Tuesday, May 25, 2010

FICCI - கமல்ஹாஸன் - தமிழுணர்வாளர்கள்


கொழும்புவில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் FICCI பங்கெடுக்கக்கூடாது என்று கமல்ஹாஸன் அலுவலகம் முன்பு “தமிழுணர்வாளர்கள்” குழுமி ஆர்ப்பாட்டம் நடத்தினார்களாம். அதோடு அவர்கள் வைத்த கோரிக்கைகள்.

1. FICCI அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து கமல் விலகவேண்டும்
2. பத்மஸ்ரீ பட்டத்தைத் திரும்பக் கொடுக்கவேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரண்டையும் செய்தால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் வந்துவிடும் போல. போராட்டம் நடத்தியவர்களின், அவர்களைப் பின்னணியில் இருந்து உந்தியவர்களின் அறிவை மெச்சிக்கொள்ள வேண்டியதுதான்.

கலை, விளையாட்டு போன்றவை எல்லைகளற்றவை என்றெல்லாம் பீத்திக்கொண்டது ஒரு காலம். அரசியல் அவற்றில் கலந்து நாற்றமடிக்கத் துவங்கி நீண்ட நாட்களாகிறதுதான். இம்மாதிரி தமிழுணர்வு போராட்டங்களால் ஒரு மயிற்கற்றையைக் கூட பிடுங்க முடியாது என்று நன்கு தெரிந்தும் இவர்கள் போராடுவது பதினைந்து நிமிட ஊடகப் புகழுக்காகத்தான் என்று தோன்றுகிறது.

இதே FICCI க்கு வேறு யாராவது எந்த மாநிலத்தவராவது தலைவராக இருந்திருந்தால் அவர்கள் வீட்டு முன்பு சென்று போராடுவார்களா? மாட்டார்கள். அதாவது தமிழன் கமல் அந்த அமைப்புக்குத் தலைவராக இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அவ்வமைப்பு பங்கேற்கக்கூடாது. ஆனால் வேறு மொழி பேசுவோர் தலைவராக இருந்தால் ஒன்றும் போராட மாட்டோம். என்னே லாஜிக்!!! அதே போல பிரச்சினைக்குச் சற்றும் சம்பந்தமேயில்லாத பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பிக் கொடுக்கவேண்டுமாம்! ஏன் தமிழக முதல்வரிடம் பதவியைத் துறக்கச் சொல்லவேண்டியதுதானே! அல்லது இவர்களே சூட்டிய “தானைத் தலைவர்” “புரட்சித் தலைவி” போன்ற பட்டங்களை திருப்பி எடுத்துக்கொள்கிறோம் என்று அறிக்கை விட வேண்டியதுதானே? விட்டால் வீட்டுக்கு ஆட்டோ வரும் என்ற பயம்! கமல் ஹாஸன் நிதானப் போக்கைக் கடைப்பிடிப்பவர். ஆகவே அவர்மீது கல்லெறிந்து பார்க்கலாம்.

இம்மாதிரி விழா புறக்கணிப்புகளால் புண்ணைத்தான் சொறிந்து சுகம்காண முடியுமே ஒழிய விழா நடக்காமலிருக்கப் போவதில்லை.

உண்மையிலேயே அவர்கள் இலங்கையரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தால் மாநிலத்தில் ஆட்சியிலும் மத்தியில் செல்வாக்காகவும் இருக்கும் “தமிழினத் தலைவர்” வீட்டு முன்பு சென்று போராடி இலங்கையுடன் எவ்வித வர்த்தக உறவும் தமிழ்நாடோ இந்தியாவோ கொள்ளக்கூடாது என்று பொருளாதாரத் தடை கொண்டுவரச் சொல்லி போராட வேண்டும். செய்வார்களா? மாட்டார்கள்.

இலங்கைக்கு இங்கிருந்து ஏற்றுமதியையோ, அங்கிருந்து இறக்குமதியாவதையோ நிறுத்தப் போராடுவார்களா? மாட்டார்கள். கமலிடம் போய் சொறிவது ஏன்?

பதவியை இறுகப் பிடித்தக்கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாராமுகம் காட்டும் அரசியல்வாதிகளை எதிர்த்துப் போராடாமல் கலைஞர்கள் வீட்டு முன்பு போராடுவது பைத்த்தியக்காரத்தனம்.

இலங்கைத் தமிழர்களை விடுங்கள். இலங்கைக் கடற்படை எத்தனை தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்களைத் தாக்கிக் கொன்றார்கள்! இன்னும் மீனவர்கள் அடிபடுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். அப்போது எங்கே போயிற்று “தமிழுணர்வு”? இதை எதிர்த்து முதலமைச்சர் வீட்டு முன்பு போராடினார்களா? அவர் பதவி விலக வேண்டும் என்று கோஷம் போட்டார்களா? சொந்த மக்கள் பற்றியே உணர்வில்லாதவர்கள்  அண்டை நாட்டுப் பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது படு கேவலம்.

புல்லுருவித் தலைவர்கள் இருக்கும் வரை, அவர்களை ஆட்சியில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் மட மக்கள் இருக்கும் வரை, இந்தியா வல்லரசல்ல - வெறும் புல்லரசுதான்! இலங்கை என்ன - பிஜி தீவு கூட இந்திய மீனவர்களைக் கொல்லும். இல்லாவிட்டால் படகில் தீவிரவாதிகளை அனுப்பி கொலைவெறியாட்டத்தை நடத்தும். நாம் அகிம்சை பேசிக்கொண்டு கொன்று குவித்த கொலையாளிகளை கோர்ட்டில் நிறுத்தி கோடிக்கணக்கில் செலவு செய்து தண்டனை கொடுத்து உலகில் நம் “பெருமையை” நிலை நாட்டிக்கொள்வோம். பிறகு கண்டன அறிக்கைகள், “கடுமையான” அறிக்கைகளை அனுதினமும் விட்டுக்கொண்டிருப்போம். தமிழர்கள்/இந்தியர்கள் கேட்பாரற்று தினம் சாவார்கள். வாழ்க பாரதம்!

இதற்கு முன்பு வேறு சில பிரச்சினைகளுக்கு நடந்த போராட்டங்களில் மற்ற நடிகர்கள் மனோகரா பாணியில் வசனம் பேசி பிரச்சினைகளைப் பெரிதாக்கியதோடு சரி. கமல் அவற்றில் நிதானப் போக்கைக் கையாண்டு பேசியது அனைவரும் அறிந்ததே. இப்போது இந்த
“மாபெரும் தமிழுணர்வுப் போராட்டத்தையும்” அவருக்குயுரித்தான நிதானத்தோடு கையாண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை கீழே!

"தமிழ் உணர்வாளர்களே...

மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால்  கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஃபிக்கி என்ற அமைப்பு திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் துவங்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டறக் கலந்ததாகும். 

உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐஃபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐஃபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை. 

என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள்  கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காகிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர். 

அவை நான் தென்னக FICCI தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி, எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின. 

தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், FICCI தலைமை, FICCI entertainment தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து IIFA விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர். 

மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது FICCI போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியைச் செய்துள்ளேன். மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன்.

FICCI விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் FICCI கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக FICCI தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்!" 


-கமல் ஹாஸன்






ஆக “போராட்டம்“ வெற்றியடைந்துவிட்டது. இனி இலங்கைத் தமிழர்களுக்கு எல்லாம் சுபமே! வாழ்க வளமுடன்!

***

No comments: