Tuesday, October 20, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 9

ஊட்டி போலாம் என்று வாண்டுகள் குதித்ததில் திடீர் முடிவு செய்து ஷெவர்லேயின் டவேரா (டவரா அல்ல) காரை வாடகைக்கு எடுத்து மூட்டை முடிச்சுகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டோம். கோவையே ஜிலுஜிலுவென்றிருக்க ஊட்டி தேவையா என்று தோணினாலும் வந்ததற்கு அதையும் பார்த்துவிடலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன். ஊட்டியும் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது. ஊட்டிக்கு மலை ரயிலில் இதுவரை சென்றதில்லை என்று முதலில் எல்லாருக்கும் டிக்கெட்டும் எடுத்து வைத்திருந்தோம். ஆனால் மேட்டுப்பாளையத்தில் ஏழு மணிக்கு ஏறி ஒரு மணிக்கு குன்னூர் போய்ச் சேரும் என்பதாலும் அதற்காகக் குழந்தைகளை அதிகாலையில் எழுப்ப விரும்பாததாலும், அரை நாளை இழக்க விரும்பாமலும் காரிலேயே சென்றுவிடலாம் என்று முடிவுசெய்து 8 மணி அளவில் கோவையிலிருந்து கிளம்பினோம்.

பிளாக் தண்டர் தாண்டியதும் மலைப்பாதை ஆரம்பிக்க இருபுறம் அடர்த்தி மரங்கள். மலைத்தொடரில் ஆங்காங்கே வெள்ளிக் கோடுகளாய் அருவிகள். அருமையான சாலை. பரவசமான அனுபவம். வண்டியின் எல்லா ஜன்னல்களின் வழியாகவும் “அங்க பாரு - இங்க பாரு” என்று நகரும் மேகங்களையும், வெள்ளிக்கம்பி அருவிகளையும், சாலையோரத்தின் குரங்குக்கூட்டங்களையும் அவ்வவ்போது நாசியைத் தாக்கிய யூகலிப்டஸ் (ஸ்பெல்லிங் சரியா?) இலைகளின் வாசனையும் நிறையவே பரவசமூட்டின. இருபத்தேழோ முப்பத்துநாலோ ஹேர்பின் பெண்டுகள் (நல்ல தமிழிலும் அழகான அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள் ;-)) என்று அறிவிப்பு போட்டிருக்க குதித்துக்கொண்டிருந்த குழந்தைகளை அவற்றை எண்ணச் சொல்லிவிட்டு பார்வையை வெளியே செலுத்த வாகனம் வளைந்து வளைந்து உயர்ந்து ஏறியது. வரும் வழியில் டெலஸ்கோப் வ்யூ இருந்த இடத்தில் நிறுத்திச் சூடாக வேகவைத்த சோளத்தில் மிளகாய்ப்பொடி (ஸ்ஸ்), உப்பு தூவித் தின்ன டெலஸ்கோப் நிலையத்திற்கு வெளிச்சுற்றில் கம்பியைப் பிடித்து நின்றுகொண்டு பள்ளத்தாக்கைப் பார்க்க கோடாகக் கீழே தண்டவாளம் தெரிந்தது. அப்போது நேரம் 11:30 இருக்கும். “ஊட்டி ட்ரெயின் இந்நேரம் இந்தப் பக்கம் வந்தா எப்படி இருக்கும்” என்று நண்பனிடம் சொல்லி வாய்மூடுவதற்குள் தொலைவில் ரயிலின் “கூ” என்ற அழைப்பு கேட்க பரபரப்பாகக் காத்திருக்க, தலையின் வழியாகப் புகைவிட்டுக்கொண்டு கடந்து சென்றது ரயில்வண்டி - கண்கொள்ளாக் காட்சி.


குன்னூர் அடைந்ததும் முகத்திலறைந்தது யதார்த்தம். பச்சைப் பட்டாடை உடுத்திப் பார்த்திருந்த மலைகளின் இளவரசி நவீன நாகரிகத் தாக்கத்தாலோ என்னவோ சுரிதார், ஜீன்ஸ் என்று மாறி, இப்போது டூ பீஸ் உடைக்கு மாறிவிட்டாள் போலத் தோன்றியது. நிறைய பச்சை தொலைந்து, நிறைய கட்டடங்கள் - புதிய கட்டடங்கள். நிறைய வாகனங்கள். நிறைய மக்கள். ரியல் எஸ்டேட் எனும் பூதம் மாநிலத்தின் எந்தப் பகுதியையும் விட்டுவைக்கவில்லை என்று கண்கூடாகத் தெரிந்தது. ஒருவழியாக ஊட்டிக்குள் நுழைய “அது நடிகர் கார்த்திக் வீடு ஸார்” என்று ஓட்டுனர் காட்டிய அடுக்கு மாடிக் கட்டடத்தினைக் கடந்தபோது ஏதாவது ஜன்னல் வழியாக கார்த்திக் பார்க்கிறாரா என்று தேடினேன். நிறைய புதிய, பளபள கட்டடங்கள். ஒரு விடுதியில் நிறுத்தி விசாரித்தபோது “காட்டேஜூக்கு நாலாயிரம் ரூவா ஸார்” என்று சொன்னதைக் கேட்டு விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்று உணரமுடிந்தது. அமெரிக்காவின் புறநகரங்களில் இருக்கும் Extended Stay என்ற விடுதியில் (சமையலறை, ஒரு பெட்ரூம், ஒரு வரவேற்பறை) வாடகை ஒரு நாளைக்கு 60லிருந்து 80 டாலருக்குள் கிடைக்கும். காட்டேஜ் எடுத்து பெட்டிகளை உள்தள்ளி, குளிரில் உறைந்த கட்டுச் சாதத்தைப் பிரித்து வெட்டியெடுத்துச் சாப்பிட்டுவிட்டு அமர்ந்தோம். உறவினர் வீட்டுப் பெண்மணிகள் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் போட்டுக் கம்பளி சுற்றிக்கொண்டு புஸ்புஸ் என்று குளிரில் நடுங்கி மூச்சு விட என் ரெண்டு வாண்டுகளும் சாதா உடையில் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து “கு-ஹ்-ளி-ஹ்-ர-ஹ்-லை-ஹ்-யாடீ” என்று அவர்கள் பற்கள் கடகடக்கக் கேட்டதைப் பார்த்துப் பாவமாக இருந்தது. எனக்கும் ஏனோ அவ்வளவு குளிர் தெரியவில்லை - பாஸ்டனின் குளிருக்கு இதை ஒப்பிடுவதே தவறு - அன்று ஊட்டியில் பதினைந்தோ என்னவொ செல்ஷியஸ் இருக்க மழையில்லாது அருமையாக இருந்தது.

ஒரு மணி நேரம் கழித்து வெளியே கிளம்பி ஏரிக்குச் சென்றோம். திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் சைக்கிள் பெடலைச் சுற்றிக்கொண்டே படகில் பாட்டுப்பாடுவதைப் பார்த்து முதல் தடவை ஊட்டி வந்தபோது ஒரு பெடல் படகை எடுத்து அனாயசமாகப் பெடலைப் போட்டதில் ஐம்பதடி தூரம் செல்வதற்குள் வியர்த்து நாக்கு தள்ளியது. பக்கத்தில் கடந்து சென்ற படகொன்றிலிருந்து ஒரு பெருசு “ஜிம்ல எக்ஸர்ஸைஸ் பண்ற மாதிரி வேகமா மெதிக்காதீங்க தம்பி. ரொம்ப மெதுவாச் சுத்துங்க. சுத்தாட்டியும் பரவாயில்லை. அப்படியே மொதங்குங்க. வேகமாப் படகோட்டி என்ன செய்யப் போறீங்க“ என்று சிரித்துக்கொண்டே சொன்னதும்தான் உறைத்தது. அதை நினைவுபடுத்திக்கொண்டு எதற்கு வம்பு என்று பத்து பேர் அமரக்கூடிய தட்டைப் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கிளம்ப படகோட்டி, இஞ்சினுக்குப் பக்கத்தில் சமையல் வாயு சிலிண்டர்! மற்ற நகரங்களெங்கும் டாக்ஸி சமையல்வாயுவில் ஓட ஊட்டியில் படகுகள் இயங்குகின்றன. புகையற்ற படகுகள் பசுமை அழியும் வேகத்தைக் குறைப்பதில் ஒரு சிறு பங்காவது அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க!


படகு சவாரி முடிந்து கரையேறி ஓரத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு பூங்காவிற்குச் சென்றோம். உள்ளே மின்சாரத்தில் இயங்கும் குட்டிக்கார்களில் அவரவர்கள் மோதிக்கொண்டிருக்க ஒரத்தில் சில விளையாட்டுச் சாதனங்கள். வெளியே வேகமாகச் சுற்றும் தட்டு வடிவ ராட்டினம் ஒன்று. ஏறி அமர்ந்து கொள்ள நேர் வட்டத்தில் தட்டையாகச் சுற்றாது ஏறி இறங்கி பல கோணங்களில் அசுர வேகத்தில் சுற்றும் அதில் ஏறினால் குடல் வாய்க்கு வந்துவிடும் போலத் தோன்றியதால் “நான் படம் எடுக்கிறேன்” என்று மற்றவர்களை ஏற்றிவிட்டுக் கழன்று கொள்ள அத்தைமார்கள் இருவரும் கண்களை அழுந்த மூடிக்கொண்டு முனிவர்போல அமர்ந்துகொண்டார்கள். குழந்தைகள் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்துக்கொண்டே சுற்றினார்கள். ஏகப்பட்ட சத்தமெழுப்பிய அதைப் பார்த்து பயமாக இருந்தது. எங்கே அவர்களது இருக்கைப் பெயர்ந்து வெளியே எறியப்பட்டுவிடுவார்களோ என்று அஞ்சினேன். சரியாக ஒரு மாதம் கழித்து இங்கு திரும்பியதும் செய்தித் தாள்களில் வாசித்த செய்தியொன்று அதிர வைத்தது. கேரளாவிலிருந்து சுற்றுலா வந்திருந்த மாணவிகள் கூட்டமொன்று அதே ராட்டினத்தில் ஏறியிருக்கிறார்கள். உச்ச வேகத்தில் சுற்றியபோது ஒரு இருக்கை மட்டும் பெயர்ந்து வெளியே எறியப்பட இரு மாணவிகள் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஒரு நிமிடம் உடல் நடுங்கியது. அவர்கள் நலம் பெற்று குணமடைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன் (விபத்துச் செய்தியைத் தவிர அதைப் பின்தொடர்ந்த செய்திகள் அவ்வளவாக ஊடகங்களில் வராதே).

ஊட்டி மலர்ப் பூங்காவிற்குச் சென்றோம். என்ன அழகு! முன்பு பார்த்ததைவிட பளிங்காகப் பராமரிக்கிறார்கள். மக்கள் கூட்டம் அலை மோதினாலும் அப்பூங்காவின் அழகு எல்லா இரைச்சலையும் அடக்கிவிடுவதாக இருந்தது. காலாற நடந்தோம். என்ன அவசரத்திற்கு ஒதுங்க கழிவறை எதுவும் அருகாமையில் இல்லை. பூங்காவின் அந்தக் கோடியில் (மலையின் ஏற்றத்தில்) ஏதோ ஒரு மூலையில் இருக்கிறது என்று சொன்னார்கள். ஏறி அதை அடைவதற்குள் “வந்து”விடும் போலத் தோன்றியதாலும், உப்பு நீரில் வளரும் செடி எதுவும் அருகில் கண்ணுக்குத் தட்டுப்படாததாலும், வெளியில் வந்து ஒரு விடுதிக்குள் சென்று பாரமிறக்கினேன். வயதானவர்கள்தான் பாவம். சும்மாவே அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். அந்தக் குளிரில் அவ்வளவு தூரம் ஏறிச்செல்வது மிகவும் கடினம். இதற்கு யாராவது ”ஆவன” செய்தால் நலம்!


தொட்டபெட்டா, செவன் ஹில்ஸ் என்று சில இடங்கள் சுற்றினோம். செவன் ஹில்ஸில் பத்து பதினைந்து குதிரைகளுடன் ஆட்கள் நின்று “வாங்க ஒரு ரவுண்டு போலாம் ஸார்” என்று அழைக்க, “டாடி டாடி” என்று குழந்தைகள் குதித்தார்கள். “நூத்தம்பது ஸார். ஃபுல் ரவுண்டு” என்று சொல்லவும் அவர்களைத் தாண்டி நடக்க, அந்தக் குதிரை விட்டை போட்டு முடிக்குமுன் “அம்பது ரூவா கொடுங்க ஸார்” என்று இறங்கினார்கள். நூற்றைம்பது, ஐம்பது பிரச்சினையில்லை. ஆனால் அதை முறையாக நிர்ணயித்து அறிவிப்பு வைத்து வசூலித்தால் நம்பகத்தன்மை கூடி நிறைய பேர் சவாரிக்கு வருவார்கள் என்பது என் கருத்து. குழந்தைகள் ஏறிப் போக இயற்கையின் அழகில் மௌனமாய் நின்றேன்.

அங்கிருந்து முதுமலைக்குச் சென்றோம். முதுமலையை நெருங்க நெருங்க குளிர் குறைந்து வெம்மை தாக்கியது. மான்கூட்டமொன்று சாலையைக் கடந்து சென்றது. பழுப்பு படர்ந்த யானையொன்றும் பாகனும் மௌனமாகச் சாலையோரம் நடந்துகொண்டிருக்க எங்கள் வாகனம் சற்றுத் தயங்கி அவர்களைக் கடந்தது. மதியம் முதுமலை வன அலுவலகத்திலிருந்து கிளம்பும் சஃபாரி பயணத்திற்கு சீட்டுகள் வாங்கி வண்டியிலேற சந்தையைப் போல பயணிகள் இரைச்சலாக இருக்க ஓட்டுனர் எழுந்து “மிருகங்களப் பாக்கணும்னா இப்படி இரைச்சல் போடாம அமைதியா வரணும். ட்ரிப்பு முடியற வரைக்கும் யாரும் பேசாதீங்க” என்ற அறிவித்துவிட்டுக் கிளம்ப எல்லாரும் மௌனமானார்கள். சாலையிலிருந்து சட்டெனப் பிரிந்து வனத்திற்குள் செல்லும் பாதையில் வாகனம் செல்ல நிறைய பாம்பு புற்றுகள், மான்கள், சிங்கவால் குரங்குகள் என்று தென்பட்டன. காட்டு யானைகள் எதுவும் தென்படவில்லை என்பது ஒரு ஏமாற்றம்.


அங்கிருந்து கர்நாடக எல்லை பத்து கிலோமீட்டர்களுக்குள் இருக்கிறது. “பர்மிட் வாங்கிட்டுப் போலாம் ஸார்” என்று ஓட்டுனர் பரிந்துரைத்தாலும், மாலை நான்கு மணியாகிவிட்டதால் இரவுப் பயணத்தைத் தவிர்க்க விரும்பி மறுத்துவிட்டேன். “சரி பார்டர் வரைக்கும் போய்ட்டு வந்துரலாம்” என்று சொல்லிவிட்டு ஓட்டினார். கர்நாடக எல்லைச் சோதனைச் சாவடி வரை சென்று ஒரு U Turn அடித்துத் திரும்பினோம்.


ஊட்டியை நெருங்குகையில் “கல்லட்டி அருவி” என்ற தேய்ந்த பெயர்ப்பலகையைப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆளரவமில்லாத ஒற்றையடிப் பாதையில் அரைக் கிலோமீட்டர் தூரம் நடக்க, அடர்ந்த புதர்கள், சிறிய மரப்பாலம், பல படிகள், ஓடை, பெரிய பாறை ஆகியவற்றைத் தாண்டிப் பார்த்தால் ஆக்ரோஷமாகக் கொட்டிக்கொண்டிருந்தது அருவி. வாகனத்தை நிறுத்தி உடனே பார்க்கும் இடங்களில்தான் கூட்டம் அம்முகிறது. இம்மாதிரி நடந்து சென்று பார்க்கவேண்டும் என்றாலே பெரும்பாலானோர் அப்பீட்டு ஆகிவிடுகிறார்கள். அம்மாதிரி இடங்களைப் பார்ப்பதில் எனக்கு ஒரு அதீத திருப்தி! மனதில்லாமல் அருவியைப் பிரிந்து ஊட்டி திரும்பி மாலையே கோவைக்கு இறங்கத் துவங்கி இரவு எட்டு மணிவாக்கில் கோவை எல்லையிலிருந்த அன்னப்பூர்ணாவின் புதிய கிளை உணவகத்தில் நிறுத்தினோம். முன்பெல்லாம் கோவை நகரத்திலிருக்கும் அன்னப்பூர்ணாக்களில் நாம் சாப்பிட உட்கார்ந்தால் அடுத்த வாடிக்கையாளர் நம்மையொட்டி நின்றுகொண்டு காத்திருப்பார். சும்மா எதற்காகவே எழுந்து நின்றால்கூட நாற்காலி காணாமல் போய்விடும். நல்லவேளை இந்த தடவை அவ்வளவு கூட்டமில்லாமலிருக்க இரவு உணவை முடித்துவிட்டு பணம் செலுத்துமிடத்தில் இருந்த இனிப்பு பீடா ஒன்றையும் (கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து பீடா) வாங்கி ஒதுக்கிக்கொண்டேன். மறுநாள் சதாப்தியில் திருச்சி திரும்பினோம். கோவையின் குளுகுளு சூழ்நிலையை விட்டு திருச்சி அடுப்புக்குத் திரும்புவதற்கு மனதேயில்லை.

தொடரும்...

***

நன்றி: தென்றல்.காம்

1 comment:

சிங்கை நாதன்/SingaiNathan said...

//“நூத்தம்பது ஸார். ஃபுல் ரவுண்டு” என்று சொல்லவும் அவர்களைத் தாண்டி நடக்க, அந்தக் குதிரை விட்டை போட்டு முடிக்குமுன் “அம்பது ரூவா கொடுங்க ஸார்” என்று இறங்கினார்கள். நூற்றைம்பது, ஐம்பது பிரச்சினையில்லை. ஆனால் அதை முறையாக நிர்ணயித்து அறிவிப்பு வைத்து வசூலித்தால் நம்பகத்தன்மை கூடி நிறைய பேர் சவாரிக்கு வருவார்கள் என்பது என் கருத்து//

நூற்றைம்பது - Full Round
ஐம்பது - might be Quarter round only :)

Back to US ?

அன்புடன்
சிங்கை நாதன்