Monday, April 04, 2005

*** அம்மாயி ***

*** அம்மாயி *** - சிறுகதை

வீட்டு வாசல்ல ட்ரை சைக்கிள் வந்து நின்னுச்சின்னு பாத்தாக்கா வேலு அண்ணன் வந்துருக்கு. வண்டில ரெண்டு மூட்டை. 'அம்மாயீஈஈ. வேலண்ண வந்துருக்காரு அம்மாயி'ன்னு கத்துனேன். 'வந்துட்டானா? மூட்டைய திண்ணைல இறக்கிப் போடச் சொல்லு'ன்னுச்சு அம்மாயி.

வேலண்ண மூட்டைய திண்ணைல இறக்கிப் போட்டுட்டுப் போயிடுச்சு. மூட்டைய அமுக்கிப் பாத்தா அட.. புளியம்பழம்.. ஐ.. அப்ப சாயங்காலம் பள்ளிக்கோடத்துலருந்து வந்ததும் உரிக்க வேண்டியதுதான். நா சந்தோஷத்தோட பள்ளிக்கோடத்துக்குப் போனேன். மதியம் பூரா புளியம்பழத்தை நெனச்சு கடைவாய்ல புளிச்சுக்கிட்டே இருந்துச்சு. ஒரு வழியா மணியடிச்சதும் வீட்டுக்கு வேகமா ஓடிப்போய் திண்ணைல பாத்தா, அம்மாயி புளியம்பழத்தை உரிச்சிக்கிட்டு இருந்துச்சு. 'வாடா.. வந்து உரி'ன்னதும் கிடுகிடுன்னு ஓட்ட ஒடச்சு புளியம்பழத்தை மொறத்துல அடுக்க ஆரம்பிச்சுட்டேன். ஓடு ரொம்ப ஈஸியா ஒடயும். பழம் வளைவு வளைவா நரம்பு ஓடி பிசுபிசுன்னு ஒட்டும். ஓட்டை மொதல்ல ஒடச்சு முடிச்சதும், அப்றம் கொட்டை எடுக்கணும். இன்னிக்கு எப்படியும் ரெண்டுகிலோவாவது முடிக்கணும்னுச்சி அம்மாயி. 'முடிச்சுக் காட்டறேன்'ன்னு வேகமா சோலியப் பாத்தேன். புளியங்கொட்டையெல்லாம் எனக்குத்தான். கொட்டைய வச்சு எவ்ளோ வெளையாட்டு வெளையாடலாம் தெரியுமா? இருங்க. அப்றம் சொல்றேன்.

நைட்டு ஒம்பொது மணிவரைக்கும் ஓட்ட ஒடச்சு முடிச்சதுல மொறம் ரொம்பிருச்சு. அம்மாயி காலைல கொட்டையெடுத்துக்கலாம்னு சொல்லிடுச்சு. நாளைக்கு நாயித்துக்கெழம தானே. பள்ளிக்கோடம் கெடயாதுல்ல.

மறுநா காலைல நான் மொறத்த எடுத்துக்கிட்டு கொல்லைப் பக்கம் கெணத்துக்கல்லுல ஒக்காந்துக்கிட்டேன். அம்மாயி ஓட்ட ஒடைக்கும். நான் கொட்டை எடுக்கணும். நாங்கள்ளாம் அதை புளியமுத்துன்னுதான் சொல்லுவோம். புளியம்பழத்த நசுக்கி முத்து எடுக்க ஆரம்பிச்சேன். புளியமுத்து என்ன பளபளன்னு இருக்குங்கறீங்க? ஆனா கொஞ்சங்கூட ஒட்டவே ஒட்டாது. தெரியுமா? ரெண்டுமணி நேரத்துல மொறத்துல இருந்த பழத்தையெல்லாம் நசுக்கி புளியமுத்து எடுத்தாச்சு. எப்படியும் ஒரு படி இருக்கும். புளிய அம்மாயிகிட்ட கொடுத்துட்டு புளியமுத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு கெளம்பிட்டேன். நெறய வேலை இருக்குல்ல.

வீட்ல இருந்த பெரிய டம்ளர எடுத்து அதுல கால்வாசி புளியமுத்த போட்டு, தண்ணி ரொப்பி, அலமாரி மேல எடுத்து வச்சிட்டேன். நாளைக்கு காலைல பாத்தாக்கா முத்தெல்லாம் நல்லா ஊறிப்போய் டம்ளர் ரொம்பிரும். அப்றம் அத வேகவச்சு கொஞ்சமா உப்பு சேத்து சாப்ட்டாக்கா..ஆஹா. எவ்ளோ ருசியா இருக்கும் தெரியுமா?

மிச்ச முத்துல இருந்து ரெண்டு கைப்பிடி எடுத்து முடிஞ்சு வச்சுக்கிட்டு, மத்தத ஒரு டப்பால போட்டு வச்சுக்கிட்டேன். முத்து தேய்க்கணும். எங்கூடப் படிக்கற ராஜாமணி அடுத்த தெருல இருக்கான். அவன் வீட்டுக்குப் போனேன். திண்ணைல கோலிய உருட்டிக்கிட்டு இருந்தானா? புளியமுத்த காட்டினதும் அவனுக்கு வாயெல்லாம் பல்லு. ரெண்டுபேரும் திண்ணைல ஒக்காந்துக்கிட்டு ஒவ்வொரு முத்தா தேய்க்க ஆரம்பிச்சோம். புளிய முத்த புடிச்சு தரைல தேய்ச்சா என்னா சூடு வரும் தெரியுமா? ரெண்டு இழுப்பு இழுத்துட்டு பாத்தாக்கா, கரும்பழுப்பு தோலு உரிஞ்சி வெள்ளையா ஆயிரும். தேய்ச்ச பக்கம் வெள்ளை. தேய்க்காத பக்கம் கரும்பழுப்பு. தேய்ச்ச முத்த வச்சு ஆடு புல்¢ ஆட்டம், அப்றம் இன்னும் நெறய வெளையாட்டு வெளையாடுவோம்.

பக்கத்துவீட்டு கோமதி அக்கா ரொம்ப நாளா புளியமுத்து கேட்டுக்கிட்டு இருந்துச்சு. அவங்களுக்கு மிச்ச எல்லா முத்தையும் கொடுத்துட்டேன். அவங்க அப்றம் அவங்க ப்ரெண்டு எல்லாம் சேந்து புளியமுத்த வச்சி பல்லாங்குழி ஆடுவாங்க.

தெருல நெறய பசங்க வெளையாடிக்கிட்டு இருந்தாங்க. ஒரு செட்டு பேந்தா வெளையாடிக்கிட்டு இருக்கு. தெருக்கோடி கோஷ்டி கிட்டிபுள் வெளையாடிக்கிட்டு இருந்துச்சு. அந்த பக்கம் எறிபந்து வெளையாடுறாய்ங்க. ராஜாமணி வீட்டு பக்கம் இன்னொரு செட்டு செதுக்கு முத்து வெளையாடிக்கிட்டு இருந்துச்சு. அதான் எங்க செட்டு. எனக்கு செதுக்கு முத்து வெளையாடணும்போல இருந்துச்சு. ஆனா ஜீவா வெளையாடிக்கிட்டு இருக்கான். அதான் பயம். அவன் இருக்கும்போது போய் வெளையாண்டோம்னா ஒரே ரவுண்டுல மொத்த முத்தையும் தொடச்சு எடுத்துக்கிட்டு போய்டுவான். என் நல்ல நேரம். ஜீவாவ யாரோ வந்து கூப்டதும் அவன் கெளம்பிட்டான். நானும் ராஜாமணியும் ஆளுக்கு பை நெறைய முத்து எடுத்துக்கிட்டு போய் ஆட்டத்துல சேந்துக்கிட்டோம். நாங்க வந்ததும் வட்டத்த பெரிசா போட்டானுங்க. எல்லாரும் ஆளுக்கு அம்பது முத்து வட்டத்துக்குள்ள வச்சு பரப்பிக்கிட்டு ஒரு முப்பத்தடி தள்ளி வரிசையா நின்னுக்கிட்டோம். முத்த செதுக்கறதுக்காக ஒவ்வொத்தணும் விதவிதமா கைல சிப்பி வச்சுருக்கான். சிப்பின்னா கடல் சிப்பி இல்லை. ஒடஞ்ச செங்கல், சிமிண்ட் ஸ்லாபு, அப்றம் ஒடஞ்ச ஓடுன்னு ஆளுக்கு ஒண்ணு வச்சுருப்போம். அதான் சிப்பி. தூரத்துல நின்னுக்கிட்டு விர்ருன்னு சிப்பிய வட்டத்துக்குள்ள செதுக்கற மாரி படுக்க வசத்துல எறியணும். நாம எறிஞ்ச சிப்பி எம்புட்டு முத்த வட்டத்துக்கு வெளில தள்ளுதோ அம்புட்டும் நமக்கு. ஆனா சிப்பி வட்டத்துக்குள்ள இருக்கணும். வட்டத்துக்கு வெளில போச்சுன்னா வெளிய செதறுன முத்த திரும்ப உள்ள வச்சுருவோம். ஜீவா தோசக்கல்லு சைஸ¤க்கு பெரிய சிமிண்டு ஸ்லாப எப்பவும் எடுத்துக்கிட்டு வருவான். அவன் எறிஞ்சான்னா ஒரே செதுக்குதான். மொத்த முத்தும் வெளில போயிரும். சிப்பி மட்டும் கரெக்கிட்டா வட்டத்துக்குள்ள இருக்கும். அதான் அவன் இருக்கும்போது நா வெளையாட மாட்டேன்னு சொன்னேன். இருட்டற வரைக்கும் செதுக்கு முத்து வெளையாண்டுட்டு வீட்டுக்குப் போனேன்.

அப்பத்தான் அம்மா கவெருமெண்ட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்துருக்கு போல. ஒரு வாரமா ஒரே வாந்தி.. என்னென்னு தெரியலை. அம்மாயிகிட்ட கேட்டப்போ 'ஒங்க அம்மா உண்டாயிருக்குடா. கொஞ்ச நாள்ல ஒனக்கு ஒரு தம்பிப் பாப்பா வந்துடும்'னு சொல்லிச்சு. ரொம்ப நாளா எனக்கு சந்தேகம். பாப்பா எப்படி வயித்துக்குள்ள வருதுன்னு. ஊசி வழியா வயித்துக்குள்ள விட்ருப்பாங்களான்னு கேட்டப்போ அம்மாயி 'ஆமாடா'ன்னுச்சு. 'டாக்டரா?'ன்னு கேட்டேன். 'இல்லை; ஒங்கப்பன்'ன்னுச்சு. ஒண்ணும் புரியலை. ஆனாலும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எனக்கு தம்பியெல்லாம் வேணாம். தங்கச்சிதான் வேணும்னேன். 'போடா போக்கத்த பயலே. ஒங்கப்பன் கேட்டான்ன ஒதைப்பான்'ன்னுச்சு அம்மாயி. அப்றம் நா யார்கிட்டயும் கேக்கல. ஆனா சாமிகிட்ட மட்டும் எனக்கு தங்கச்சி பாப்பா கொடுன்னு கேட்டுக்கிட்டேன். தங்கச்சின்னா எம்புட்டு நல்லா இருக்கும்! பாவாட சட்ட போட்டுக்கிட்டு சடை போட்டுக்கிட்டு எம்புட்டு அளகா இருக்கும்

அம்மா சாயங்காலம் வீட்டுக்கு வந்து படுத்துடுச்சி என்னய கிட்டக்கவே விடமாட்டேங்கறாங்க. நெதமும் அம்மா மேல கால் போட்டுக்கிட்டுதான் தூங்குவேன். கொஞ்ச நாளா அம்மாயி பக்கத்துல படுத்துக்கிட்டு அவங்க மேல கால் போட்டுக்கிட்டு தூங்கறேன். கனவுல பள்ளிக்கோடம்தான் வருது. நெசத்துல நடக்கறமாரியே கனவுலயும் இண்ட்ரவெல் விட்டு எல்லாப் பயல்களும் காம்பவுண்டு மூலைல இருக்கற கக்கூஸ¤ல போய் ஒண்ணுக்கடிச்சுட்டு வருவோம். கனவுலதானன்னு நானும் ஒண்ணுக்கடிச்சா திடீர்னு அம்மா என்னை எழுப்பும். கண்ணு தொறந்து பாத்தா நெசமாவே ஒண்ணுக்கடிச்சிருப்பேன். கருமம். ஆனா அம்மா திட்டவே திட்டாது. அம்மாயிதான் திட்டும். என்ன பண்றது. முழிச்சுருந்தா நான் ஏன் அவங்க மேல ஒண்ணுக்கடிக்கறேன்?

வெயிலு காலமும் ஆரம்பிச்சிருச்சு. பள்ளிக்கோடம் ரெண்டுமாசம் லீவுன்னாங்க. செட்டியார் கெணத்துல தண்ணியும் படிய விட்டுக் கீழ போயிருச்சு. முந்தி மாதிரி கெணத்துல குளிக்க முடியாது. கொளத்துக்குத்தேன் போகணும். கொளம் ஊர்க்கோடில இருக்கு. கெணறு மாரி தண்ணி அம்புட்டு தெளுவா இருக்காது. ஆனா பரவால்லை. குளிக்கலாம். நானும் ராஜாமணியும் கொளத்துக்குப் போனோம். வேலு அண்ணன் கொளத்தங்கரைல நின்னுக்கிட்டு இருந்தாரு. நெறைய வயக்காட்டு ஆளுங்க. ஓஹோ. கதிரறுத்துருக்காங்களா? சரிதான். அப்ப வேலை கெடைக்கும். முந்தியெல்லாம் நெல்லுக் கதிரை மொத்தமா கட்டி அடிபபாங்க. போன வருசம் செட்டியாரு ட்ராக்டரு வண்டி வாங்கிட்டாருல்ல. ட்ராக்ட்டரு இருக்கறதால கதிரு எல்லாத்தையும் தரைல பரப்பி வச்சுருக்காங்க. ட்ராக்டரு துள்ளித் துள்ளி ஓடுது. ட்ராக்டரு அடிச்சு முடிச்சதும் கதிரு எல்லாத்தையும் அள்ளுனாங்க. கதிரு என்ன கதிரு. அது வக்க்யல் தான். நெல்லு எல்லாம் பிரிஞ்சு தரைல கெடக்கு. வேலை எவ்ளோ சுளுவா முடிஞ்சு போச்சு பாருங்க. ஆளுங்க வக்க்யலு எல்லாத்தையும் அள்ளி குமிச்சிட்டாங்க். மூணு வக்க்யப் போரு. நெல்லு எல்லாத்தையும் வெளக்கமாறு வச்சு கூட்டி குமிச்சிட்டாங்க. இனிமே எண்ண வேண்டியதுதான். வேலு அண்ணன் எங்களக் கூப்ட்டு மரக்கா எண்ணனும்னாரு. அவங்களுக்கு அம்பதுக்கு மேல ஒழுங்காவே எண்ணத்தெரியாதுல்ல. நானும் ராஜாமணியும் அளகா எண்ணுவோம். வேலு அண்ணன் மரக்கா கொண்டுவந்து ரொப்பி ரொப்பிக் கொடுக்க நானும் ராஜாமணியும் எண்ணினோம். எண்ணுனத எல்லாத்தையும் இன்னொரு எடத்துல் அம்பாரமா குமிச்சாங்க. அம்பது மரக்கா ஒரு அம்பாரம். மொத்தம் எண்ணி முடிக்கும்போது ஐநூத்தி எழுவத்தஞ்சு மரக்கா இருந்துச்சு. செட்டியாருக்கு சந்தோஷம். நல்ல அறுவடைன்னு சொன்னாரு. அம்பாரம் முடிச்சதும் ஒவ்வொண்ணு மேலயும் சாணித் தண்ணில கோடு போட்டுட்டு, அச்சு வச்சிட்டாங்க. மறுநா காலைல வந்து பாக்கும்போது அது கலையாம இருக்கணும். கலைஞ்சிருந்தா திருட்டு நடந்திருக்குன்னு அர்த்தம்.

சொச்ச நெல்லை கூலியாளுக எல்லாத்துக்கும் அளந்து கொடுத்திச்சு வேலு அண்ணன். எனக்கும் ராஜாமணிக்கும் ஆளுக்கு ஒண்ட்ரை மரக்கா நெல்லு. குளிச்சுட்டு தொடைக்கறதுக்கு எடுத்துட்டுப்போன துண்டுல நெல்ல வாங்கிக்கிட்டோம். வீட்டுக்கு வர்ற வழில இருக்கற பேச்சி கடைல ஒரு மரக்கா நெல்ல எடைக்குப் போட்டோம். கடை வெளில வரிசைய எண்ண டின்னு அடுக்கி ஒரே எண்ணை வாசனையா இருக்கும். ஆளுக்கு அஞ்சு ரூவா கொடுத்திச்சு பேச்சி. பெரிய தொங்கட்டானும் மூக்குத்தியும் போட்ருக்கும் அது. பேச்சிக்கு ஒரு பொண்ணு இருக்கு. என்னய விட ஒண்ணு ரெண்டு வயசு கம்மின்னு நெனைக்கிறேன். எனக்கு பேச்சின்னா இப்பல்லாம் பிடிக்கறதுல்ல. ஏன்னு கேக்கறீங்களா? எப்பயும் மாமாதான் பேச்சி கடைல பலசரக்கு வாங்குவாரு. அவர்கூட நானும் போவேன். எல்லா சாமானும் வாங்கிமுடிச்சதும் எனக்கு பொரிகடலை பொட்டணம் ஒண்ணு வாங்கிக் கொடுப்பாரு. போன வாரம் மாமா சுந்தரபாண்டியத்துக்கு ஏதோ சோலியா போயிட்டாருன்னு அம்மாயி என்ன சாமான் வாங்கிட்டு வரச் சொல்லிச்சு. லிஸ்ட்ட எடுத்துக்கிட்டு பேச்சி கடைக்குப் போனேன். பேச்சி கடைக்குள்ள எண்ணைய அளந்துக்கிட்டு இருந்துச்சு. பேச்சியோட பொண்ணு கல்லால ஒக்காந்துக்கிட்டு பொஸ்தகம் படிச்சிக்கிட்டு இருந்துச்சு. நான் அதை எப்படிக் கூப்பிடறதுன்னு தெரியாம முழிச்சேன். 'இந்தா..'ன்னேன். அது நிமிந்து பாக்கவே இல்லை. கொஞ்சம் சவுண்டா 'இந்தா புள்ள...'ன்னேனா. கடைக்கு உள்ள இருந்து பேச்சி வெளிய வந்து 'அடி வெளக்குமாத்தால. அவ என்ன ஒம் பொண்டாட்டியா? புள்ள-ன்னு கூப்பிடறே? சாமான அத்துருவேன்'ன்னு கத்திச்சு. அவங்க தேவமாருங்க. அவங்க இதுல பொண்டாட்டிய 'புள்ள'ன்னு கூப்பிடுவாங்கன்னு அப்பத்தான் எனக்குத் தெரியும். நான் என்ன வேணும்னா கூப்பிட்டேன்? அப்படியே தெரிஞ்சிருந்தாலும் போயும் போயும் பேச்சிப் பொண்ணையா புள்ள-ன்னு கூப்பிடுவேன்? அதும் அது மூச்சியும்.. அன்னிலருந்து நா பேச்சி கடைக்கு தனியா போமாட்டேன்னு சொல்லிட்டேன். ஆனா இன்னிக்கு ராஜாமணியும் கூட இருந்தான்ல. அதான் தைரியமா போய் நெல்லு போட்டேச்சு.

மிச்ச அரை மரக்கா நெல்ல எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போய் அம்மாயிகிட்ட கொடுத்தேன். அவங்க அத குத்தி அரிசியாக்கிக்குவாங்கன்னு தெரியும். நா ஒரு கை அள்ளி வாய்ல போட்டுக்கிட்டேன். 'கூரா இருக்கும்டா. தொண்டைல சிக்கிச்சுன்னா கிழிச்சிரும். மூச்சுத் தெணறி செத்துப் போய்டுவே'ன்னு அம்மாயி கத்துச்சு. அதுக்கு வாய்ல பல்லே கெடயாது. எல்லாத்தையும் இடிச்சு இடிச்சுத்தான் திங்கணும். எனக்கு என்ன அப்படியா? நுப்பது பல்லு இருக்குல்ல. இன்னும் ரெண்டு பல்லு தான் பாக்கி. எப்ப வரும்னு தெரியலை. அதை விடுங்க. 'அதெல்லாம் ஒண்ணும் ஆவாது. இங்க பாரு நல்லா கடிச்சு அரைச்சுத்தான் திங்கறேன்'ன்னு ஈன்னு பல்லைக் காட்டினேன். நெல்லுப் பாலு வாயோரத்துல வழிஞ்சிச்சு. 'சொன்னா கேக்கமாட்டான் எடுபட்ட பய'ன்னு திட்டிட்டு அம்மாயி உள்ள போயிருச்சு. நான் ராஜா மணி வீட்டுக்குப் போலாம்னு கெளம்பினேனா. உள்ள இருந்து அம்மா கத்துற சத்தம் கேட்டுச்சு. என்னன்னு பாக்கலாம்னு வீட்டுக்குள்ளப் போனா வீட்ல இருந்த அக்கம்பக்கத்து பொம்பளைங்க 'ஒனக்கு ஒண்ணும் இல்லை போடா'ன்னு சத்தம் போட்டு என்னய வெரட்டி விட்டுட்டாளுங்க. அம்மாவுக்கு வலிஎடுத்து புள்ள பொறக்கப் போவுதுன்னு தோணிச்சு. தங்கச்சிப் பாப்பாதான் வேணும்னு சாமிக்கிட்ட இன்னொரு தடக்கா வேண்டிக்கிட்டேன். திண்ணைல தங்கச்சிப் பாப்பாவுக்காக நடை-வண்டி நானே செஞ்சது; அப்றம் பனம்பழ செரட்டைல சின்ன வண்டி எல்லாம் வச்சுருக்கேன். ரொம்ப கவலையா இருந்துச்சு. ராஜாமணி வீட்டுக்குப் போனேன்.

ராஜாமணிட்ட 'எப்படிடா கொழந்த பொறக்கும்?'னு கேட்டேன். எனக்கு எங்க இருந்து கொழந்த வரும்னு ஒரே சந்தேகம்.

'ஒண்ணுக்குப் போற எடத்துல இருந்துடா'ன்னான் அவன்.

எனக்கு பயங்கர ஆச்சரியமா இருந்துச்சு. 'அது ரொம்ப சின்ன எடமாச்சேடா. அதுல இருந்தா அம்புட்டுப் பெரிய கொழந்த பெறக்கும்?'ன்னு கேட்டேன்.

'ஆமாண்டா. அது கிழிஞ்சு அதுல இருந்துதான் பாப்பா வரும். இல்லாட்டி பொம்பளையாளுங்களே கிழிச்சு வெளில எடுத்துடுவாங்க'ன்னான். இவனுக்கு எப்படி இந்த வெவரமெல்லாம் தெரியும்னு நெனச்சுக்கிட்டேன். சே.. எங்கியாவது ஒடம்புல பெரிய ஓட்டையா இருந்தா கஷ்டப்படாம கொழந்தை வெளில வந்துருமேன்னு தோணிச்சு. என்னவோ போங்க. எனக்கு அம்மாவைப் பாக்கணும்போல இருந்துச்சு. ஆனா விடமாட்டாங்க. அப்படியே தூங்கிப்போய்ட்டேன்.

மறுநா காலைல வீட்டுக்குப்போனா ஒரே கூட்டம். அம்மாயி கொடுத்த துணிமூட்டைய அப்பா கைல தூக்கிட்டு வெளில வர ஒரு கூட்டம் பின்னாடி வருது. என்னயப் பாத்ததும் 'ஒம்பையன் வந்துட்டான் குருசாமி'ன்னு யாரோ சொல்ல அப்பா என்னய ஒருதடவை பாத்தாரு. மொகத்துல களையே இல்லை. அது என்ன கைலன்னு தெரியலை. பொம்பளையாளுங்க அழுவுறாங்க. அம்மாவைக் காங்கலை. அம்மாயி என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டு 'ஒங்கப்பன் பின்னாடி போடா.. பாப்பா செத்துப்போச்சு'ன்னு அழுதுச்சு. எனக்கு ஒண்ணும் ஓடலை. கண்ல தண்ணி மடமடன்னு வருது. 'எப்படி?'ன்னு யார்ட்டயும் கேக்கமுடியலை. ஒண்ணும் பேசாம நடந்தேன். அப்பா கைல வச்சுருந்தது பாப்பாவா. அய்யோ. துணிமூடியிருக்கறதால அதும்மொகத்தக்கூட பாக்க முடியலை. அது எப்படி இருக்கும்னு பாக்கணும்போல இருந்துச்சு. அழுதுகிட்டே அப்பா பின்னாடி போனேன். அப்பா என்ன நெனச்சாருன்னு தெரியலை. துணிய எடுத்துட்டுக் காட்டுனாரு. பாப்பா அப்படியே பூப்போல கண்மூடிக்கிட்டு தூங்கறமாரியே இருந்துச்சு. ஒரு பொம்பளையாளு பாப்பாவோட வாய தொடச்சு விட்டுச்சு. கரும்பழுப்பு கலர்ல.. அது என்ன ரத்தமா தெரியல. திரும்பவும் துணியப் போட்டு மறைச்சுட்டாங்க. சுடுகாட்டுக்குப் போய் சின்னதா குழிதோண்டி அதுல துணிமூட்டைய வச்சு, பூவு மஞ்சத்தண்ணி தெளிச்சு மூடிட்டாங்க.

திரும்ப வந்து அம்மாயி மடில படுத்துக்கிட்டு அழுதேன். அவங்க என்னவோ ராகமா ஒப்பாரி வச்சுக்கிட்டு இருந்தாங்க. அம்மா உள்ள படுத்திருக்காங்க போல. 'என்ன பாப்பா அம்மாயி?'ன்னேன். 'பொட்டப்புள்ளடா'ன்னு நெஞ்சுல குத்திக்கிட்டு அழுதாங்க. அய்யோ. சாமி நா கேட்ட மாரியே தங்கச்சிதான் கொடுத்துருக்கு. அப்றம் எதுக்கு பாப்பா செத்துப் போச்சுன்னு எனக்கு பயங்கர அழுகை அழுகையா வந்து ஓன்னு அழுதேன். அம்மாயி எம்மொகத்தை தடவிக்கொடுத்து 'அழுவாதடா'ன்னுச்சு. அவங்க கை எப்பயும் நடுங்கிட்டு இருக்கும்.

இப்பவும் நடுங்கிக்கிட்டு இருந்துச்சு.

***

அன்புடன்
சுந்தர்

Thanks to : www.maraththadi.com

No comments: