Saturday, February 08, 2014

பகல் நேரத் தெரு


குறுகலான தெருக்கள். அடுக்கடுக்காய் அகலம் குறைந்த நீஈஈஈஈளமான கொண்ட வீடுகள். பொதுச்சுவர். ஒரு வீட்டு மொட்டை மாடிக்குப் போனால் மொத்த தெருவையும் மொட்டை மாடிகள் வழியாகவே கடந்துவிடலாம்.

திண்ணையின் தட்டிக் கதவிலிருந்து கொல்லைப்புறக் கதவுவரை சேர்த்தால் அதிகப்பட்சமாக மூன்று அல்லது நான்கு கதவுகள் ஒரே நேர்க்கோட்டில். வாசலில் நின்று பார்த்தால் கொல்லைப்புறக் கிணறு தெரியும். எல்லாக் கதவுகளும் பகல்வேளையில் திறந்தேயிருக்கும். மாலையில் கொல்லைப்புறக் கதவு மட்டும் சாத்தப் படும். வீட்டின் கடைசி நபர் உறங்கச் செல்கையில் தட்டிக்கதவு மூடப்படும். பூட்டு என்ற ஒன்றைப் பார்த்திராத கதவுகள். வீட்டில் எங்கு இருந்தாலும் வாசலில் யாராவது வந்தால் லேசாக எட்டிப் பார்த்தாலே போதுமானது. வாசலில் நின்று பார்க்கும்போது வாசலும் கொல்லைப்புறமும் பளீரென்று வெயிலுடன் இருக்க எட்டிப்பார்க்கும் வீட்டுக்காரர்களின் தலை, தோள்கள் சில்லவுட்டில் தெரியும். வற்றாயிருப்பில் நான் வசித்த வீடுகளின் அமைப்பு பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது. 

மதிய வேளைகளில் காலம் நின்றது போல தெருக்களும் வீடுகளும் இயக்கமின்றி காட்சியளிக்கும். உண்ட களைப்பில் திண்ணையில் படுத்திருக்கும் வயசாளிகள். அதிகாலையிலிருந்து வீட்டு வேலை செய்து உழைத்துக் களைத்துப் போன இல்லத்தரசிகள் வீட்டினுள் சிறுபலகையை தலையணையாய் வைத்து கண்ணயர்ந்திருப்பார்கள். பெரியவர்கள் வேலையிடங்களில். பிள்ளைகள் பள்ளிகளில். மூன்றாவது வீட்டில் ஆடிக்கொண்டிருக்கும் ஊஞ்சலின் கிறீச் சத்தம் காற்றில். பூனைக்குட்டி அடுக்களையில். தொழுவத்தில் நுரை ததும்ப அசைபோடும் மாடு. தெருவில் மொத்த வெயிலையும் முதுகில் வாங்கிக்கொள்ளும் உத்தேசத்துடன் நகராதிருக்கும் எருமையொன்று. 

எப்போவது ஒரு சமயம் திறந்திருக்கும் கொல்லைப்புறக் கதவு வழியாக இலக்கு தப்பி வந்த தெருநாய் ஒன்று நுழைந்து சாவதானமாக வாசற் கதவு வழியாக வெளியேறிச் செல்ல படுத்திருந்தவர்கள் எல்லாரும் அரக்கப் பறக்க எழுந்து வீறிடுவார்கள். திண்ணையில் தாத்தா “அதோட காலை ஒடி” என்று கத்த, பாட்டி தூக்கம் கலைந்து எழுந்து என்னவென்று சுதாரிப்பதற்குள் அந்த நாய் ஒரு கணம் தயங்கி நின்று பிறகு தெருவின் கோடிக்குச் சென்று காணாமல் போயிருக்கும். அமைதி கலைந்த அந்தச் சில நிமிடங்கள் சுவாரஸ்யமானவை. மூன்று மணிக்கு அலுமினிய கேன் ஒன்றை அணைத்துக் கொண்டு இன்னொரு கையால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு பால்காரர் வந்துவிடுவார். மறுபடியும் உறக்கம் பிடிக்காமல் பெண்மணிகள் பில்டர் காஃபி போட ஆயத்தமாவார்கள். 

பிற்பகல் சாயும் வேளையில் தெரு உயிர் பெற்று எழும்.

***

Thursday, February 06, 2014

குளியல்


பதின்வயது வரை வீட்டில் குளித்ததாய்ச் சரித்திரமே கிடையாது - உடனே மூக்கைப் பொத்தாதீங்கய்யா. 80-களில் குளியல் என்றாலே விவசாயக் கிணறு (அல்லது அதன் பம்ப்பு செட்டு), நதி, குளம், வாய்க்கால் என்றுதான் குளியலிடங்கள். இவையெதுவும் இல்லாத ஊர்களில் வாழ்ந்த(வாழ்வ)தில்லை! அதிலும் பம்ப்பு செட்டு ஓடும்போது தொட்டியில் இறங்கிக் கொஞ்சம் குளித்துவிட்டு தலையை மெதுவாய் குழாயருகே கொண்டுபோனால் கழுத்தை முறிக்கும் வேகத்துடன் தண்ணீர் தலையில் அறையும். தலையின் அழுக்கென்ன, மயிரையே பிடுங்கும் வேகம்! 

அதிகாலையில் கழுத்தில் சிவப்புத் துண்டை மாலையாகப் போட்டுக்கொண்டு கிளம்பினால் பள்ளி துவங்க அரைமணி நேரத்துக்கு முன்பு வரை குளியல் போட்டுவிட்டு அகோரப் பசியுடனும், சிவந்த கண்களுடனும் வீட்டுக்கு வருவோம். பிறகு மூணு, நாலு மணி வரை பள்ளி. வந்ததும் திரும்ப சிவப்புத் துண்டு, கைக்கடக்கமாகச் சோப்பு என்று கிளம்பி இருளும் வரை தண்ணீரில் விளையாட்டு. 

வற்றாயிருப்பில் கிணறுகள், குளங்கள், கண்மாய்களுக்குப் பஞ்சமே இருந்ததில்லை. (வி)சாலாட்சி, சிவன், அனுமார் கோயில்களுக்குப் பின்னால் சோகையாக அர்ஜூனா நதி - பெரும்பாலும் மணல்தான் ஓடும். நான் இருந்த பதிமூன்று வருடங்களில் ஓரிரண்டு தடவைதான் அந்நதியில் நீர் நிரம்ப ஓடியிருக்கிறது. மற்ற நாட்களில் ஓரடி அகலத்துக்கு ஓரமாய் ஓடும் நீரில் உருண்டு புரண்டுதான் உடலை நனைக்கவேண்டும். பிறகு சுத்தமாக வற்றிவிட்டது. 

எண்பதுகளின் மத்தியில் முசிறிக்குக் குடிபெயர்ந்தபோது, காவிரி வரவேற்றாள். அவ்வளவு தண்ணீரைப் பார்த்ததேயில்லை. ஆண்கள், பெண்கள் படித்துறைகள், முசிறி-குளித்தலை இணைப்புப் பாலம், அகண்ட காவிரி, கரையையொட்டி பல கிலோமீட்டர்கள் நீண்டு ஊர்களை இணைத்த தார்ச்சாலைகளும், வாழைத்தோப்புகளும், பசுமை போர்த்திய வயல்களும் என்று புதியதொரு உலகம்! உடலும் மனதும் ஜிலுஜிலுவென்றிருக்கும். காவிரியில் எந்நேரமும் தண்ணீர். கரையொட்டியிருக்கும் எளிய வீடுகள். வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து காவிரிக்குள் இறங்கிவிடலாம். பெரிய பெரிய படிகளாக இருக்கும். 

கோடையில் நீர் கொல்லைப்புற படிகளிலிருந்து படிபடியாக இறங்கி பின்னோக்கிப் போகும். நதி நடுவில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் மணல் பிரதேசங்கள், கோரைப் புற்கள், பெரும் பாறையொன்று, மீன்களின் எலும்புக்கூடுகள். படித்துறையருகே நீர் சற்று வெதுவெதுப்பு கூடி ஓடும். கொக்குகள் அலைபாய்ந்துகொண்டிருக்கும். மக்கள் நதியைக் கடந்து இக்கரைக்கும் அக்கரைக்கும் போவார்கள். படிகளில் நீர்க்கறையைப் பார்த்து “அவ்ளோ தண்ணி ஓடிச்சு” என்று அங்கலாய்த்துக் கொள்வோம். 

படித்துறை நீரைக் கடந்து மணல்பிரதேசத்தில் பையன்களெல்லாம் கிரிக்கெட் விளையாடுவோம். கண்களில் அவ்வப்போது மணல் தெறிக்கும். தலைமட்டும் வெளியில் தெரிய மணலில் புதைத்துக்கொள்வோம். சிறு மீன்களை வேட்டியையோ, துண்டையோ விரித்துப் பிடித்து ஆங்காங்கே சிறு குழிகள் தோண்டி ஊற்றெடுக்கும் நீரில் கொஞ்ச நேரம் வைத்திருந்து, கிரிக்கெட் முடிந்ததும் அக்குழியிலிருந்து மணற் கால்வாய் தோண்டி நதிநீரிணைப்பு செய்து மீன்கள் மெதுவாக நதியில் கலந்து மறைவதைப் பார்த்துவிட்டு படித்துறையைச் சுற்றியிருக்கும் புதர்களில் பதுங்கியிருபக்கும் பாம்புகளை நினைத்து மயிர்கால்கள் கூச்செரிய ஈரக்கால்களுடன் வீட்டுக்கு நடப்போம். 

கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கவும் கொஞ்சம் கொஞ்சமாய் நீர் வரத்து அதிகரித்து நதி நடுவேயான தற்காலிக மணல் உலகம் மறையும். 

காற்றில் சிறந்தது மழைக்காற்று!

ஆடிப்பெருக்கில் வீர இளைஞர்கள் காவிரிப் பாலத்திலிருந்து நீரில் சொருக்கடிப்பார்கள். கார்ப்பெட் மாதிரி அவ்வப்போது வெங்காயத் தாமரைக் கூட்டம் பறவைகளுடன் கடந்து போகும். சிலசமயம் வயிறூதிய கன்றுக்குட்டியுடலும், எப்போதாவது ஒரு பிணமும். 

நதியில் குளிக்கும் போது சோப்பெல்லாம் போடுவதில்லை. மணலையே எடுத்து கரகரவென்று தேய்த்துக்கொள்வோம். பாத அழுக்குகளை மீன்கள் பார்த்துக்கொள்ளும். அக்ரஹாரத்து மாமாக்கள் பூணூலால் உடலைத் தேய்த்துக்கொள்வார்கள். பெண்கள் மாஜிக் நிபுணிகள் மாதிரி குளிப்பார்கள்.  

ஆலமரத்தடிப் பிள்ளையார், குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வண்டி மாடுகள், கரையோரம் எசமானர்களுக்குக் காத்திருக்கும் நாய்கள், சலவைத்துணி மூட்டைகளுடன் கழுதைகள், மீன்கள், மின்கம்ப காகங்கள், ஆந்தைகள், கொக்குகள், தண்ணீர்ப் பாம்புகள், எப்போதாவது கோவில் யானை என்று நீரை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த நதிக்கரை நாகரிகம் அது. 

வெகு சில நாட்களில் இருள் கவிந்து வீட்டுக்கு வந்து திண்ணையில் வீட்டுப்பாடம் செய்ய தெருவிளக்கு வெளிச்சத்தில் அமர்கையில் கிரிக்கெட் சுவாரஸ்யத்தில் விடுதலை செய்ய மறந்து போன மணற்குழி மீன் குஞ்சுகள் நினைவுக்கு வரும். அன்றிரவு தூக்கம் வராது.

***

Tuesday, January 28, 2014

பஸ்!


வற்றாயிருப்பிலிருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி - எப்போதாவது சென்னை என்று நெடுந்தூரப் பேருந்து பயணங்களின்போது பேருந்து ஓட்டுனரின் இடப்பக்கம் இருக்கும் பக்கவாட்டு இருக்கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துகொள்வது வழக்கம். பயணிகள் நிறைந்ததும் டிரைவர் தோளில் டர்க்கி டவலுடனும் எவர்சில்வர் ஸ்ட்ராப் வாட்ச்சுடனும் கதவைத் திறந்து ஏறி வயர் பின்னியிருக்கும் இருக்கையில் அமர்ந்ததும் ஒரு கை கியர் லீவரைப் பிடித்து பல்ஸ் பார்த்து கியர் மாற்றி, தொப்பி வைத்திருக்கும் ஸ்ட்ரா போன்ற கம்பியை இழுத்து, இன்னொரு கையால் சில பொத்தான்களை இயக்கி, ஸ்டியரிங் வீலைப் பிடித்துக்கொண்டு இடது வலது கால்களால் பெடல்களை மிதித்துச் சாலையை நோக்கி, ஹாரனை ஒருமுறை அழுத்தியதும் மொத்த வண்டியும் ஓர் உதறி உதறிக் கிளம்பும்.

வண்டி ஐட்லிங் போதும் பயணத்தின் போதும் கியர் லீவர் ர்க்கர ர்க்கர என்று நடுங்கிக் கொண்டிருப்பதையும் அதைப் பிடித்திருக்கும் அவரின் இடது மணிக்கட்டும் அந்த வாட்சும் சேர்ந்து நடுங்குவதும் சுவாரஸ்யமான காட்சி.

அஷ்டாவதானி மாதிரி அவர் கைகளாலும், கால்களாலும் சாகசம் செய்து வண்டியோட்டுவதைக் கணகொட்டாமல் மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருந்து அவரைப் போன்றே மானசீகமாக வண்டியை மனசுக்குள் ஓட்டுவது வழக்கம்.

வாழ்நாளில் அவர் மாதிரி ஸ்டைலாக ஒருமுறையாவது பேருந்தை ஓட்டிவிடவேண்டுமென்பது தீராத ஆசையாக இன்னும் இருக்கிறது. இப்போதும் கண்மூடிக்கொண்டு அந்தப் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்துகொள்வதைக் கற்பனை செய்தால் பேருந்து ஓட்டுதலின் வசீகரிப்பு ஞாபகங்களின் மூலையில் இன்னும் அழியாமலிருக்கிறது.

Saturday, January 25, 2014

காசு மேலே காசு வந்து




வற்றாயிருப்பில் நடுத்தெருவில் நாங்கள் வசித்தோம் (தெருவோட பேரே அதாங்க!). தெருவில் எதிர் படும் தாத்தாக்கள், மாமாக்களில் கட்டாயம் யாராவது ஒருத்தர் காதிலாவது பளபளவென்று ஒரு ரூபாய் காசு மின்னும். அதிலும் சிலை வைத்து சுற்றிலும் குரோட்டன்ஸ் வளர்த்ததைப்போல காசைச்சுற்றி காது மடலில் அடர்த்தியாக முடி. காது மடலில் காசைச் சொருகி வைப்பது ஆயகலைகளில் அறுபத்தைந்தாவது போல.

மதிய உணவு உண்டுவிட்டு திண்ணையில் உருளுவது, அல்லது கூட்டம் சேர்த்து ரம்மி விளையாடுவது வயசாளிகளின் தலையாய பொழுது போக்கு. சில சமயம் சட்டசபையைக் கலைக்கும் ரேஞ்சுக்கு சீட்டுக்கட்டைக் கலைத்துப்போடுவார்கள். ஒன்றிரண்டு பேருக்கு சீட்டுகள் அநியாயமாகக் கலைந்து வர, ரம்மி சேரும் சாத்தியமில்லாததை ஞானக்கண்ணால் உணர்ந்து ஸ்கூட் விட்டுவிடுவாரகள். மற்றவர்கள் ஆட்டத்தை முடிக்கும் வரை அவரகளுக்குப் பொழுது போகாது. ஒன்றா பைசா நகரத்து கோபுரம் போல அவ்வப்போது உடலைச் சாய்த்து இரைச்சலாகக் குசு விடுவார்கள். இல்லாவிட்டால் வேட்டியின் நுனியைத் திருகி மூக்குக்குள் நுழைத்துத் தலையே தெறிக்கும் படி தும்முவார்கள். ஆனாலும் காதுக்குள் காசு அசைந்து கொடுக்காமல் அமர்ந்திருக்கும்..

நானும் ஒரு ரூபாயில் ஆரம்பித்து எட்டணா, நாலணா வரை முயன்று பார்த்தேன். ம்ஹூம். எதுவும் நிற்கவில்லை. வலி உயிர் போயிற்று. அதில் ஏதோ வில்லத்தனம் அல்லது ஹீரோத்தனம் இருக்கிறது என்று புரிகிறது. அந்த வித்தை கைகூடவேயில்லை. பரவாயில்லை. கண்ணுக்குள் நிலவு மாதிரி காதுக்குள் காசு என்று தமிழர்கள் படம் எடுத்துவிடுவார்கள். அப்போது பாரத்துக்கொள்கிறேன்.

சார் ரன் கேலியே!


தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலெல்லாம் கிரிக்கெட் ஜூரம் பரவத்தொடங்கிய எண்பதுகளின் ஆரம்பம். 83-இல் உலகக்கோப்பையை வென்றதும் ஜூரம் உச்சத்திற்குப் போனது. ஆனாலும் தொலைக்காட்சி பரவலாக வரவில்லை. விலை ஜாஸ்தியான பணக்கார வஸ்து அது. தமிழகத் தென்கோடி ஊர்களில் ரூபவாஹினி மட்டும் பூச்சி பூச்சியாகத் தெரிய யாராவது ஒரு மாமா மொட்டை மாடியில் ஆண்ட்டெனாவை திருகித் திருகி “இப்பத் தெரியுதா?” என்று கேட்டுக்கொண்டேயிருப்பார். 

கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பு வானொலிகளில் - ஒற்றை ஸ்பீக்கர் வைத்திருக்கும் ட்ரான்ஸிஸ்டரை காதருகில் குண்டலம் மாதிரி ஏந்தி ஒருவர் வைத்திருக்க அவரைச் சுற்றி ஒரு கூட்டம் சிலை மாதிரி நின்று கேட்டுக்கொண்டிருக்கும். எவ்வளவு திருகினாலும் ஒன்றிரண்டு ஸ்டேஷன்கள் எடுக்கும் பாக்கெட் ரேடியோவும் மிகப் பிரபலம். அதன் ஈசான மூலையிலிருந்து சர்ரென்று இரண்டடி உயரத்திற்கு எவர்சில்வர் ஆண்ட்டனாவை அடுக்காக இழுத்து - உச்சியில் கொண்டை வைத்திருக்கும் - ரேடியோவை ஆன் செய்வார்கள். 

விக்கெட் விழும்போதும், ஓட்டங்கள் எடுக்கப்படும்போதும் மைதானத்திலிருந்து வரும் ரசிகர்களின் ஆரவாரத்தின் இரைச்சல் வர்ணணை செய்பவரின் பின்னணியில் ஏறியிறங்கி ஓஷ்ஷ்ஷ் என்று கேட்டுக் கொண்டேயிருக்க, வானொலி கேட்பவர்களின் ரத்த அழுத்தமும் அதற்கேற்ப ஏறியிறங்கிக் கொண்டியிருக்கும். ஆங்கில வர்ணனை அபூர்வம். வந்தாலும் ரொம்ப விளங்கினாற்போலத்தான். 

எப்போதும் ஹிந்தி வர்ணனைதான் என்பதால் ஹிந்தி தெரியாத கழக ஆட்சி புகழ், பந்திக்கு முந்தி ஹிந்திக்குப் பிந்திய தமிழர்களுக்கு ஒரு மண்ணும் புரியாமலிருந்தாலும் வர்ணனையை அழிச்சாட்டியமாகக் கேட்டுக்கொண்டிருப்போம். இந்தியா பேட்டிங் செய்யும் போது திடீரென்று ஆரவாரம் உச்சத்திற்குப் போக வர்ணனையாளர் லாட்டரி விழுந்த உற்சாகத்துடன் கிடுகிடுவென்று ஏதோ சொல்லி கடைசியில் “கிதார்ரப் சார் ரன் கேலியே” என்று அலறி முடிப்பார். அந்த மொத்த வாக்கியத்தில் “சார் ரன்” என்பது மட்டும் புரியும். “ஃபோர்” என்று நாங்கள் இங்கு கத்துவோம். 

அப்புறம் “ஏக் ரன்” “தோ ரன்” ”தீன் ரன்” “சே ரன்” என்பதும் புரியும். ஆனால் பௌலிங் போடும்போது விக்கெட் விழுந்ததா யாராவது விழுந்தார்களா என்று வர்ணனையாளர் எவ்வளவு கதறினாலும் ஒன்றும் புரியாது. அதேபோல் ஹிந்தியில் ஒன்று இரண்டு என்று பத்துவரை மட்டுமே எண்ணத் தெரியும் என்பதால் மொத்த ரன்கள் எவ்வளவு என்று வர்ணனையாளர் சொல்வது தெரியவே தெரியாது. ஆட்டத்தில் ஜெயித்தோமா தோற்றாமா என்பதும் புரியாது. நாலு வார்த்தை வாக்கியத்தில் மூன்று வார்த்தை ஆங்கிலம் கலந்து பேச அவர்கள் என்ன மறத் தமிழர்களா? “ரன்“ “விக்கெட்” போன்ற தவிர்க்கவியலாத வார்த்தைகள் தவிர சுத்த ஹிந்தியில்தான் வர்ணனை. 

இந்த ஹிந்திபுரியா கழிவிரக்கமும் எரிச்சலும், சென்னை சேப்பாக்கத்தில் எப்போது போட்டி நடக்கும் என்று காத்திருந்து அப்துல் ஜப்பார் அவர்களின் அழகுத் தமிழ் வர்ணனையைக் கேட்டதும்தான் அடங்கும்! அவர் சரியான (அசலான) மறத்தமிழர்! “ரன்” என்று சொல்லாமல் “ஓட்டம்” என்று சொல்வார். “மட்டை” “எல்லையைத் தாண்டிச் சென்றது பந்து” (பவுண்டரிக்கு “தரையில் பட்டுச் சென்றது” - சிக்ஸருக்கு “பறந்து எல்லைக் கோட்டைக் கடந்தது”) என்று தூய தமிழில் சொல்வார். காதில் நிஜமாகவே தேன் பாயும்! 

சரீஇஈ! ஏக் துஜே கேலியே-வெல்லாம் விழுந்து விழுந்து பார்த்தோமே. அதற்கு அர்த்தம் என்ன?