Saturday, January 25, 2014

சார் ரன் கேலியே!


தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் கிரிக்கெட் ஜூரம் பரவத்தொடங்கிய எண்பதுகளின் ஆரம்பம். 83-இல் உலகக்கோப்பையை வென்றதும் ஜூரம் உச்சத்திற்குப் போனது. ஆனாலும் தொலைக்காட்சி பரவலாக வரவில்லை. விலை ஜாஸ்தியான பணக்கார வஸ்து அது. தமிழகத் தென்கோடி ஊர்களில் ரூபவாஹினி மட்டும் பூச்சி பூச்சியாகத் தெரிய யாராவது ஒரு மாமா மொட்டை மாடியில் ஆண்ட்டெனாவை திருகித் திருகி “இப்பத் தெரியுதா?” என்று கேட்டுக்கொண்டேயிருப்பார். 

கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பு வானொலிகளில் - ஒற்றை ஸ்பீக்கர் வைத்திருக்கும் ட்ரான்ஸிஸ்டரை காதருகில் குண்டலம் மாதிரி ஏந்தி ஒருவர் வைத்திருக்க அவரைச் சுற்றி ஒரு கூட்டம் சிலை மாதிரி நின்று கேட்டுக்கொண்டிருக்கும். எவ்வளவு திருகினாலும் ஒன்றிரண்டு ஸ்டேஷன்கள் எடுக்கும் பாக்கெட் ரேடியோவும் மிகப் பிரபலம். அதன் ஈசான மூலையிலிருந்து சர்ரென்று இரண்டடி உயரத்திற்கு எவர்சில்வர் ஆண்ட்டனாவை அடுக்காக இழுத்து - உச்சியில் கொண்டை வைத்திருக்கும் - ரேடியோவை ஆன் செய்வார்கள். 

விக்கெட் விழும்போதும், ஓட்டங்கள் எடுக்கப்படும்போதும் மைதானத்திலிருந்து வரும் ரசிகர்களின் ஆரவாரத்தின் இரைச்சல் வர்ணணை செய்பவரின் பின்னணியில் ஏறியிறங்கி ஓஷ்ஷ்ஷ் என்று கேட்டுக் கொண்டேயிருக்க, வானொலி கேட்பவர்களின் ரத்த அழுத்தமும் அதற்கேற்ப ஏறியிறங்கிக் கொண்டியிருக்கும். ஆங்கில வர்ணனை அபூர்வம். வந்தாலும் ரொம்ப விளங்கினாற்போலத்தான். 

எப்போதும் ஹிந்தி வர்ணனைதான் என்பதால் ஹிந்தி தெரியாத கழக ஆட்சி புகழ், பந்திக்கு முந்தி ஹிந்திக்குப் பிந்திய தமிழர்களுக்கு ஒரு மண்ணும் புரியாமலிருந்தாலும் வர்ணனையை அழிச்சாட்டியமாகக் கேட்டுக்கொண்டிருப்போம். இந்தியா பேட்டிங் செய்யும் போது திடீரென்று ஆரவாரம் உச்சத்திற்குப் போக வர்ணனையாளர் லாட்டரி விழுந்த உற்சாகத்துடன் கிடுகிடுவென்று ஏதோ சொல்லி கடைசியில் “கிதார்ரப் சார் ரன் கேலியே” என்று அலறி முடிப்பார். அந்த மொத்த வாக்கியத்தில் “சார் ரன்” என்பது மட்டும் புரியும். “ஃபோர்” என்று நாங்கள் இங்கு கத்துவோம். 

அப்புறம் “ஏக் ரன்” “தோ ரன்” ”தீன் ரன்” “சே ரன்” என்பதும் புரியும். ஆனால் பௌலிங் போடும்போது விக்கெட் விழுந்ததா யாராவது விழுந்தார்களா என்று வர்ணனையாளர் எவ்வளவு கதறினாலும் ஒன்றும் புரியாது. அதேபோல் ஹிந்தியில் ஒன்று இரண்டு என்று பத்துவரை மட்டுமே எண்ணத் தெரியும் என்பதால் மொத்த ரன்கள் எவ்வளவு என்று வர்ணனையாளர் சொல்வது தெரியவே தெரியாது. ஆட்டத்தில் ஜெயித்தோமா தோற்றாமா என்பதும் புரியாது. நாலு வார்த்தை வாக்கியத்தில் மூன்று வார்த்தை ஆங்கிலம் கலந்து பேச அவர்கள் என்ன மறத் தமிழர்களா? “ரன்“ “விக்கெட்” போன்ற தவிர்க்கவியலாத வார்த்தைகள் தவிர சுத்த ஹிந்தியில்தான் வர்ணனை. 

இந்த ஹிந்திபுரியா கழிவிரக்கமும் எரிச்சலும், சென்னை சேப்பாக்கத்தில் எப்போது போட்டி நடக்கும் என்று காத்திருந்து அப்துல் ஜப்பார் அவர்களின் அழகுத் தமிழ் வர்ணனையைக் கேட்டதும்தான் அடங்கும்! அவர் சரியான (அசலான) மறத்தமிழர்! “ரன்” என்று சொல்லாமல் “ஓட்டம்” என்று சொல்வார். “மட்டை” “எல்லையைத் தாண்டிச் சென்றது பந்து” (பவுண்டரிக்கு “தரையில் பட்டுச் சென்றது” - சிக்ஸருக்கு “பறந்து எல்லைக் கோட்டைக் கடந்தது”) என்று தூய தமிழில் சொல்வார். காதில் நிஜமாகவே தேன் பாயும்! 

சரீஇஈ! ஏக் துஜே கேலியே-வெல்லாம் விழுந்து விழுந்து பார்த்தோமே. அதற்கு அர்த்தம் என்ன? 

No comments: