Sunday, September 12, 2004

புதுக் கவிதை ** துள்ளித் துள்ளி **

** துள்ளித் துள்ளி **

வில்லாய் வளைந்தெழும்பிய வாலுடன்
விரைவாய்ச் சிறுநீர் கழித்து
வழுக்கும் தரையில் கால்பரப்பி
கருகருவென ஒளிரும் கண்களுடனும்
தொழுவத்திலிருந்து தடுமாறி வெளிவந்து
தெருவில் துள்ளிய கன்றுக் குட்டி

கனத்த மடிகளுடன் உச்சி முகர்ந்து
கன்றினைச் சுத்தமாக்கிய தாய்ப்பசு

அருகில் நெருங்கித் தலையை வருட
நடுங்கும் உடலுடன் இளங்குளம்புகளில்
என் பாதம் ஏறி நின்ற அவ்விளம் கன்று

கால்களுக்கிடையே தலைகொடுத்துத்
தூக்கிடத் துள்ளிய கன்றுக் குட்டி
ம்மாவென ஆமோதித்துக் கத்திப்
பதறும் கன்றினைக் கேலிசெய்த தாய்ப்பசு
தரையில் இறக்கிட தறிகெட்டு ஓடித்
தெருமுனைக்குச் சென்றது கன்று

புதிய வரவினைக் கண்டதும்
உற்சாகத்துடன் குலைத்த நாயை
அதட்டிவிட்டு உள்ளே வந்தேன்
துள்ளித் துள்ளி ஓயட்டும் பின்பு
கட்டிப் போட்டுக் கொள்ளலாமென்று

*

கண்களிலிருந்து கீழ் பாய்கின்றன
வற்றிய ஓடைகளாய் கருங்கோடுகள்
ஆதரவாய் கன்றினை நக்கும் தாய்ப்பசு
ஆனாலும் தொலைந்திட்ட உற்சாகம்

கனத்த மடிகளை வருடியே யாதவன்
கறக்கின்றான் பாலை வழக்கம்போலவே
நீட்டிய முன்கால்களில் தலைசாய்த்து
அமர்ந்து கொண்டு வாலாட்டாது
விழியுருட்டி நோக்கும் நாய்

வைக்கோலைச் சுவைத்திராத அக்கன்று
இப்பொழுதுதன் உடலெங்கும்
வைக்கோல் அடைத்தங்கே நிற்கிறது
அசைவில்லாமல்.


1 comment:

Anonymous said...

Dear Mr.Sundar,

It is really good poem. We all used to this injustice to the cattle because we need milk. Though we all know consciously it is an injustice no one spoke about this pathetic condition.

Neenga En sir andha ilang kannukuttiya konneenga??

Just send RO.600/- indha paavaththai pokkiralam.

Vazhththukkaludan,

Jayakumar. - Muscat