Monday, October 04, 2004

ஒற்றை இறகு

*** ஒற்றை இறகு ***

ஆல மர நிழலின்

சில்லிப்பில்

ஆனந்தமாய் கண்மூடி

கண்டதொரு கனவு

*
படபடத்துப் பறந்த

காலங்கள்

மரக் குடில்களில்

கூட்டங்கூட்டமாய்

இரவிலும் கத்திக்

கும்மாளமிட்ட நாள்கள்

அதீத உணவு கிட்டிய

மமதையில் அரையரையாய்

கடித்து வைத்த

பழங்கள்

மரப்பட்டைகளில் கூர்தீட்டிய

செவ்வலகின் பளபளப்பு

பச்சை முகத்தில்

மின்னிய

கருமுத்து விழிகள்

*
விரல் சொடுக்கின் சத்தத்தில்

திடுக்கிட்டு விழித்ததும்

முகத்தில் அறையும் நிஜம்

பிடிக்கப்பட்டு

இறகொடிக்கப்பட்டு

இச்சிறு சிறையில்

படபடத்துப் பறக்கத்

தவித்துச் சிறு

குடுவையில் தண்ணீரும்

பிச்சையிட்ட எச்சில்

பழமும் தின்னும்

பரிதாபம்

*

தற்காலிக விடுதலையில்

வெளிவந்து முன்

அடுக்கிய

அட்டைக் குவியலில்

ஒன்றைக்

கொத்திக் கொடுத்ததும்

கிடைக்கும்

தானியக் கூலி

*

மறுபடி கூடு திரும்பிப்

பெருமூச்சுடன்

சோகை விழிகளை மூடி

யோசிக்கையில்

காலடியில் நிரடுகிறது

அதன்...

ஒற்றை இறகு

***

No comments: