Wednesday, October 07, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 7


முந்தைய பாகம்: மூன்று வருடங்களுக்குப் பிறகு # 6

'ஒரு நிமிடம் தமிழில் ஆங்கிலம் கலக்காமல் பேசினால் பரிசு' என்று அறிவிப்பு. சீனாவில் தமிழ் கற்றுக் கொள்ளும் சீனர்களுக்கா? இல்லை வெளிநாட்டு வாழ் தமிழர்களின் 'It's weird' குழந்தைகளுக்கா? இல்லை ஐயா - தமிழ்நாட்டின் சென்னை மாநகரத்தில் வணிகவளாகம் ஒன்றில் 'மறத் தமிழர்களை' அழைத்து இப்படிச் சவால் விட்டவர் பிருத்விராஜ் - தொலைக்காட்சிச் சானல் ஒன்றுக்காக. இம்மாதிரி போட்டி வைப்பதற்காகவே தமிழர்கள் நியாயமாக அவமானத்தில் தூக்கில் தொங்கியிருக்கவேண்டும். ஆனால் நாம்தான் மறத்தமிழர்களாயிற்றே. முப்பத்திரண்டு பற்களும் தெரியக் கலந்து கொண்டார்கள். பிருத்வி 'எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசுங்கள் - நீங்கள் பார்க்கும் வேலையைப் பற்றிக்கூட பேசுங்கள்' என்று உசுப்பேற்றியும் ஒவ்வொருவராக வந்து சில நொடிகளில் குப்புற விழுந்து மீசையில் மண் ஒட்டவில்லை என்று விலகினார்கள். ஒருவரிடம் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு 'Marketing' என்று சொன்னார். 'சரி ஒரு நிமிடம் வேண்டாம். Marketing-க்கு தமிழில் என்ன என்று சொல்லிப் பரிசை வெல்லுங்கள்' என்று பிருத்வி கேட்டதற்கு அந்த நபர் பேச்சற்று பேய் முழி முழித்தார் பாருங்கள். இன்னொருவர் 'நான் பேசறேன்' என்று முன்வந்து ஆரம்பித்தார் 'வண்டிய ட்ரைவ் பண்ணும்போது சிக்னல்லாம் பாத்து லெஃப்ட் ரைட் டர்ன் பண்ணும்போது இண்டிகேட்டர் போட்டு, சேஃப்டியா டிரைவ் பண்ணனும்'. அவர் பேசுவது நல்ல தமிழ்தான் என்று சத்தியம் செய்து துண்டுபோட்டு தாண்டுவார் போலிருந்தது. எனக்கென்னவோ இத்தலைமுறைக்கு 'ஆங்கிலம் கலக்கா நல்ல தமிழ்' என்பது எது என்பதே தெரியாது என்று நினைக்கிறேன். பிறந்தது முதல் பெற்றோரிடமிருந்தும் மற்றோரிடமிருந்தும் ஊடகங்கள் வழியாகவும் எங்கெங்கும் எப்போதும் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழையேக் கேட்டுப் பேசிப் பழகி வளர்ந்த தலைமுறைக்கு அவர்கள் பேசுவது நல்ல தமிழ்தான் என்று நம்ப ஆயிரம் காரணங்கள் உண்டு.

இறுதிவரை ஒரு நிமிடம் யாரும் தமிழ் பேசமுடியாததால் 35 வினாடிகள் பேசிய ஒருவருக்கு ப்ருத்வி பரிசைக் கொடுத்தார்! இப்போதைக்கு தமிழ்நாட்டில் தீப்பொறி ஆறுமுகம்தான் தமிழை ஓயாது வளர்த்துக்கொண்டிருப்பவர் என்று தோன்றியது. இன்னும் அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தால் அணிந்திருந்த பர்முடா, முண்டா பனியனுடன் தெருவில் இறங்கி ஓடிவிடுவேன் என்று தோன்றவே வேறு அலைவரிசைக்கு மாற்றினேன். கணவன், மனைவி கலந்து கொள்ளும் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சி. அட்டைத் தூண்களுக்குள் மறைந்திருக்கும் கணவன்மார்களின் கண்களை மட்டும் பார்த்து மனைவி அவரது கணவனைக் கண்டுபிடிக்கவேண்டும். அந்தப் பெண்மணி தூண் தூணாகச் சென்று கண்களை உற்றுப் பார்த்துத் தேட எனக்கு இரத்த அழுத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. இம்மாதிரி நிகழ்ச்சிகளின் ஆதார நோக்கம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். கணவன் மனைவி இருவரும் மனமொருமித்து இனிய இல்லறம் நடத்துவதை இம்மாதிரிப் பந்தயங்களில் ஜெயித்துத்தான் நிரூபிக்கவேண்டுமா என்று தோன்றியது. தொலைக்காட்சியில் தோன்றி “நான் டிவில வர்றேன் பாரு“ என்ற பெருமையடித்துக்கொள்ளுதல் தவிர வேறு எந்தக் காரணங்களும் தோன்றவில்லை. சுஜாதா அடிக்கடி குறிப்பிட்ட 15 நிமிடப் புகழுக்காக என்னவெல்லாம் செய்யத் துணிகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. மேலைநாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அப்படியே தமிழ் வடிவத்தில் எடுத்து ஒளிபரப்புகிறார்கள். நளதமயந்தி படத்தில் மாதவனும் கீது மோகன்தாஸும் அவரவர் வாழ்க்கை விவரங்களை உருப்போட்டுக்கொண்டு தயார் செய்வது போல, இந்நிகழ்ச்சிக்கென தம்பதியர்கள் மிகவும் மெனக்கெடுகிறார்கள் போலருக்கிறது. ஜெயித்தவர்கள் பரவாயில்லை. போட்டியில் தவறான விடை சொல்லித் தோற்ற தம்பதியரின் மனதில் எம்மாதிரி சிந்தனைகள் தோன்றியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில் கவலையாக இருந்தது. போட்டிக்குப் பின்னேயான அவர்களது நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்று யோசனை ஓடியது.

முன்பெல்லாம் ஒளிந்திருந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எஃப் டிவி சானலையெல்லாம் இப்போது யாரும் சீண்டுவதில்லை போல. அதைவிடப் பிரமாதமாகவே சினிமாக் காட்சிகளிலும் பாடல்களிலும் நங்கைகள் நடமாடுகிறார்களென்பதால் யாரும் இரவு கண்விழித்துச் சிரமப்படத் தேவையில்லை. தொலைக்காட்சிகளில் கவர்ச்சி பொங்கி வழிய குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவசரமாக பாத்ரூம் போகவேண்டியிருப்பது போல தொலைக்காட்சிகளின் இளைய அறிவிப்பாளர்கள் நிமிடத்திற்கு நூறு வார்த்தைகள் (தமிழாங்கிலம் ஹையர்) பேசுகிறார்கள். சமீபத்திய பாடல்கள் எல்லாச் சானல்களிலும் ஓடிக்கொண்டே இருக்க வாண்டுகள் நாக்க முக்க போன்ற இலக்கியத் தேனொழுகும் பாடல்களை பாடியாடுகிறார்கள். இப்படி ஒரே தாம் தூமென்று பாடல்களின் புழுக்கம் தாங்க முடியாது மூச்சு திணறுகையில் நம்மை ஆசுவாசப் படுத்த சில சமயம் தாம் தூமின் 'அன்பே என் அன்பே' தென்றலாக ஒலித்தது.

சுப்ரமணியபுரம் படம் அசுர ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை - ஏனோ பார்க்கத் தோன்றவில்லை. சன் டிவியின் டாப் டென் ஜேம்ஸ் வசந்தன் திடீரென்று எதிர்பார்க்காத மூலையிலிருந்து சுப்ரமணியபுரத்தில் புயலாக வெளிவந்ததை எதிர்பார்க்கவேயில்லை. நாயகன் ஜெய் மற்றொரு ஆச்சரியம். நாயகி இன்னொரு ஆச்சரியம். மற்ற பாடல்கள் எல்லாவற்றையும் மழுங்கடித்து 'கண்கள் இரண்டால்' பாடல் மட்டும் லட்சார்ச்சனை மாதிரி எல்லாச் சானல்களிலும் ஓடிக்கொண்டேயிருந்தது. அப்பாடல் ஒரு காட்சிப்படுத்தப்பட்ட அழகிய கவிதை! பாடலின்போது ஒரு காட்சி - வண்டியில் அண்ணன் பின் அமர்ந்து நாயகி நாயகனைப் பார்த்துக்கொண்டே வர, அண்ணன் இடம் வந்ததும் வண்டியை நிறுத்துகிறான். வேகம் மட்டுப்பட்டு வண்டி நிறுத்தப்பட்ட அந்தத் தருணத்தில் சட்டென்று அவள் விழிகள் அண்ணனின் முதுகை ஏறிட்டுப் பார்க்க, ஜாக்கிரதை உணர்வுடன் வண்டியிலிருந்து இறங்கும் அந்த ஒரு மைக்ரோ நொடிக்காட்சி மட்டுமே ஆயிரம் கதை சொல்கிறது. என் இரண்டு குழந்தைகளும் அப்பாடலில் லயித்து கிட்டத்தட்ட அடிமையாகவே ஆகிவிட்டார்கள். பாடலில் நாயகி, நாயகன் இருவரின் விழிமொழிவழி உரையாடல்களின் சுவாரஸ்யமும், ஹாஸ்யமும் வயது வித்தியாசமில்லாமல் எல்லாரையும் எளிதில் கட்டிப்போட்டுவிடுகிறது. இப்படிப் பாலைவனச் சோலையாக அவ்வப்போது படங்கள் வந்து தமிழ்ச்சினிமாவின் மானத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. புது வரவுகளுக்கு நன்றி என்று எழுதி முடிக்குமுன்பே மாரீஸ் அரங்கங்களில் பிரம்மாண்டமான ஜே.கே.ரித்தீஷின் நாயகன் படக் கட்-அவுட்டுகள் மிரட்டின! அவரது பேட்டியொன்றை சில வாரங்கள் முன்பு குமுதம் ஆன் லைனில் பார்த்த நினைவு. அவருக்கு முன்பு தமிழ்த் திரையுலகின் விடிவெள்ளி அடைமொழியுடன் சாம் ஆண்டர்ஸன் என்ற நடிகரின் சில காட்சிகளை யூட்யூபில் பார்த்து மிரண்டு போயிருந்தேன். காசுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல நல்ல சினிமாக்களை மட்டுமே கொண்டு திரையுலகம் இருக்க முடியாது என்பதை சுப்ரமணியபுரம், நாயகன், சாம் ஆண்டர்ஸன் போன்றோர்கள் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்க!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் தாண்டி முக்கொம்பு செல்லும் சாலையில் தென்னூர் செல்ல பாலமொன்று இருக்கிறது. அதன் கீழே முன்பு தண்ணீர் தேக்கிய நினைவு - ஏரியோ என்னவோ. இப்போது பாலத்தின் இரு பக்கமும் ஏராளமான கட்டிடங்கள். ஆங்காங்கே தண்ணீர்க் குட்டைகள் கொசுக்களையும் பன்றிகளையும் வாழ வைக்க மரக்கடையிலிருந்து குழந்தைகள் மருத்துவமனை வரை எல்லாம் நிறைந்திருக்கின்றன. பாலத்தின் மீது நின்று பார்க்க, St Mary's கோபுரமும் மலைக்கோட்டையும் மேகமாகத் தெரிய வெயில் எப்போதும் சுட்டெரித்துக்கொண்டு செப்டம்பர் போலவே இல்லை. முன்பெல்லாம் தென்னூர் சாலை காற்று வாங்கிக்கொண்டிருக்க பக்கத்து தில்லை நகர்ச் சாலை முழி பிதுங்கிக்கொண்டிருக்கும். இப்போது தில்லை நகர்ச்சாலைகளில் வாகனங்கள் சர்க்கஸின் மரணக்கிணற்றில் ஓடுவது போல ஓட, தென்னூர் சாலையில் பெரிய கட்டிடங்கள் முளைத்து புது அடையாறு ஆனந்த பவன் கடையில் மக்களும், ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். 'அண்ணே டீ' என்று மூன்று வருடங்கள் முன்பு இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிக் குடித்த பெட்டிக்கடைகள் எதையும் காணவில்லை. அகண்ட சாலையாக இருந்தாலும் வழக்கம்போல இருபுறமும் அடங்காத ஆக்கிரமிப்பாலும், வரையறையற்ற வாகன நிறுத்தங்களாலும், ஒரு வழிப் பாதையில் எல்லா வாகனங்களும் பறந்துகொண்டிருந்தன. சாலையின் முடிவில் தலைக்கு மேல் மேம்பாலம் ஓட மாகாத்மா காந்திப் பள்ளி. புது வர்ணமடித்து ஒவ்வொரு மாடியிலும் குழந்தைகள் விழாமலிருக்க இரும்புச் சட்டங்கள் போட்டிருக்கிறார்கள். நான்கைந்து மாடிகள் - ஆனால் லிப்ட் இருப்பது போலத் தெரியவில்லை. தேனடைபோல ஒவ்வொரு வகுப்பிலும் சீருடைக் குழந்தைகளும் சிரிக்காத ஆசிரியர்களும். இடைவேளை போல - வயவயவென்று குரல்களின் இரைச்சல் காற்றில் பரவியிருக்க, பள்ளியைத் தாண்டிச் சென்றால், ஓடும் மிக்ஸியை நிறுத்தியது போல திடீர் நிசப்தமாக அந்தச் சாலை புதிதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எவ்வித இரைச்சலும் நெரிசலும் இல்லாமல் உண்மையாகவே நல்ல காற்று முகத்தை வருடியது.

மறுநாள் குடும்ப சகிதமாக கால் டாக்ஸியை அமர்த்திக்கொண்டு கொள்ளிடம் பாலம், கிராமங்கள், வண்டிச்சாலை, இருபுறம் பசேலென வயல்வெளிகள், அம்மணக் குழந்தைகள், மாடுகள், மாவுமில் வெள்ளை மனிதர்கள், மசாலா வாசனை, விவசாயிகள், தூக்குச்சட்டிகள் எல்லாவற்றையும் கடந்து அழகிய மணவாளம் என்ற சிறு கிராமத்தை விட்டு விலகி நிற்கும் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் என்ற பெயர்ப்பலகை தாங்கிய (உபயம்: s. ராமசாமி செட்டியார் மளிகை, மண்ணச்ச நல்லூர்) கோவிலுக்குச் சென்றோம். திருச்சியின் களேபர இரைச்சல் வாழ்க்கையிலிருந்து விலகி விண்வெளியில் எறியப்பட்டதுபோல அப்படியொரு பேரமைதி நிரம்பிய இடம். சுற்றுவட்டத்தில் வீடுகள் எதுவும் இல்லாது ஒதுக்குப்புறத்தில் குடியிருக்கிறார் அதிர்ஷ்டக்காரர் பெருமாள். அவரைப் போல மற்ற கடவுள்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால் கூட்டம், குப்பை, இரைச்சல், அரசியல், ஆக்கிரமிப்பு இவற்றிலிருந்து தப்பித்து கண்காணாத இடங்களுக்கு ஓடிவிடத் தயாராகவே இருப்பார்கள்!



கோவில் அர்ச்சகரிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்திருந்ததால் அவர் வந்து பூஜை, அலங்காரங்களைத் தொடங்க நான் மெதுவாக கோவில் சுற்றுச்சுவரைச் சுற்றி வந்தேன். கோவிலைப் பார்த்து நின்றால் வலப்புறம் கோவிலை ஒட்டியே ஒரு சிதிலமடைந்த செங்கற் கட்டிடம் ஒன்று அனாதையாக நின்றிருக்க ஏராளமான செடிகள் எங்கும் முளைத்திருந்தன. அதை நோக்கி நடக்க நடக்க அந்தச் சிதிலங்களையும் சிதறியிருந்த செங்கற்களையும் பார்க்கும்போது என்னுள் எழுந்த உணர்வுகளை விவரிக்க இயலாது. பொதுவாகவே வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்க நேரிடும்போதும், அவற்றைத் தொடும்போதும், அவ்விடத்தில் உலவும்போதும் விவரிக்கவியலாத எண்ணங்கள் என்னைச் சூழும். அதே உணர்வு அப்போதும் எழுந்தது. மெல்ல அதைச் சுற்றி வந்தேன். இங்கே ஒரு காலத்தில் ஒரு கோவில் இருந்திருக்கிறது. மனிதர்கள் இதைச் சுற்றி வாழ்ந்திருக்கிறார்கள். உள்ளே ஒரு கடவுள் நிறுவப்பட்டிருந்தார். பூஜைகள் நடந்திருக்கின்றன. கருவறையை அடையாளம் காண முடிந்தது. விதானம் இடிந்திருந்தது. கருவறையின் சுவர் இடிந்திருந்தால் பின்பக்கமாக நின்று அதைப் பார்க்க முடிந்தது. முன்புற வாசல் செங்கற்களால் அடைக்கப்பட்டிருந்தது. முழுமையான செங்கல் கட்டிடம் - ஒரு பாறை கூட இல்லாது - அதிசயமாக இருந்தது.

பூஜை முடியக் காத்திருந்து வெளியே வந்த அந்த வயதான அர்ச்சகரிடம் செங்கற் கோவிலைப் பற்றி விசாரித்தேன். எக்ஸ்ட்ரா புளியோதரை, சுண்டல் கேட்டவர்களையே சந்தித்துப் பழகியிருப்பார் போல, நான் விசாரித்ததும் சட்டென்று என்னை ஏறிட்டு நோக்கிவிட்டு கண்களை மூடிக்கொண்டார். 'அதுவா.. 12ஓ 13ஓ நூற்றாண்டோ, சரியா தெரியலை. பெருமாள் அங்கதான் இருந்தார். அதான் ஒரிஜினல் கோவில். இது அப்புறம் கட்டினது. அப்போ சுல்தான் இருந்தாரில்லையா. வாத்தலைலருந்து சென்னைவரை சுல்தானோட சேனைகள் கோவில் கோவிலா போய் கொள்ளையடிச்சுட்டு (அக்கம் பக்கம் ஒரு முறை பார்த்துக்கொண்டார்) கோவில்களையெல்லாம் இடிச்சதுல இதுவும் இடிபட்டுப் போச்சு. ஆனா மூலவரை முன்னாடியே வெளியே எடுத்துட்டுப் போய் ரகசியமா வச்சிருந்ததால அவருக்கு ஒண்ணும் ஆகலை. அதுக்கப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு இப்ப நாம நிக்கற இந்தக் கோவில் எழுந்தது. மூலவரைக் கொண்டு திரும்ப இங்கே வச்சாச்சு. அது அப்படியே இருக்கு - அடையாளமா' என்று சொல்லிவிட்டு காத்திராமல் வெளியேறி அவரது டிவிஎஸ் 50-ஐ எடுத்துக்கொண்டு விரைந்து சென்றுவிட்டார்.

அப்போது பத்து பதினைந்து வயதிருக்கும். குளிக்காது, கண்களில் தூக்கத்துடன், பீடி வாயில் புகைய, இறுக்கமான சட்டையும் பாதம் புரளும் லுங்கி ஒன்றையும் கட்டிக்கொண்டு அந்தப் பையன் உள்ளே வநதான். கையில் இருந்த கைப்பேசியில் குசேலன் பாட்டு சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது. மெதுவாக நடந்து உள்பிரகாரத்தில் இருந்த தண்ணீர்க்குழாயை நெருங்கி லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு, பீடியை எறிந்துவிட்டு, காறித் துப்பிவிட்டு, நீரைக் குடித்தான். பிறகு செங்கல் கோபுரத்திற்கும் நல்ல கோபுரத்திற்கும் இடைப்பட்ட சுவரில் ஏறி அமர்ந்து இன்னொரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். இப்போது வேறொரு புரியாத பாட்டு சத்தமாக ஒலிக்கத் துவங்க, நான் வெளியேறி டாக்ஸியில் அமர்ந்து (மனைவி: எவ்வளவு நேரம் காத்திருக்கறது?) கதவை அறைந்து மூடினேன்.

நன்றி: தென்றல்.காம்
***
இன்னும் வரும்...

No comments: