Saturday, January 25, 2014

காசு மேலே காசு வந்து




வற்றாயிருப்பில் நடுத்தெருவில் நாங்கள் வசித்தோம் (தெருவோட பேரே அதாங்க!). தெருவில் எதிர் படும் தாத்தாக்கள், மாமாக்களில் கட்டாயம் யாராவது ஒருத்தர் காதிலாவது பளபளவென்று ஒரு ரூபாய் காசு மின்னும். அதிலும் சிலை வைத்து சுற்றிலும் குரோட்டன்ஸ் வளர்த்ததைப்போல காசைச்சுற்றி காது மடலில் அடர்த்தியாக முடி. காது மடலில் காசைச் சொருகி வைப்பது ஆயகலைகளில் அறுபத்தைந்தாவது போல.

மதிய உணவு உண்டுவிட்டு திண்ணையில் உருளுவது, அல்லது கூட்டம் சேர்த்து ரம்மி விளையாடுவது வயசாளிகளின் தலையாய பொழுது போக்கு. சில சமயம் சட்டசபையைக் கலைக்கும் ரேஞ்சுக்கு சீட்டுக்கட்டைக் கலைத்துப்போடுவார்கள். ஒன்றிரண்டு பேருக்கு சீட்டுகள் அநியாயமாகக் கலைந்து வர, ரம்மி சேரும் சாத்தியமில்லாததை ஞானக்கண்ணால் உணர்ந்து ஸ்கூட் விட்டுவிடுவாரகள். மற்றவர்கள் ஆட்டத்தை முடிக்கும் வரை அவரகளுக்குப் பொழுது போகாது. ஒன்றா பைசா நகரத்து கோபுரம் போல அவ்வப்போது உடலைச் சாய்த்து இரைச்சலாகக் குசு விடுவார்கள். இல்லாவிட்டால் வேட்டியின் நுனியைத் திருகி மூக்குக்குள் நுழைத்துத் தலையே தெறிக்கும் படி தும்முவார்கள். ஆனாலும் காதுக்குள் காசு அசைந்து கொடுக்காமல் அமர்ந்திருக்கும்..

நானும் ஒரு ரூபாயில் ஆரம்பித்து எட்டணா, நாலணா வரை முயன்று பார்த்தேன். ம்ஹூம். எதுவும் நிற்கவில்லை. வலி உயிர் போயிற்று. அதில் ஏதோ வில்லத்தனம் அல்லது ஹீரோத்தனம் இருக்கிறது என்று புரிகிறது. அந்த வித்தை கைகூடவேயில்லை. பரவாயில்லை. கண்ணுக்குள் நிலவு மாதிரி காதுக்குள் காசு என்று தமிழர்கள் படம் எடுத்துவிடுவார்கள். அப்போது பாரத்துக்கொள்கிறேன்.

1 comment:

Poornima Srinath said...

I remember my amma referring to someone by "nadutheru narayanan". It was fun reading your observations