Tuesday, January 05, 2016

400-லிருந்து 1000...


1987 - தீபாவளியன்று காஞ்சிபுரத்தில் பாலாஜி வீட்டில் இருந்தேன். அதிகாலை எண்ணைக் குளியல், பலகாரம், லஷ்மி வெடி அமளி துமளியெல்லாம் முடிந்ததும் மதியம் திரையரங்கு ஒன்றுக்குச் சென்றோம் (பெயர் நினைவிலில்லை). வழக்கம்போல் தீபாவளி ரிலீஸ் படங்களின் சுவரொட்டிகள் எங்கெங்கும். அவற்றில் தனித்து நின்றது இரண்டு. ஒன்று கருப்பு வெள்ளை. முழுக்கைச் சட்டையை புஜம் வரை மடக்கிவைத்து, அயர்ன் செய்த Relaxed Fit பேண்ட்டில் இன் செய்து, நமக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கமல் நிற்பார். சுவரொட்டியின் வடிவமே வித்தியாசமாக ஆளுயர செவ்வகம் (நான் சிரித்தால் தீபாவளி). இன்னொன்றில் வட இந்திய பாணி தலைப்பாகை கட்டியிருக்கும் கமலின் க்ளோஸப் முகம் முழுதும் பல வண்ணங்களைச் சிதறியடித்தாற்போல் ( அந்தி மழை மேகம்!) வண்ண மயமாகவிருந்தது. தமிழ்ச் சினிமா சுவரொட்டிகளில் அவை தனித்து நின்றவை. பிற்பாடு கோபுர வாசலிலே படத்திற்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் வெளியே - எதிரே வரிசையாக கட் அவுட் வைத்திருப்பார்கள் - தபால் தலையின் கத்தரித்த விளிம்புகளின் டிசைனில் போஸ்டர் அடித்திருந்தார்கள். இரண்டிற்கும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்று நினைக்கிறேன்.


நாயகன் படம் ஆரம்பித்து டைட்டில் ஓடிக்கொண்டிருக்கையில் ‘இசை’ என்று போட்டு ‘இளையராஜா’ என்றும் போட்டு அடைப்புக்குறிக்குள் “(400-வது படம்)” என்று போட்டிருந்தார்கள். ஒரு கணம் புல்லரித்தது நினைவிலிருக்கிறது. அந்தப் படத்தின் பின்னணியிசையும் பாடல்களும் நம்மை முப்பது வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும். 
சென்ற வாரயிறுதியில் யூட்யூபில் தாரை தப்பட்டை பாடல்களைக் கேட்க உட்கார்ந்தேன். இளையராஜாவின் 1000-வது படம் என்று டைட்டிலுடன் அந்த ஆல்பம் தொடங்கியது. ஆயிரம் படங்கள் என்று சுலபமாகப் படித்துவிடுகிறோம். அதற்குப் பின் அந்த இசைக் கலைஞனின் நாற்பதாண்டு கால உழைப்பு அடங்கியிருக்கிறது! 


அபரிமிதமாக ஒன்று கிடைக்கும்போது அதன் மதிப்பு தெரியாத ஜென்மங்களாகத்தான் நாம் இருக்கிறோம். அதனால்தான் வாய் கூசாமல் ‘மைக்கேல் ஜாக்ஸன் பாடல்கள் மொத்தமே ஐம்பதுக்குள்தான் இருக்கும். ஆனால்….’ என்று இளையராஜாவின் படைப்புகளின் எண்ணிக்கையை மட்டும் ஒப்பிட்டுச் சிறுமை செய்ய முடிகிறது. இளையராஜா இனிமேல் சினிமாவை விட்டுவிட்டு என்னென்ன செய்யவேண்டும் என்று பட்டியல் போட முடிகிறது. இவர்களின் தலையாய பிரச்சினையே எல்லாவற்றையும் மேற்கத்தியக் கண்ணாடிகள் போட்டுக்கொண்டு பார்ப்பதும், எல்லாவற்றையும் மேற்கத்திய அளவுகோல்களைக் கொண்டே அளப்பதும்தான். 
நல்லவேளை ‘ஆயிரம் படங்கள் இசையமைத்து என்ன பிரயோஜனம்? பிரிட்னி ஸ்பியர்ஸ் கிஸ் மி பேபி என்றே ஒரே ஆல்பத்தில் போன உயரத்தை ராஜாவால் தொட முடியாது. அவ்வளவு ஏன்! ஒய் திஸ் கொலைவெறிக்கு யூட்யூபில் கிடைத்த ஹிட்டில் பத்தில் ஒரு பங்குகூட ராஜாவின் எந்தப் பாடலுக்கும் கிடைக்கவில்லை!’ என்று சொல்லாமல் விட்டார்கள்! 
தாரை தப்பட்டை - நொறுக்கியிருக்கிறார் ராஜா! 

No comments: