Tuesday, March 22, 2005

*** FIRST BLOOD ***

*** FIRST BLOOD ***

Image hosted by TinyPic.com

‘டேய்.. நட்ராஜ் தியேட்டர்ல ·பஸ்ட் பிளட் போட்ருக்கான் செகண்ட் ஷோ போலாமா?’ என்று ராஜாங்கம் கேட்டபோது துள்ளிக் குதித்து சரியென்று சொன்னேன். காலையில் கல்லூரி செல்லும் போது பஸ் ஸ்டாப்பில் ஸ்டாலோனின் முறுக்கேறிய புஜங்களுடன், தலையில் சின்ன ரிப்பன் கட்டி, தோளின் குறுக்காக தோட்டா பெல்ட்டை அணிந்து, கையில் ஒரு மெகா சைஸ் துப்பாக்கியைப் பிடித்திருக்கும் போஸ்ட்டரைப் பார்த்ததிலிருந்து, படத்தை பார்த்துவிட துடித்துக் கொண்டிருந்தேன்.

‘மொத நாள். கூட்டமா இருக்கும்டா.’ என்ற போது ‘அதெல்லாம் பரவால்ல வாங்கிரலாம். ஒம்பதரைக்குஷோ. நீ எட்ரைக்கு கவுண்ட்டர் முன்னாடி வந்துடு’ என்றான்.

எட்டரைக்கு தியேட்டருக்குப் போனபோது, தியேட்டர் காம்பவுண்டு முன்பாக பேய்க் கூட்டமாக இருந்தது. குறுகலான கம்பித் தடுப்புக்குள் புகுந்து சற்று தூரம் போனால் தான் டிக்கெட் கொடுக்குமிடத்தை அடைய முடியும். ஆனால் வாசலே தெரியாதவாறு கூட்டம் அடைத்திருந்தது. மேலும் செல்வதற்கு முன் ராஜாங்கத்தைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

மதுரையில் டி.வி.எஸ்.ஸில் பிளஸ் ஒன் சேர்ந்த போது ராஜாங்கம் அறிமுகமானான். ஒடிசலான பையன்கள் மத்தியில் பல வருடங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடலை கும்மென்று வைத்திருந்தான். அந்த வயதிற்குப் பொருந்தாத முரட்டு உடல் வாகு. நாங்கள் அனைவரும் அடிக்கடி அவன் சட்டையின் அரைக் கையை தோள்வரை சுருட்டி விட்டு, புஜத்தை முறுக்கிக் காட்டச் சொல்வோம். பந்து போல் விம்மியிருப்பதைப் பார்த்து வியப்பில் எங்கள் விழிகள் விரியும். எங்களுக்கு அவன் ஸாம்ஸன் போல. அவன் உடல் ‘V’ ஷேப்பிலிருக்க, நாங்களனைவரும் ‘A’ ஷேப்பிலிருந்தோம்..

சுப்புணி, 'காதன்' என்கிற பிரபாகரன் என்று பள்ளித் தோழர்கள். நான், சுப்புணி, ராஜாங்கம் மூவரும் பள்ளியிலிருந்து கல்லூரி முடித்து வேலைக்குச் சேர்ந்தது வரை பத்து வருட காலம் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அப்புறம் வாழ்க்கையோட்டத்தில் பல திசைகளில் பிரிந்தோம்.

தியேட்டர் வாசலில் மொய்த்திருந்த மனிதத் தலைகளிலிருந்து, ராஜாங்கத்தின் தலை எட்டிப் பார்த்து, ‘இங்க இருக்கேன் வாடா’ என்றான். அவனை எப்படி அடைவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கையை நீட்டி ‘பிடி’ என்றான். பிடித்த அடுத்த வினாடியில் இழுக்கப் பட்டு சில உடல்களை ஊடுருவி அவனருகில் நின்றுகொண்டிருந்தேன்.

ஒரு வரிசை நிற்பதற்கான குறுகிய இடத்தில் நான்கு வரிசைகளாக அடைத்து நின்றிருந்தனர். நான் ராஜாங்கத்தின் பரந்த முதுகுக்குப் பின்னால் ஒட்டி நின்று கொள்ள கூட்டம் நெருக்கியடித்தது. இம்மாதிரி நேரங்களில் ரவுடிகளின் ராஜ்ஜியம் தலைவிரித்து ஆடும். சில முரடர்கள் அரை ட்ரவுசருக்கு மேல் மடித்துக் கட்டிய லுங்கியுடனும் பீடியுடனும் வரிசையில் நிற்பவர்களின் தோள்கள் மீது சாவதானமாக நடந்து சென்று டிக்கெட் வாங்கிச் செல்வார்கள். சுற்றிலும் ‘டேய்..டேய்’ என்று எதிர்ப்புக் குரல்களும், காதைக் கூசச் செய்யும் வசவு மொழிகளும் எழுந்தாலும், தோள் மீது நடப்பவர்களை யாரும் தடுக்க மாட்டார்கள். சில சமயம் சில தைரியசாலிகள் மேலே நடப்பவர்களின் கால்களைப் பிடித்து இழுத்து விட்டுச் சரியச் செய்வார்கள். ஆனால் அத்தகைய செய்கைகள் கைகலப்பில்தான் பெரும்பாலும் முடியும். கவுண்ட்டரிலும் ஒரு கை புகக் கூடிய அளவே இருக்கும் சிறிய எலிப் பொந்து போன்ற ஓட்டையில் ஒரே சமயத்தில் நான்கு கைகள் திணிக்கப் பட்டு டிக்கெட் வாங்கச் சண்டை நடக்கும்.

நின்றிருந்த என் தோள் மீது கால்கள் பதிய ஒரு முரடன் பக்கவாட்டுத் தடுப்புக்கம்பிகளைப் பிடித்துக் கொண்டு முன்னேறிச் சென்றான். ராஜாங்கத்தின் மீது நடக்காவிட்டாலும் அவன் வரிசையில் முந்திச் சென்றதே ராஜாங்கத்தைக் கோபம் கொள்ளச் செய்யப் போதுமானதாக இருந்தது. ஆனால் அவன் சுதாரிப்பதற்குள் முரடன் கவுண்ட்டரை அடைந்து டிக்கெட் வாங்கிச் சென்று விட்டான். ராஜாங்கம் பக்க வாட்டுக்கம்பி வரிசைகளில் இரண்டாவது வரிசை மீது ஏறி நின்று கொண்டு கைகளால் மேல் கம்பி வரிசையைப் பிடித்துக் கொண்டு வேறு யாரும் ஏறிச் செல்லாதபடி வழியை அடைத்துக் கொண்டான். நாங்கள் கவுண்ட்டரிலிருந்து பத்தாவது ஆளாக நின்றிருந்தோம். மற்றும் சிலர் டிக்கெட் வாங்கிச் செல்ல, வரிசையிலிருந்து முன்னேற வேண்டி ராஜாங்கம் இறங்கி நின்றது தான் தாமதம். என் தலை மேல் நிழல் படிய அடுத்த வினாடி ராஜாங்கத்தின் தோள்களில் இரண்டு கால்கள் நின்றன. நான் அண்ணாந்து பார்த்த போது இன்னொரு முரடன் மடித்து கட்டின கைலியுடன் பக்கவாட்டுக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ராஜாங்கத்தின் மேல் நின்றிருந்தான். நான் அடுத்து நிகழப் போவதை நினைத்துக் கலவரமடைந்தேன். கூட்டத்தின் காரணமாக அசையமுடியாமல் நின்றிருந்த ராஜாங்கம் தன் கையை முரடனின் கால்களுக்கிடையில் செலுத்தி அவன் மர்மப் பிரதேசத்தில் ஒரு குத்து விட, முரடன் அலறி எனக்குப் பின்னால் இருந்த ஆட்களின் தலைகள் மேல் சரிந்தான். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. படிப்பறிவில்லாத நாகரீகமற்ற முரடனாயிற்றே. பின்னால் இருந்தவர்களின் தலைகள் மீது எழுந்து நின்று ராஜாங்கத்தின் பெற்றோர்களைப் பழிக்கும் கெட்ட வார்த்தை ஒன்றை பிரயோகித்து முன்னேற முயல, ராஜாங்கம் ரெளத்திரமானான். அப்படியே என்னை நோக்கித் திரும்பி, கம்பிகளைப் பிடித்து எழுந்து என் தலை மீது வலுவான கால்களைச் செலுத்திமுரடனைக் கடுமையாக உதைத்தான். ராஜாங்கம் படித்த நாகரீகமான ஆனால் முரடனுக்கு முரடன்.

அடிவாங்கியவன், புகைபிடித்தல் மற்றும் இன்ன கெட்ட பழக்கங்களால் உடல் வலுவிழந்து இருந்தான். அவனால் சில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேலும் அசெளகரியமான இடத்தில் இருந்ததால் அவனால் எதிர்க்க முடியவில்லை. ராஜாங்கம் தன் நகங்களால் அவன் முகத்தைப் பிடித்து கன்னங்களில் ஆழமாகக் கோடிட்டான். என் தோளில் சில துளிகள் ரத்தம் சிந்தின. என் பின்னே எரிச்சலுடன் நின்றிருந்தவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டுமுரடனை இன்னும் பின்னே தூக்கி எறிய, நாங்கள் முன்னே தள்ளப்பட்டு கவுண்ட்டரை அடைந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு நெரிசலில் இருந்து விடுபட்டு வந்தோம்.

படம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்ததால் தியேட்டரின் உள்ளே செல்லாமல் காம்பவுண்டுக்குள்ளே திறந்த வெளியில் காற்று வாங்கிக் கொண்டிருக்க, ராஜாங்கம் முகம் கழுவச் சென்றான். திடீரென்று என் தோளில் கனமான கை ஒன்று விழத் திரும்பிப் பார்த்தால் அடி வாங்கிய அந்த முரடன் கண்களில் வெறியுடன். என் குலை நடுங்கியது. ‘எங்கடா.. அவன்...ங்.....’ என்று கேட்டதும் நான் சமாதான தொனியில் ‘அண்ணே விடுங்கண்ணே.. சண்டை வேணாம்..’ என்று சொல்லி முடிக்கும் முன்னே, என் கழுத்தைப்பிடித்து ‘டேய்... ஐய்யா...எங்க அவன்? இன்னிக்கு அவன வெட்டாம விட்றதில்ல...’ என்று என் முகத்தருகே உறுமினான். அவன் கன்னங்களில் ஆழமான ரத்தக் கோடுகள். சில வினாடிகளில் ராஜாங்கம் திரும்பி வந்து என்னையும் என் நிலையையும் பார்த்ததும் அவன் மீது பாய்ந்தான்.

கால்களில் இருந்த செருப்புக்கள் கைகளுக்கு மாறி இருவரும் அடித்துக்கொண்டனர். முரடனுக்கு புத்தியில்லாமல் மேலும் அடி வாங்கினான். அவன் பற்களிலிருந்து ரத்தம் வந்ததைப் பார்த்தேன். அவன் அடி தாங்காமல் தியேட்டரை விட்டு ஓடினான். ‘திரும்ப வர்றேண்டா.... மவனே நீங்க தியேட்டர விட்டு திரும்ப மாட்டீங்க’ என்று சத்தம் போட்டு விட்டு ஓடினான்.

படம் துவங்க நீண்ட மணி ஒலித்ததும் நாங்கள் தியேட்டருக்குள் ஐக்கியமானோம். ராஜாங்கம் சூடாக மூச்சு விட்டு சண்டைக் காளை மாதிரி இருந்தான். ‘டேய்.. வீண் சண்டை வேண்டாம்டா.. வா வீட்டுக்குப் போகலாம். அப்றமா இன்னொரு நாளைக்கு படம் பாத்துக்கலாம்டா’ என்று சொல்லிப் பார்த்தேன். ம்ஹ{ம்.. அவன் மசியவில்லை. ‘பயப்படாதேடா.. இன்னிக்கு அவனா நானா பாத்துரலாம். தெரு நாயி.. முட்டாக் #&*... அவனுக்கே இம்புட்டு திமிர்னா.. எனக்கு எம்புட்டு இருக்கும்?’ என்றான். நியாயம்தான் என்று தோன்றியது.

படம் வேறு ரத்தக் களறியாக இருக்க, எனக்கே காட்சிகளைப் பார்க்கும் போது வீரம் வந்தது போல் தோன்றியது. ராஜாங்கத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவன் ஸ்டாலோனைப் பார்த்து இன்னும் முறுக்கேறியிருந்தான். இடைவேளையில் நான் வெளியே லேசாக எட்டிப் பார்த்த போது வெளியில் சுவரில் பதிக்கப் பட்டிருந்த பெரிய முட்டை வடிவக் கண்ணாடி முன்பாக அந்த முரடன் நின்று கொண்டு கன்னத்திலிருந்த கோடுகளைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் கொலை வெறி. நான் உள்ளே புகுந்து ராஜாங்கத்திடம் வெளியே வரவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டு சம்மதிக்கச் செய்தேன். படம் முடிந்ததும் கூட்டத்தில் கரைந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றோம்.

மறுநாள் யெஸ்டி மோட்டார் பைக் மெக்கானிக் கடை வைத்திருந்த ராஜாங்கத்தின் முருகேசுச் சித்தப்பாவைப் பார்த்த போது ‘என்ன சுந்தராசு.. நேத்திக்கு பயங்கரமா சண்டை போட்டியாம்ல’ என்றார் குரலில் கிண்டலுடனும், கேலியுடனுமாக. ராஜாங்கம் நடந்ததைச் சொல்லி நான் கையாலாகாமல் வேடிக்கை பார்த்ததையும் சொல்லியிருக்க வேண்டும். எனக்கு வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. ‘இல்ல சித்தப்பா. அவன்தான் அந்த ஆள போட்டு பின்னிட்டான்’ என்றேன். ‘நீ ஒரு அடியாவது அடிச்சிருக்க வேணாமாய்யா? ஒன் பிரண்டுதானே?’ என்றார். நான் பதில் சொல்ல முடியாமல் அசட்டுச் சிரிப்பை உதிர்த்தேன். வாழ்க்கையில் சண்டையே போட்டதில்லை என்றும் அதைப் பற்றி நினைத்ததும் கூட இல்லை என்றும் அவரிடம் சொல்ல முடியவில்லை. சுத்த சைவத்தில் சண்டை சச்சரவில்லாது படிப்பு மட்டுமே வாழ்க்கையில் ஓரே குறிக்கோளாகக் கொண்டு வளர்ந்ததால் சமாதானத்தை மட்டும் நம்புவதாகச் சொல்ல முடியவில்லை.. அவர்கள் அப்படியில்லை. கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்ந்தவர்கள். உழைத்து வலுவேறிய உடலுடையவர்கள். எதையும் எதிர் கொள்ளும் மனத் துணிவும் உடல் துணிவும் உண்டு.

முருகேசு சித்தப்பாவை இப்போது பார்த்தாலும் ‘என்ன சுந்தராசு.. நட்ராஜ் தியேட்டருக்குப் போவமா?’ என்று கேட்டுவிட்டு கண்ணடிப்பார்.

***
சுந்தர்.
அக்டோபர் 17, 2002
நன்றி : மரத்தடி.காம்

No comments: