Sunday, January 15, 2006

கசக்கும் கணுவை விடுத்து இனிக்கும் கரும்பைச் சுவைப்போம்!


உதடோரங்கள் எரிய எரியக் கரும்பு தின்ற நினைவுகள் நிழலாடுகின்றன. வாழ்க்கைப் பயணத்தில் கடந்து போன இனிய நினைவுகளைக் கரும்பு போல அசைபோடுவதுதான் இப்போதைய நிலையில் முடிகிறது. ஸ்ரீரங்கத்தில் இருந்தால் வாசல் படிக்கட்டில் கரும்போடு அமர்ந்து உமிழ்நீர் சுரக்கக் கடித்துத் தின்றிருப்பேன்.

பொங்கல் நினைவுகளை வைத்து நீண்ட நாள் முன்பு எழுதியது.
http://agaramuthala.blogspot.com/2005/01/blog-post.html

மறுபடி படித்துப் பார்த்துக்கொண்டேன் - வயதானால் நினைவுகள் மழுங்கிவிடும் என்கிறார்கள். முடிந்த வரை பதிவு செய்து வைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

சீராகக் குறுக்கே கோடுகளோடு பகுதி பகுதியாக இருக்கும் கரும்பில் தொக்கிக்கொண்டு தெரியும் கணுக்கள் வலுவானவை. கடித்துத் துப்புவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். கசப்பாகவும் இருக்கும். நம் ஒவ்வொருவரின் மனதிலும் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் சேரும் கசப்பான அனுபவங்கள் இக்கணுக்கள் போல வலுவாகவும் நீக்க முடியாமலும் சேர்ந்து போயிருக்கும். இனியவற்றைக் கிடைக்கச் செய்யாமல் தடுத்து நிறுத்துவன இக்கசப்புக் கணுக்களே.


இம்மாதிரி கணுக்களை பிரயத்தனப்பட்டாவது மனதிலிருந்து தூக்கியெறிந்து இனிய சிந்தனைகளோடு இனியவற்றையே எப்போதும் நினைத்து வாழ்வையும் இனிதாக அமைத்துக் கொள்வோம்.

நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். வளம் பெருகட்டும். வாழ்வு உயரட்டும். தீமைகள் விலகி நன்மைகள் நடக்கட்டும்.


வேற்றுமையை மனதிலிருந்து தொலைத்து ஒற்றுமையும் அன்பையும் சக மனிதனிடத்திலும், அனைத்து உயிர்களிடமும் பாராட்டும் மனப்பக்குவத்தை இறைவன் எல்லாருக்கும் அருள்வாராக.


அன்புடன்
சுந்தர்.

1 comment:

வானம்பாடி said...

சுந்தர், அந்த கணுக்களை கடித்துத் துப்பி கரும்பை சுவைக்கும் போது அதன் இனிமை இன்னும் கூடுவதாகத் தோன்றும் எனக்கு.
பொங்கல் வாழ்த்துக்கள்!