்பித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த அகன்ற இருட்காட்டுக்குள் ஒருவன் எப்படி நுழைந்து வெளியே வரமுடியும்? எல்லாவற்றையும் அறியவும், குறை நிறைகளைத் தொகுக்கவும் சாத்தியமா? எத்தனை நிலைகள்? எத்தனை எதிர் நிலைகள்? அதன்பின் எதிர்நிலைகளுக்குமான பதில்கள். பெரும் சுமடாய்ச் சுமந்துவிட்ட சிந்தனையின் அச்சுறுத்தலில் மனிதன் கடவுளின் கால்களில் சரணாகதி அடைந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  பகுத்தறிவுக்குப்பின் எப்போதும் ஒரு நம்பிக்கை ஒளிந்துகொண்டிருக்கிறது. கொள்கை சார்ந்த முடிவுகளுக்குப்பின் தனி நபர் உறவுகள் பல்லை இளிக்கின்றன. ஸ்திதியின் உக்கிரம் மனிதனை வாட்டி வதைக்கிறது. பழைய நம்பிக்கைகள் கழன்று தெறிக்கின்றன. புது நம்பிக்கைகளை, அவற்றின் குறைகளைப் பார்க்க பயந்து, சூன்யத்திற்குள் விழப் பயந்து, முழுமையானதாகக் கற்பனை செய்துகொண்டு இழுத்துத் தழுவிக் கொள்கிறான் மனிதன். வாழ்க்கையில் உரசி தத்துவங்களின் முலாம் கழல்கிறது. வியாக்கியானங்கள் ஆரம்பிக்கின்றன. இட்டுக்கட்டும் வியாக்கியானங்கள். தத்துவத்திற்கு ஒட்டுப் பிளாஸ்திரிகள். மனிதனுடைய ஆசை, கனவு லட்சியங்கள். கடவுளை உருவமாகப் பார்க்க, நம்பிக்கையின் வடிவமாகப் பார்க்க, பகுத்தறிவுக்குள் பார்க்க மனிதனின் பிரயாசைகள். பாவம் மனிதன். சத்திய தரிசனங்களுக்கு வெற்றி தேடித்தரும் சிறு பொறுப்பும் வாழ்க்கைக்கு இல்லை. அது சுழன்று கொண்டிருக்கிறது. அதன் இச்சையும் சுழற்சியும் புத்திக்கு என்றேனும் மட்டுப்படுமோ?" 

தொடரும் 

***
*** ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றிச் சில குறிப்புகள் - 3 *** 

ஜே.ஜே. ஒரு சிறந்த கால்பந்தாட்டக் காரன் - வங்காளத்தைத் திருவிதாங்கூர் தோற்கடிகுமளவிற்குச் சிறந்த - என்பது ஒரு உபதகவல். மனதில் நூறு கால்பந்துப் போட்டிகளுக்கான ஆரவாரமும், வேகமும், முட்டி மோதுதல்களும், துரத்துதல்களும் நிறைந்திருக்கும் ஒருவன் கால்பந்தாட்ட வீரன் என்பது வினோதமாக இருக்கிறது. 

பாலு, ஜே.ஜே.யின் முதற் சந்திப்பு அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. புகழ்பெற்றவர்களைச் முதன்முதலில் சந்திக்கையில் மனதிலிருக்கும் பிம்பம் உடைந்துபோகும்; சந்திப்புகள் அவ்வளவு சுவாரசியமாக இருப்பதில்லை - என்று அம்பல அரட்டையில் சுஜாதா சொன்னபோது நான் நம்பவில்லை. அவரை முதன்முதலில் சந்தித்தபோது எனக்குள் அவரைப்பற்றிய எந்தவொரு பிம்பமும் உடைந்துபோகவில்லை. ஜே.ஜே.யை முதன்முதல் எழுத்தாளர் மாநாட்டில் 'தமிழ் எழுத்தாளர்' என்ற அறிமுகத்தோடு பாலு சந்தித்தபோது, ஜே.ஜே. திடீரெனச் சத்தம் போட்டுப் பரிகாசமாகச் சிரித்துக்கொண்டே கேட்டது 'சிவகாமி அம்மாள், அவளுடைய சபதத்தை நிறைவேறி விட்டாளா?' என்பதுதான். சிவகாமி சபதத்தை பாலு எழுதியிராவிட்டாலும் திருச்சூரின் மனநிலை அவனுக்கும் வந்ததில் வியப்பில்லை.  மேலும் வாய்திறப்பதற்குள் அரங்கிற்குள் நுழைந்த ஜே.ஜே.யின் நண்பனை வரவேற்க ஜே.ஜே. போய்விட்டான். அச்சந்திப்பு சட்டென முடிந்துவிட்டது. நாம் ஜே.ஜே.யை முதன்முதலில் சந்தித்து, சந்திப்பு சட்டென முடிந்ததுபோல் உணர்கிறோம். மாநாடு நடந்து (1951) ஒன்பது வருடங்கள் பிறகு ஜே.ஜே. இறந்தான். இவ்வருடங்களை அவனது பொற்காலம் என்று குறித்திருக்கிறார்கள். 'மரணத்தின் குகைவாயில் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது' என்று ஜே.ஜே. நாட்குறிப்பில் குறித்து வைத்திருக்கிறானாம். 

இவை சோதனையான காலங்களும் கூட ஜே.ஜே.க்கு. வாழ்வையே சீர்குலைக்கும் சோதனைகள். குடும்பச் சிக்கல்கள்; நட்பு முறிவுகள்; குழந்தைகளின் எளிய ஆசைகளை நிறைவேற்ற இயலாமை, ஆரோக்கியச் சீர்கேடுகள், வறுமை - 'வாழ்க்கை பயங்கரமானது' என்று நாம் கத்திச் சொல்லும்படி இருந்தனவாம் அவனுடைய அனுபவங்கள். 

"'எந்தத் தளத்திலிருந்து நான் இதுகாறும் நகர்ந்து வந்துகொண்டிருந்தேனோ, அங்கிருந்து சரிந்து விழுந்துவிட்டேன். நேர்மை, ஒழுக்கம், உன்னதம் எல்லாவற்றையும் நான் முற்றாக இழந்துவிட்டேன்' என்று அழுதானாம். சில சறுக்கல்களும், சமரசங்களும் தவிர்க்கமுடியாது போனதாம். மகா புருஷர்களைக் கசக்கி, அசடு வழியச் செய்த வாழ்க்கை அதன் கைவரிசையை அவனிடத்திலும் காட்டிற்று. அவனோ பெரிய மானி. விரல்கள் அபசுரம் எழுப்பினால் வெட்டிவிடவேண்டும் என்று நினைக்கும் வைணிகனைப் போன்றவன். கீறல்களைப் பெரும் சரிவுகளாய் அவன் எடுத்துக்கொண்டதில் ஆச்சரியம் இல்லை" என்கிறார் பாலு. 

"எங்கும் இந்தக் கதைதான். பாரதி ஜமீனுக்குத் தூக்கு எழுதினான். புதுமைப்பித்தனும், எம்.கே.டி. பாகவதருக்கு வசனம் எழுதப்போனான். 'பிறந்தபோது உன் குழந்தைக்குத் தொட்டில் இல்லை. இறந்தபோது சவப்பெட்டியும் இல்லை, அதற்கு' என்று மார்க்ஸ¥க்குக் கடிதம் எழுதினாள் அவன் மனைவி. ஜேம்ஸ் ஜாயிஸை வறுமை துரத்திப் பிடித்து விரட்டிற்று. சத்தியத்தை விரட்டிக்கொண்டு போகிறவனுக்கு துக்கத்தின் பரிசுதான் எப்போதும் கிடைத்திருக்கிறது. புறக்கணிப்புகள். மன முறிவுகள். ஓட ஓட விரட்டல். ஒதுக்கி அவமானப்படுத்தும் கேவலங்கள். மிகக் கஷ்டமான காலகட்டத்திலும் ஜே.ஜே. மிக ஊக்கமாக, சூரியனை நோக்கி கருகிப்போய் விழுவது தெரிந்தும் கவலை கொள்ளாமல், பறந்து செல்லும் பறவைகள் போல, செயல்பட்டிருக்கிறான். நெருக்கடியில் எப்படி எழுதினான் என்றால் நெருக்கடியால்தான் எழுதினான் என்று சொல்லவேண்டியிருக்கும்".

மிகவும் யோசிக்க வைக்கிறது. நேர்மையாய், நியாயமாய், உண்மையாய் வாழ்வதே தவறோ என்று எண்ணம் ஓங்குகிறது. கெட்டவர்களுக்கு மட்டும் இச்சமூகம் வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்றுத் தாங்குவதேன் என்று மகாநதியில் கமல் மனம் குமுறிச் சொல்வது போல், மனம் குமுறுகிறது. மனத்துள் பல கேள்விகள் பிறக்கின்றன. விடை தேடி ஓடுகின்றன. நெரிசல் தெருக்களிலும், வாகனங்களுக்கிடையேயும் ஓடுகின்றன. மூச்சு முட்டுகிறது. காங்க்ரீட் கட்டடங்களுக்குள் புகுந்து புறப்படுகின்றன. சமூகத்தின் அத்தனை அங்கங்களையும் வருடிப் பறந்து செல்கின்றன. விடைகள் கேள்விகளைத் துரத்த, கேள்விகள் மேலெழும்பி மிதிக்க, மூச்சு முட்டுகிறது. அண்டவெளியில் காற்றில்லா, இருளிலா வெட்ட வெளியில் சென்றுவிடலாம் போலத் தோன்றுகிறது. அங்குச் சென்றாலும் நட்சத்திரங்கள் கைதட்டி, கண் சிமிட்டிப் பரிகசிக்கும் என்று பயமாக இருக்கிறது. 

அடிவருடிகள், காக்காய்க் கூட்டம், ஏமாற்றிப்பிழைப்போர், திருடி கொள்ளையடித்துப் பிழைப்போர் இவரெல்லாம் ராஜபோகமாக வாழ்வதுபோலவும், நல்லவர்கள் வாடித்துன்புறுவது போலவும் எனக்குத் தோன்றுவது நிஜமா, பிரமையா? தோற்றம் பொய்களோ? காட்சிப் பிழைதானோ? 

ஜே.ஜே.யின் சிந்தனைகள் அனைத்தும் அவன் எழுதி வந்திருக்கிறான். மொத்த நாவலையும் நாட்குறிப்புத் தொகுதிகள் என்று சிலர் சொல்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு துணுக்குத் தோரணம் அல்ல என்று உறுதியாக நம்புகிறேன்.

"அவன் எழுத்து முழுவதையுமே நாட்குறிப்புகள் என்று சொல்லிவிடலாம். இதனால் சுய தெளிவுக்கு எழுத்தை ஆளும்போது, அது கொள்ளும் குணங்களோடு, நடையில் அந்தரங்கக் குரலும் ஏறியிருக்கிறது. சந்தித்த சாதாரண மனிதர்களைப் பற்றி, நண்பர்களைப் பற்றி, படித்த புத்தகங்களைப் பற்றி, விசித்திரமான தெருக்கள், படிக்கட்டுகள், குடியிருப்புப் பகுதிகள் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதுகிறான். காட்சிப் புலன்களை அவன் வர்ணிக்கும்போது, அவனிடம் ஒளிந்துகொண்டிருக்கும் ஓவியன் வெளிப்படுவது தெரியும். வர்ணத்தை வீசிவிட்ட ஓவியன் இங்கு வார்த்தைகளால் வரைகிறான். அதன்பின் அவன் மனத்தில் குமிழியிடும் கேள்விகள், சந்தேகங்கள். விடைகாணும் முகமாய் குடையும் குடைச்சல்கள். இதில் சில சமயம் அதிக உற்சாகமடைந்து, கேள்வியை விட்டு வேறெங்கோ போய்விடுகிறான். சில சமயம் அவன் சிந்தனை சண்டிக்குதிரை போல் நடுவழியில் படுத்துக்கொண்டு விடுகிறது.

நேர் அனுபவங்கள் அவனிடம் மிகப்பெரிய ஆட்சியைச் செலுத்துகின்றன. பார்ப்பது, கேட்பது, உடல் உறவுகள் இவை தரும் முக்கியத்துவம் அதிகமாகவே இருக்கின்றன. சகஜம் ஒருபோதும் அவனுக்குச் சகஜமாவதில்லை. 'இது இப்படித்தான்' என்ற ஆசுவாசம், நிம்மதி அவனிடத்தில் ஒருபோதும் இல்லை. சுய அனுபவத்தின் கீற்றிலிருந்து ஒரு கேள்வி பிறக்கிறது. அந்தக் கேள்வியை மாறிமாறி எழுப்பி முட்டி மோதுகிறான். இந்த மோதல்கள், உயரும் மும் மைதானத்தைச் சுற்றும் விமானத்தை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றன. இந்த ஈர்ப்பில் கரைந்து, நாம் பின் தொடர்ந்து போகும்போது ஒரு கட்டத்தில் விமானம் மேக மண்டலங்களில் புதையுண்டு, நம் காட்சிப் புலன்களைத் தாண்டிவிடும் ஆயாசம் நம்மைச் சோர்வில் ஆழ்த்தும்.

ஒரு நாள் அவன் ஓரிடத்தில் மழைக்கு ஒதுங்கி நிற்கும்போது, அங்கு ஒதுங்கிய ஒரு பசுவின் மேல், ஒதுங்கி நின்ற ஒருவன், மிகுந்த சிரமத்திற்குத் தன்னை ஆட்படுத்துக்கொண்டு, வெற்றிலைத்தம்பலத்தைக் குறிவைத்துத் துப்புவதைக் கண்டான். செஞ்சாறு கொழகொழவென்று பசுவின் வயிற்றோடு இரு பக்கங்களிலும் வழிந்தது. இக்காட்சியை நாட்குறிப்பில் சிக்கனமான வார்த்தைகளில் விவரித்துவிட்டு, அவ்வாறு அவன் செய்யக் காரணம் என்ன என்ற கேள்விக்கு விடை தேடிக்கொண்டு போகும் போது, மொழி, இனம், தேசத்தின் எல்லைகள், சரித்திரம் இவற்றைத் தாண்டி, மனித மனத்தின் காணத்துடிக்கும் ஆவேசத்தை அவனிடம் பார்க்க முடிகிறது. மனிதனின் கீழ்மைகள் சுயபிரக்ஞையற்றவை என்றும், தன்னைப் பற்றி அவன் அறிந்துகொள்ள, ஒழுக்கவியல் மரபுகளும், அம்மரபுகளை வற்புறுத்தும் மதச்சிந்தனைகளும் பெரும் தடையாக முனைந்துவிட்டதையும் அவன் காட்டிக்கொண்டு போகிறான். 'மனிதன் தன்னைச் சகஜமாக வெளிப்படுத்திக்கொள்ளமுடியாமல் போய்விட்டது. பரிபூரணத்தின் குரூரமான உருண்டைகள் பொறுப்பற்று அவன் முன் உருட்டப் படுகின்றன. தன்முன், தன் கழுத்திலேயே பிணைக்கப்பட்ட கழியின் எதிர்முனையில் தொங்கும் உணவை எட்ட, நிரந்தரம் ஓடிக்கொண்டிருக்கும் குதிரையின் வியர்த்தம் மனிதன் மீது குரூரமாகக் கவிழ்க்கப்பட்டுவிட்டது. கீழ்மைகள் துறந்ததான பாவனையின் போலி மரபுக்கு முன்னால், மனிதன் தன்னை மறுத்துக்கொள்ள வற்புறுத்தப்படுகிறான். இது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டநிலை. மனிதனாய் இருப்பதன் பொருட்டே தன்னைப் பார்த்து வெட்கப்பட்டுக்கொள்ளும் மனிதனின் விசித்திரநிலை. அவன் பிராணிகளின் இனம். பாலூட்டி, தன்னைச் சிறிது அறிந்துகொள்ள சக்தி பெற்றுவிட்டபிராணி. அனுபவங்களை ஆராயத் தெரிந்த பிராணி. வழி நடக்கவும், திசை திரும்பவும், பின்னகரவும், மீண்டும் முன்னகர்ந்து செல்லவும் தெரிந்த பிராணி. சகஜமாக அவன் தாண்டல்களை நிகழ்த்திக்கொண்டு வந்தான். அவன் ஆத்மாவில் இயற்கையாகக் கனிந்த பழங்களை உண்டு அவன் பயணம் தொடர்ந்தான். நாகரிகத்தை உருவாக்க முயன்ற சட்டாம்பிள்ளை, மனிதனின் நெடுந்தூரப் பயணத்திற்குப் பின் வந்து சேர்ந்தவன். பரிபூரணத்திற்கும், மனிதனுக்குமுள்ள இடைவெளியைக் காட்டும் துரோகத்தை நிகழ்த்தியவன் இவன் தான். அடைய வேண்டியதை அடையமுடியவில்லை என்ற ஆயாசத்தையும், தனது எண்ணங்களையும் செயல்களையும் வெறுக்கும் மனநிலைகளையும், குற்றஉணர்ச்சிகளையும் உருவாக்கியவன் இவன் தான். இதனால் இயற்கையின் பேரதிசயமான ஒத்திசைவுகள் குலைக்கப்பட்டுவிட்டன. தன்னையே நிந்தித்துக்கொண்டிருப்பவன் எப்படிப் பயணத்தைத் தொடர முடியும்? இப்போது நாம் செய்யவேண்டியது இதுதான். மனிதனை உருவாக்க அவன் குரல்வளையைப் பற்றிக்கொண்டிருக்கும் கொடிய கரங்களிலிருந்து அவனுக்கு விடுதலை தேடித் தர வேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் சென்று 'நீ எப்படி இருக்கவேண்டுமென விரும்புகிறாயோ அப்படியே இரு' என்று நாம் கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டும். இந்த இரண்டாயிரம் வருடங்களாக மனிதன் அடைந்திருக்கும் சங்கடங்கள், நிம்மதியின்மை, குற்ற உணர்ச்சிகள், பாவ உணர்ச்சிகள், அவமானங்கள், தன் கரங்களால் தன் தலைமீது போட்டுக்கொண்ட அடிகள், இவற்றிலிருந்து அவனுக்கு முற்றாக விடுதலை கிடைக்கவேண்டும். அவன் இயற்கையாகப் பயணத்தைத் தொடரட்டும். அவன் கால் சுவடுகளில் துளிர்ப்பவை எவையோ அவைதாம் நாகரிகம். அவன் பாய்ந்துபிடிக்க அடிவானத்திற்குப் பின்னால் ஏதோ தொங்கிக்கொண்டு இருக்கிறது என்ற கற்பனை இனி வேண்டாம்."

படித்துக்கொண்டிருக்கையில் பின்னங்கழுத்தில் மரண அடி விழுந்தது போன்ற உணர்வு. முகத்துக்கு நேராக நிர்தாட்சண்யமின்றி கைவிரல் நீட்டி 'நீ பொய். இவையனைத்தும் பொய்' என்று உரக்க என்முன் ஜே.ஜே. அலறுவது போல பகீரென்று இருக்கிறது எனக்கு. சன்னல் வெளியே மாலைச் சூரியனின் ஒளியில் சோம்பலாக உறங்கும் வீதிகளையும் கட்டிடங்களையும் பார்க்கிறேன். ஒரேயொரு ஒற்றைக் காகம் மட்டும் குறுக்காகப் பறந்து செல்கிறது - கரைந்துகொண்டு. நானும் காக்கையும் மட்டும் இருக்கும் ஒரு தனி உலகை உணர்கிறேன். 

தொடரும் 

***

Saturday, July 24, 2004

*** ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றிய சில குறிப்புகள் - 2 *** 

இன்னும் நினைவிருக்கிறது. ஆறாம் வகுப்பு ஆண்டிறுதியில் முதல் மாணவனாக வந்ததற்காக ஆண்டுவிழா நிகழ்ச்சியில் புது ஐம்பது ரூபாய்த் தாளையும் ஒரு புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்தார்கள். புத்தகத்தின் கதை 'ஒரு மரப்பாச்சியின் கதை'. ஆமாம் பினாக்கியோவேதான். அக்கதையில் தச்சன் செய்துவைத்த மரப்பாச்சி உயிர்பெற்று நடமாடுவதுபோல் கதை செல்லும். பினாக்கியோ ஒரு குறும்புப் பையன். பொய் சொல்லச்சொல்ல மூக்கு நீளமாக வளரும்! 

மரப்பாச்சி வைத்து விளையாடியிராத குழந்தைகள் அரிது எனலாம். செலவில்லாத, பேட்டரிகள் வேண்டியிராத, தீங்குவிளைவிக்காத எளிமையான பொம்மை, விளையாட்டுப் பொருள் என்று சொல்வதைவிட, மரப்பாச்சியை குழந்தைகளின் உற்ற தோழன்/தோழி எனச் சொல்லலாம். பெண் மரப்பாச்சியென்றால் ரவிக்கைத் துணியில் தைத்தது போக மிச்சம் விழுந்திருக்கும் துண்டுத்துணியில் அரையடி நீளத்திற்கு வைத்து முன்புறத்தை மறைத்து கக்கங்களில் துணி நுனிகளைத் திணித்துவிட்டால் போதும்.  ஆண் பொம்மைக்கு வெகுசில சமயங்களில் கலர் வேஷ்டி கட்டிய நினைவு. கோவணம் கட்ட வாகாக இல்லை. இத்தகைய மரப்பாச்சி பொம்மைகளுடன் தனியொரு உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்திருப்போம். குழந்தைகளும் மரப்பாச்சி பொம்மைகளும் மட்டுமே இருக்கும் உலகம் அது. நாங்கள் கூடி விளையாடும் விளையாட்டுகளில் மரப்பாச்சியையும் ஒரு கை சேர்த்துக்கொள்வோம். நான் சைக்கிள் ஓட்ட, தம்பி பின்னால் அமர, இருவருக்கும் நடுவில் மரப்பாச்சி பத்திரமாக இருக்கும். 'கெட்டியா பிடிச்சுக்கடா' என்று அடிக்கடி தலைதிருப்பாமல் சொல்லிக்கொண்டே இருப்பேன். 

ஜே.ஜே. சில குறிப்புகளிலும் மரப்பாச்சி வருகிறது. சு.ரா. குழைந்தையாகி அதை விவரித்திருப்பதைப் படிக்க நினைவலைகள் பின்னோக்கி தலைதெறிக்க ஓடுகின்றன.  

"என் சகோதரி ரமணிக்கு அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். எனக்கு வயது ஐந்து அல்லது ஆறு. எங்களுக்கு ஒரு மரப்பாச்சி இருந்தது. இந்த வாக்கியம் எவ்வளவு பெரிய பொய். நாங்கள் ஒரு மரப்பாச்சியினால் உயிர்வாழ்ந்து கொண்டிருந்தோம் என்று சொல்லவேண்டும். உலகத்தின் சகல துக்கங்களையும் அந்த மரப்பாச்சியினால் தாங்கிக்கொண்டிருந்தோம். இதை மறுக்கும் தருக்க சாஸ்திரி மீது எனக்குத் துளிகூட மதிப்பு கிடையாது. அந்த மரப்பாச்சியின் புறத்தோற்றத்தை நாங்கள் அப்போது பார்த்திருக்கவில்லை. அதன் வெட்டு, சிராய்ப்பு, தடங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அதைக் குழந்தையாகக் கண்ட எங்கள் கற்பனையைத்தான் நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். என்ன காரணம் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அந்தக் குழந்தையை நோய் பிடுங்கித் தின்றுகொண்டிருந்தது. (என் தாய் நோயுற்றுப் படுக்கையிலேயே இருந்ததாலோ என்னவோ). காலை நேரங்களில் பயங்கரமான காய்ச்சலும், பிற்பகல்களில் பயங்கரமான வயிற்றுப்போக்கும். நாசித் துவாரமும் கண்களும் மட்டும் வெளியே தெரியும்படி ரமணி அதைப் போர்த்தி வைத்திருப்பாள். அரை மணிக்கு ஒரு தடவை தெர்மாமீட்டர் வைத்துப் பார்க்கவேண்டும். கால் மணிக்கு ஒரு தடவை மருந்து. கசக்காமல் இருக்கத் துண்டுச் சர்க்கரை. மாத்திரையை அதற்கு முழுங்கத் தெரியாததால் பொடிபண்ணிக் கொடுப்போம். நெற்றியில் ஈரத் துணியை மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டிருப்பாள் ரமணி. பத்தரை மணிக்கு டாக்டர் பிஷாரடி வருவார். 'டாக்டர் வந்தாச்சு' என்று ரமணி சொன்னதும் நாங்கள் இருவரும் கேட் வரையிலும் ஓடிச்சென்று அவரை வரவேற்று, அவருக்கு இரு பக்கமுமாக வருவோம். அவர் கேட்டைத் திறந்து முதல் காலடி வைத்ததும், நான் தயார் நிலையில் நின்று, அவருடைய மருந்துப்பெட்டியை வாங்கிக்கொண்டுவிடவேண்டும். இதில் ரமணி கண்டிப்பு. இதைச் செய்யத் தவறியதற்கு அவள் என்னை பயங்கரமாகக் கிள்ளியிருக்கிறாள். கிள்ளலில் வலியால் துடித்து மரத்தடியில் உட்கார்ந்து துடையைப் பார்த்துக்கொண்டே அழுவேன். ஆனால் அவள் செய்தது தவறு என்று ஒருபோதும் நினைத்ததில்லை. டாக்டர் கையிலிருந்து மருந்துப்பெட்டியை தவறிப்போனேன் என்றால் என்னைக் கொன்றுவிட வேண்டும். குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ரமணி தன்னை உருக்குலைத்துக்கொண்டிருக்கும்போது இதுகூட எனக்குச் செய்யத் தெரியவில்லை என்றால், என்னைக் கொன்றுவிடுவதுகூட நியாயம்தானே. 

நான் மருந்துப்பெட்டியை வாங்கிக்கொண்டது ரமணி பேச ஆரம்பிப்பாள். விடியற்காலை ஐந்து மணிக்கு அவள் அசப்பில் எழுந்து பார்க்கும்போது ஜூகியின் (குழந்தையின் செல்லப்பெயர். பெயர் சுகன்யா) உடம்பு பொரிந்துகொண்டிருந்ததாம். 'நேற்று இரவுகூட கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டு நன்றாக விளையாடிற்றே. என்ன டாக்டர்? ஒவ்வொரு தடவை எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டும்போது இந்தக் குழந்தைக்கு மலையாய் வந்துவிடுகிறதே. எப்படி இதை வளர்ப்பேன்? எப்படி நான் இதைக் காப்பாற்றி எடுப்பேன்?' என்று கேட்பாள் ரமணி. அவள் தொண்டை இடறும். 

மத்தியானம் எங்கள் உடல்கள் அடுக்களையில் இருக்கும்போது எங்கள் முன் தட்டுகளில் கை விரல்கள் அசையும். நிழல்கள். வீடு, அப்பா, அம்மா, மரங்கள், பசு அனைத்தும் நிழல்கள். மரத்தடிக் குழந்தை நிஜம். அதன் நோய் நிஜம். அதற்கு நாங்கள் எங்கள் உயிரைக் கரைத்துச் செய்யும் சிகிச்சை நிஜம். அடுக்களையில் 'எப்போது குழந்தைக்குக் காய்ச்சல் குறையும்?' என்று நான் பாவனையால் கேட்கிறேன். ரமணி சிறிது யோசித்துவிட்டு, எச்சில் விரல்கள் இரண்டை நிமிர்த்தி, பாம்பு விரலை ஒரு தடவை மடக்கி, மீண்டும் நிமிர்த்துகிறாள். இதற்கு அர்த்தம் இரண்டரை மணி என்பது.  

அதேபோல் இரண்டரை மணிக்குக் காய்ச்சல் குறையும். நன்றாகக் குறைந்துவிடும். குழந்தைக்கு வேர்த்துவிடும். போர்வையை அகற்றிவிட்டு பஞ்சுபோன்ற துணியால் ரமணி உடலைத் துடைப்பாள். கட்கம், புறங்கழுத்து, துடையிடுக்கு எல்லாம் துடைப்பாள். குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும்." 

குழந்தையாகி விடுகிறோம். எத்தனை யதார்த்தம். ஜே.ஜே. என்று ஒரு, உலகத்து நம்பிக்கைகளை உடைத்தெறிந்து உண்மைகள் வேறு என்பதை கிழித்துக்காட்டும், தீவிர சிந்தனையாளனின் எண்ண ஓட்டங்களிலிருந்து, குழந்தையின் மனநிலைக்குத் தாவி கடப்பாரை நீச்சல் நீந்துகிறார் சு.ரா. இரு துருவ மனோநிலைகளை அடுத்தடுத்த பக்கங்களில் எழுதுவது எவ்வளவு அசாதாரணமானது என்று மலைத்துப் போகிறேன். 

கோட்டயம் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டுக்கு ஜே.ஜே. வருவான்; சந்தித்துவிடலாம் என்று ஆர்வத்துடன் வரும் பாலு அங்கு திருச்சூர் கோபாலன் நாயரைச் (சரித்திர நாவலாசிரியர்) சந்தித்து மாநாட்டுக்குப் போகிறான். ஜே.ஜே.யைச் சந்திக்கவிரும்புகிறேன் என்றதும் அவனை வினோதமாகப் பார்த்த திருச்சூர் ஜே.ஜே.யின் எழுத்துகள் புரிவதில்லை என்கிறார். அவரது சரித்திர நாவலைப் பற்றி ஜே.ஜே. சொல்லியிருந்தது அவரை போர்க்குதிரையிலிருந்து குப்புற விழுந்த வீரனின் மனோநிலைக்குக் கொண்டுசென்றுவிட்டது. ஜே.ஜே.யின் அந்தக் குறிப்பில் 'கற்பனைக் காட்டில் வேட்டியைக் கிழித்துக்கொண்டு அங்குமிங்கும் பாயும் பைத்தியங்களின் முதுகில் ஐந்தாறு சாத்து சாத்தியிருந்தான்' என்று பாலு நினைத்துப் பார்க்கிறார். குறிப்பாக திருச்சூரின் நாவலைப் பற்றி ஜே.ஜே. இப்படிச் சொல்லியிருக்கிறான். 

"கொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குட்டியை அவளைத் துரத்திய அரசர்களிடமிருந்தும் முடிவில் அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும் விடுவித்து, திருச்சூர் கோபாலன் நாயருக்கே மணம் முடித்து வைக்க என்னால் முடியுமென்றால், சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையிலிருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும். ஆனால் கடவுளே! எனக்கு அந்தச் சக்தி இல்லையே!" 

திருச்சூரின் புலம்பலில் ஜே.ஜே.யின் மீதுள்ள மறைமுக மதிப்பும் நிதானமாக வெளிப்படுகிறது என்று படிக்கையில் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை. 

"ஜே.ஜே.யைப் படித்தபோது நான் நம்பும் உலகத்தை இல்லாமல் ஆக்கிவிடுவானோ என்ற பயம் ஏற்பட்டது. கனவுகளுக்கு அவன் எதிரியென்றால் எனக்கு அவை தின்பண்டம்". 

'உலகநியதிகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கின்ற ஒவ்வொன்றையும் மறுத்துப் பரிகசிக்கும் ஜே.ஜே.யைப் போன்று ஒரு நண்பன் இருந்திருந்தால் நான் என்னவாகியிருப்பேன்' என்று பாலு போலவே யோசிக்கிறேன்.  

"நமது நம்பிக்கைகளுக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லி உரித்துக்கொண்டே போனால் எதை நம்பி நான் உயிர் வாழ்வேன்?"

இக்கேள்வி பாலுவிற்கு எழுந்தது போலவே எனக்குள்ளும் எழுந்தது. மேற்கொண்ட வாக்கியத்தை மனதில் சிலமுறை சொல்லிப்பாருங்கள் - தனிமையில். அதிர்ச்சியாக இல்லை? 

"நமது நம்பிக்கைகளுக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இல்லை". இது உண்மையென்று திடீரென்று நிரூபிக்கப்பட்டுவிட்டால் அந்த அதிர்ச்சியை நாம் தாங்குவோமா? நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளையும் பற்றிக்கொண்டு ஏறும் வாழ்க்கையில் அவ்விதப் பற்றுதல்களனைத்தும் பொய்யெனச் சொன்னால் மேல்கீழ் இல்லா ஆதியந்தமில்லா சூன்யத்தில் தொங்க ஆரம்பித்துவிட மாட்டோமா? என்ன இது? இப்படியெல்லாம் யோசிப்பானா ஒருத்தன்? 

"ஜே.ஜே.யின் ஈவிரக்கமற்ற தன்மையில் மாற்றமே இல்லை. சமரசத்தின் இடைவெளிகள் அற்ற மரணப்பிடி, எதைப் பிடித்துப் பேசும்போதும். இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வதில் நாம் பெறும் சிறு ஆசுவாசத்தை அவன் நமக்குத் தரவே மாட்டான். அவன் உண்மையை நிர்தாட்சண்யமாகப் பிடிக்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது". பாருங்கள் பாலுவும் நம்பிக்கைகளுக்கும் உண்மைக்கும் சம்பந்தமில்லையென்று எண்ணத் துவங்கிவிட்டான்.  

நான் முழுதும் ஜே.ஜே.சில குறிப்புகளைப் படித்து முடித்ததும் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புவதற்கும், உண்மைக்கும் சம்பந்தமில்லையென்று கணிணித் திரையில் ஜே.ஜே.வும் பாலுவும் கைகொட்டிச் சிரிப்பது போன்று பிரமை எனக்கு. எனக்கும் பயமாக இருக்கிறது.  

தொடரும் 

*** 

Friday, July 23, 2004

*** ஜே.ஜே.சில குறிப்புகள் பற்றிச் சில குறிப்புகள் - 1 *** 
 
"உலகமெங்கும் எவன் எவன் தன் உள்ளளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ, அல்லது தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ, அல்லது மதத்தையோ (இக்காலத்தில் நான் எப்படி அரசியலைச் சேர்க்க முடியும்?) ஆண்டானோ அவன் எல்லாம் நம்மைச் சேர்ந்தவன். நம் மொழிக்கு உடனடியாக அவன் மாற்றப்பட்டு நம் உடம்பின் உறுப்பாகிவிடவேண்டும். இவ்விணைப்பையும் பரவசத்துடன் உணர்ந்து, மேற்கொண்டு நாம் சிந்திக்க வேண்டும். நமக்குச் சிந்திக்கத் தெரியும் என்றால். முடியும் என்றால்". 

பாக்கெட் நாவல்களையும், ஜனரஞ்சக சஞ்சிகைகளையும் படித்துக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், என் மூத்த சகோதரர் திடீரென்று சில புத்தகங்களைக் கொடுத்து 'இதைப் படி' என்று சொன்னபோது முதலில் இருந்த புத்தகத்தில் தலைப்பையும், ஆசிரியர் பெயரையும் பார்த்தேன். 'ஜே.ஜே. சில குறிப்புகள்' 'சுந்தர ராமசாமி' - இரண்டையும் பார்த்துவிட்டு அசிரத்தையாக சகோதரரை நோக்கியபோது 'உனக்குத் தமிழ் படிக்கத் தெரியும்தானே? நிறைய மதிப்பெண் எடுத்திருக்கிறாய் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறாய் தானே? உன் தமிழறிவை வைத்து இப்புத்தகத்தைப் படித்துவிட்டு எனக்குக் கதை சொல்லு' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். 'இது என்ன பெரிய விஷயமா?' என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன். அவரிடம் இன்று வரை படித்துவிட்டுக் கதை சொல்ல முடியவில்லை. 
 
சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே. சில குறிப்புகள்' முதன்முதலில் படித்தது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன். 'படித்தது' என்று சொன்னது தவறு. 'படிக்கத் தொடங்கியது' என்று வாசித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அதைப் படித்து முடிக்கவேயில்லை. என்னவோ முயன்றும் முதல் பத்துப் பக்கங்களைத் தாண்டமுடியவில்லை.  
 
கடலில் விரைந்து செல்லும் படகின் பின்புறம் சில அடிகள் தூரமே படகு பயணித்த தடம் நீரில் தெரியும். பின்பு சலனமற்ற கடல். அதைப்போலவே ஜே.ஜே.சில குறிப்புகள் படிக்கும்போதும் நிகழ்ந்தது. வாசிப்பின் தொடர்ச்சியையும், புரிந்துகொண்டதையும் நினைவில் தக்கவைக்க பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஒரு பத்தியின் முதல் சில வாக்கியங்களைப் படித்துக்கொண்டே வருகையில், அதன் பொருள் ஓரளவு பிடிபடத் துவங்கிய வேளையில், தொடக்கம் மறந்து போக, பரமபத சோபன படம் விளையாட்டுபோல் முதலிலிருந்து வாசிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் நிசப்தம் நிலவிய இடங்களில் மட்டுமே சில அத்தியாயங்களைப் படிக்க முடிந்தது. ஆனால் ஒருபோதும் முழுவதையும் படிக்கமுடிந்ததில்லை. 
 
பழுப்பேறிப்போன காகிதங்களோடு அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்த புத்தகத்தை சென்ற வாரம் சிரியா செல்ல நேர்ந்தபோது படித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் எடுத்துப்போய் படித்து முடித்தே விட்டேன் - என்பதை இன்னும் நம்பமுடியவில்லை. 'மொத்த புத்தகத்தில் இருப்பதையும் சுருக்கமாகச் சொல்லேன். பார்க்கலாம்' என்று நீங்கள் கேட்கும் பட்சத்தில் நான் செய்யப்போவது - புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திறந்து மறுபடியும் படிக்கத்தொடங்குவதுதான். 
 
ஜோஸப் ஜேம்ஸ் (ஜே.ஜே.) என்ற எழுத்தாளனைப் பற்றி பாலு என்ற கதைசொல்லியைக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்ட விதம் அபாரமானது. ஜே.ஜே.யின் மன வீச்சினை கதை சொல்லியின் பார்வையில் வெற்றிகரமாகச் சொல்லியிருக்கிறார் சு.ரா.  
 
எண்ணங்களின் அலைகளைப் படிக்கையில் வேறொரு உலகத்திற்குச் சென்ற மனநிலையே எனக்கு இருந்தது. சில நேரங்களில் தலை கடுமையாக வலிக்கவும் செய்தது. முதன்முறையாக படிக்கும்போது தலைக்குள் வலியை உணர்ந்தது இப்புத்தகத்தை வாசிக்கையில். எழுத்தின் ஓட்டத்தை எட்டிப் பிடிக்க முயன்றதில் ஏற்பட்ட சிரமங்களின் விளைவே அது. 
 
ஜே.ஜே. சில குறிப்புகள் படிக்கும் முன்னர் சு.ரா.-இன் 'ஒரு புளியமரத்தின் கதை'-யை முழுவதும் படித்தேன். அவ்வளவு எளிமையான எழுத்தில் ஒ.பு.ம.கதையைப் படைத்த அதே சு.ரா., ஜே.ஜே.சில குறிப்புகள்-இல் இவ்வளவு ஒரு கடின களனை எடுத்துக்கொண்டு அதைவிடக் கடின நடையில் எழுதியது ஆச்சரியமாக இருக்கிறது. மனிதர்களின் மனங்கள் அவர்களைவிட விஸ்வரூபம் எடுத்து, அவற்றின் எண்ண ஓட்டங்களை அவர் சொல்லிக்கொண்டு போகும் விதம் அசாத்தியமானது. 
 
புரிந்துகொள்ளக் கடினமான தத்துவச் சிந்தனைகளையும், மனங்களின் விசாரங்களையும் எழுதிக்கொண்டு போகும் வேகத்திலும் 'ஒரு புளியமரத்தின் கதையில்' காணப்பட்ட அவரது நையாண்டி கலந்த நகைச்சுவையையும் ஆங்காங்கே தூவிச்செல்ல மறக்கவில்லை. அந்நையாண்டிகளில்தான் சு.ரா.வை அடையாளம் கண்டுகொள்ளமுடிகிறது. 
 
மேலைநாட்டு எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களது மேலைமொழி ஆக்கங்களைப் பற்றியும் நம்மவர்கள் பீற்றிக்கொள்வதைப்பற்றியும், அண்டைய மாநில எழுத்தாளர்களைப் பற்றியோ, அம்மொழியில் வந்துள்ள இலக்கியங்கள் பற்றியோ எதுவும் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் அவர்களது அறியாமையைப் பற்றியும் சாடுவதிலிருந்து தொடங்கி ஜே.ஜே.சில குறிப்புகள் ஒரு எரிமலைகளைத் தொடர்களைக் குடைந்தமைத்த பாதையில் பயணிக்கும் உணர்வைக் கொடுக்கிறது. 
 
"இந்தியக் குடியரசுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதினான்கு மொழிகளின் வரிவடிவத்தையாவது யாராவது ஒருதடவையேனும் பார்த்திருக்கிறீர்களா எனச் சில எழுத்தாளர்களிடம் கேட்டபோது, எல்லாருமே ஆயாசத்துடன் 'இல்லை' என்றார்கள். *நானும் பார்த்ததில்லை* என்ற உண்மையைச் சொல்லியும்கூட அவர்களை உற்சாகப்படுத்தமுடியவில்லை. இத்தாலிய எழுத்தாளனைத் தெரிந்தவனுக்கு கன்னட எழுத்தாளனைத் தெரியவில்லை. கா·ப்கா என்கிறோம். சிமோன் த பூவா என்கிறோம். போர்ஹே என்கிறோம். குட்டிக்கிருஷ்ண மாராரைத் தெரியாது என்கிறோம். கோபாலகிருஷ்ண அடிகாவைத் தெரியாது என்கிறோம்" என்பதிலிருந்து சாட்டையடி துவங்குகிறது. 
 
"இந்திய மொழிகள் ஒவ்வொன்றின் இலக்கியத்தைப் பற்றியும், அம்மொழி பேசும் மக்களின் கலாசாரத்தைப் பற்றியும், அடுத்த மொழிகளில் அறிமுகப்படுத்தும்விதமாக தனித்தனிப் பத்திரிகைகள் துவக்கப்படவேண்டும் என்று நண்பர்களிடம் இருபதாண்டுகளாகச் சொல்லிவருகிறேன். இதற்கு 13 * 13 = 169 பத்திரிகைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற என் பேச்சைத் தீவிரமாக எடுத்துக்கொண்டவர்கள் என்னைச் சந்திப்பதைக் குறைத்துக்கொண்டுவிட்டார்கள். 'வெறும் கனவு' என்று எடுத்துக் கொண்டவர்கள் என்னைக் கண்டதும் முகத்தில் கவலையைப் படரவிட்டு, 'எத்தனை பத்திரிகைகளுக்கு ஏற்பாடுகள் முடிந்திருக்கின்றன?' என்று கேட்பார்கள். இக்கேலியை நான் பொருட்படுத்தவில்லை. இதைவிடச் சிறிய திட்டங்களைச் சொல்லி, இதைவிடப் பெரிதாகக் கேலிக்கு ஆளானவர்கள் உண்டு. இத்திட்டத்தின் முதல்படியாக பிறமொழி இலக்கியம் அறிமுகப்படுத்தும் தமிழ்ப் பத்திரிகையொன்றை ஆரம்பிக்கலாம் என்று சொன்னபோது என் எழுத்தாள நண்பர் 'தமிழ் வாசகன் எவனும் பிறமொழி இலக்கியம் படிக்கமுடியாவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று சொல்லவில்லையே' என்று சொன்னதும் எனக்கு முகத்திலறைந்தாற் போலாயிற்று. 'நீங்கள் எழுதவில்லை என்று உண்ணாவிரதம் இருக்கும் வாசகன் எவன்?' என்று நான் கேட்டிருந்தால் எங்கள் உறவு அந்த நிமிஷத்திலேயே முறிந்துபோய் விடும். அவரும் பேசாவிட்டால் அப்புறம் நான் தனியே பேசிக்கொள்ள வேண்டிய நிலை இன்று. இந்நிலையில் நான் செய்யக்கூடியது என்ன என யோசித்ததன் விளைவு 'ஜே.ஜே.சில குறிப்புகள்'. "  
 
என்று துவங்கும் இதை சு.ரா. சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்தால், சொன்னது 'பாலு' என்ற கதை சொல்லி!  
 
பெரிய பாம்பில் கால்வைத்து சர்ரென்று வழுக்கி ஆரம்பக் கட்டத்திற்கு மறுபடியும் வந்து படிக்கத் துவங்குகிறேன் - பெருமூச்சு விட்டு!