Wednesday, September 07, 2016

மெய் நிகர்சனம்!

மெய்நிகர்சனம் என்றால் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டாம். Virtual Reality!.  உண்மைபோல் தோன்றும் பொய்த்தோற்றம். மெய்நிகர் காட்சி. தரிசனம். ரொம்பவும் நீட்டவேண்டாம் என்று மெய்நிகர்சனம் என்று சுருக்கியிருக்கிறேன்!

காதில் செருகித் திருகினால் கண்களைச் சொருகவைக்கும் கோழி இறகுபோல் அதை அணுகலாம்.


‘சினிமா என்றால் நெசம் போல பொய் சொல்றது’ என்று சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். ஒலிவாங்கி ஒலிப்பெருக்கி போன்ற உபகரணங்களின்றி, நிஜ மனிதர்கள் கதாபாத்திரங்களை வரித்துக்கொண்டு, நிஜமான குரலில் ஒரு கதையை உரையாடல் மூலமாக நகர்த்திச்சென்று அபிநயங்களுடனும், நிஜமான வாத்தியக்காரர்களின் இசையுடனும் மொத்த அரங்கமும் கேட்கும்படியாகச் சொன்ன நாடகங்கள் அபரிமித பரிணாம வளர்ச்சியடைந்து சினிமா என்ற நிழல்பிரதிகளாக சுருள்களில் அடைக்கப்பட்டு இப்போது டிஜிட்டலில் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தொடுதிரைப் பலகையிலும் கைப்பேசியிலும் உலகெங்கும் காணக்கிடைத்ததுபோல, தகவல் தொழில்நுட்பத்துறையும் படுவேகத்தில் அசுரத்தனமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அறுபது, எழுபதுகளில் ஒரு பத்திருபது எம்பி அளவிற்கு தகவல் சேகரித்து வைக்கவே பங்களா அளவிற்கு வன்தட்டு வைத்திருந்தார்கள். இந்தப் படத்திலிருப்பது வெறும் ஐந்தே எம்பி அளவிலான வன்தட்டு. இப்போது இதைவிட ஒரு இலட்சம் மடங்கு இடம் இருக்கும் வன்தட்டு கட்டைவிரல் நகமளவிற்கு வந்துவிட்டது.



வன்தட்டு எல்லாம் தகவல்தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரை பால்வாடி வயது சமாசாரம். இத்துறையின் விஸ்வரூப வளர்ச்சியைக் குறிப்பிடுவதற்காக ஓர் ஒப்பீடு அவ்வளவே! 

சம்பவம் - 1

எண்பதுகளின் இறுதியில் மதுரை செளராஷ்ட்ரா கல்லூரியில் படித்தேன். வசித்தது சுப்பிரமணியபுரத்தில். திருப்பரங்குன்றம் சாலை வழியாகத் தினமும் பைசா நகரத்துக்கோபுரம்போல சாய்ந்துவரும் நிற்காத பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஒன்றில் எப்படியாவது ஓடிப்போய் ஒட்டிக்கொண்டு செல்வது வழக்கம். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திரும்பி செம்மண் சாலையில் சென்று இறங்கிக்கொண்டு, செம்மண் மலையில் இருந்த கல்லூரிக்கட்டிடத்திற்கு ஏற்றத்தில் நடந்து செல்லவேண்டும். ஒரேயொரு கல்லூரிப் பேருந்து இருந்தது. அதில் பெண்கள் மட்டும் அனுமதி. பொட்டலம் பிரித்து பொரியைக் குளத்திலெறிந்தால் சளசளவென்று குமியும் மீன்கள் போல இருக்கும் அப்பேருந்து வரும்போதெல்லாம். தென்னிந்திய மொழிகளின் சுவடு எதுவுமில்லாது, தார் எழுதி மறைத்தாலும், தர்ணா செய்தாலும், டிம்பிள் கபாடியாவையும், மாதுரி தீட்சித்தையும் பாபி, தேஸாப் படங்களிலெல்லாம் பார்த்துத் தமிழன் தெரிந்துகொண்ட ஓரிரு ஹிந்தி வார்த்தைகளும் இல்லாது, அவர்கள் பேசும் செளராஷ்டிர மொழி புரியாமல் மூன்று வருடங்கள் மகா அவஸ்தை!  வகுப்புகள் இல்லாத நேரத்தில் (‘வகுப்புகளில் நாங்கள் இல்லாத நேரத்தில்’ என்று வாசிக்க!) மன்னர் கல்லூரிக்கு எதிரே சாலை வளைவில் ஒரு குட்டிச்சுவர் இருந்தது - அங்கேதான் அமர்ந்திருப்போம். அரட்டை. கல்லூரித்தோழர்களில் ஒருவன் ராம்பிரசாத். இன்னொருவன் முரளி. ராம்பிரசாத் பேசும்போது மொத்த உடல், கண்கள் என்று எல்லாமும் பேசும். படு உணர்ச்சிகரமாக கைகள் கால்களை ஆட்டி எச்சில்தெறிக்க விவரிப்பான். ஒருமுறை தெருக்கோடியில் கடைக்குப்போன சம்பவத்தைத் தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்கள் உணர்ச்சிகரமாக நிறுத்தாது பேசி முடிக்கவும் நாங்களெல்லாம் மயான அமைதியாக இன்னும் அவன் வர்ணித்த காட்சியிலிருந்து வெளிவராமல் இருக்க முரளி மெதுவாக ‘மச்சி! அப்படியே நான் ஒங்கூட கடைக்கு போய்ட்டு வந்துட்ட ஃபீலிங் இருக்குடா!’ என்றான்.  

சம்பவம் - 2

போன வாரம் கென்னி ராபர்ட்டைச் சந்தித்தேன். சமீபத்தில்தான் இந்தியாவுக்குப் போய்விட்டுத் திரும்பியிருந்தார்.கென்னி கலிஃபோர்னியா மாகாணத்தில் சிலிக்கான் வா(வே)லி பகுதியிலுள்ள சிலிக்கான் சில்லு நிறுவனங்கள் ஒன்றின் முதன்மைத் தகவல் தொழில்நுட்ப அதிகாரி.  பங்களூருவில் அவர்களுக்கு ஐநூறு பேர் வேலைபார்க்கும் கிளை இருக்கிறது. அடிக்கடி பணியாளர்கள் கூடுதல் சம்பளம், இன்ன பிற காரணங்களுக்காக ராஜினாமா செய்துவிட்டு அடுத்தடுத்த நிறுவனங்களுக்குத் தாவும் பிரச்சினையைப் பற்றிப் பேச்சு வந்தது. அவர்களுக்கும் ப்ரோக்ராமர்களை வேலைக்கெடுக்க வேண்டியிருந்தது. கென்னி பங்களூரு போனார். ஐடிஸி விண்ட்ஸரில் அவருக்கு அறை பதிவாகியிருந்தது. 

‘இந்தியர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல் அவர்களுடைய ரெஸ்யூம்களில் பொழுதுபோக்குகள் என்று தலைப்பிட்டு பல விஷயங்களை எழுதுகிறார்கள்!” என்று சிரித்தார். 

பங்களூருவுக்குச் சென்ற மதியமே கென்னி நேர்காணல் செய்வதற்காக விண்ணப்பித்த சிலரை வரச்சொல்லியிருந்தார்கள்.ஒரு சந்திப்பு அறையில் கென்னி அமர்ந்திருக்க முதலாவதாக ஒரு இளைஞன் உள்ளே வந்தான். வந்தவன் தன்னை நேர்காணல் செய்யப்போகிறவர் ஒரு வெள்ளைக்காரர் என்று எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய விஸிட்டிங் கார்ட் ஒன்றை அவனிடம்  நகர்த்த - அவன் வாழ்நாளில் சந்திக்கும் முதல் ஸி லெவல் நபர் கென்னி.  உடனடியாக அவனுக்கு வியர்த்துக்கொட்டத் தொடங்கியது. வாய் குழறியது. ரெஸ்யூமை கென்னியிடம் கொடுக்கும்போது அவன் கைகள் நடுங்கியதைக் கென்னி பார்த்தார். அந்தப் பையனின் ரெஸ்யூமை விரைவாகப் பார்த்துவிட்டு ஓரமாக வைத்தார். 

‘ஹலோ ராவி. ஒன்னோட பொழுதுபோக்கு கிரிக்கெட்னு போட்ருக்கியே?’

‘ஆமாம் சார்! ஸ்டேட் லெவல்ல ஆடியிருக்கேன்!’

பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு கிரிக்கெட் என்றால் இந்தியர்களுக்கு அமெரிக்க பேஸ்பால் தெரிந்த அளவிற்குத்தான் தெரியும். 

‘எங்கே. எனக்குக் கொஞ்சம் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றியும், அதன் விதிகளைப் பற்றியும் விளக்க முடியுமா? அந்த வெள்ளைப் பலகையை வரைய உபயோகித்துக் கொள்’ 

ரவி அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. விளையாடுகிறாரோ என்று தோன்றியது. ஒரு கணம்தான். சட்டென்று எழுந்தான். மார்க்கர் பேனா ஒன்றை எடுத்துக்கொண்டு சுவரில் மாட்டியிருந்த பலகையருகில் சென்றான். கர்சீஃபால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு, லேசாகச் செருமிக்கொண்டு தொடங்கினான். பலகையில் மைதானத்தையும், பிட்ச்சையும், வீரர்கள் நிற்கும் பொசிஷனையும் வரைந்தான். 

கென்னி என்னிடம் ‘அடுத்த அரை மணி நேரத்தில் நான் கிரிக்கெட்டைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அதன் விதிகள் புரிந்தன. இந்தியாவின் சாதனை வீரர்களைப் பற்றி அறிந்தேன். அதற்குமுன் இந்தியாவில் பயணம் செய்தபோது தெருக்கள், சந்து பொந்துகளிலெல்லாம் சிலர் குச்சிகள், மட்டைகள், மட்டை மாதிரிப் பலகைகள், பலவித பந்துகள் எல்லாம் வைத்துக்கொண்டு பல்வேறு ஆடைகளில், வெவ்வேறு வயதுகளில் ஆடியதெல்லாமே கிரிக்கெட்தான் என்று புரிந்தது. பள்ளி மைதானமொன்றில் ஒரே சமயத்தில் நூறு பேர் பத்து பதினைந்து குழுக்களாக எல்லாத் திசைகளிலும் களேபரமாக விளையாடிக்கொண்டிருந்ததும் கிரிக்கெட்தான்  என்று புரிந்தது. இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்பதும் புரிந்தது’  என்றார். ‘When Ravi explained it to me, I felt as if I was there in the playground’!.   

*** 

மகாபாரதம் எப்படி நமது எல்லாருக்கும் பரிச்சயமோ, புரவிகள் காற்றைக் கிழித்துக்கொண்டு தேரை இழுத்து ஓட, வில்லுடன் அர்ஜுனன், கிருஷ்ணபரமாத்மா என்று மகாபாரதப் போர்க்காட்சி ஓவியங்களையும் கிட்டத்தட்ட நாம் எல்லாரும் ஒருமுறையாவது பார்த்திருப்போம். இம்மாதிரி ஓவியங்களைப் பார்க்கும்போது ஒருகணம் அந்தப் போர்க்களக்காட்சி நம் மனக்கண்ணில் விரியுமல்லவா. புரவிகளின் ஓலங்களும், குளம்பொலிகளுக், வாட்களின் கூர்மையும், ஆயுதங்கள் மோதும் ஓசையும், மரணங்களும், வெற்றிமுழக்கங்களும், இரத்த ஆறும் என்று எத்தனையெத்தனைக் காட்சிகளை அந்த ஒரு மெளன ஓவியம் நம் மனதில் விரித்துக் காட்டுகிறது!  மொத்தப் போர்க்களத்தையும் காட்டும் ஒரு Panoramic பிம்பத்தை அந்த ஓவியம் ஏற்படுத்துகிறது. ஒரு பரந்துபட்ட இயற்கைக் காட்சியைக் காட்டும் ஓவியம், ஒரு நிகழ்வின் அற்புத கணத்தைப் பதிவு செய்த புகைப்படங்கள் என்று எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். இவற்றின் ஆதார விளைவு பார்வையாளரை அந்தக் களனிற்குக் கொண்டுசென்று அந்தக் காட்சியை உணரவைப்பது. இது ஒருவகை மெய்நிகர்சனமே! 

நமக்கு இரண்டு கண்களில்லாமல் ஒன்று மட்டும் இருந்தால் நாம் காணும் காட்சிகள் எப்படியிருக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? நாம் காண்பவை எல்லாம் முப்பரிமாணத்தில். ஒவ்வொரு கண்ணும் தனித்தனியே காண்பது ஒரு பரிமாணத்தையே. இரண்டு பரிமாணங்களை ஒரே காட்சியாக இணைத்து மத்தியஸ்தம் செய்து முப்பரிமாணத்தில் நமக்குக் காட்டும் மந்திரத்தை மூளை செய்கிறது. இதை ஆராய்ச்சிமூலம் 1838-இல் நிரூபித்தவர் சார்ல்ஸ் வீட்ஸோட்ன் (Charles Wheatstone) என்பவர். Stereoscope, depth, immersion, depth of field, field of view போன்ற புகைப்படக்கலை, பார்வை சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களை நேரம் கிடைக்கும்போது லேசாகப் படித்துவைத்துக்கொள்ளுங்கள்.   வில்லியம் க்ரூபரினால் (William Gruber) ஸ்டேரியோஸ்கோப் அடிப்படையில் 1939-இல் தயாரிக்கப்பட்டு, காப்புரிமையும் பெறப்பட்ட View-Master Stereoscope மகாபிரபலம். அதைவைத்து மெய்நிகர் சுற்றுலாவெல்லாம் (Virutal Tourism) காட்டினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கி, பிறகு பலப்பல ஆண்டுகள் ஆமை, நத்தை வேகத்தில் மெய்நிகர்சனப் பொருட்கள் பரிணாம வளர்ச்சிபெற்றுவந்தாலும் அது புலிப்பாய்ச்சல் எடுத்தது மின்னணு தொழில் நுட்பமும், கணிணித் தொழில்நுட்பமும் உருவான இருபதாம் நூற்றாண்டில்தான். 

விமானியாக விரும்புபவர்கள் நாலுசக்கர வாகனம்போல ஏறியமர்ந்துகொண்டு, பக்கத்து இருக்கையில் பயிற்சியாளர் ஒரு கையால் மாணவரின் தோளை அணைத்துக்கொண்டு ’ஆங். வண்டியை எடுங்க தம்பி!’ என்று ஆரம்பிப்பதில்லை. பல நிலைகளைக் கடக்கவேண்டும். ஏகமாக அடிப்படை விதிகள், பாதுகாப்பு விதிகள், தட்பவெப்பநிலைக்குத் தகுந்தாற்போல் விமானத்தைக் கையாள்வது என்று நிறைய படித்துப் பரீட்சை எழுதித் தேர்வாகி, விமானம்போன்ற ஒரு ஸிமுலேட்டரில் நிறைய நேரம் செலவழிக்கவேண்டும். அப்புறம்தான் அசல் விமானத்தில் காலையே வைக்க விடுவார்கள். அந்த ஸிமுலேட்டரை முதன்முதலில் உருவாக்கியவர் எட்வர்ட் லிங்க் - 1929 இல். மின்சார மோட்டார்களின் உதவியுடன் பல பாகங்களை இணைத்து, மழை, மேகம், காற்று, காற்றில்லா வெற்றிடம் போன்றவற்றால் விமானத்திற்கு நேரும் அசைவுகளைச் செயற்கையாக உருவாக்கினார் அவர். இயந்திரத்துக்குப் பெயர் Link Trainer. இராணுவ விமானிகளுக்குப் பயிற்சியளிக்க ஆறு இயந்திரங்களை அமெரிக்க அரசு மூவாயிரத்து ஐநூறு டாலர்களுக்கு வாங்கியது (இன்றைய மதிப்பு ஐம்பதாயிரம் டாலர்கள்!). 


இரண்டாம் உலகப்போரின்போது பத்தாயிரத்திருக்கும் மேற்பட்ட இயந்திரங்களில் ஐந்து இலட்சம் விமானிகள் பயிற்சி பெற்றனர். 

ஸ்டான்லி ஜி. வெய்ன்பாம் (Stanley G. Weinbaum) என்பவர் 1930 களில் எழுதிய அறிவியல் புனைக்கதையொன்றில் வினோதக் கண்ணாடி ஒன்றின் வழியாக ஒளியினாலான பிம்பங்கள், வாசனை, சுவை, தொடுதல் போன்ற உணர்வுகளையும் அனுபவிக்க முடியும் ஒரு கற்பனை உலகைப் பற்றி எழுதியிருப்பார். இன்றைய மெய்நிகர்சனக் கண்ணாடிக்கருவிகளைப் போன்றதொரு கண்ணாடியைப் பற்றி அன்றே எழுதிய தீர்க்கதரிசியாக அவரைக் கருதலாம். 

அதற்குப் பின்னர் அறுபதுகளில் மார்ட்டன் ஹெலிக் என்ற சினிமா ஒளிப்பதிவாளர் உருவாக்கிய சென்ஸோரமா கருவியானது வீடியோ கேம் விளையாடும் பூத் போன்றதொரு அமைப்பு. முப்பரிமாணத் திரை, ஸ்டெரியோ ஒலிபெருக்கிகள், காற்றடிக்க மின் விசிறி, வாசனைகளை உற்பத்திசெய்யும் கருவிகள், அதிர்வலைகளை ஏற்படுத்தும் இருக்கை என்று பல்வேறு அம்சங்கள் கலந்தது சென்ஸோரமா. அதற்காகவே பிரத்யேகமாக ஆறு குறும்படங்களையும் அவர் உருவாக்கினார். பார்வையாளரை திரைப்படத்திற்குள்ளேயே ஒரு பாத்திரமாக உணரவைக்கச் செய்த முயற்சி அது. அவருடைய நேர்காணலை இங்கே காணலாம்.


சென்ஸோரமாவுக்குப் பிறகு தலையில் மாட்டிக்கொள்ளும்படியான கருவியைக் கண்டுபிடித்தார் அவர். அதுவே இன்றைய மெய்நிகர்சனக் கண்ணாடிகளின் முன்னோடி! முப்பரிமாணப் படமும் ஸ்டேரியோ ஸ்பீக்கர்களும் கொண்டிருந்தது அவர் கண்டுபிடித்த டெலெஸ்பியர் மாஸ்க் (Telesphere Mask). அக்கருவியில் வீடியோ வசதி இல்லை. அதற்கு அடுத்த வருடமே பில்கோ கார்ப்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் சேர்ந்து கண்டுபிடித்தது Headsight. அதில் ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு வீடியோ திரையையும், காந்தப்புலனில் அசைவை கட்டுப்படுத்தி அதைத் தனியாக ஒரு ஸிஸி கேமராவில் இணைத்திருந்தார்கள். அப்போது Virtual Reality என்ற பதங்களெல்லாம் பயன்பாட்டுக்கு வந்திருக்கவில்லை. Headsight-ஐ தொலைதூரத்திலிருந்து அபாயகரமான இடங்களைப் பார்ப்பதற்காக இராணுவத்தின் பயன்பாட்டுக்கு வைத்திருந்தார்கள். கண்ணாடியை மாட்டிக்கொண்டு தலையை அசைத்தால், அந்த அசைவைக் கொண்டு தூரத்திலிருந்த கேமராவை இயக்கினார்கள். அந்தக் கேமராவின் காட்சிகள் கண்ணாடியில் தெரியும். சுருக்கமாக தூரத்தில் வைக்கப்பட்ட கேமராவின் காட்சிகளை நேரலையாக தலையில் மாட்டிக்கொண்ட கண்ணாடியின் திரையில் பார்ப்பது.   

அதற்கு அடுத்த இருபது இருபத்தைந்து வருடங்களில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டாலும், 1987-இல்தான் Virtual Reality என்ற பதத்தை ஜேரன் லேன்யே (Jaron Lanier) முதன்முதலில் பயன்படுத்தினார். Visual Programming Lab-இன் நிறுவனர் அவர். அவர் தயாரித்த VR கண்ணாடிகளெல்லாமே பத்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் டாலர்கள் விலையில்!! 

முப்பரிமாணத் திரைப்படங்கள் பிரபலமாக இருந்த வருடங்கள் அவை. நம்மூரில் மைடியர் குட்டிச்சாத்தானில் ஆரம்பித்து சில படங்கள் வந்தன. ம்ஹூம்! ஜெகன் மோகினி 3-டியில் வந்திருக்கவேண்டும்!  யாருக்குவேண்டும் குட்டிச் சாத்தானெல்லாம்!

1992-இல் ஜேம்ஸ்பாண்ட் நாயகர் பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்து வந்த The Lawnmower Man திரைப்படத்தில் விஞ்ஞானி ஹீரோ மெய்நிகர்சனத்தைப் பயன்படுத்தி மனநலம் குன்றிய நோயாளி ஒருவரை குணப்படுத்துவதைச் சொல்லியிருப்பார்கள். 1993-இல் SEGA நிறுவனம் தயாரித்த VR கண்ணாடி மாதிரி பல்வேறு தொழில்நுட்பச் சவால்களால் பயன்பாட்டுக்கு வராமலேயே போனது. அதே போலத் தோல்வியடைந்த இன்னொரு முயற்சி 1995-இல் சந்தையில் இறக்கப்பட்ட நிண்டண்டோவின் VR-32. 

அதுவரை பொழுதுபோக்கு, விளையாட்டு என்றிருந்த மெய்நிகர்சனத் தொழில்நுட்பத்தை புதிய கோணத்தில் அணுகி அபாரமான திரைப்பட வரிசையை உருவாக்கி உலகச் சந்தையை ஒரு கலக்கு கலக்கினார்கள். அந்தப் பட வரிசை - மாட்ரிக்ஸ்! 1999-இல் முதல் பாகம் வந்தது. எங்கே கூகுளின் உதவியின்றி அந்தப் படத்தின் கதையைச் சொல்லுங்கள் பார்க்கலாம்! 

அதற்கடுத்த பதினைந்து வருடங்கள் இத்தொழில்நுட்பத்தின் அற்புத கால கட்டங்கள். அதீத சக்தி கொண்ட கணிணிகள், கைக்கடக்கமாக ஆனால் சக்திவாய்ந்த கைபேசிகள், ஏகமாக செறிவூட்டப்பட்ட க்ராபிக்ஸ், முப்பரிமாணத் தொழில்நுட்பம், கேமராக்கள் என்று எல்லாம் ஒரே சமயத்தில் கைகூடி வர, சகாய விலையில் இப்போது சிட்டுக்குருவி லேகியம் விற்பது போல் ஆளாளுக்கு VR கண்ணாடிகளைச் சந்தையில் இறக்கத் தொடங்கிவிட்டார்கள். நிஜமாகவே அட்டையைப் பயன்படுத்தி சல்லிசாக கூகுள் கார்ட்போர்ட் கிடைக்கிறது. ஸாம்ஸங்கின் VR கண்ணாடி ஆறாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. 

குஞ்சு குளுவான்களெல்லாம் ஆட்டத்திலிருக்க, ஒரு நாளைக்கு நூறுகோடி பேருக்கு மேல் பயனாளர்களாக இருக்கும் முகநூல் காரர்கள் சும்மா இருப்பார்களா? சோஷியல் மீடியாவின் முடிசூடா மன்னர் மார்க் ஸக்கர்பெர்க் பார்த்தார். கிட்டத்தட்ட நானூறு வல்லுனர்கள் கொண்ட குழு அமைத்து அல்லும் பகலும் நேரடி மேற்பார்வையில் ஆக்குலஸ் (Oculus Rift) என்ற மெய்நிகர்சனக் கண்ணாடிக் கருவியை உருவாக்கி சமீபத்தில் சந்தையில் விட்டிருக்கிறார் மார்க். இன்றைய தேதிக்கு சந்தையில் இருப்பதில் அதி நவீனமானது ஆக்குலஸ் ரிஃப்ட். 

VR கண்ணாடியில்லாமல் அதற்கான வீடியோவைப் பார்த்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான்:


கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்த்தால் ‘இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது’ என்று பாடிக்கொண்டே ஒரே காட்சியாகப் பார்க்கலாம். 
Virtual Reality (VR) ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு பக்கம் புயலடிப்பது  Augmented Reality (AR)-இல். ‘Augmented’ என்றால் ஏற்கெனவே இருப்பதை மேம்படுத்தி, உபரியாகச் சேர்த்து புதிய அனுபவத்தைத் தருவது. இது என்னப் புதுக்கதை என்கிறீர்களா? VR-க்கும்  AR-க்கும் என்ன வித்தியாசம் என்பதை முதலில் பார்த்துவிடுவோம். VR என்றால் என்னவென்று இந்நேரம் உங்களுக்கு குன்சாகப் புரிந்திருக்கும். VR என்பது இல்லாத மாயத்தோற்றத்தை உள்ளதுபோல் காட்டுவது, உணரவைப்பது. நிஜ ஜெயில் போல க்ராபிக்ஸ் பண்ணி உங்களை உள்ளே உக்கார வைப்பது VR. AR நிஜ உலகில் இல்லாத ஒன்றைப் புகுத்தி உங்களது அனுபவத்தை மேம்படுத்துவது. மிகவும் எளிமையான உதாரணம் 20:20 கிரிக்கெட் விளையாட்டுகளைத் தொலைக்காட்சியில் காணும்போது நிஜ மைதானத்தின் விளையாட்டைக் காட்டி அதன்மேலேயே ஸ்கோரையும் படரவிட்டுக் காட்டுகிறார்களே. ஒருவர் பாயிண்ட்டிலிருந்து மிட்-ஆனுக்கு நகர்கிறார் என்பதைக் கோடுபோட்டு அவர் நடந்துபோகும்போதே காட்டுகிறார்களே. அதுதான் AR. ராஜா சின்ன ரோஜாவோடு பாட்டில் ரஜினியோடு லூட்டி அடிக்கும் கார்ட்டூன்களை ஒரு எளிய உதாரணத்துக்காகச் சொல்லலாம். 



நிஜக்காட்சியின் மீதே பொய்க்காட்சியையோ இன்னொரு நிஜக்காட்சியையோ இரண்டாம் அடுக்காகச் சேர்த்து ஒரே காட்சியாகக் காட்டுவதுதான் AR. இப்போதைக்குக் கண்ணாடி போன்றிருப்பதை கண்ணுக்கு மேலேயே பொருத்தும் காண்டாக்ட் லென்ஸ் வடிவில் கொண்டுவரமுடியுமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஈலான் மஸ்க் (Elon Musk) என்று ஒருவர் இங்கிட்டு இருக்கிறார். லேசான கூகுள் தேடலில் அவரைப்பற்றி அறிந்துகொள்ளலாம். டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் சி.இ.ஓ.! ஸோலர் ஸிடி நிறுவனத்திலும் அவருக்குப் பெரும்பங்கு இருக்கிறது. ‘சாத்தியம் என்பது சொல் (மட்டும்) அல்ல - செயல்!’ என்ற கமல்ஹாஸனின் கூற்றுக்கு மிகச் சரியான உதாரணம் இந்த மனிதர். மிகச் சமீபத்தில் நடந்த Code Conference 2016 மாநாட்டில் தொழில்நுட்பப் பெருந்தலைகளையெல்லாம் அழைத்திருந்தனர். ஈலானும் அதில் ஒருவர். அசுவாரஸ்யமான நேர்முகமாளர்களுடனுடனான ஈலானின் சுவாரஸ்ய உரையாடல் முழுவதுமாக யூட்யூபில் கிடைக்கிறது. VR குறித்தான பார்வையாளரின் கேள்விக்கு ஈலான் மஸ்க் அளித்த பதில் மிக முக்கியமானது. சுருக்கமாகச் சொன்னால் ‘நிஜத்திற்கும், மாயைக்கும் வித்தியாசம் காணமுடியாத தொழில்நுட்பத்தை மனிதர்கள் விரைவில் எட்டிவிடுவார்கள். இப்போதிருக்கும் தொழில்நுட்பத்தைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானதொரு தொழில் நுட்பம் அந்தச் சூழலை ஏற்படுத்தும். அதற்கு எத்தனை ஆண்டுகளானாலும் அது மனிதனின் பரிணாம வளர்ச்சியின் கால அளவு கோலில் சிறுதுளியாகவே இருக்கும்’. விரிவான பதிலை இச்சுட்டியில் பார்க்கலாம்.


இன்னும் சுருக்கமாக ரெண்டே வார்த்தைகளில் சொல்வதானால் “வாழ்வே மாயம்”! 
MR-இன் சாத்தியங்கள் எல்லையில்லாதவை. கடந்த பதினைந்து வருடங்களில் நாம் கண்ட முன்னேற்றங்களையெல்லாம் இன்னும் ஓரிரண்டு வருடங்களிலேயே புலிப்பாய்ச்சலால் தாண்டிக் கடக்கும் அது. வீடியோ கான்ஃபரன்ஸ் என்று இப்போதிருப்பதெல்லாம் MR தயவில் உருமாறி நீங்களே கலிஃபோர்னியாவிலிருந்துகொண்டு பங்களூருக்குப் போய் அந்த அறையில் உட்கார்ந்துகொண்டு சக ஊழியர்களை முப்பரிமாணத்தில் பார்த்து உரையாடலாம். அவர்கள் குடிக்கும் தேனீர் கோப்பையிலிருந்து எழும் ஆவியை முப்பரிமாணத்தில் நிஜம்போலப் பார்க்கலாம். உங்கள் பாஸின் முன்னெற்றி வழுக்கையில் உங்கள் முகம் பார்க்கலாம். என்ன..காய்கறி வாங்க வந்துவிட்டு அயாம் ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம் என்று ஜல்லியடிக்கமுடியாது. மருத்துவ துறையிலும் இந்த நுட்பம் அபார வித்தைகளைச் செய்து நிறைய உயிர்களைக் காக்கவிருக்கிறது. உலகம் இன்னும் சுருங்கும். 

VR-ம் AR-ம் சேர்ந்தால் என்னாகும்? MR - Mixed Reality!  VR நீங்களே களத்திலிறங்கி விளையாடும் மாய உலகம். AR-இல் நிஜத்தின்மீது காட்டப்படும் நிஜம்போன்ற பொய்யுடன் உங்களால் உரையாடமுடியாது (non-interactive). இரண்டையும் இணைக்கும் MR-இல் உங்களால் இயக்கமுடிகிற நிஜம்போன்ற பொய்யுலகை நிஜ உலகில் காணலாம். ஆஹா! கை அரித்து கவிதை எழுதவேண்டும் போல இருக்கிறது! 
இல்லாததை இருப்பதுபோலவும்
இருப்பதின் மேல் இல்லாததையும்
இணைத்துக்காட்டியதுபோதும் 
ஈசா
எல்லாவற்றையும் இணைத்துக் காட்டி
என்னைக் குழப்புவதேன் 
எம்பெருமானே!

அடிக்க வேண்டும் போலிருக்கிறதா. கொஞ்சம் பொறுத்தால் MR-இல் வருவேன். கை வலிக்க அடிக்கலாம்!  எனக்கும் வலிக்கும்!


சம்பவம் - 3

கென்னியின் நிறுவனம் டெஸ்லா கார்களுக்குத் தேவையான சில உணரிகளைத் (sensor) தயாரித்துத் தருகிறது. அவ்வுணரிகள்தான் டெஸ்லாவின் மாடல் எக்ஸை நீங்கள் நெருங்கும்போது கதவைத் திறந்து விடுகிறது. டெஸ்லா என்றால் என்னவென்று கேட்கும் ஆத்மாக்கள் ஐம்பது பைசா தபால்தலை ஒட்டிய சுய விலாசமிட்ட அஞ்சலை என் விலாசத்துக்கு அனுப்பவும்!

கென்னியைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது அவரது அறைக்கு வெளியே ஓரத்தில் உட்கார்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்ததுபோலிருந்தது. அருகில் நெருங்கி ‘அடப்பாவி ராம்பிரசாத்!’ என்று அவன் முதுகில் அறைந்தேன். அந்தக் கடன்காரனைத்தான் இவ்வளவு வருடங்களாக கூகுள், முகநூல், லிங்க்ட் இன் என்று ஒரு இணையச்சந்து பாக்கியில்லாமல் எல்லாவிடங்களிலும் தேடி ஓய்ந்து போயிருந்தேன். பழைய நட்பு வட்டத்தில் காணக்கிடைக்காத ஒரே ஆளாக இருந்தது அவன்தான். திடுக்கிட்டுச் சில நொடிகள் என்னை உற்றுப் பார்த்துவிட்டு சதிலீலாவதியில் கமலைப் பனிரெண்டு வருடங்கள் கழித்துப் பார்க்கும் ரமேஷ் அரவிந்த் போலவே மொத்த அலுவலகமும் ஸ்தம்பிக்கும்படியாக ‘டேஏஏஏஏஏஏய். அருணு….. இங்கிட்டு என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே!’ என்று அலறினான். அவன் கழுத்துப்பட்டையில் தொங்கிய அடையாள அட்டை ‘Ram Prasad - Director of Mixed Reality’ என்றது. கடைவாயில் எச்சில் வழிய கண்கள் ஒளிர்ந்து விரிய அவன் பேசத்துவங்கிய இரண்டாவது நிமிடத்தில் கென்னி வந்து ‘Can you guys get a room and continue with your conversation?’

***
புதியதோர் உலகம் செய்வோம் என்று என்றோ பாவேந்தர் திருவாய் மலர்ந்தது இன்று நனவாகிக்கொண்டிருக்கிறது. நாளைய உலகம் இன்றுபோலிராது. மனிதன் நிஜ உலகின் பரிமாணத்தையும் எல்லையையும் சாத்தியங்களையும் தனது அயராத அறிவியல், தொழில்நுட்ப முயற்சிகளினால் அபாரவேகத்தில் விரித்துக்கொண்டே போகிறான். VR, AR, MR போன்றவையெல்லாம் அதற்கான படிகளே. என்ன, இவை வேகமாக நகர்ந்து நம்மையும் அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் மின்படிகள். 

செல்வோம்!

*** 

நன்றி: சொல்வனம்.காம் (www.solvanam.com)

ஆசிரியர்கள்!

தெற்குத் தெருவில் இருந்தது சுந்தரராஜன் ஸார் வீடு. அவர் அப்போது வற்றாயிருப்பில் பிரபல வாலிபால் ப்ளேயர். லேசான கூன் விழுந்ததுபோல் முதுகு. நல்ல உயரம். தலையை கர்லிங்காக படிய வாரியிருப்பார். நல்ல மீசை. தெற்குத்தெரு தலைகாணித்தெரு சந்திப்பில் ஒரு பாழடைந்த திரையரங்கம் இருந்தது. அதன் முன்னால் சிறிய வாலிபால் மைதானத்தில் ஆடுவார்கள். மேலப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களிலிருந்து மற்ற ஆட்டக்காரர்கள் வந்திருக்க சுந்தரராஜன் ஸார் மட்டும்தான் ஒரே அக்ரஹார ஆட்டக்காரர். அவர் வீட்டு மொட்டை மாடியில் குழுமுவோம். சூரிய நமஸ்காரத்தில் ஆரம்பித்து யோகாசனங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொடுப்பார். சவாசனம் முடிந்தபிறகு சில நிமிடங்கள் உக்கிரமாகச் சொற்பொழிவாற்றுவார். நரம்புகளெல்லாம் முறுக்கேறும். மனதில் பாரதியார் வந்து போவார். வகுப்பில் பையன்களில் யாரையாவது எழுப்பி பாடம் ஒன்றை முழுவதுமாக வாசிக்கச் செய்து பிறகு அப்பாடத்தைப் பற்றிய விளக்கங்கள் சொல்லி நடத்துவது அவரது பாணி. வாசிக்க என் முறை எப்போது வரும் என்று ஆவலுடன் இருந்த நாட்கள் இனிது.

முசிறியில் வசித்த இரண்டாண்டுகள் எனக்கு மிக முக்கியமானவை. அரசு உயர்நிலைப் பள்ளியின் பிரம்மாண்ட மைதானத்தில் செலவழித்த நாட்கள் அதிகம். முட்டி ஒட்டியதால் என்ஸிஸியில் நிராகரிக்கப்பட்டதும், விளையாட்டு ஏதாவது ஒன்றில் சேரலாம் என்று நினைத்தபோது ஆபத்பாந்தவனாக வந்தவர்கள் பாலாஜி ஸாரும், சுந்தர்ராஜ் ஸாரும். தினமும் காலையில் ஐந்தரை மணிக்கு மைதானத்துக்கு வந்துவிடவேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வாலிபால் பயிற்சி. எங்கள் குழு நன்றாக விளையாடி அக்கம்பக்க ஊர்களையெல்லாம் ஜெயித்தோம். நானும், சுந்தரபாண்டியனும், அய்யாவு-வும் பிரதான ஆட்டக்காரர்கள். எனது அஃபென்ஸ் ஸ்டைல் ஸர்வீஸை எடுக்க இயலாமல் எதிராளிகள் திண்டாடினார்கள். இது தவிர ஷட்டில் காக்கிலும், ஹாக்கியில் லெஃப்ட் ஹாஃப் ஆகவும் விளையாடினேன். முசிறி நூலகத்திற்கு எதிர்வீட்டில்தான் நடராசன் ஸார் இருந்தார். கணக்கு வாத்தியார். அவர் வீட்டுக்கு ட்யூஷன் போவோம். ‘மட்டி’ ‘பண்டி’ என்று பிரத்யேக வார்த்தைகளால் பையன்களைத் திட்டுவார்.

‘மா.இ. ஐயா’ என்ற மா. இராமசாமி ஐயாதான் தமிழாசிரியர். கதராடை மட்டுமே உடுத்தி வருவார். வார்த்தைக்கு வார்த்தை நிறைய இடம் விட்டு எழுதவேண்டும். எழுத்துகள் ஒட்டாது எழுத வேண்டும் என்று மிகுந்த கண்டிப்பு காட்டுவார். கையில் ஓரடி நீளத்திற்குக் குறுந்தடி ஒன்றை வைத்திருப்பார். எங்கள் எல்லாரது உள்ளங்கைகளிலும் அந்தக் குறுந்தடி விளையாடியிருக்கிறது. நோட்டுப்புத்தகத்தில் வீட்டுப்பாடத்தைப் பார்த்து, அவரது குண்டான விரல்களிலொன்றை வார்த்தைகளுக்கு இடையே வைப்பார். போதுமான இடைவெளி இல்லாமல் வார்த்தைகள் விரலின்பின் மறைந்தால் அந்தப் பையன் அழைக்கப்பட்டு குறுந்தடி பரிசளிக்கப்பட்டு கையை உதறிக்கொண்டே இருக்கைக்குத் திரும்பிச் செல்வான்.

மதுரை டிவிஎஸ் பள்ளியில் +1, +2 படித்தேன். விளாச்சேரியிலிருந்து வெங்கட்ராமன் ஸார் வருவார். கணக்குப் பதிவியல், வணிகவியல் பாடங்களை ஆங்கிலத்திலும் (மூன்றாம் க்ரூப்பிற்கும்) தமிழிலும் (நான்காம் க்ரூப்பிற்கும்) எடுப்பார். செக்கச் செவேலென்று தாடி மீசையுடன் இளமையாக சத்யா கமல்ஹாசன் போன்றிருப்பார். அப்போது எபினேசர்தான் பள்ளி முதல்வர். பள்ளியில் சேர்ந்த நாளன்றும், ஓரிரு தருணங்களிலும் அவரைப் பார்த்ததோடு சரி. மொத்தப்பள்ளியும் கண்டிப்புக்கும், ஒழுக்கத்திற்கும் பேர் போனது.

செளராஷ்ட்டிர கல்லூரியில் சொ.சொ.மீ. சுந்தரம் ஸார். நிறுவனச் சட்டம், வணிகம் என்று நிறைய பாடங்கள் எடுத்தார். SSM sir என்று மாணவர்கள் மத்தியில் அழைக்கப்பட்டார். சொ.சொ.மீ. சுந்தரம் என்பது ‘சொல்லைச் சொல்லால் மீட்டிய சுந்தரம்’ என்று கேள்விப்பட்டு ஆச்சரியமாக இருந்தது. நெற்றி நிறைய திருநீறணிந்து வருவார். மிகவும் கண்டிப்பானவர். மீனாட்சியம்மன் கோவிலில் சைவச் சொற்பொழிவாற்றுவார் என்று கேள்விபட்டிருக்கிறேன்.

இவர்கள் அனைவரும் நினைவுப்பதிவின் மேலடுக்குகளில் இருந்ததினால் நினைவுகூர்ந்து குறிப்பிடுகிறேன். இன்னும் நிறைய முகம் நின்று பெயர் மறந்த, பெயர் நின்று முகம் மறைந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

குரு தெய்வம் என்று சும்மா சொல்லி வைக்கவில்லை. இந்த ஆசிரியர்கள் இல்லையேல் நானில்லை. எழுத்தறிவித்த அனைத்து இறைவர்களுக்கும் நன்றிகளும் வந்தனங்களும்.

***

Friday, January 22, 2016

Hero Puch

எனது இரு சக்கர வாகனங்கள் குறித்த அனுபவங்களை முன்பு எழுதியிருக்கிறேன். ஆனால் இது விடுபட்டுப் போன ஒரு சம்பவம். 
பஜாஜ் எம்-80 கோலோச்சிய காலம். நூறு ஸிஸிக்களில் யமஹாவுக்கு தனி மவுசு. டிவிஎஸ் சுசுகியும், ஹீரோ ஹோண்டாவும் இன்னும் சில உதிரி பைக்குகளும் சந்தையில் குவிந்திருந்தன. ஸ்கூட்டர்கள் ஓட்டுபவர்கள் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் போல பாலன்ஸ் செய்து ஓட்டிச் சலித்து பஜாஜ் எம்-80-க்குத் தாவ ஆரம்பித்திருந்தார்கள். அதில் ஸ்கூட்டரைப் போலவே இடது கைப்பிடியில் கியர் மாற்றவேண்டும். சில சமயம் ஒன்றிலிருந்து நேரடியாக மூன்றுக்கு வழுக்கிக்கொண்டு ஸ்லிப்பாகும். இல்லாவிட்டால் மூன்றிலிருந்து ஒன்றுக்குச் சரிந்துவிடும். இருந்தாலும் அதன் பிரபலம் குறையவில்லை. ஆட்கள், பலசரக்கு, கோழி, நாய், பன்றி, கன்றுக்குட்டியெல்லாம் வைத்துக்கொண்டு அதில் போவார்கள். 
நான் வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டதே யெஸ்டியில் தான். பிறகு பெப்ஸியில் வேலைக்குச் சேர்ந்ததும் தினமும் யெஸ்டியில் பழங்காநத்தத்திலிருந்து பரவை சென்று வர மாத சம்பளத்தில் பாதிக்கு மேல் பெட்ரோலுக்கு அழ வேண்டியிருந்ததால் அதில் செல்ல முடியவில்லை. யெஸ்டியில் மண்ணெண்ணை, டீசல் என்று ராமர் பெட்ரோல் மாதிரி ஆளாளுக்கு எதையாவது கலந்து ஓட்டிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அம்மாதிரி செய்ய மனது வரவில்லை. பஸ்ஸில் போய்ப் பார்த்தேன். சரி வரவில்லை. பெப்ஸி நிறுத்தத்தில் நிறுத்த மாட்டார்கள். பரவையில் இறக்கிவிட திரும்ப நடந்து வரவேண்டும். நேரத்துக்குப் போய் வரமுடியாமல் ரொம்பவும் அசெளகரியாமாக இருந்தது. ஓரிரு நாளிலேயே வங்கிக்கு தினமும் சென்றுவரவேண்டிய வேலை எனக்குக் கொடுக்கப்பட்டதால் முதலாளி இருசக்கர வாகனம் வாங்கிக்கொள்ள அனுமதிகொடுத்ததும் சட்டென்று பாண்டியன் மோட்டார்ஸ் சென்று ஒரு டிவிஎஸ் 50-ஐத் தள்ளிக்கொண்டு வந்தோம். சாலையில் சைக்கிள்கூட என்னை முந்திச் செல்வதைப் போன்ற பிரமை. யெஸ்டியிலிருந்து டிவிஎஸ் -50க்கு இறங்கிய கழிவிரக்கம் சேர்ந்துகொள்ள இரண்டாம் நாளே ஏதோ காரணம் சொல்லி அந்த வண்டி வேண்டாம் வேறு வண்டி வாங்கவேண்டும் என்று அடம்பிடித்து ARASPVPV-Co க்குப் போனால் கடையை இழுத்து மூடும் தறுவாயில் விற்காது ஒரு சில யெஸ்டிகள் பளபளவென நின்றுகொண்டிருந்தன. அதில் ஒன்றுக்கு கொட்டேஷன் வாங்கிக்கொண்டு முதலாளியிடம் கொண்டுபோய் கொடுத்ததும் என்னை ஏற இறங்கப் பார்த்து (இக்காலத்திலும் நூறு சிசி பக்கம் போகாத இளைஞனா?) - இது வேண்டாம்பா. கம்பெனியே மூடியாச்சு. ரொம்ப பெட்ரோல் குடிக்கும் என்று நிராகரித்துவிட்டார். 
மறுபடி பாண்டியன் மோட்டார்ஸ் போனேன் - அன்று காலைதான் வந்திறங்கியிருந்த அந்த வசீகர வாகனத்தைப் பார்த்தேன். மான்குட்டி போல இருந்தது அந்த வண்டி. ரெண்டே கியர்தான். முதல் கியர் போட்டு எடுத்ததும் முன்சக்கரம் துள்ளி மேலே எழுந்தது. அவ்வளவு சின்ன வண்டியில் சுலபமாக வீலிங் செய்ய முடிவது அதிசயமாக இருந்தது. அது Hero Puch. 


ஸூப்பர் வேகம். அபார பிக்கப். உடனடியாகப் பிடித்துப்போய் அதை வாங்கிக்கொண்டு பரவைக்கு விரட்டி முதலாளியிடம் காட்ட அவர் அதை வினோத ஜந்து போல பார்த்தார். ‘என்னப்பா வண்டி இது?” என்று கேட்டுவிட்டு பெட்ரோல் டாங்க்கில் எழுதியிருந்ததை மனதுக்குள் படித்துப் பார்த்துவிட்டு அவசர வேலையாக வெளியே கிளம்பிச் சென்றுவிட்டார். 
அன்று மாலையே அதை எடுத்துக்கொண்டு வைகையில் வெள்ளம் வந்து செல்லூர் சாலையெல்லாம் நீர் ஓடிய நேரத்தில் விரட்டிக்கொண்டு விரைந்து வைகைப்பாலத்தைத் தாண்டி சிம்மக்கல் வழியாக மேலமாசி வடக்குமாசி வீதி சந்திப்புக்கு வந்து - அங்குதான் அன்று மாலை ரஜினி பெப்ஸியை அறிமுகப்படுத்தவிருந்தார் - எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். அருமையான வண்டி. ரஜினி வந்துபோய் கூட்டம் கலைந்து எல்லாம் முடிந்ததும் வீட்டுக்குப் போய் உறங்க நள்ளிரவாகிவிட்டது. 
மறுநாள் காலை வண்டியில் பெட்ரோல் மிகவும் குறைவாக இருந்ததாலும், தாமதமாகிவிட்டதாலும் பரவாயில்லை ஒரு நாள் தானே என்று அதை வீட்டிலேயே நிறுத்திவிட்டு யெஸ்டியை எடுத்துக்கொண்டு பேக்டரிக்குப் போனேன். முதலாளி அவருடைய காண்டஸா காரில் அப்போதுதான் வந்து இறங்கினார். என் வண்டிச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துவிட்டு நுழைவாயில் அருகிலேயே நின்றார். நான் வண்டியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாய் விரைந்து அவரருகில் சென்று ‘வணக்கம் ஸார்’ என்றேன். அவருக்குப் பின்னால் சூசை சாரும், கணேசன் சாரும் பவ்யமாக நின்றிருந்தார்கள். முதலாளியின் கைத்தடிகள் ரெண்டு பேர் சற்று தள்ளி காரருகே நின்றிருந்தார்கள். ‘என்ன இந்த வண்டில வந்துருக்கே? புது வண்டி என்னாச்சு?’ எனக் கேட்க நாள் பதில் சொல்ல முற்படுவதற்குள் அவரே தொடர்தார் ‘அது என்ன வண்டி? ம்ம்ம்ம்ம்… ஆங்.. ஹீரோ பொச்சு. அதை எடுத்துட்டு வர்லியா?’ என்றார். 
***

சுந்தர்ராஜன் ஸார்!


என் சொந்த ஊர் வற்றாயிருப்புக்குச் சென்று 20-25 வருடங்களுக்கு மேலாகிறது. ஊருக்கு ஒரு முறையாவது போகவேண்டும் என்ற உந்துதல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதே சமயத்தில் பால்ய நினைவுகளில் பதிந்திருக்கும் வற்றாயிருப்பின் பிம்பம் கலைந்துவிடுமோ என்ற அச்சமும் கூட. கடந்த ஜூலையில் விடுமுறைக்குச் சென்றிருந்தபோது எவ்வளவோ முயற்சி செய்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் வரை வந்தும்கூட வற்றாயிருப்பு செல்லமுடியாமல் போனது வருத்தமே. ஊரைப் பற்றி அதிகம் விசாரிக்காமலும், இணையத்தில் தேடாமலும் இருந்தேன். முகநூலில் தொடர்ச்சியாக வற்றாயிருப்பு நிகழ்வுகளைப் பதிந்து வரும் உறவினர் திரு. கண்ணன் மாமா Beema Rao Kannanஅவர்கள் மூலமாக நான் படித்த இந்து உயர்நிலைப் பள்ளியின் இணையதளத்தை இப்போதுதான் கண்டுகொண்டேன் (http://www.hhssalumni.org/index.php
இந்தத் தளத்திலிருக்கும் புகைப்படங்களை ஒரு வித பதற்றத்துடனே பார்த்தேன். ஆறாம் வகுப்பில் முதல் மாணவனாக ஆண்டுவிழாவில் ரூ.50 பரிசு வாங்கிய அந்த மேடை அப்படியே இருக்கிறது. வண்ணப் பூச்சுகளும் திறந்த வெளியில்லாது ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் மட்டும் புதிதாகச் சேர்ந்திருக்கின்றன. புகைப்படங்களை ஆவலுடன் ஆராய்ந்தபோது கண்ணில் பட்ட இந்தப் படம் என் மனதில் எழுப்பிய அலைகளை எழுதி மாளாது. வலது புறத்திலிருந்து இரண்டாவதாக நிற்பவர் எனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களில் ஒருவரான திரு. சுந்தரராஜன் ஸார் அவர்கள். அதே பாரதியின் முறுக்கு மீசை. அதே சிகையலங்காரம். அதே தீட்சண்யமான கண்கள். நரைகூடியிருப்பது ஒன்றுதான் வித்தியாசம். அப்படியே இருக்கிறார். அப்போது அவர் பிரபல வாலிபால் ஆட்டக்காரர். வற்றாயிருப்பில் வாலிபால் குழுவின் பிரதான ப்ளேயர். தலைகாணித் தெரு வழியாகப் பள்ளிக்குச் செல்லும் வழியில் பால் சொஸைட்டிக்கு வலதுபறம் சிதிலமான நிலையில் ஒரு திரையரங்கம் இருந்தது. அதற்கு முன்னால் இருந்த காலியிடத்தில் வலை கட்டி விளையாடுவார்கள். அவருக்கு லேசாகக் கூன் விழுந்ததைப் போன்று முதுகு இருக்கும். உயரமானவர். தெற்குத்தெருவில் அவர் வீட்டு மொட்டை மாடியில் தினமும் மாலை நாங்களெல்லாம் வந்து சேர பொறுமையாக யோகாசனங்கள் அனைத்தையும் சொல்லிக்கொடுப்பார். உக்கிரமாக சுதந்திரத்தைப் பற்றியும் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டவர்களுக்கு எதிராகவும் தினமும் சொற்பொழிவாற்றுவார். சிலம்பம் சொல்லிக்கொடுத்தார். அவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் வாலிபால் விளையாட்டில் தீவிரமாக இறங்கி முசிறியில் படித்தபோது பள்ளி வாலிபால் குழுவின் தலைவனாக இருந்தேன். 
சுந்தரராஜன் ஸாரின் வகுப்பில் நானும் இன்னொரு பூனைக்கண் பையனும் அவர் பெயருடன் இருந்தோம். வருகைப் பதிவின் போது அகர வரிசையில் ஒவ்வொருரின் பெயராகச் சொல்லிக்கொண்டே வந்து எங்கள் பெயரை அழைக்கும்போது லேசாக அவர் முகத்தில் புன்முறுவல் தோன்றும். ஒவ்வொரு நாளும் எங்களில் ஒருவர் எழுந்து ஒரு பாடத்தை வாசிக்கவேண்டும். வாசித்து முடித்ததும், விவரமாக அந்தப் பாடத்தை விளக்குவது அவரது பாணி. நானும், வடக்குத் தெரு மகேஷும்தான் தடுமாறாமல், திக்காமல் வாசிப்பதில் போட்டி போடுவோம். 
அவரை இப்புகைப்படத்தில் பார்க்கமுடிந்தது அளவிலா மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த முறை இந்தியா வரும்போது என்ன ஆனாலும் பரவாயில்லை என்று எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து முதல் காரியமாக வற்றாயிருப்பு செல்ல வேண்டும். ஆசானைச் சந்திக்கவேண்டும். அவரது ஆசிகளைப் பெறவேண்டும்.
கண்ணன் மாமாவைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். பள்ளியின் மேடைக்கு இந்தப் புறம் வெட்ட வெளியாக இருக்கும். இருபுறமும் வகுப்பறைகள். பெரிய பெரிய வேப்ப மரங்கள் இருந்தன. வாரயிறுதியில் அங்கு அவர் வருவார். மேலப்பாளையத்திலிருந்து இளைஞர்கள் ஒரு குழுவாக அங்கு வந்து சேருவார்கள். அவர்கள் வரிசையாக ஒழுங்குடன் நிற்க, கண்ணன் மாமா உற்சாகத்துடன் அவர்களுக்குக் கராத்தே சொல்லிக்கொடுப்பார். இன்னும் நினைவிலிருக்கிறது. அவர்கள் வரிசையாக முஷ்டியை மடக்கிக் கைகளை பக்கவாட்டில் விலாவுடன் சேர்த்து விறைப்பாக மூச்சடக்கி நிற்க, கண்ணன் மாமா ஒவ்வொருவர் எதிரிலும் நின்றுகொண்டு கராத்தே முறையில் அவர்களின் வயிற்றில் பலமாக ஒரு குத்து விடுவார். ய்யேஏஏ என்று கூட சத்தமாக பின்னணி குரலுடன். அவர்கள் முகத்தில் சலனமில்லாது நிற்பார்கள். பின்னர் மாமா நின்றுகொள்ள அவர்கள் ஒவ்வொருவராக வந்து அவர் வயிற்றில் குத்துவார்கள். எனக்கு அடிவயிற்றில் வலித்தது போன்ற பிரமை. அவர் கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்றவர் என்று நினைக்கிறேன். அமைதியான காலைப்பொழுதுகளில், வேம்பு இலைகள் பரவியிருந்த மண்தரையில், குருவி, குயில், காக்கைகளின் கரைதல்களோடு அவ்வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றன. 
இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் ஓரளவாவது ஆரோக்கியத்தைப் பேணமுடிகிறது என்றால் அதன் ஆதார உந்துதல்களாகவும், முன்மாதிரியாகவும் இருந்தவர்கள் சுந்தரராஜன் ஸாரும், கண்ணன் மாமாவும், இன்னும் சில ஆசான்களும்தான்.

+++

Tuesday, January 05, 2016

400-லிருந்து 1000...


1987 - தீபாவளியன்று காஞ்சிபுரத்தில் பாலாஜி வீட்டில் இருந்தேன். அதிகாலை எண்ணைக் குளியல், பலகாரம், லஷ்மி வெடி அமளி துமளியெல்லாம் முடிந்ததும் மதியம் திரையரங்கு ஒன்றுக்குச் சென்றோம் (பெயர் நினைவிலில்லை). வழக்கம்போல் தீபாவளி ரிலீஸ் படங்களின் சுவரொட்டிகள் எங்கெங்கும். அவற்றில் தனித்து நின்றது இரண்டு. ஒன்று கருப்பு வெள்ளை. முழுக்கைச் சட்டையை புஜம் வரை மடக்கிவைத்து, அயர்ன் செய்த Relaxed Fit பேண்ட்டில் இன் செய்து, நமக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கமல் நிற்பார். சுவரொட்டியின் வடிவமே வித்தியாசமாக ஆளுயர செவ்வகம் (நான் சிரித்தால் தீபாவளி). இன்னொன்றில் வட இந்திய பாணி தலைப்பாகை கட்டியிருக்கும் கமலின் க்ளோஸப் முகம் முழுதும் பல வண்ணங்களைச் சிதறியடித்தாற்போல் ( அந்தி மழை மேகம்!) வண்ண மயமாகவிருந்தது. தமிழ்ச் சினிமா சுவரொட்டிகளில் அவை தனித்து நின்றவை. பிற்பாடு கோபுர வாசலிலே படத்திற்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் வெளியே - எதிரே வரிசையாக கட் அவுட் வைத்திருப்பார்கள் - தபால் தலையின் கத்தரித்த விளிம்புகளின் டிசைனில் போஸ்டர் அடித்திருந்தார்கள். இரண்டிற்கும் பிஸி ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்று நினைக்கிறேன்.


நாயகன் படம் ஆரம்பித்து டைட்டில் ஓடிக்கொண்டிருக்கையில் ‘இசை’ என்று போட்டு ‘இளையராஜா’ என்றும் போட்டு அடைப்புக்குறிக்குள் “(400-வது படம்)” என்று போட்டிருந்தார்கள். ஒரு கணம் புல்லரித்தது நினைவிலிருக்கிறது. அந்தப் படத்தின் பின்னணியிசையும் பாடல்களும் நம்மை முப்பது வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும். 
சென்ற வாரயிறுதியில் யூட்யூபில் தாரை தப்பட்டை பாடல்களைக் கேட்க உட்கார்ந்தேன். இளையராஜாவின் 1000-வது படம் என்று டைட்டிலுடன் அந்த ஆல்பம் தொடங்கியது. ஆயிரம் படங்கள் என்று சுலபமாகப் படித்துவிடுகிறோம். அதற்குப் பின் அந்த இசைக் கலைஞனின் நாற்பதாண்டு கால உழைப்பு அடங்கியிருக்கிறது! 


அபரிமிதமாக ஒன்று கிடைக்கும்போது அதன் மதிப்பு தெரியாத ஜென்மங்களாகத்தான் நாம் இருக்கிறோம். அதனால்தான் வாய் கூசாமல் ‘மைக்கேல் ஜாக்ஸன் பாடல்கள் மொத்தமே ஐம்பதுக்குள்தான் இருக்கும். ஆனால்….’ என்று இளையராஜாவின் படைப்புகளின் எண்ணிக்கையை மட்டும் ஒப்பிட்டுச் சிறுமை செய்ய முடிகிறது. இளையராஜா இனிமேல் சினிமாவை விட்டுவிட்டு என்னென்ன செய்யவேண்டும் என்று பட்டியல் போட முடிகிறது. இவர்களின் தலையாய பிரச்சினையே எல்லாவற்றையும் மேற்கத்தியக் கண்ணாடிகள் போட்டுக்கொண்டு பார்ப்பதும், எல்லாவற்றையும் மேற்கத்திய அளவுகோல்களைக் கொண்டே அளப்பதும்தான். 
நல்லவேளை ‘ஆயிரம் படங்கள் இசையமைத்து என்ன பிரயோஜனம்? பிரிட்னி ஸ்பியர்ஸ் கிஸ் மி பேபி என்றே ஒரே ஆல்பத்தில் போன உயரத்தை ராஜாவால் தொட முடியாது. அவ்வளவு ஏன்! ஒய் திஸ் கொலைவெறிக்கு யூட்யூபில் கிடைத்த ஹிட்டில் பத்தில் ஒரு பங்குகூட ராஜாவின் எந்தப் பாடலுக்கும் கிடைக்கவில்லை!’ என்று சொல்லாமல் விட்டார்கள்! 
தாரை தப்பட்டை - நொறுக்கியிருக்கிறார் ராஜா!