Tuesday, January 28, 2014

பஸ்!


வற்றாயிருப்பிலிருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி - எப்போதாவது சென்னை என்று நெடுந்தூரப் பேருந்து பயணங்களின்போது பேருந்து ஓட்டுனரின் இடப்பக்கம் இருக்கும் பக்கவாட்டு இருக்கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துகொள்வது வழக்கம். பயணிகள் நிறைந்ததும் டிரைவர் தோளில் டர்க்கி டவலுடனும் எவர்சில்வர் ஸ்ட்ராப் வாட்ச்சுடனும் கதவைத் திறந்து ஏறி வயர் பின்னியிருக்கும் இருக்கையில் அமர்ந்ததும் ஒரு கை கியர் லீவரைப் பிடித்து பல்ஸ் பார்த்து கியர் மாற்றி, தொப்பி வைத்திருக்கும் ஸ்ட்ரா போன்ற கம்பியை இழுத்து, இன்னொரு கையால் சில பொத்தான்களை இயக்கி, ஸ்டியரிங் வீலைப் பிடித்துக்கொண்டு இடது வலது கால்களால் பெடல்களை மிதித்துச் சாலையை நோக்கி, ஹாரனை ஒருமுறை அழுத்தியதும் மொத்த வண்டியும் ஓர் உதறி உதறிக் கிளம்பும்.

வண்டி ஐட்லிங் போதும் பயணத்தின் போதும் கியர் லீவர் ர்க்கர ர்க்கர என்று நடுங்கிக் கொண்டிருப்பதையும் அதைப் பிடித்திருக்கும் அவரின் இடது மணிக்கட்டும் அந்த வாட்சும் சேர்ந்து நடுங்குவதும் சுவாரஸ்யமான காட்சி.

அஷ்டாவதானி மாதிரி அவர் கைகளாலும், கால்களாலும் சாகசம் செய்து வண்டியோட்டுவதைக் கணகொட்டாமல் மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருந்து அவரைப் போன்றே மானசீகமாக வண்டியை மனசுக்குள் ஓட்டுவது வழக்கம்.

வாழ்நாளில் அவர் மாதிரி ஸ்டைலாக ஒருமுறையாவது பேருந்தை ஓட்டிவிடவேண்டுமென்பது தீராத ஆசையாக இன்னும் இருக்கிறது. இப்போதும் கண்மூடிக்கொண்டு அந்தப் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்துகொள்வதைக் கற்பனை செய்தால் பேருந்து ஓட்டுதலின் வசீகரிப்பு ஞாபகங்களின் மூலையில் இன்னும் அழியாமலிருக்கிறது.

No comments: