Monday, April 18, 2005

ஓமானே மானே! - ஸலாலா

*** ஓமானே மானே! - ஸலாலா ***

ஸலாலா (Salalah) மஸ்கட்டிலிருந்து 1200 கிலோமீட்டர்கள் தூரம். ஓமானின் 1700 கி.மீ.க்கள் நீண்டிருக்கும் கடற்கரைப் பகுதியில் தென்கோடியில் இருக்கிறது சலாலா. ஓமான் ஏரின் போயிங் எழுநூத்தி முப்பத்தேழில் சினேகமில்லாச் சிப்பந்திகளும், தோல்/ரெக்ஸின் குறுகிய இருக்கைகளுமாய் அந்த ஒன்றரை மணி நேரப் பயணம் ஒரு அவஸ்தை! வரவர அநியாயத்துக்கு சொகுசாக வாழ்கிறோமோ? விமானப் பயணமே வலிக்கிறதே? என்று யோசித்துக் கொண்டே இறங்கினேன். 'ஓமானிகள் வருவர் பின்னே. வாசனை வரும் முன்னே' என்ற பழமொழி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஓமானிகள் வாசனைத் திரவியங்களை அபரிமிதமாக உபயோகிப்பவர்கள். சாப்பிடாமலிருந்தாலும் வாசனையில்லாமல் இருக்க மாட்டார்கள். மிக மிக அன்பான மக்கள். விமானம் மிக வாசனையாக இருந்தது. Image hosted by TinyPic.com

என் பக்கத்து சீட்டுக்காரரைப் பார்த்துக்கொண்டே எனக்கும், என்னைப் பார்த்துக்கொண்டே அவருக்கும் சிப்பந்தி கொடுத்த உணவுத்தட்டிலிருந்து பழரசம்/தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டு, சாளரம் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இயற்கை அமைப்பில் ஓமான் ஒரு வினோதம். எங்கு பார்த்தாலும் மலைத்தொடர்கள் - ஒரு மரம், செடி, கொடி, பூச்சி பொட்டு இல்லாத மொட்டை மலைத் தொடர்கள். உயரத்திலிருந்து பார்க்கையில் இடைவெளியில்லாமல் பரந்திருக்கும் செம்பழுப்புக் குன்றுத் தொடர்கள், செவ்வாய் கிரக புகைப் படங்களை நினைவு படுத்துகிறது. ஆங்காங்கே கட்டிடங்கள் தென்படுகின்றன. நூலிழை அளவுக்குச் சீரான தார்ச்சாலைகள் குன்றுகளூடே நெளிந்து வளைந்து நீளுகின்றன. இங்கே சாலைகள் ஒரு ஏங்க வைக்கும் அற்புதம்.

ஸலாலாவின் கையடக்கமான விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஜனகராஜ் 'வெல்கம் டு சலாமியா' என்று வரவேற்பது போல் ஒரு பிரமை. Image hosted by TinyPic.comகாற்றில் ஈரப் பதம் அதிகம் என்பதால் உடனடியாக வேர்க்கிறது. கூடவே காற்றும் அடிப்பதால், கொஞ்சம் ஆறுதல். நிலையத்திற்கு எதிரே நேர் கோட்டில் இருபுறமும் புல்வெளியுடனும், தென்னை மரங்களுடனும் ஒரு அழகான சாலை ஊருக்குள் செல்கிறது. எங்கெங்கும் ஈச்ச மரமிருக்கும் நாட்டினிலே ஒரு மாற்றத்திற்குத் தென்னை மரங்கள்! ஆங்காங்கே ஆறுகளும் நீரோடைகளும் இருந்திருந்தால், மலையாளிகள் எர்ணாகுளத்தைப் பெயர்த்தெடுத்து இங்கு வைத்திருக்கிறார்களா என்று தோன்றியிருக்கும்.

புல்வெளிகளில் வயதானவர்கள் இளைப்பாற, இளைஞர்கள் வர்ண விளையாட்டு உடைகளில் (கால்பந்து) ஓடி பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நிறைய இடைவெளி விட்டு கட்டிடங்கள் அமைக்கப் பட்டிருப்பதால் காற்று தடையில்லாமல் பயணிக்கிறது. கார்களில் தூசி அதிகம். மஸ்கட்டில் தூசியுடன் கார்கள் அரிது.

ஸலாலா அரேபியாவின் வாசனைத் திரவிய நகரம் (Perfume City of Arabia). என்னைக் கேட்டால் அது அரேபியாவின் கேரளா என்பேன். நம் நாட்டில் மாநிலங்கள் போல இங்கே Regions (மாவட்டம் என்று வைத்துக் கொள்வோமே!). சலாலா தோ•பார் மாவட்டத்தின் (Dhofar Region) தலை நகரம். ஒருபுறம் மலைத் தொடர்களும், மறுபுறம் மனதை மயக்கும் அழகு கடற்கரையும், இன்னொருபுறம் பாலைவனமும் - ஒரு வினோத கலவை. Frankincense (தமிழில் என்னவென்று தெரியவில்லை!) மரங்களும் அதில் கிடைக்கும் பிசின் போன்ற திரவியமும் மிகப் பிரசித்தம். ஊரெல்லாம் வாசனையடிப்பது போன்ற ஒரு பிரமை!
Image hosted by TinyPic.com

மழைக்காலத்தில் திடீரென்று மொத்த பரப்பும் பச்சையாக மாறும் அதிசயமும் இங்கு நடக்கிறது. மழைப் பருவத்தின் Khareef Festival இங்கு பிரசித்தம். ஜூன் முதல் செப்டம்பர் வரை நாங்கள் மஸ்கட்டில் கொதிக்கும் வெயிலில் வறுபடுகையில், ஸலாலாவில் ரஜினி பச்சை மரங்களின் நடுவே 'ஸலாலாவின் கரையோரம் தமிழ் பாடும் குருவி' என்று பாடிக் கொண்டிருப்பார். Wadi என்றழைக்கப்படும் நீரோடைகளில் நீர் நிசமாகவே ஓடும். நம்ம ஊராக இருந்தால் 'அடி வாடி.. வாடிக்கு வாடி, என் கப்ப கெழங்கே' என்று பாடுவார்கள். இங்கு இசைக்கப்படும் அரபி பாடல்களின் பின்னணி இசையைக் கேட்கும் போது, நடனமாடாமல் இருக்க மிகுந்த மனக்கட்டுப்பாடு வேண்டும். குதித்தெழுந்து வரும் அருவியைப் போன்று துள்ளும் இசை அது.

கடற்கரை என்றதும் நம் நினைவுக்கு வருவது மணல் பரந்த கரை பரப்பு. இங்கு பெரும்பாலும் படிவுப் பாறைகள் (limestone rocks)தான் ஸலாலாவின் மக்ஸேல் (Mughsayl) கடற்கரைப் பகுதி கொஞ்சூண்டு மணலும் நிறைய பாறைகளும் உள்ள கடற்கரை. கடல் நீர் பாறைகளுக்கு அடியே ஓடி அரித்திருப்பதால் ஆங்காங்கே பாறைபரப்பில் ஓட்டைகள் உண்டு. அலை (பாறைக்கடியில்) அடிக்கும்போது அந்த ஓட்டைகள் வழியே நீரூற்று பீய்ச்சியடிக்கும் பாருங்கள். கொஞ்ச நஞ்ச உயரம் அல்ல - நூறு அடி உயரம் வரை! Image hosted by TinyPic.com

புவி ஈர்ப்பு விசை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும் (காதல் மயக்கத்தில் இருப்பவர்கள் இதில் சேர்த்தி இல்லை. அவர்கள் எப்போதும் மேகங்களில் மிதந்து கொண்டு இருப்பார்கள்!). சலாலாவிலிருந்து கிழக்கே அறுபது கி.மீட்டர்கள் தூரம் பயணித்தால், மிர்பாத் (Mirbat) சாலையை அடைவோம். சாலை அந்த இடத்தில் மேல் நோக்கிச் செல்லும் ஒரு மேட்டுப்பாங்கான பகுதி அது. ஏற்றத்தில் ஏறும் முன் காரை நிறுத்தி நிறுத்தானை (Brake!) உபயோகிக்காமல், எந்த கியரிலும் போடாமல் நியூட்ரலில் வைத்துக் கொண்டால், கார் தானாகவே மேட்டின் உச்சிக்குச் செல்கிறது - அறுபது கி.மீ. வேகத்தில்!!! காரைத் திருப்பி இறக்கத்தை நோக்கி நிறுத்தினாலும், தானாக இறங்குவதில்லை. ஆக்ஸிலேட்டரை மிதித்தால்தான் இறங்கும்! அனுபவித்தால் மட்டுமே இந்த அற்புதத்தை உணரமுடியும். புவி இங்கே அவ்வளவாக ஈர்ப்பதில்லையால் இந்த அதிசயம். "சே! இந்த மாதிரி ஊர் முழுக்க இருந்தா பெட்ரோல் போடாம சுத்தலாமே" என்று அல்பத்தனமாகவும் தோன்றியது. 'கல்•ப்புக்கே ஆயிலா?' என்று ஏளனிப்பார்கள்.

மதுரையில் வீட்டில் புறப்பட்டால் பேருந்தில் உடல் அதிர, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணித்து திருச்சி சென்று வாசலில் செருப்பைக் கழட்டி வைக்கையில் நான்கு மணி நேரம் தொலைந்திருக்கும். மஸ்கட்டிலிருந்து ஸலாலாவுக்கு பேருந்தில் பனிரெண்டு மணி நேரத்தில் செல்கிறார்கள் - சாலையோர உணவகத்தில் செலவழிக்கும் அரைமணியையும் சேர்த்து! - 1200 கிலோமீட்டர்கள்! ஹூம்ம்ம்ம்ம்..!

மான் இன்னும் ஓடும்..

No comments: