Sunday, December 24, 2006

பாலைஸ்! கோனைஸ்! கப்பைஸ்!




தலைகாணித் தெருவில் எங்கோ இருந்தாலும் அந்த மணிச் சத்தத்திலிருந்தே ஐஸ் வண்டிக் காரர் வருவது தெரிந்துவிடும்.

எங்கள் வீடு நடுத்தெரு முக்கில் இருந்தது ஒரு வசதி. அதிலும் திண்ணைக்குச் சுவர் இல்லாது வைர வடிவச் சதுரங்களாலான மரத்தட்டி மறைப்பு மட்டும் இருந்ததால் திண்ணையின் குளிர்ச்சியான சதுரச் செங்கல் தரையில் உட்கார்ந்து சுண்ணாம்புச் சுவரில் சாய்ந்து கொண்டு தெருவில் வருவோர் போவோரை வேடிக்கைப் பார்ப்பது மதிய நேர உண்ட மயக்க வேலைகளில் ஒன்று. புதிதாகக் கட்டிய அல்லது சமீபத்தில் புதுப்பித்த வீடுகளில் மட்டும் மரத்தட்டிக்குப் பதில் செங்கல் சுவரெழுப்பி, சிமெண்ட் அச்சுகளில் வேலைப்பாடுகளுடன் கூடிய தட்டியைக் கட்டியிருப்பார்கள். மரத்தட்டிகளில் ஏதாவது பருத்திச் சேலையோ அல்லது வேட்டியோ காயப் போடப் பட்டிருக்கும்.

அவிழ்ந்துவிடுமோ என்று முழங்கால்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேட்டியுடன் கேரியரில் இருக்கும் செவ்வக மரப்பெட்டியை வலது கையால் அணைத்தபடி இடது கையால் சைக்கிள் கைப்பிடியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு வருவார் அந்த ஐஸ் வண்டிக் காரர். நெற்றியில் வியர்வை வழிய மேலே இரண்டு பொத்தான்கள் திறந்திருக்கும் சட்டையின் பை கனமாகத் தொங்க முக்கில் சைக்கிளை நிறுத்தி கிணுகிணுவென்று மறுபடியும் மணியடிப்பார்.

வீட்டுத் திண்ணைகளிலிருந்து பலவிதங்களில் தலைகள் வெளியே நீட்டப்படும். சில வீட்டுக் கதவுகள் சார்த்தப் படும். சில திறந்து அம்மாக்கள் படியில் இறங்கி நிற்க அவர்கள் சேலைத் தலைப்புகளிலிருந்து பையன்களும் பெண்பிள்ளைகளும் வெளியேறி ஓடத் துடித்துக் கொண்டிருப்பார்கள்.

ஐஸ் என்பது ஒரு வினோதமான வஸ்து எங்களுக்கு. "பாரின்லலாம் ஐஸ் மழையா கொட்டுமாமேடா?" என்பது நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்ளும் சில ஆச்சரியங்களில் பிரதானமானது. "சே. நம்மூர்ல ஐஸ் மழெ பேஞ்சா எப்படி இருக்கும்! அப்படியே டவரால டம்ளர்ல பிடிச்சு சீனி போட்டுச் சாப்பிடலாம்ல?" என்பான் முத்துலிங்கம். அந்தப் 'பாரின்' நாட்டுக்கு ஏழு ஜென்மங்களில் நான்காம் ஜென்மத்திலாவது ஒரு முறை போய்விட்டு வந்துவிடவேண்டும் என்பது எங்கள் ஆசை. இப்போதைக்கு நான் ஸ்ரீவில்லிப்புத்தூர் மட்டுமே சென்றிருக்கிறேன். அடுத்த வாரம் மதுரைக்குக் கூட்டிச் செல்வதாக அப்பா சொல்லியிருக்கிறார். இந்த ஜென்மத்தில் 'மெட்ராசு'க்குப் போக முடிந்தாலே சாபல்யம் கிடைத்துவிடும்போல இருந்தது. ராமத்தை வீட்டில் சீனுவும் முரளியும் மெட்ராசுக்குப் போய் வேலை செய்கிறார்களாம். போன வாரம் விடுமுறைக்கு வந்திருந்தபோது லுங்கி என்ற கலர் கலரான 'மூட்டிய' வேட்டியைக் கட்டியிருந்தார்கள். தெருவில் யாரும் லுங்கி கட்டி நான் பார்த்ததில்லை. லுங்கி கட்டிய புரட்சியோடு நிற்காமல் தெருவில் நின்று கொண்டு உய் உய்யென்று விசில் வேறு அடித்தார்கள். 'ஒய்' என்று ஓங்கிக் குரலெழுப்பினார்கள். இதெல்லாம் மெட்ராஸ் ஆட்கள் செய்கிற காரியங்களாம். எல்லாவற்றையும் விட எங்களோடு கிட்டிப்புள்ளோ பேந்தாவோ ஆட அவர்கள் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. எங்களைவிட அவர்கள் எவ்வளவோ வயது மூத்தவர்கள் என்றாலும் எங்களோடு சேர்ந்து எல்லாக் காரியங்களும் செய்துகொண்டுவந்தவர்கள் திடீரென்று 'பெரியவர்களாக' நடந்துகொண்டது எங்களுள் தாங்கொண்ணா எரிச்சலை ஏற்படுத்தியது. நிற்க.

ஐஸ்வண்டிக் காரர் அந்தப் பெட்டியைத் திறக்க லேசாக வெளிக் கிளம்பும் புகை ஒரு ஆச்சரியம். அந்தப் பெட்டிக்குள் என்னென்னவெல்லாம் இருக்கிறது என்று எங்கள் கற்பனை சிறகடித்துப் பறக்கும். அதற்குள் எட்டிப் பார்க்குமளவிற்கு நாங்கள் எப்போது உயரமாவோம் என்பது தீராத கவலையாகவும் இருந்தது. ஐஸ்காரரின் கரம் உள்ளே முழங்கை அளவு செல்லும். ஒவ்வொரு முறை கையை வெளியே எடுக்கையிலும் விதவிதமான வண்ணங்களில் குச்சி ஐஸ் வரும். மாஜிக் மாதிரி இருந்தது எங்களுக்கு.

குச்சி ஐஸ் 15 பைசாக்கள். எங்களுடைய தினப்படி பாக்கெட் மணி ஐந்துபைசாக்களைத் தாண்டாது என்பதால் குச்சி ஐஸ் வாங்குவது என்பது மிகவும் ஆடம்பரமான முடிவு. நான் துணிந்து முடிவு எடுத்துவிடுவேன். ரங்கனால் முடியாது. கடலை மிட்டாய்களையும் கல்கோனாக்களையும் இழப்பதில் அவனுக்குச் சம்மதமில்லை. அவன் கிராம்சீப்* வீட்டைச் சேர்ந்தவன். பெரிய வீடு. பெரிய திண்ணை. முன்பெல்லாம் அவன் வீட்டுத் திண்ணையில் பழியாய் கிடப்போம். வரிசையாக கால்நீட்டி அமர்ந்துகொண்டு ஐஸ் தின்போம். சென்ற தடவை ஆசை தாங்காது வாங்கிச் சப்பிய குச்சி ஐஸ் குச்சியிலிருந்து நழுவி அவன் வேட்டிக்குள் விழுந்துவிட்டது. துள்ளிக் குதித்து தெருவுக்கு ஓடியதில் தரையில் விழுந்த ஐஸ் துண்டை ஜிம்மிதான் மண்ணோட நக்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து அவன் இனிமேல் ஐஸ் வாங்குவதில்லை என்று சங்கல்பம் செய்து அறிவித்துவிட்டான். ஆதலால் அவன் வீட்டுத் திண்ணையில் ஐஸ் தின்னும் வைபவம் முடிவுக்கு வந்துவிட்டது.

இன்று கொளுத்திய வெயிலுக்கு ஐஸ் வாங்கவேண்டும் போல இருந்தது. தாத்தாவிடம் சொன்னால் திட்டமாட்டார் என்றாலும் பானைத் தண்ணீரைக் குடிக்கவேண்டியதுதானே - அதான் உடலுக்குக் குளிர்ச்சி என்பார். வாஸ்தவம்தான். ஆனாலும் குச்சி ஐஸின் கலர் கவர்ச்சிக்கு முன்பு பானைத் தண்ணீரும் நீர் மோரும் நிற்க முடியவில்லை.

"என்னென்ன கலர் இருக்குண்ணே?" என்று கேட்க அவர் சீட்டை விரிப்பதுபோல எடுத்து விரித்த பஞ்ச வர்ணங்களில் எனக்கு நீலம் மிகவும் பிடித்திருக்க அதையே தேர்ந்தேடுத்து வாங்கிக்கொண்டு திண்ணைக்குத் திரும்பி உட்கார்ந்தேன். குச்சி ஐஸின் மேலுச்சியில் மங்கலாகக் குச்சி தெரிந்தது. உதடுகளில் சில்லிப்பு பரவி வாய் முழுதும் குளிர முதல் உறிஞ்சில் அபரிமிதமாக உற்பத்தியாயிருந்த உமிழ்நீரும் சேர்ந்து தொண்டை வழியாக இறங்க வயிறும் குளிர்ந்தது போல உணர்ந்தேன். சட்டென்று புல்லரிப்பு உணர்வு உடல் முழுதும் பரவ மயிர்க்கால்கள் குத்திட்டன.

அதைப் பல்லால் கடித்துத் தின்னும் ஆசை இன்று வரை நிறைவேறவில்லை. பல்லால் லேசாகத் தொட்டதும் ஈறைத் துளைத்துக்கொண்டு சரேலென்று இறங்கிய குளிர்ச்சியில் கூசியது. உறிஞ்சுவது ஒன்றே ஒரே வழி. ரொம்ப நேரம் ஐஸ் இருக்கும் என்பது இன்னொரு நன்மை. முத்துலிங்கத்துக்குப் பொறுமையே கிடையாது. நான்கே கடியில் காலிசெய்து குச்சியை நக்கிக் கொண்டிருப்பான். நான் மணிக்கட்டுக்குக் கீழே ஒரு டவராவை வைத்துக்கொண்டு மெதுவாக உறிஞ்சுவேன். அது நழுவி என் டவுசருக்குள் விழுந்துவிடும் அபாயத்தைத் தவிர்க்கவும் கீழே சொட்டும் நீரைச் சேமித்துக் கடைசியில் குடிக்கவுமே டவரா.

டம்ளருக்குள் குச்சி ஐஸைப் போட்டு வைத்துக்கொண்டு அது உருக உருக நீரை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்ததும் உண்டு. முக்கால் ஐஸ் கரைந்ததும் பானைத் தண்ணீரை டம்ளருக்குள் ஊற்றிவிட்டு - இனிப்பு குறைந்து போகும் - ஐஸ் தண்ணீரைக் குடித்து முடிப்பதும் உண்டு.

தெருவில் பத்து பேர் குச்சி ஐஸ் வாங்கினால் ஒருவர் பாலைஸ் வாங்குவார். பாலைஸ் என்பது மதிய ஒளியில் அடையடையாக சூரியனிடம் மல்லுக்கட்டிப் பளீரிடும் வெண்மேகக் கூட்டங்கள் போல பால் வெண்மையாக ஆனால் குச்சி ஐஸ் போல் உறுதியாக இல்லாமல் அதிவேகமாகக் கரையும் வண்ணம் இருக்கும். பாலைஸ் குச்சி ஐஸ் வகைதான். ஆனால் பனிக்கட்டியாக இல்லாது பனித்தூளினால் செய்தது போல தெர்மாக்கோல் மாதிரி எடையற்று இருக்கும். உறிஞ்சுவதையும் மென்மையாகச் செய்யாவிட்டால் ஒரே உறிஞ்சலில் முக்கால் பாலைஸ் வாய்க்குள் போய்விடும். அதை நக்கித்தான் தின்ன வேண்டும்.

நான் பாலைஸ் வாங்க நிரம்பத் தயங்கினேன். அது கழுதைப் பாலில் செய்தது என்ற வதந்தி காரணம். ஒரே முறை வாங்கிச் சாப்பிட்டதில் சாப்பிட்டதும் நாக்கில் பரவிய லேசான கசப்புச் சுவையினால் அது கழுதைப்பாலில் செய்தது என்ற சந்தேகம் இன்னும் வலுப்பெற்றுவிட்டது. மேலும் குச்சி ஐஸ் மாதிரி இல்லாது டம்ளரில் போட்டு உருக்கிக் கொடுத்தால் சுவை மட்டமாக இருக்கும். அது மற்ற குச்சி ஐஸ்களைவிட 10 காசு அதிகம் வேறு. பெரிய ஆடம்பரச் செலவாக இருந்ததால் அதை அடிக்கடி வாங்க வசதி ஏற்பட்டிருக்கவில்லை. தாத்தா பாவம். அவரும் எவ்வளவுதான் கொடுப்பார்? ஆனாலும் அதன் மென்மையும் உருகி வழியும் வெண்மையும் ஈர்த்துக்கொண்டே இருந்ததை மறுக்க முடியாது.

ஐஸ்காரர் கிழக்காக நடுத்தெரு முழுக்க போய் கடைத்தெருவில் வலது பக்கம் திரும்பி தெற்குத் தெருவில் நுழைந்து விற்றுவிட்டு மேலப்பாளையம் வழியாக எங்கோ போய்விடுவார். கூமாப்பட்டிக்காக இருக்கும். அவர் எங்கிருந்து வருகிறார் என்று நாங்கள் கேட்டுக்கொண்டே இருந்தோம். யாரும் அவர்பின் போய்ப் பார்க்க விழைந்ததில்லை.

அடுத்தவார ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் கடைத்தெருவிலிருந்தே எழுந்த மணியோசை ஆச்சரியமாக இருந்தது. ஒன்று மணியோசை வித்தியாசமாக இருந்தது. ரெண்டாவது அது தலைகாணித் தெருவிலிருந்து வராதது. மூன்றாவது சைக்கிள் இல்லாது பெட்டி முன்புறம் இருக்க பின்னால் ஒருவர் அதைத் தள்ளிக்கொண்டு வந்தது. சீரான இடைவெளியில் அவர் "பா....லெஸ்... கோ......னெஸ்.... பா.........லெஸ்..............கப்பைஸ்" என்று குரல்கொடுத்தது புரியவில்லை.



அந்த வண்டி பத்து வீடுகள் தள்ளி நிறுத்தியிருக்க அந்த வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். நாங்களெல்லாம் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்க வண்டிக்காரர் எடுத்துக் கொடுத்த பொருள் குச்சி ஐஸ் இல்லை. அது ஒரு கூம்பு. அப்புறம் சில டப்பாக்கள்! எங்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அவரிருக்குமிடத்திற்கே ஓடினோம். சைக்கிள் பெட்டி போலல்லாது இது கீழிருந்தபடியால் உள்ளே இருப்பனவற்றை எங்களால் பார்க்க முடிந்தது. உள்ளே பகுதிபகுதியாகப் பிரித்து வண்ண வண்ணமாக டப்பாக்கள். கடைசிப்பகுதி நிறைய பாலைஸை நிரப்பி வைத்ததுபோல இருக்க பெட்டிக்கு வெளியே அந்த ஆரஞ்சுக் கூம்புகள் ஒன்றன் மீது ஒன்றாக செருகி வைத்திருக்கப்பட்டிருந்தன. ஓரமாகச் சிறிய சதுரத்தில் கொஞ்சம்போல பாலைஸ்கள் ஆயில்பேப்பரில் சுற்றிவைக்கப்பட்டிருக்க பெட்டியில் புகை நிரம்பியிருந்தது. பிளாஸ்டிக் பை ஒன்றில் ஸ்பூன் வடிவத்தில் மரத்தினால் செய்த ஸ்பூன்களை நிரப்பி வைத்துத் தொங்க விட்டிருந்தார்.

எங்களுக்கு விழிகள் வெளியே தெறித்துவிடும்போல ஆச்சரியமாக இருந்தது.

"என்னண்ணே இது?"

"அதுவா. இது கப்பைஸ். இந்த இது கோனைஸ்" என்றார் கூம்பைச் சுட்டிக்காட்டி.

"எவ்வளவு?" என்றதற்கு வண்டியின் பக்கவாட்டைச் சுட்டிக்காட்டினார்.

அங்கு எழுதியிருந்த விலைப்பட்டியலைப் பார்த்தால் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. கப்பைஸ் ஒர்ரூவாயாம். கோனைஸ் 75 காசுகளாம். மனசுக்குள் "நாலிருவத்தஞ்ச நூறு" என்று கணக்கு ஓடி ஒரு கப்பைஸ் = 4 பாலைஸ்-ம் "அஞ்சு பாஞ்ச எழுவத்தஞ்சு" வாய்ப்பாடுடன் ஒரு கோனைஸை ஐந்து குச்சி ஐஸ்களுக்கும் ஒப்பிட்டு பெருத்த ஏமாற்றத்துடன் வண்டியிலிருந்து விலகினோம்.

அவர் கூம்பு ஒன்றை எடுத்து எங்களிடம் நீட்டி 'இதையும் நீங்க சாப்பிடலாம்' என்றதை நம்பவே முடியவில்லை. அது கப்பைஸ் டப்பா மாதிரி அட்டையில் செய்தது என்று நினைத்துக்கொண்டிருந்தோம். லேசாகப் பிய்த்து வாய்க்குள் போட்டுக்கொண்டதில் மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு பிறகு கரைந்தது. பிஸ்கட் மாதிரியும் இருந்தது. வித்தியாசமான சுவை.

அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வருவதாகச் சொன்னார். அடுத்த ஞாயிறு மதியம் மறுபடியும் வருவதாகச் சொன்னார்.

ரங்கன் வீட்டுத் திண்ணையில் கூடிப் பேசினோம். "கப்பைஸ் வேஸ்ட்டுடா. இக்குணூண்டு இருக்கு. அரை டம்ளர் கூட இருக்காது. டப்பாவும் அட்டை. அதுக்குப்போயி ஒர்ரூவாயா?" என்றான் ரங்கன். அவன் சொன்னது சரிதான் என்று எங்களுக்கும் பட்டது. வாழ்நாளில் ஒரு தடவையாவது கோனைஸ் வாங்கிச் சாப்பிட்டுவிடுவது என்று சபதம் செய்துகொண்டோம். அதில்தான் எதையும் எறியவேண்டியது இல்லை. கொடுக்கும் காசுக்கு ஐஸையும் கோனையும் சாப்பிடலாம் என்பது எங்களுக்கு ஒப்புமையாக இருந்தது.

தாத்தாவிடம் நச்சரித்து அவர் சனியன்று இரவு ஒர் ரூவாய் கொடுத்தார். அந்தக் கனமான காசு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். புஜத்தில் வைத்து அதை நன்கு அழுத்தி மூன்றுதலை சிங்கத்தின் அச்சு தோலில் தெரிகிறதா என்று பார்த்தேன். நன்றாகவே தெரிந்தது. சந்தோஷத்துடன் ஞாயிறை எதிர்பார்த்திருந்தேன்.

ஞாயிறன்று நாங்களெல்லாம் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் படிகளில் காத்திருக்க அந்த நபர் வந்தார். நாங்கள் ஓடினோம். ஆளுக்கொரு கோனைஸ் வாங்கிக்கொண்டோம். கூம்பு மீது ஐஸ் க்ரீம் ததும்பிக் கூராக முடிந்திருக்க தெருவில் நின்றால் அது வெயிலில் உருகி விழுந்துவிடும் என்பதால் ரங்கன் வீட்டுத் திண்ணைக்கு ஓடினோம்.

என்னவொரு அனுபவம் அது! குச்சி ஐஸ் மாதிரி கல்லாக இல்லாமல் இது குழம்பாக இருந்ததால் சாப்பிட எளிதாக இருந்தது. கோனின் விளிம்பையும் பிய்த்து ஐஸ் குழம்போடு சாப்பிட அந்தச் சுவை அருமையாக இருந்தது.

எங்களைக் கையிலேயே பிடிக்கமுடியவில்லை. தின்று முடித்து அதன் சுவை நீண்ட நேரம் வாயிலேயே இருந்தது. பசித்தாலும் சோறு தின்னப் பிடிக்கவில்லை. அந்தச் சுவையை இழக்க மனம் வரவில்லை.

வெயில் கடுமையாக இருந்ததால் திண்ணைத் தட்டியில் போர்வை போட்டு மறைத்திருந்தோம். நாங்கள் அங்கு இருப்பது தெருவிலிருந்து பார்த்தால் தெரியாது. மதியம் மூன்று இருக்கும். தலைகாணித்தெருவிலிருந்து மணிச்சத்தம் கேட்டது. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். தெருமுக்கிலிருந்து மறுபடியும் மணிச்சத்தம் கேட்டது. பிறகு அமைதி. பிறகு மறுபடியும் மணியடித்தது. அந்தச் சைக்கிளை நகர்த்திச் செல்லும்போது செயினிலிருந்து கிர்ரென்று ஒரு சத்தம் கேட்கும். அந்தச் சத்தம் தெருமுக்கில் துவங்கி எங்களைச் சமீபத்துத் தயங்கி பிறகு கோவிலைக் கடந்து சென்றது. அவ்வப்போது நிறைய மணிச்சத்தம் கேட்டது.

நாங்கள் பேசாது அமைதியாக இருந்தோம். பிறகு சில நிமிடங்கள் கழித்து தெருவுக்கு வந்து கிழக்கே பார்த்தபோது தூரத்தில் சைக்கிள் நின்றிருந்தது. தெருவே காலியாக இருந்தது. ஐஸ் வண்டிக்காரர் திரும்பி எங்களைப் பார்ப்பது போலத் தோன்ற நாங்கள் சட்டென்று திரும்பி தலைகாணித் தெருவுக்கு நடந்தோம்.

ஏனோ ரொம்பவும் சோகமாக இருந்தது.

***


*கிராம முன்சீப்

Monday, December 11, 2006

பார'தீ'

Image and video hosting by TinyPic

மகா கவியின் பிறந்த தினம் இன்று. காலனை எட்டி உதைப்பேன் என்று அவர் சொன்னது சாகாவரம் பெற்ற அவரது அமரகவிகள் மூலம் நிதர்சனமாகியிருக்கிறது.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம்

***

Saturday, November 11, 2006

என்ன கொடுமை சரவணன்?

நேற்றைக்கு வந்து கழுத்தறுத்த மின்னஞ்சல் இது! யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

***

"நாய்க்கு நாலு கால் இருக்கலாம். அதால லோக்கல் கால், எஸ்டிடி, ஐஎஸ்டி, இவ்வளவு ஏன் மிஸ்டு கால் கூட பண்ண முடியாது"

"கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம். காவேரி ஆத்துலயும் மீன் பிடிக்கலாம். ஆனா அய்யர் ஆத்துல மீன் முடியுமா?"

கேப்டன் : "திருவல்லுவர் 1300 குரல் எளுதியிருந்தாலும் அவரால எப்பவும் ஒரு குரல்லதான் பேச முடியும்"

"என்னதான் ஒனக்குத் தலை சுத்தினாலும் ஒன் முதுகை நீ பாக்க முடியுமா?"

"மீன் பிடிக்கறவனை மீனவன்னு கூப்பிடறோம். நாய் பிடிக்கவறனை ஏன் நாயவன்னு கூப்பிடறதில்லை?"

"அவன் குண்டா இருக்காங்கறதுக்காக துப்பாக்கிக்குள்ள போடமுடியுமா?"

"தேள் கொட்டினா வலிக்கும். முடி கொட்டினா வலிக்குமா?"

"ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம். காலேஜ் டெஸ்ட்லயும் பிட் அடிக்கலாம். ப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?"

"கோல மாவுல கோலம் போடலாம். கடலை மாவுல கடலை போட முடியுமா?"

"லைப்ல ஒண்ணுமில்லைன்னா போர் அடிக்கும். தலைல ஒண்ணுமில்லைன்னா க்ளேர் அடிக்கும்"

"ஏழு பரம்பரைக்கு ஒக்காந்து சாப்பிட பணம் இருந்தாலும் பாஸ்ட்புட் கடைல நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்"

"இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்சினியர் ஆயிடலாம். பிரசிடன்ஸி காலேஜ்ல படிச்சா பிரசிடண்ட் ஆக முடியுமா?"

"ஆட்டோக்கு ஆட்டோன்னு பேர் இருந்தாலும் மேனுவலாதான் அதை ஓட்டணும்"

"தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும். ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது"

"வாழை மரம் தார் போடும். ஆனா அத வச்சு ரோடு போட முடியுமா?"

"ஹேண்ட் வாஷ்னா கை கழுவுறது. பேஸ் வாஷ்னா மூஞ்சி கழுவுறது. அப்ப ப்ரெய்ன் வாஷ்னா என்ன மூளையைக் கழுவுறதா?"

"டீ கப்ல டீ இருக்கும். ஆனா வோர்ல்ட் கப்ல வோர்ல்ட் இருக்குமா?"

"பால் கோவா பாலில் இருந்து பண்ணலாம். ஆனா ரசகுல்லாவை ரசத்திலருந்து பண்ண முடியுமா?"

"பல்வலி வந்தா பல்லைப் புடுங்கிரலாம். ஆனா கால்வலி வந்தா காலைப் புடுங்க முடியுமா? இல்லாட்டி தலவலி வந்தா தலையைப் புடுங்கத்தான் முடியுமா?"

"மனுஷனுக்கு சிக்கன் குனியா வரலாம். சிக்கனுக்கு மனுஷன் குனியா வருமா?"

"லாஸ்ட். பட் நாட் த லீஸ்ட். சண்டே அன்னிக்கு சண்டை போட முடியும். ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா?"

என்ன கொடுமை சரவணன்?

***

Friday, September 15, 2006

அனுமார் வடை

Image and video hosting by TinyPic
மாலை ஐந்து மணியாயிற்று. ஆனாலும் வெயில் இன்னும் உக்கிரமாகத்தான் அடிக்கிறது. கோவிலின் வாசலில் இதற்கு மேல் உட்கார முடியாது. கற் படிகள் வேஷ்டியை மீறி பிருட்டத்திலும் தொடையிலும் நன்றாகவே சுடும். இன்னும் உட்கார்ந்தால் சூடு பிடித்துக்கொண்டு ராத்திரி சொட்டுசொட்டாக சிறுநீர் கழிக்கவேண்டும் - அது பெரிய அவஸ்தை. பசிப்பது போல இருந்தது.

பிரதான கதவுகளை மூடி ஆள் நுழையும் சி்ன்னக் கதவை மட்டும் திறந்து வைத்திருக்கிறார்கள். வியாழக் கிழமை ஆனதால் இன்று கூட்டம் அம்மும். இப்போதே கார்களை நிறுத்த இடமில்லாமல் அங்குமிங்கும் கோவிலைச் சுற்றி ஓட்டிக்கொண்டு குடும்பத்துடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள். சற்று தூரத்தில் நிறைய இடமிருக்கிறது. அங்கு நிறுத்திவிட்டு நடந்துவர மனதில்லை. கோவிலருகில் நிறுத்தி கதவைத் திறந்து கோவிலுக்குள் காலை வைத்து இறங்கினால்தான் அவர்களுக்குத் திருப்தி. எப்படியும் நிறுத்த இடமில்லாமல் சுற்றிவிட்டு கடைசியில் அங்குபோய் நிறுத்திவிட்டு நடந்துதான் வருவார்கள் என்று நினைக்க சிரிப்பு வந்தது.

பையன்கள் தெருவில் கால் பந்தை உதைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். காற்றில் சூடு நன்றாகவே ஏறி உஷ்ணமாக அடிக்கிறது. எழுந்து மெதுவாக நெடுநேரமாக நிழலடித்த எதிர் பக்கச் சுவற்றை நோக்கி நடக்க உடல் தள்ளாடியது. நெடுநேரமாக உட்கார்ந்திருந்ததால் கால்கள் மரத்துப் போனது போல கட்டையாக இருந்தன.

உள்ளே பலவித குரல்கள். மணி அடித்துக்கொண்டே இருக்கிறது. ஆட்கள் வந்தும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். இன்று கோவில் ஒன்பது மணிவரை திறந்திருக்கும். நாளை விடுமுறைக்கு ஈ காக்கா இருக்காது. வார நாட்களில் மாலை வேளைகளில் சிலர் வந்து போவார்கள். எல்லாருக்கும் வாரயிறுதி மாலையில்தான் இறைவனைத் தொழ நேரம் கிடைக்கிறது.

அந்தப் பெண் கையில் வைத்திருந்த வாளியில் மாலையாக அது என்ன? பின்னால் குடும்பத்தினர் புடைசூழ உள்ளே நுழைந்து போகிறாள். வித்தியாசமான வாசனை. நிறைய பேர் அந்த மாலையை உள்ளே கொண்டு போவதைப் பார்த்ததுண்டு. வெளியே வரும்போது மாலை களையப்பட்டு பாத்திரத்தில் நிரப்பியிருப்பார்கள். போவோர் வருவோருக்கு பிய்த்துக் கொடுப்பார்கள். ஏதோ சைவ உணவு.

இறைவனுக்கு நிறையப் படைத்து உண்கிறார்கள். பளபள உடைகளுடன் குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள். கோவிலுள்ளும் ஓடி விளையாட அப்பாவோ அம்மாவோ சதா அதட்டிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

கடந்து சென்ற ஒருவர் வணக்கம் தெரிவிக்க பதில் வணக்கம் சைகையில் செய்ய வெண்டியதாக இருந்தது. என் குரல் அவரை எட்டுவதற்குள் அவர் வேகமாகக் கோவிலுக்குள் போய்விடுவார் என்பதால். சிலர் ஒரு ரியாலைக் கொடுத்துவிட்டுப் போவார்கள்.

ஏழு மணியளவில் சூரியன் இறங்கிவிட கோவில் கோபுரத்தின் வெண்கலக் கும்பம் பளபளக்கிறது. காவிக்கொடி ஓரத்தில் படபடத்துக்கொண்டிருக்கிறது. தெருப்பூனைகள் குப்பைத் தொட்டியைக் கிளறிக் கொண்டிருந்தன.

தரைச் சூடு இப்போது குறைந்திருக்கும். வாசலில் உட்காராவிட்டால் வேலை செய்த மாதிரியே இருக்காது. மெதுவாக திரும்ப நடந்துசென்று அமர்ந்ததும் 'யம்மாடி' என்று இருந்தது. மனம் உடலைச் சுமையாக உணரத் துவங்கிவிட்டது. வயதாகிறது. தளர்ச்சியை இப்போது அடிக்கடி உணரமுடிகிறது. இரவு வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு உறங்க பதினொன்றாகிவிடும். அவளுக்கும் இப்போது முன்போல் முடிவதில்லை.

கதவிலிருந்து குபீரென கையில் சிறிய பாத்திரத்துடன் அந்தச் சிறுவன் பாய்ந்து வெளியே வர பின்னாடியே துரத்திக்கொண்டு வெளியே வந்தாள் அந்தப் பெண்மணி. சிறுவன் மேலும் பாய்வதற்குள் அவனைப்பிடித்துவிட்டாள். கண்டிக்க ஆரம்பிக்குமுன்னர் அவன் இங்கு பார்த்துவிட்டு வேகமாக வர அந்தப் பெண்மணி திகைத்து நின்றுவிட்டாள்.

பையன் அருகில் வந்து சிரிக்க புன்னகை எழுந்தது. உதடுகள் பளபளவென்று எண்ணையாக இருக்க கையில் அதை வைத்திருந்தான். அவன் அம்மா இப்போது மெதுவாக வந்து அவன் பின்புறம் தோள்களைப் பிடித்து நின்றுகொண்டு சிநேகமாகச் சிரித்தாள். குனிந்து அவனிடம் 'தாத்தாடா' என்றாள்.

பையன் 'தாத்தா' என்றான்.

நான் சிரித்து அவன் தலையைத் தடவிக்கொடுக்க 'இந்தா' என்று அதை நீட்டினான். அம்மா 'டேய்' என இழுத்துத் தயங்க நான் அதைப் பார்த்தேன். எனக்கு அவர்கள் மொழியில் ஓரிரண்டு வாக்கியங்கள் தெரியும். 'யே க்யா?' என்றேன். அவன் அம்மாவைப் பார்க்க 'என்னன்னு கேக்கறாரு' என்றாள்.

'வதை'

'ம்?'

'வதை.. அனுமான் வதை'

நான் அவளைப் பார்த்தேன். அவள் புன்னகைத்து 'திஸ் இஸ் ஹனுமான் வடை' என்றாள். பையன் கன்னங்களை உப்பிக் காட்டினான். எனக்குப் புரியவில்லை. எல்லாரும் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.

பையன் இன்னும் கையை நீட்டிக் காண்பிக்க நான் அதைப் பிடித்தேன் மென்மையாக இருந்தது. பையன் சட்டென்று இன்னொரு கையால் அதைப்பிடித்து, நான் பிடித்துக் கொண்டிருக்கையிலேயே பாதியாகப் பிய்த்து அவன் வாயில் போட்டுக்கொண்டான். அவள் 'டேய் டேய்' என்று கலவரமாக அலற எனக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. குழந்தைளே இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டேன்.

என் விரல்களில் இருந்தத் துண்டத்தை வாயில் போட்டுக்கொண்டேன். லேசாக உப்பாக வித்தியாசமான சுவையுடன் இருந்தது. 'ம் ம்' என்று சுவையை ஆமோதித்துத் தலையாட்ட அவள் பாத்திரத்திலிருந்து மூன்று 'வடை'களை எடுத்துத் தயக்கத்துடன் என்னிடம் நீட்ட பெற்றுக்கொண்டு நன்றி சொன்னேன். பையனை இழுத்துக்கொண்டு அவள் மறுபடியும் கோவிலினுள் புக, பையன் எண்ணைக் கையாட்டி 'பை பை' சொன்னான்.

வடையில் மிளகை விதைத்தது போல ஆங்காங்கே இருந்தது. உப்பும் காரமும் சேர்ந்து வித்தியாசமான சுவைதான். நடுவிலிருந்த ஓட்டையில் விரலை நுழைத்து உயர்த்தினேன். இதே பாவத்தில் சுவற்றில் ஒரு கடவுளின் படத்தை வரைந்திருக்கிறார்கள். கடவுள் விரலில் வடையை நுழைத்துக்கொண்டு உயர்த்திக் காட்டுவது போல - ஏகமான ஆபரணங்களுடன். அவர்கள் நம்பிக்கை சுவாரஸ்யமானது. ஆனால் பல உருவங்களை வழிபடுவது புரியவில்லை. கண்ணுக்குத் தெரியாத இறையை ஏன் உருவகித்துக் கொள்கிறார்கள் என்றும் புரியவில்லை. அவர்கள் வழி அது. நம்பிக்கை அது. உலகில்தான் மனிதர்களுக்கு எத்தனை நம்பிக்கைகள். 'அல்லாஹ்' என்று முனகிக்கொண்டேன். என் தந்தை மும்பைக்குத் தோணியில் போயிருக்கிறார். ஆனால் திரவிய வியாபாரத்தில் போட்டி அதிகமாகிவிட இருந்த குதிரைகளையும் விற்றுவிட்டுச் சமாளித்து பிறகு நொடித்துப் போனார்.

ஆயிற்று மணி ஒன்பது. என் விரல்களிலும் வாயிலும் எண்ணை இன்னும் மிச்சமிருந்தது. கதவுகளைப் பூட்டிக்கொண்டு அரவமடங்கிய தெருவில் மெதுவாக நடந்து சென்றேன். 'அஸ்ஸலாமு அலேகும்' என்ற குரல்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்துக்கொண்டு நடந்து சென்று வீட்டையடைந்தேன். இரவுத் தொழுகையை முடித்துவிட்டுத் தூங்கவேண்டும்.

என்னவோ சுல்தானைப் பற்றிய நினைவு வந்தது. முப்பது வருடங்களில் மஸ்கட்தான் எப்படி மாறிப்போனது என்று நினைத்துக் கொண்டேன். அவரது தந்தை காலமே வேறு. எழுபதுகளில் இவர் வந்ததற்குப் பின்பு எல்லாமே அசுர வேகத்தில் மாறிற்று. இந்தக் கோவில் வந்து சில வருடங்களாகிறது. இன்னொரு கோவில் தார்ஸேத்தில் இருக்கிறதாம். எதிரேயே கிறிஸ்தவக் கோவிலும் கட்டியிருக்கிறார்கள்.

வீட்டினுள் மங்கலாக ஒரேயொரு பல்பு மட்டும் எரிய சுஹைலா படுத்திருந்தாள். நான் நுழைவதைப் பார்த்து எழுந்து இருமினாள். நல்ல கபம் கட்டியிருக்கிறது. கபத்திற்கு மிளகு நல்லது. சராய் பையிலிருந்து பொட்டலத்தை எடுத்துப் பிரித்து அவளிடம் நீட்டினேன். 'என்ன இது?' என அவள் வினவினாள்.

தரையில் அமர்ந்துகொண்டு சொன்னேன் 'ஹிந்த்களின் அனுமான் வடை. தின்னு'.

உறங்கச் சென்றேன். அல்லா எப்போது அழைத்துக்கொள்வாரோ தெரியவில்லை. உடல் படுத்துகிறது. நாவில் வடையின் வாசனை இன்னும் மிச்சமிருந்தது. சுஹைலா இருமுவது கேட்டது.

***

Friday, September 08, 2006

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

தாயை வணங்கிய கீதம் இன்னும் பல நூறாண்டுகள் ஒலிக்கட்டும்!

வந்தே மாதரம்!

Ma Tujhe Salaam!

Ma Tujhe Salaam!

மத சாயத்தை எல்லாவற்றிலும் பூசி நாற்றமெடுங்கள். எப்படியோ தொலைங்கள். ஆனால் தாய் மீது பூசாதீர்கள்!

இந்தியனாக இருங்கள்!

இறை கண்ணைத் திறக்கவே! மறைக்க அல்ல!

வந்தே மாதரம்!

Thursday, August 10, 2006

அய்யோ அய்யோ கொல்றாங்களே!

எந்தப் 'பித்து'ரிகையில் வந்ததென்று தெரியவில்லை. இன்று மின்னஞ்சலில் நண்பரிடமிருந்து வந்தவை இவை.

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Tuesday, July 25, 2006

"தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்"!

Image and video hosting by TinyPic
"தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்"! என்ற வாசகங்கள் கோவிலில் எழுதப்பட்டிருந்தால் அது தமிழுக்கு அவமானம். அவ்வாசகங்கள் அழிக்கப்படும் என்று முதல்வர் கூறியதாகச் செய்தியைப் படித்தேன். கட்டாயம் அழிக்க வேண்டிய விஷயம்தான்.

இது மாதிரி அழிக்க வேண்டிய ஒழிக்கவேண்டிய அசிங்கங்கள் நிறையவே நம் கோவில்களில் நிறைந்திருக்கின்றன. என்னுடைய பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தமிழ், தெலுங்கு, கன்னட, சமஸ்க்ருத, ஆங்கில அர்ச்சனைகள் இல்லை! எந்த மொழியில் அர்ச்சனை இருந்தாலும் அர்ச்சகர் என்னவோ 'ஙஞணநமன' என்று தான் சொல்லப் போகிறார். எப்படியும் புரியப் போவதில்லை. என்னத்தையோ அர்ச்சித்துவிட்டுப் போகட்டும். நாம் போவது கடவுளைக் கும்பிட. அவருக்கும் நமக்கும் நடுவே அர்ச்சகர்களிலிருந்து நந்தி வரை நிறைய விஷயங்களிருக்கின்றன.

"தர்ம தரிசனம்" என்ற பலகையை எல்லாரும் பார்த்திருப்போம். இது திரையரங்குகளின் தரை டிக்கெட் போன்றது. ஸ்பெஷல் தரிசனம், சிறப்பு ஸ்பெஷல் தரிசனம், என்று ஆரம்பித்து இறைவனின் தோளில் கைபோட்டு நின்று கொண்டு தரிசிக்கும் வரையில் பணம் கொடுத்து, கூட்டத்தில் நசுங்காது சொகுசாகச் சென்று பார்க்கும் தரிசனங்கள் ஏகமாகக் கோவில்களில் இருக்கின்றன. திருவாளர் 'பொதுஜனம்' என்கிற 'பிச்சைக் காரர்' மட்டும் 'தர்ம தரிசனம்' என்ற ஆட்டுமந்தைக்குள் அடைபட்டு, மிதிபட்டு, நசுங்கி, வியர்த்து, 'நகரு நகரு போ போ' என்று சந்நிதானத்தின் கும்மிருட்டு பழகி இறைவனைப் பார்ப்பதற்குள் வெளியில் தள்ளப்பட்டு விடுவார். பின்பு காற்றாட தூணருகே சாய்ந்து உட்கார்ந்து புளியோதரை பொங்கலைத் தின்றுவிட்டு நடையைக் கட்டுவார்.
Image and video hosting by TinyPic
இன்னும் சில கோவில்களில் தர்மத்துக்குக் கூட தரிசனம் கிடையாது. காசு கொடுத்துப் பார்ப்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. கஷ்டங்களைச் சொல்லிப் புலம்பி ஆறுதல் தேட வருவதே கோவில். அங்கும் இம்மாதிரி இல்லாதவர்களை ஏளனம் செய்வது அந்த ஆண்டவனுக்கே அடுக்காது.

"தர்ம தரிசனம்" என்ற உச்சக்கட்ட வக்கிரத்தை அறிமுகம் செய்தவன் எவன் என்று தெரியவில்லை. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற அடிப்படை நம்பிக்கையையே சிதறடித்து கேலிக்கூத்தாக்கும் இந்த தரிசன முறையை உடனடியாக ஒழித்துக் கட்ட வேண்டும். அனைவருக்கும் ஒரே வரிசை. வரிசையில் முன்னுரிமை தரவேண்டியது முடியாத வயசாளிகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் மட்டுமே இருக்க வேண்டும்.

சினிமா தரை டிக்கெட்டிலாவது திரைக்கருகில் ரசிகனை இருக்க விடும். இங்கே தர்ம தரிசனம் இறைவனிடமிருந்து பக்தனை எங்கோ தூரத்தில் தள்ளுகிறது.

நான் ஒன்றும் தர்ம தரிசனத்தில் மட்டும் வீம்பாக நின்று சாமியை தரிசித்த "பெரிய புடுங்கி" இல்லை. இந்த எழவுகளுக்காகவே கோவில்களுக்குச் செல்வதில்லை என்று இருந்தாலும் சில நேரங்களில் பெரியவர்கள் மனம் கோணாது இருக்கச் சென்ற நேரங்களில் காசு கொடுத்துப் போய் கசங்காமல் பார்த்ததுண்டு. ஆனால் அப்படி இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் எனக்குப் பின்னே கூட்டமாகக் குழுமியிருக்கும் தர்ம தரிசன வரிசை பக்தர்களின் பார்வையிலிருந்து இறைவனை நான் மறைத்துக் கொண்டிருக்கும் குற்ற உணர்ச்சி முதுகில் ஊசிகளாக ஒவ்வொரு முறையும் குத்தியிருக்கிறது.

இந்தக் கட்டண தரிசன முறையை ஒழிக்கும் அரசு கடவுளால் ஆசிர்வதிக்கப்படும்.

***

Tuesday, June 20, 2006

உவமைக் கவிஞர் சுரதா மறைவு : அஞ்சலிகள்!

Image and video hosting by TinyPic
பாரதிக்கு பாரதிதாசன் போல, பாரதிதாசனுக்கு தாசனாக சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக்கொண்ட உவமைக் கவிஞர் சுரதா (85) ஜுன் 20-ம் தேதி மரணமடைந்தார்.

அமுதைப் பொழியும் நிலவே
அமுதும் தேனும் எதற்கு
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

போன்ற அவரது பாடல்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை.

அன்னார் அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

அண்ணாக்கண்ணனி்ன் வலைப்பதிவில் சுரதா நேர்காணல் ஒன்று இருக்கிறது. சுட்டி : http://annakannan-interviews.blogspot.com/2005/07/blog-post_112280734633660613.html

Thursday, June 01, 2006

வாழ்க Selective "நடு நிலைமை". வாழ்க Selective "மத சார்பின்மை"!


Disclaimer: மத, ஜாதி தொடர்பான விவாதங்களில் (விஷயமில்லாததால்) கலந்து கொள்வதில்லை, எழுதுவதில்லை என்று சங்கல்பம் செய்திருந்தும் மனக்குரங்கு அடங்காமல் சிலசமயம் கிளம்பிவிடுகிறது. ஆகையால் இந்தப் பதிவு. இது எனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் குரங்கை யாரோ தட்டியெழுப்பிவிட்டதால் விளைந்த வினையே தவிர, நான் காரணமில்லை.

முன்பெல்லாம் திரைப்படங்களில் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் காட்டப்படுபவர்களுக்கு "நடுநிலைமையுடன்" ராம், ரஹீம், ராபர்ட் என்று பெயர் வைத்திருப்பார்கள். ஒற்றைப் பாத்திரமாக இருந்தால் ஏதாவது ஒரு மதத்துக்கான "கெட்-அப்"புடன் வில்லன் காட்சியளிப்பான்.

தி டாவின்சி கோட் திரைப்படத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை. இப்போது தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. அது தொடர்பான தமிழ் முரசு செய்தி கீழே.
Image and video hosting by TinyPic
மற்ற மதங்களை - குறிப்பாக இந்து மதக் கடவுளரை - இழிவு படுத்தியும், நையாண்டி செய்தும் எத்தனையோ படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன - இன்றும். அவற்றையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு விட்டுவிட்டு, இந்தப் படத்தை மட்டும் தடை செய்திருக்கிறார்கள்.

ஒன்றா "கருத்துச் சுதந்திரம்" என்று எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் "மத நல்லிணக்கத்திற்கு ஊறு" என்ற ரீதியில் எந்த மதத்தைப் பற்றிப் படம் வந்தாலும் தடை செய்யவேண்டும்.

வாழ்க Selective "நடு நிலைமை". வாழ்க Selective "மத சார்பின்மை"!

Tuesday, May 09, 2006

நீர் மூழ்கி மந்திரவாதி!


நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே கையில் இருக்கும் கோழியின் தலையை மட்டும் சட்டெனத் தனியே எடுத்துக் காட்டுவார். தலை மட்டும் கொக்கொக்கென சத்தமெழுப்ப பாதசாரிகள் மிரண்டு ஓடுவார்கள்.

கையில் இருக்கும் திருமண மோதிரத்தைக் கழற்றித் தரச் சொல்லிக் கையில் வாங்கிப் பார்த்த்துக் கொண்டிருக்கும் போதே நழுவவிட அது கீழே தரையில் பதிக்கப்பட்டிருக்கும் பாதாளச் சாக்கடை கம்பி மூடி வழியாக உள்ளே விழுந்துவிட மோதிரத்தைக் கொடுத்தவர் அதிர்ச்சியில் அலறுவார். இவர் சாவதானமாக நடந்துபோய் ஓரமாகக் கிடக்கும் காலி குளிர்பான பாட்டிலை எடுத்துக் காட்ட அதனுள்ளே மோதிரம் கிடக்கும் - பாட்டிலின் கழுத்தைவிட அளவில் பெரிய மோதிரம்!

சீட்டுக்கட்டை வைத்துக்கொண்டு செய்யும் மாயாஜாலங்களுக்கு அளவே கிடையாது.

எதிர்படும் ஒருவரை நிறுத்தி அவரை அவருக்குப் பிடித்தமானவரை நினைத்துக் கொள்ளச் சொல்லி, அவரது கண்களை ஊடுருவிப்பார்த்து "அவர் உங்களுக்கு வேண்டியவர்" என்று மெதுவாகச் சொல்லி, அவரது பெயரையும் சொல்ல, மனதில் நினைத்துக்கொண்டவர் நம்பமுடியாது இவரைப் பார்க்க, கடந்து செல்லும் டாக்ஸியின் இடுப்பில் நினைத்துக்கொண்ட நபரின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது.

திரும்பி நின்றுகொள்ள அவரது உடல் அந்தரத்தில் எழுந்து காற்றில் சில வினாடிகள் நிற்கிறது.

அவர்தான் டேவிட் ப்ளேன்


மேடையில் ஒளி வெள்ளத்திற்கிடையே கண்சிமிட்டும் நேரத்தில் என்னென்னவோ வித்தைகள் செய்யும் மாஜிக் நிபுணர்களுக்கு மத்தியில் டேவிட் ப்ளேன் வித்தியாசமானவர். இருட்டில் செயற்கை வெளிச்சத்தில் மேடையின் மீது தொலைவில், ஏகப்பட்ட உடையலங்காரங்களோடு இல்லாமல், பட்டப் பகலில் தெருவில் சாதாரணமாக ஒரு பாதசாரி போன்று உடைகளுடன் வந்து வெறுங்கைகளைக் கொண்டு இவர் செய்யும் வித்தைகள் நம்ப முடியாதவை. அதிலும் சீட்டுக்கட்டை வைத்துக்கொண்டு இவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. எந்த வித லாஜிக்கும் இல்லாத பிரமிக்க வைக்கும் வித்தைகள்.

வித்தைகளோடு இவர் நிறுத்திக்கொள்ளவில்லை. உடல் வருத்தும் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தும் உயிருக்கே உலை வைக்கக் கூடிய சாகஸங்களையும் அவ்வப்போது செய்து ஊடக கவனத்தைப் பெறுவது இவர் வாடிக்கை. (நம்மூர் Hussaini நினைவுக்கு வருகிறாரா?)

லண்டனின் தேம்ஸ் நதி மீது ஒரு கூண்டில் 44 நாட்கள் அன்ன ஆகாரமின்றி இருந்தார்.


துருவப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட இயற்கையாக உருவான பனிக்கட்டியைக் குடைந்து அதற்குள் மேலாடையின்றிப் 61 மணி நேரம் இருந்தார். நமக்கு ஐந்து நிமிடங்களில் எல்லாமே விறைத்துப்போயிருக்கும்!

நேற்று நியூயார்க் நகரின் கொலம்பஸ் 9-வது அவன்யூவில் ஒரு சாகசத்தை நிகழ்த்திக்காட்ட முயன்று தோல்வியடைந்து கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றார். அவர் முயன்றது நீரில் மூச்சடக்கி அதிக நேரம் இருந்து உலகசாதனை புரிவது. ஏற்கெனவே இருக்கும் உலக சாதனை நேரம் 8 நி. 58 வினாடிகள்.


பெரிய கண்ணாடிப் பந்து போன்ற ஒன்றில் முதலில் கழுத்தளவு நீர் நிரப்பி உள்ளே அவர் நின்று கொள்ள, இரண்டு கைகளும் கால்களும் விலங்கிடப்பட்டிருக்க, கடைசியாக வாயைக் குவித்து மூச்சை நன்றாக இழுத்துக்கொள்ள, இன்னும் நீர் நிரம்பி அவரை மூழ்கடிக்கிறது. உள்ளடங்கிய வயிறுடன், கண்களை மூடி டேவிட் நிற்க, வினாடிகள் நகர்கின்றன. சுற்றிலும் பார்வையாளர்கள் குரலெழுப்பி கரகோஷத்துடன் உற்சாகப்படுத்துகிறார்கள்.

வெளியே பயிற்சியாளர் Kirk Krack டேவிட்டுடன் பேசிக்கொண்டே அவரை உற்சாகப்படுத்துகிறார். வினாடிகள் நிமிடங்களாக ஓட அவ்வப்போது டேவிட்டை ஏதாவது செய்கைகள் செய்யச் சொல்லி - அவர் சுயநினைவோடு இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார். இரண்டு நிமிடங்கள் கடந்ததும் ஒரு பூர்ண அமைதி தவழ கண்களைத் திறந்து நிலைகுத்திய பார்வையுடன் சில வினாடிகள் டேவிட் பார்த்தார் பாருங்கள். அந்தக் களையை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

நான்கு நிமிடங்களாகின்றன. டேவிட் கண்களை மூடியிருக்கிறார். ஐந்து நிமிடங்களாகியதும் கைகளை விடுவித்துக் கொள்கிறார். ஆறு நிமிடங்களாகின்றன.


அவர் முகத்தில் வேதனை தெரிய ஏழாவது நிமிடத்தில் அவர் தவித்துப் போராடுவது தெரிய வெளியே காத்திருக்கும் இரண்டு திறமை வாய்ந்த Divers உள்ளே குதிக்கின்றனர். ஒருவர் டேவிட்டின் வாயையும் மூக்கையும் இறுக மூடிக்கொள்ள - இல்லாவிட்டால் டேவிட் அடக்கிய மூச்சை வெளியேற்றி நீரை உள்ளிழுக்க, நுரையீரலில் உடனடியாக நீர் நிரம்பி உயிருக்கு ஆபத்தாகிவிடும் - இன்னொருவர் அவரது கால்களை விடுவிக்க, மேலே தூக்கி அவரது தலையை நீர்மட்டத்திற்கு மேலே கொண்டுவந்து விட, இன்னும் இருவர் வெளியே நின்றுகொண்டு அவரை வெளியேற்றினர்.

முயற்சி தோல்வி! மொத்தமாக நீருக்குள் அமிழ்ந்திருந்த நேரம் 07:08 நிமிடங்கள்!


இச்சாதனை முயற்சிக்காக ஒருவார காலமாக அந்த எட்டடி உயர நீர் நிரம்பிய உருண்டைப் பந்தில் வாழ்ந்திருக்கிறார். உடலில் கட்டப்பட்ட 150 பவுண்டு எடையுள்ள சங்கிலிகளை விடுவித்துக் கொண்டுவிட்டாலும் ஏழுநிமிடங்களுக்கு மேல் தாக்குபிடிக்க முடியவில்லை அவரால். கண்ணீர் வழிய உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி கூற - ஆமாங்க சுயநினைவோடுதான் இருந்தார் மனுஷன்! - அவரை மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

நம்மூர் முத்துக் குளிக்கும் நபர்களுக்குச் சரியான பயிற்சியும் வசதிகளும் கிடைத்தால் ஆளாளுக்குச் சாதனை செய்து காட்டிவிடுவார்களே என்ற எண்ணமும் எழாமலில்லை.

***

Saturday, April 15, 2006

பெரிய கடவுள் காக்க வேண்டும்



மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்

ஓம் ஓம் ஓம்

அனைவருக்கும் என் உளங்கனிந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Friday, March 31, 2006

போலி டோண்டுவும் ஒரு பிரார்த்தனையும்



நேற்று டோண்டு அவர்களின் "இரண்டாம் கல்யாண" பதிவிற்குப் பின்னூட்டமிட்டிருந்தேன். இன்று காலை அஞ்சல்பெட்டியைத் திறந்ததும் வந்து விழுந்த மடல்களில் ஒன்று அவருடைய பெயரில் இருக்கவும் ஆர்வத்துடன் திறந்து பார்த்தால் அது உண்மையான போலி டோண்டுவின் "வழக்கமான" மடல். எளிதாக அதைப் புறக்கணிக்க முடிந்தாலும் (மட்டுறுத்தத்தின் தேவையை மறுபடியும் உணரச் செய்த மடல்!), சத்தியமாகச் சொல்கிறேன் - இதை அனுப்பியவரின் மீது பரிதாபம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

இம்மாதிரி மடல்கள் தவறானவை என்பது ஒரு பக்கம். இம்மாதிரி எழுதுவதற்கான மனநிலையைக் கொண்டிருக்கும் அவரையும் அவருடன் இருப்பவர்களையும் நினைத்து உண்மையாகவே கவலையாக இருக்கிறது.

அவரது மன சஞ்சலங்களை நீக்கி, ஆத்திரமும் காழ்ப்புணர்வும் கொப்பளிக்கும் மனதைச் சாந்தப்படுத்தி நல்லெண்ணங்களை விதைக்க எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்.

சக வலைப்பதிவர்களும் சேர்ந்து ஒரு குறித்த நாளில் குறித்த நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனை செய்தால் என்ன என்றும் தோன்றுகிறது.

நன்றி.

Friday, February 10, 2006

நளனிடம் பரமார்த்த குருவின் சீடன்!



சமீபத்தில் சக வலைப்பதிவர்கள் நிறைய பேர் சமையல் குறிப்புகள் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். கோ.ராகவன் (பா.ரா. மாதிரி உங்களைக் கோ.ரா.ன்னு கூப்பிடலாமா?) கூட ஹிண்டி மொசுரு பற்றி எழுதியிருந்தார். அவரே செய்து பார்த்தாரா அல்லது யாராவது மண்டபத்தில் செய்து கொடுத்தார்களா என்பது எம்பெருமானுக்கே வெளிச்சம்! :) என்னே ஆண்களுக்கு வந்த சோதனை என்று நானும் முயற்சிசெய்து பார்த்து யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்ற ஒரே "நல்லெண்ணத்தில்" உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்! முன்பு இதனால் "பலன"டைந்தவர்கள் மரத்தடி நண்பர்கள்! எனக்கு மிகவும் பிடித்த காய்கறி "பாகற்காய்"!! ஆதலால் ஆய்கலைகளில் (தட்டச்சுப் பிழையில்லை) ஒன்றான பாகற்காய் பிட்லை செய்வதெப்படி என்ற இந்தப் பதிவைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குச் சமர்ப்பிக்கிறேன்.

தேவையான பொருள்கள் (இரண்டு நபர்களுக்குப் பரிமாறுவதற்கு. நிச்சயமாக நான் அந்த இரண்டு நபர்களில் ஒருவனில்லை!)

1. கொத்தமல்லி விதை - 4 டேபிள்ஸ்பூன் (நாலு டேபிளுக்கு எங்க போறது? ஸ்பூன் போறாதா என்று கேட்கும் ஆத்மாக்கள் மேலத்தெரு முக்கு மீட்டிங்கில் வந்து சந்திக்கவும்!)

2. கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (ஐயா சாமி. இது நிலக்கடலை இல்லை. சமையலுக்கு உபயோகிக்கும் கடலைப்பருப்பு)

3. மிளகு - 1 டேபிள்ஸ்பூன்

4. மிளகாய் வற்றல் - 6 அல்லது 7 உதிரிகள்

5. தேங்காய் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்

6. வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

7. எலுமிச்சம்பழம் - பாதி மூடி(பிழியாதது)

8. உப்பு - தேவையான அளவு

9. பாகற்காய் - கால் கிலோ

10. பெருங்காயம் - கால் அல்லது அரை டீஸ்பூன்

11. பேதி மாத்திரைகள் - ஒரு கைப்பிடி (இது யாராவது வேண்டாதவர்களுக்குச் சமைப்பதாக இருந்தால் மட்டும்)

12. தீயணைக்கும் கருவி மற்றும் முதலுதவிப் பெட்டி!

தாளித்துக்கொள்ளத் தேவையான பொருள்கள்:

அ. கடுகு - 1 டீஸ்பூன்

ஆ. உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்

இ. மிள்காய் வற்றல் - ஒன்று

ஈ. கருவேப்பிலை - ஒரு 'ஆர்க்கு'. இதற்கு முதலில் 'கிளை' என்று எழுதினேன். மனைவி முறைக்கவே பயன்பாட்டில் இருக்கும் 'ஆர்க்கு' ('எல்லாம் அவங்களுக்குப் புரியும்')!!

முன்னெச்சரிக்கையாகச் செய்ய வேண்டியவை:

a. டிவி மெகாசீரியல் நேரத்தில் இதைச் செய்யாதீர்கள்.

b. தலையுச்சியில் செருகியிருக்கும் சீப்பை எடுத்துவிடுங்கள்.

c. ஜலதோஷமாக இருந்தால் தற்காலிகமாக பஞ்சு வைத்து மூக்குக் கணவாய்களை அடைத்துக்கொள்ளவும். அப்படியும் அணை உடைந்துவிட்டால், மேற்சொன்ன பொருட்களில் உப்பு தேவையில்லை.

துவரம்பருப்பு - 1 கப் மற்றும் கொத்துக்கடலை ஊறவைத்தது- அரை கப் இரண்டையும் தனித்தனிப் பாத்திரத்தில் வேகவைத்துக் கொள்ளவும்

புளி- ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக்கொண்டு நீரில் ஊற வைத்துக்கொள்ளவும் (கொட்டை எடுத்ததா எடுக்காததா என்று கவுண்டர் ஸ்டைலில் கேட்கக்கூடாது!)

பாகற்காயை நீளவாக்கில் நறுக்கிக்கொண்டு எலுமிச்சம்பழத்தை அதன்மேல் பிழிந்துகொள்ளவும். மூடியை பத்திரமாக வைத்துக்கொண்டால் உச்சந்தலையில் பின்பு தேய்த்துக் கொள்ள வசதியாக இருக்கும். வெயிட் அ மினிட் ஃபார் 15 மினிட்ஸ்.

1. சிறிய வாணலியில் (சீனாச்சட்டி, கடாய் அப்புறம் இன்னும் என்னென்னவோ பெயர்களில் இதைச் சொல்றாங்கப்பா. சென்னை "பாஷை"லயும் இதுக்கு எதாச்சும் வச்சிருப்பியே கொசப்பேட்டை?) அரை டீஸ்பூன் கடலெண்ணை அல்லது சூரியகாந்தி எண்ணையில் மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களில் 1 லிருந்து 6 வரைக்கும் உள்ளவற்றைப் போட்டு வறுத்துக்கொள்ளவும் (அதற்கு முன் அடுப்பை பற்றவைத்துக் கொள்ளுங்கள்.. ஹி.. ஹி..)

2. பெரிய வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணையை நடு சென்ட்டரில் விட்டு அதில் பாகற்காயைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதக்கியபின் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவிக்கொள்ளுங்கள். விரல்களில் ஒட்டியுள்ளவற்றை முகத்தில் தடவிக்கொண்டு, சமைத்து முடித்ததும் குளியுங்கள்.

3. புளியை நீரில் கரைத்து வடிகட்டி, புளி நீரை பாகற்காய் இருக்கும் வாணலியில் ஊற்றுங்கள். கொதி நிலை வரும்வரை காத்திருக்கவும்.

4. அதுவரை வெட்டியாக வேடிக்கை பார்க்காமல், வறுத்த பொருட்களை நீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். விழுதை பாகற்காய் கொதிக்கும் வாணலியில் போட்டுக் கலக்கிக் கொள்ளுங்கள்.

5. வேகவைத்த துவரம்பருப்பையும் கொத்துக்கடலையையும் அதோடு சேர்த்துக் கலக்குங்கள். உப்பைச் சேருங்கள்.

6. இரண்டு நிமிடம் வாணலியை மூடிவைத்துவிட்டு, 'ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா' ஸ்லோகம் சொல்லுங்கள். அல்லது 'ஸ்ரீராம ஜெயம்' இருபத்தைந்து முறை எழுதுங்கள். அப்புறம் மூடியைத் திறந்து கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள்.

7. தாளித்துக்கொள்வதற்காக வைத்திருக்கும் பொருள்களை இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணையில் தாளித்துக்கொள்ளுங்கள் (ஸ்பூனிலேயே தாளித்துத் தொலைக்காதீர்கள்).

8. வாணலியில் இருந்து பாகற்காய் பிட்லையை ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொண்டு அதில் தாளித்ததை சேர்க்கவும்.

மணமணக்கும் பாகற்காய் பிட்லை ரெடி.

இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டு கடைசியாக ஒருமுறை சிரித்துவிட்டு, 'பிட்லை.. வட்லை.. கட்லை.. எட்லை.. சட்லை.. இட்லை' என்று முன்பு எப்போதோ ஆசாத் பாய் எழுதிய கானாவை ஒருமுறை பாடிவிட்டு, பிட்லையை ஒரு பிடிபிடியுங்கள்!

கீழ்க்கண்ட முக்கிய குறிப்புகளை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

1. பாகற்காயை என்றாலே பி.டி.உஷா கணக்காக ஓடும் உங்கள் கணவர் அல்லது (கணவர் சமைக்கும் பட்சத்தில்) மனைவி உங்கள் பின்னாலேயே நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைவார்.

2. செய்முறையில் நடுவில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு மனக்கலக்கத்துடன் இருந்தால், நீண்ட நாட்களாய் வீட்டில் நங்கூரம் பாய்ச்சியிருக்கும் விருந்தாளிக்குப் பரிமாறுங்கள். ஒருவேளை நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்து தொலைத்திருக்கும் பட்சத்தில், நங்கூரம் மேலும் ஆழமாகக்கூடிய அபாயமும் இருக்கிறாது.

3. அதுவரை நாகரீகமாகச் சாப்பிட்டுப் பழகிய நீங்கள், முதன் முறையாகச் சாப்பிட்டு முடித்தும், தட்டை இன்னும் வழித்து நக்குவீர்கள்!

***

நன்றி: மரத்தடி.காம்

Thursday, February 09, 2006

புதிய பதிவு!



நண்பர்களுக்கு,

எனக்கு இசை என்பது பல சமயங்களில் மருந்தாக இருந்திருக்கிறது; இருந்து கொண்டிருக்கிறது. இசைஞானம் இல்லாவிட்டாலும், மனதை வருடிச் செல்லும் தென்றலாய் அவ்வப்போது வரும் நல்ல திரையிசைப் பாடல்களை ஆழ்ந்து ரசிப்பது வழக்கம். குறிப்பாக திரு. எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்கள் பாடியது என்றால் நேரங்காலம் பார்க்காமல் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். அவரது குரல் மேல் அவ்வளவு பைத்தியம் எனக்கு.
ரசித்ததை மனதுக்குள் வைத்துப் பூட்டிக் கொள்ளாமல் பதிந்துவைக்க வேண்டும் என்று சில நாள்களாய் ஒரு உந்துதல் இருந்தது. அதை இப்போது செயல்படுத்தியாகிவிட்டது. ஆமாம். "பாடும் நிலா பாலு" என்ற பெயரில் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறேன்.

வலைப்பதிவின் சுட்டி:
http://myspb.blogspot.com

ஒக்கே ஒக்க ஆல்பத்தைப் போட்டுவிட்டு உலகம் பூராவும் அனைத்து வழிகளிலும் சந்தைப்படுத்திப் பெரும்பணத்தைச் சம்பாதித்துவிட்டு, மீதி நேரம் பூராவும் பழைய புகழ் கஞ்சியையே ஆற்றிக் குடித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்திய பாடகர்களின் ரசிககள் என்று சொல்லிக்கொண்டு ஒரு விடலைக் கூட்டமே அலைந்து கொண்டிருக்கிறது நம்மூரில்.

ஏறத்தாழ 36000-க்கும் அதிகமான பாடல்கள்! 39 வருடங்களாகப் பாடிக்கொண்டிருக்கிறார்! பல மொழிகளில்! என்ன மாதிரியான விஷயம் இது!

எப்படி கண்ணுக்கு முன்பாகவே பொக்கிஷங்களாய் எவ்வளவோ இருந்தும் குருடராய் மேலை நாடுகளை ஆவென்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமோ அது போலவே அடக்கமாய் ஆர்ப்பாட்டமேதும் இல்லாது இருக்கும் பாலுவைப் போன்ற நிகரில்லாக் கலைஞர்களைக் கண்டுகொள்ளாமல் சரியான முறையில் நாம் அங்கீகாரம் அளிக்கத் தவறிவிட்டோம் என்று நான் இன்னும் கருதுகிறேன்.

ஒரு வேளை பாலு பெண்ணாய் பிறந்து 18 வயதில் Kiss me Baby one more time என்று அதிரடியாகப் பாடியிருந்தால் இந்நேரம் தலைக்குமேல் தூக்கிவைத்துக்கொண்டு ஆடியிருப்போமோ என்னவோ?

எது எப்படியோ போகட்டும். அவரது குரலின் தீவிர ரசிகன் என்ற முறையில் ஒரு மிக எளிய முயற்சியாக நான் ஆழ்ந்து ரசித்த அவரது பாடல்களைப் பற்றிப் பதிவதே இந்த புதிய வலைப்பதிவின் நோக்கம். இது ஒரு கூட்டு முயற்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இப்போதைக்கு இந்த வார நட்சத்திரம்
சிவா இணைந்துள்ளார். இன்னும் சில நண்பர்கள் இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கூட்டு முயற்சி நல்லபடியாக செயலாக்கம் பெறும் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்
சுந்தர்.

ஆழி சேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல்..


ஊடகங்கள் குற்றங்களை மட்டும் பிரதானப்படுத்தி வரும் வேளையில் மனதுக்கு ஆறுதலாய் காணவோ கேட்கவோ எதுவும் கிடைப்பது அரிதாகிவிட்டது. எத்தனை சானல்கள்! எத்தனை செய்தித்தாள்கள். எல்லாவற்றிலும் குற்றச் செய்திகள் அல்லது ஆபாசங்கள்.

இசையாவது ஆறுதலாய் இருக்கிறதா என்றால் தோல் வாத்தியங்கள் காதைக் கிழிக்க ஒளிவிளக்குகள் கண்ணைப் பறிக்க அதிரடியாய் வரும் இசையில் மூழ்கி மூச்சுத் திணறிப் போயிருக்கிறோம். அரிய முத்துகளாய் எப்போதாவதுதான் நல்ல பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன.

வலைப்பதிவுகளும் விதிவிலக்கல்ல. மதம் சாதி மொழி என்று எல்லாரும் அடித்துக் கொள்கிறார்கள். இவை தொடர்பான சச்சரவுகளுக்கு கற்றவர்கள் கல்லாதார் என்று பாகுபாடு எதுவும் கிடையாது போலும்!

சண்டை சச்சரவுகளின்றி, சாதி மத வேறுபாடுகளின்றி, "கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டு, மனதைத் திறந்து வைத்து" இனிய முகத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வது நடக்க வேண்டும் என்பதே என் கனவு! அது கனவாகவே போய் விடுமோ என்று பயமாகவும் இருக்கிறது.

ஒரு நினைவூட்டலாக, ஒரு காலத்தில் அனுதினமும் பார்த்துக் கேட்டு, மனதை லேசாக்கிய கானத்தைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்!

Mile sur(u) mera tumhaaraa
Tooo sur(u) bane hamaraa

sur kee nadhiyaan har disha se
behkee saagar mein mileee

Baadalon ka roop leike
barse halke halke

Mile sur(u) mera tumharaa.. oh...
too sur(u) bane hamaara..

(your) tarang (and) (my) tarang...
ek vat baniye (our) tarang!

Tena sur mele mera sur dena
milke bane ek nava sur da

Mile sur mera tumhara
to sur bane hamaara

Sur ka dariya behke saagar
mein miley

Baadlaan-da roop lehke
Barsanei hole hole....

இசைந்தால் நம்
இருவரின் ஸ்வரமும் நமதாகும்
திசை வேறானாலும்
ஆழிசேர் ஆறுகள்
முகிலாய் மழையாய்
பொழிவது போல் இசை!
நம் இசை.......!

நன்னெ த்வனிகே நிம்ம த்வனியா
சேரிதந்த்தே நம்ம த்வனியா

நா ஸ்வரமு நீ ஸ்வரமு சங்கமமை
மமஸ்வரங் கா அவதரின்ச்சே

எண்டே ஸ்வரமும் நிங்ஙளுடெ ஸ்வரமும்
ஒத்துச் செய்யும் நம்முடெ ஸ்வரமாய்

Tomar shoor modir shoor...
sristi hoouu... hoiko shoor

Tomar moro shoorono milano
shrishti hoo chalo chapano

Maley soor jo taro maro,
bane aapdo soor niralo

Majhya tumchya jultya taara
madhur suranchya barasti dhaara

Sur ki nadiya har disha se
Baadalon ka rooooop leke

barse halke halke

hooo mile sur mera tumhara
toooooo soor bane.... hamaara....

அகலப் பாட்டை வைத்திருக்கும் புண்ணியாத்மாக்கள் இங்கே சுட்டினால் MIT மாணவர்கள் இந்தப் பாடலை வைத்து படமாக்கியிருக்கும் அருமையான ஒளிக்கோப்பைப் பார்க்கலாம்.

ஒலிக்கோப்பு இங்கே!

இசைவோம்.. இசைந்திருப்போம்... இந்தியராக!

ஜெய்ஹிந்த்!

***

(Bad) பாய்ஸ் படத்துக்கு விகடன் விமர்சனம்!

(Bad) பாய்ஸ் படத்துக்கு விகடன் விமர்சனம் (எழுதினால்?)

Friday, February 03, 2006

பழிவாங்கப்படும் விலங்கினச் சேர்க்கையாளர்கள்..

செல்வனின் இந்தப் பதிவைப் படித்ததும் எதிர்காலத்தில் இப்படியும் கூட செய்திகள் / பதிவுகள் வரலாம் என்று தோன்றியது (இது ஒரு கற்பனை: No offense meant.. :))



யுடா மாநிலம் 2030ல் விலங்கினச் சேர்க்கையாளர்களுக்கு முழு திருமண உரிமை அளித்தது. உடனடியாக அமெரிக்காவின் 37 மாநிலங்கள் அவசர அவசரமாக விலங்குத் திருமணங்களுக்கு அனுமதி மறுத்து டோஹ்மா ( Defense of human marriage act) என்ற சட்டத்தை இயற்றின. மனிதர்களுக்குள் (ஆணும் ஆணுமோ, ஆணும் பெண்ணுமோ. பெண்ணும் பெண்ணுமோ) மட்டும்தான் திருமணம் நடக்க வேண்டும் என்ற இந்த பிற்போக்கு சட்டம் இன்னும் பல மாநிலங்களில் அமுலில் இருக்கிறது.

மேற்கத்திய நாடுகள் பலவும் இதுபோல் பிற்போக்குத்தனமான சட்டங்களை ஒழித்துக் கட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விலங்குகளுடன் உறவு கொள்வதற்கு சட்ட பூர்வ அனுமதி பிரான்ஸ், ஸ்கான்டினேவியா, பிரிட்டன், நியுஸிலாந்து, செக், நெதெர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் வழங்கப்படுகிறது. விரைவில் இந்த நாடுகளில் மனித-விலங்குத் தம்பதிகளுக்கு முழு திருமண உரிமையும் வழங்கப்படக்கூடும்.

ஐரோப்பிய யூனியன் 2030 சார்ட்டரின்படி விலங்குகளுடன் சேர்க்கையும், விலங்குகளுடன் திருமணமும் ஒரு மனிதனின் அடிப்படை சுதந்திரமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. தனிமனிதனின் படுக்கையறையில் மூக்கை நுழைக்க இனி ஐரோப்பாவில் எந்த அரசுக்கும் உரிமை இல்லை.

இப்படி ஐரோப்பா முன்னேற்றப் பாதையில் செல்ல அமெரிக்கா இன்னும் 20ம் நூற்றாண்டின் சட்டங்களையே வைத்துக் கொண்டு இருக்கிறது. இல்லினாய் உட்பட 15 மாநிலங்களில் விலங்குகளுடன் சேர்க்கையே தண்டிக்கபடக் கூடிய குற்றமாக இருக்கிறது. ஐரோப்பாவில் 20ம் நூறாண்டிலேயே விலங்குகளுடன் சேர்க்கையை குற்றப் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலராடோ 2012ல் 53% மெஜாரிடியோடு தனது விலங்குச் சேர்க்கை குடிமக்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது. 2009ல் மய்னும் அதே போல் ஒரு பிற்போக்கு சட்டத்தை இயற்றியது. கலிபோர்னியா போன்ற லிபெரல்கள் ஆளும் மாநிலம் கூட 2010ல் இம்மாதிரி சட்டம் போட்டது என்றால் மனித உரிமை அங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் முதலில் விலங்கினச் சேர்க்கையாளர்கள் விரல் நீட்டுவது ரிபப்ளிக்கன் கட்சியைத் தான். அபார்ஷனுக்கு அனுமதி மறுப்பு, விலங்குகளுடன் திருமணத்துக்கு தடை விதிப்பு, குளோனிங் செய்யத் தடை விதிப்பு, பரிணாமவாதத்தை பள்ளிகளில் பயிற்றுவிக்க தடை விதிப்பது போன்ற பிற்போக்கு நடவடிக்கைகளை ஆதரிப்பதில் இவர்களுக்கு அவ்வளவு ஆனந்தம்.

அமெரிக்காவில் இப்படி என்றால் இந்தியாவில் நிலமை மிக கேவலமாக உள்ளது. இன்னும் 19ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் சட்டங்களை வைத்துக் கொண்டு டில்லி போலிசார் சமீபத்தில் 4 விலங்கினச் சேர்க்கையாளர்களை கைது செய்தனர் (அவர்களின் துணையாக இருந்த நான்கு ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன). சில நாடுகளில் இவர்களுக்கு திருமண அனுமதியே வழங்கப்படுகிறது. சில நாடுகளில் திருமன உறவுக்கு அனுமதி இல்லையென்றாலும் விலங்கினச் சேர்க்கை குற்றமல்ல. இந்தியாவில் விலங்கினச் சேர்க்கையே தண்டிக்கபடக் கூடிய குற்றமாக இன்னும் இருக்கிறது.

அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம் விலங்கினச் சேர்க்கை மன நோயல்ல, வியாதியல்ல, மனிதனின் இயற்கையான பழக்கம் என்று எப்போதோ சொல்லிவிட்டது. அமெரிக்க அரசாங்கத்தின் காதுகளிலேயே அது இன்னும் ஏறவில்லை. இந்திய அரசாங்கத்தின் காதுகளில் ஏறுவது எப்போது?

***

Thursday, February 02, 2006

தீவிரவாதத்தை நிறுத்த முப்பரிமாணத் திட்டம்!

courtesy : www.google.com

நமது முதற் குடிமகன் உலகளவில் தீவிரவாதத்தின் வேர் எது என்றும், அதை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதைப் பற்றியும் தெரிவித்த கருத்துகள்:



"நீண்ட வரலாறு கொண்ட சில குறிப்பிட்ட பிரச்னைகளில் இருந்து தான் தீவிரவாதம் உருவெடுப்பதாக நினைக்கிறேன். இதில் வறுமையும் அடக்கம். வறுமை இருக்கும் வரை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் காரணிகளும் இருப்பதை உணரலாம்.

உலகளவில் படர்ந்து அச்சுறுத்தும் இந்த தீவிரவாதத்தை சமாளிக்க மூன்று பரிமாணங்கள் கொண்ட முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

  • முதலாவது, அனைவருக்கும் தரமான கல்வி வழங்குதல்;
  • இரண்டாவது, மத அமைப்புகளின் செயல்பாடுகளை ஆன்மிக சக்தியாக மாற்றுவது;
  • மூன்றாவது, வறுமை ஒழிப்பு.

ஒருங்கிணைந்த முறையில் இவற்றை மேற்கொண்டால் நீண்ட காலத்துக்கான தீர்வு நிச்சயம் கிடைக்கும்."

நன்றி: தினமலர்.காம்

கருத்து நன்றாகத்தான் இருக்கிறது. இதைப் "பெரியண்ண"னுக்கும் யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.

ஒருவன் செய்தால் குற்றம் அல்லது பழிக்குப் பழி!

ஒரு கும்பல் செய்தால் அது தீவிரவாதம்!

ஒரு இனமே செய்தால் அது புரட்சி; போராட்டம்!

ஒரு நாடே கிளர்ந்தெழுந்தால் அது யுத்தம். போர்!

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்தான். ஆனாலும் தீவிரவாதத்தைக் கல்வியின்மை, வறுமை, அடிப்படை வாதம் போன்ற பரிமாணங்களுக்குள் மட்டும் அடக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அதன் வேர்கள் ஏகத்துக்கும் எல்லாவிடங்களிலும் ஊடுருவியிருக்கின்றன. நன்கு படித்த, வறுமையில்லாத தீவிரவாதிகளும் எங்கெங்கும் இருக்கின்றனர்.

சிலர் கோட் சூட் மாட்டிக்கொண்டு தற்காப்பு நடவடிக்கை என்ற போர்வையில் பண, படை பலங்களை வைத்துச் செய்யும் Official Terrorism-யும், செயற்கைக்கோள் தொலைபேசியிலிருந்து எல்லாவித நவீனங்களையும் கையில் வைத்துக்கொண்டு உலகளாவிய அமைப்பாக இயங்கும் கும்பல்களையும் எந்த வகையில் சேர்ப்பது? எது இவர்களைத் தூண்டுகிறது?

சுலபத்தில் தீர்வு கண்டுவிடமுடியாத பிரச்சினை இது. இருந்தாலும் திரு. கலாம் அவர்கள் மொழிந்துள்ள இந்த முப்பரிமாணங்கள் நல்ல தொடக்கமாக இருக்கும்.

அதுவரை உயரமான கட்டிடங்களில் வேலைசெய்ய நேரும்போது ஜன்னல் வழியாக விமானம் எதுவும் வருகிறதா என்று பார்த்துக்கொள்ளலாம். வீட்டில் அணு உலை வைத்துச் சமையல் செய்யாதிருக்கலாம்.

***

Thursday, January 26, 2006

தலைகீழாக தேசியக்கொடி!

Image hosting by TinyPic

இப்பதிவு தலைவர்கள் கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக முதல் நாளே வந்து மைதானத்தில் கோலப் பொடியால் கோடு, வட்டங்கள் எல்லாம் போட்டு, கயிறை கம்பத்தின் உச்சி வளையத்துக்குள் நுழைத்து, இழுத்துச் சரிபார்த்து, தேசியக் கொடிக்குள் பூக்களையும் நிரப்பி, உச்சிக்குச் சென்றதும் சரியாக அவிழும்படி முடிந்து வைக்கும் முகம் தெரியாத சக குடிமகன்களுக்காக!

***

"இப்ப என்ன? தீவாளிக்கு வரலைன்னா பொங்கலுக்கு வந்துருவான்" என்று கமல் சொன்னதும் கல்பனா "பண்டிகைக்குப் பண்டிகை வர்றதுக்கு அவர் என்ன பண்டிகை புருஷனா?" என்று கேட்பார் சதிலீலாவதியில்.

தேசியக் கொடியையும் இப்படி குடியரசு தினம், சுதந்திர தினம் என்று வெகுசில தினங்களில் மற்றுமே ஏற்றுவதால் "பண்டிகைக் கொடி"யாகி, ஒவ்வொரு தடவையும் யாராவது மகானுபாவர்கள் தலைகீழாக ஏற்றித் தொலைத்து செய்தித்தாள்களிலும் வந்துவிடும்.

அது சரி. கொடியேற்ற அழைக்கும்போது முடிந்து வைத்திருக்கும் கொடி தலைகீழாக இருக்கிறதா அல்லது நேராக இருக்கிறதா என்பது முடிந்துவைத்த ஆளுக்குத்தான் வெளிச்சம். கொடியேற்ற வந்த தலைவருக்கு அது புதிரான விஷயம்தான்.

ஏற்கெனவே முடிச்சு மேலே போய் உச்சியில் விரிந்ததும் தலைமேல் என்ன விழுமோ என்று அவர் திகிலில் இருப்பார். யாராவது விஷமிகள் பூவுக்குப் பதிலாக கொப்பரைத் தேங்காயையோ, வெங்காய வெடியையோ, அல்லது கொக்கி கழன்றுகொண்டு விழுமாறு கையெறி குண்டையோ வைத்திருந்தால்! ஆக கொடியேற்ற வருபவர்களின் மனநிலையையும் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும்.

கொடியை முடிந்து வைக்கும் ஆசாமிகள் தலைகீழாகக் கட்டிவிடாமலிருக்க எனது அனுபவத்திலிருந்து ஒரு யோசனை!

பள்ளியில் படிக்கும்போது ஒரு சுதந்திர தினத்தன்று கொடியை சட்டையில் தலைகீழாகக் குத்திக்கொண்டு வந்த சக மாணவனை ஆசிரியர் கண்டித்து, சரியாகக் குத்திக் கொள்ளச் செய்தார்.

'மன்னிச்சுக்கங்க சார். கலர் சீக்குவன்ஸ் அடிக்கடி மறந்துடுது'

'ஓஹோ.. பெரிய மனுஷனுக்கு மறதியாயிடுச்சோ?' என்றவர் 'ஒங்க வூட்ல விசேஷம் எதாச்சும் சமீபத்துல நடந்துச்சா?' என்று கேட்டார்.

'ஆமாங்க சார். அக்காவுக்கு கல்யாணம் நடந்துச்சு'

'சாப்பாடெல்லாம் போட்டாங்கள்ல?'

'ஆமா சார். சொந்தக்காரவுக நெறய பேரு வந்துருந்தாஹ'

'சரிதான். பந்தி ஆரம்பிக்கறப்போ மொதல்ல என்ன வப்பாங்க?'

'எல'

'அப்றம்?'

'சோறு'

'அப்றம்?'

'கொழம்பு'

'சரி. எல என்ன கலர்?'

'பச்ச சார்'

'சோறு?'

'வெள்ள சார்'

'குழம்பு?'

பையன் இப்போது பதில் சொல்லாமல் ஈயென்று இளித்து, 'புரியுது சார்' என்றான்.

'சோறு திங்க மறக்காதுல்ல? அது மாரி கொடி கலர் சீக்குவன்ஸும் மறக்கக் கூடாது. சரியா?' என்றார்.

இன்று வரை மறக்கவில்லை. என்றும் மறக்காது.

மனசுல வச்சிக்கிட்டீங்களா அண்ணே?

குடியரசு தின நல்வாழ்த்துகள்.

***

Monday, January 23, 2006

"Eternal Sunshine" of the spotless mind!

*** "Eternal Sunshine" of the spotless mind! ***

ஜிம் கேரியின் கோணங்கித்தன முகபாவனைகளையே பார்த்துப் பழகியிருக்கும் எனக்கு இப்படம் ஒரு இன்ப அதிர்ச்சி. தாழ்வு மனப்பான்மையும் தன்னிரக்கமும் சிந்தும் அவரது கண்களுக்கு அபாரமாக வாய்ப்பளிக்கப் பட்டிருக்கிறது இந்தப் படத்தில். வயதாகியிருப்பது முகத்தில் நன்றாகவே தெரிகிறது.

புதினம், புனைவு, Sci-Fi, என்ற வகைப்பாடுகளுக்குள் போகாமல் சாமான்யப் பார்வையில் படத்தைப் பார்த்தாலும் (Sub-title களுடன்) படம் புரியும்.

ஒரு விதத்தில் பார்த்தால் ஒரு பத்தியில் அடங்கிவிடக் கூடிய எளிய கதை என்று சொல்ல முடியும். ஆனாலும் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிடவும் முடியாது.

ஜோயல் (Joel) என்ற பாத்திரத்தில் ஜிம் கேரி. க்ளெமண்டைன் Kruczynski (நீங்களே உச்சரிச்சுக்கோங்கப்பா) என்ற பாத்திரத்தில் கேட் வின்ஸ்லெட்.

காதலர் தினத்தன்று காலையில் தூங்கியெழும் ஜோயல் ஏதோ உள்ளுணர்வு உந்த வேலைக்குப் போகாமல் Montauk என்ற இடத்திற்குப் போகிறார். கடுங்குளிரில் கடற்கரையில் நாள் முழுவதையும் கழிக்கும் அவர், அங்கு பார்த்து, திரும்ப வருகையில் ரயில் நிலையத்திலும் பார்த்து, பிறகு வண்டியில் சந்திக்கும் பெண் க்ளெமண்டைன். படபடவென்று பேசி அறிமுகம் செய்துகொள்ளும் க்ளெம்முடன் பச்சக்கென்று நட்பு உருவாகிவிட, மறுநாளும் சந்திக்கின்றனர். இரவில் பனிக்கட்டியாய் உறைந்திருக்கும் சார்ல்ஸ் நதிக்குப் போய் படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை ரசிக்கின்றனர். மறுநாள் காலையில் காரிலிருந்து உறங்கிக் கொண்டிருக்கும் க்ளெம்மை எழுப்பி இறக்கி விடுகையில் "நான் உன் வீட்டுக்கு வந்து இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேனே?" என்று அவள் கேட்க, ஜோயல் சரி என்கிறான். டூத் ப்ரஷை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன் என்று வீட்டுக்குள் போகிறாள் க்ளெம். காரில் ஜோயல் காத்திருக்கும்போது ஜன்னலைத் தட்டி "ஏதாவது வேணுமா? உதவி தேவையா?" என்று அந்த இளைஞன் கேட்பது ஜோயலுக்கு வினோதமாக இருக்கிறது. "நீங்கள் கேட்பது எனக்குப் புரியவில்லை" என்று பதில் சொல்லவும், அவன் விலகி க்ளெம்மின் வீட்டுக்குள் செல்ல, காட்சி மாறுகிறது.

பரிசுப் பொருள் ஒன்றை வாங்கிக்கொண்டு க்ளெமண்டைனைப் பார்க்க அவள் வேலை செய்யும் இடத்திற்குச் செல்லும் ஜோயலிடம் "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று புதிதான வாடிக்கையாளரிடம் வினவுவதைப் போல வினவிவிட்டு அருகில் இருக்கும் இளைஞனிடம் முத்தம் கொடுத்துக் கொள்ளும் க்ளெம்மைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைகிறார் ஜோயல். ஏமாற்றப்பட்டோம் என்ற விரக்தியுடனும், வேதனையுடனும், வீட்டில் வந்து நண்பனிடமும் அவன் மனைவி/சினேகிதியிடமும் புலம்பித் தள்ளும் ஜோயலுக்கு வரும் கடிதத்தில் "உங்கள் சம்பந்தமான நினைவுகள் அனைத்தையும் க்ளெமண்டைன் அழித்துவிட்டாள்" என்ற செய்தி இருக்கிறது.


வாயடைத்துப் போய் அக்கடிதம் வந்த மருத்துவமனைக்குச் சென்று டாக்டரைப் பார்க்க, "நினைவுப் பதிவுகளை மூளையிலிருந்து அழித்துவிடும்" சிகிச்சையைப் பற்றிச் சொல்லி, க்ளெமண்டைன் ஜோயலின் நினைவுகளை அழிப்பதற்காக அச்சிகிச்சையை எடுத்துக்கொண்டாள் என்பதையும் டாக்டர் குறிப்பிட, கடுப்புடன் தானும் அச்சிகிச்சைக்கு உட்பட விரும்புவதாக ஜோயல் சொல்கிறான். அன்றிரவு ஜோயல் உறங்குகையில் சிகிச்சையைத் துவங்குகிறார்கள் டாக்டரின் உதவியாளர்கள். க்ளெமண்டைன் தொடர்பான நினைவுகள் அனைத்தையும் - அவளை நினைவூட்டும் அனைத்துப் பொருள்களையும் ஜோயல் டாக்டரிடம் விளக்கிவிட்டுக் கொடுக்கிறான். ஜோயலைத் தூங்கப் பண்ணிவிட்டு சிகிச்சையைத் தொடங்குகிறார்கள். ஜோயலின் மூளையில் க்ளெமண்டைனின் நினைவுப் பதிவுகளைத் தேடிப்பிடித்து ஒவ்வொன்றாக அழிக்கத் துவங்க, அவற்றைப் "பார்த்துக் கொண்டிருக்கும்" ஜோயல் ஆரம்பத்தில் சாதாரணமாக அதைக் கவனித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் நினைவுகள் ஒவ்வொன்றாக அழிந்து போகையில், க்ளெமண்டைனை எந்த அளவு நேசித்திருக்கிறோம் என்று ஜோயல் உணர்ந்து, அவளே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; அவளது நினைவுகளையாவது தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறான். அவளது நினைவுகள் அழிந்து போகாமல் தடுக்கப் போராடுகிறான். அதாவது ஜோயலின் மூளைக்குள் ஏதோ ஒரு உணர்வு விழித்துக்கொண்டு அந்தச் சிகிச்சையைத் தடுக்கப் போராடுகிறது. ஜோயல் ஆழ்ந்த நித்திரையில் இருக்க அவனால் உடல்ரீதியாக ஒன்றும் செய்யமுடியாது. ஆக அவனது மனம் தான் இப்பிரச்சினையைக் கையாள வேண்டும்.

சிகிச்சையிலிருந்து தப்பிப்பதற்காக டாக்டரிடம் சொல்லாத க்ளெமண்டைன் சம்பந்தப்படாத நினைவுகளுக்குள் க்ளெமண்டைனின் நினைவுகளை இடம்பெயர்த்துக்கொண்டு பொருத்திப் பார்க்கிறது - உதாரணம் பள்ளியில் நண்பர்களோடு செத்த பறவையைப் பார்த்துக்கொண்டிருக்க, அருகிலிருக்கும் சினேகிதியாக க்ளெமண்டைனைப் பொருத்திக் கொள்வது - இங்கு மானிட்டரில் பார்த்துக்கொண்டே நினைவுகளை அழிக்கும் டாக்டரின் உதவியாளர் சட்டென்று சங்கிலித் தொடர்பு அறுந்தது போல திரையிலிருந்து ஜோயலில் நினைவுத் தொடர் காணாமல் போக, டாக்டருக்குத் தொலைபேசித் தெரிவிக்க அவரும் வந்து மூளையை நிரடிப் பிடித்து நினைவழிப்பைத் தொடர்வதும், ஜோயலின் மனம் மறுபடியும் தப்பித்து க்ளெமண்டைனோடு - அவள் நினைவுகளோடு - வேறு நினைவுப் பதிவுகளுக்கு ஓடுவதும் என்று சரியான துரத்தல்கள்.

சுலபமாகக் கதையைச் சொல்லிவிட்டாலும் இப்படி நிகழ்வதைக் காட்சிகளாகக் காண்பிப்பது அவ்வளவு எளிதல்ல. பார்க்கும் நமக்கே "மண்டை காய்கிறது". எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று ஊகித்துக் கொள்ளுங்கள்.

அட்டகாசமாக எடுத்துச் சாதித்திருக்கிறார்கள் - கடற்கரை வீட்டுக்குள் க்ளெமண்டனும் ஜோயலும் இருக்க, வீடு கரைந்துகொண்டே வருவது; முகமற்ற மனிதர்கள், காரிலிருந்து இறங்கி வேகமாக நடந்து போகும் க்ளெமண்டைனைப் பின்பற்றி வேகமாகச் செல்லும் ஜோயல் சற்று தூரம் நடந்ததும் அதே காருக்கே வந்து சேர்வது - ஒரு loop மாதிரி - ஆரம்பமும் முடிவுமற்ற வட்டம் போன்று - திகிலுடன் காட்சிகளைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

இப்படத்தைப் பார்க்கும்போது சுஜாதாவின் தூண்டில் கதைகள் நினைவுக்கு வந்தது. சங்கிலித் தொடர்போல ஆதியே அந்தமாகவும், அந்தம் ஆதியாகவும், காட்சிகள் மாறி மாறி வர, அசந்தால் ரங்கராட்டினத்தில் வேகமாகச் சுற்றி, தலைசுற்றி, பொருட்காட்சியில் தொலைந்து போவதுபோலத் தொலைந்துவிடக் கூடிய அபாயம் நிறையவே இருக்கிறது.


சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகளை வாசித்துக்கொண்டு போகும்போது, நடுவே நினைவுத் தொடர்கள் தடுக்கி, திரும்ப வந்து ஆரம்பத்திலிருந்து வாசித்துக்கொண்டு போகவேண்டியிருப்பது போல நிகழவும் இப்படத்தில் சாத்தியங்கள் உண்டு. ஆனாலும் Eternal Sunshine நாவலாக இல்லாமல் காட்சியாக, திரையில் வந்திருப்பது ஜேஜே சில குறிப்புகள் மாதிரியான வாசிப்புச் சிக்கல்கள் இல்லாமல் எளிதாகப் புரிந்துகொள்ள வழி செய்கிறது.

மனித மனதின் விசித்திரங்களை அறிந்துகொள்ளும் முடிவிலா(ததாகத் தோன்றும்) முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கின்றனர். நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. தற்காலிக முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. மூளை என்ற மர்ம முடிச்சு இன்னும் மருத்துவ, அறிவியல் ரீதியாக முழுதாக அவிழவில்லை. Evolving process-ஆக ஓடிக்கொண்டேயிருக்கிறது. அதில் ஒரு துளிக்கும் துளியாக Eternal Sunshine என்ற இப்பட முயற்சியைச் சொல்லலாம். படம் காலம், உணர்வுகள், புரிந்துகொள்ளல்கள், நிஜங்கள், உறவுகள், உண்மையான காதலின் தீவிரம், என்று எல்லாப் பரிமாணங்களிலும் விரிகிறது.

ஜிம் கேரியின் மிகச்சிறந்த படம் என்று எல்லாரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிறந்த படம்தான். ஆனாலும் மிகச்சிறந்த படம் என்று சொல்லமுடியவில்லை. ஜிம் கேரிக்குப் பதிலாக இப்பாத்திரத்தைச் செய்யக்கூடிய நடிகர்கள் நிறையவே இருக்கிறார்கள் (Al Pacino-வைக் கற்பனை செய்து பார்த்தேன். பயமாக இருந்தது). எனக்கென்னவோ The Mask தான் அவர் சிறப்பாக எல்லாவகையிலும் பொருந்திய நடிப்பைத் தந்த படம் என்று தோன்றுகிறது (The Truman Show, Liar Liar, Ace Ventura, Dumb and Dumber, Cable Guy, அன்னியன் ஸ்டைல் Split Personality-யை வைத்து வந்த Me, myself and Irene - எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏற்ற கதை - அவர் தமிழில் எடுத்தால் நிறைய பேருக்குத் தீனி கிடைக்கும்- என்ற அநியாயமான படம், என்று நிறைய படங்கள் இருந்தாலும்).

மண்டைக்குள் நடக்கும் போராட்டத்தை நாம் வெளியில் இருந்து பார்க்கும் வினோத அனுபவத்தை இப்படம் தருகிறது. கனவுகளில் வரும் தொடர்பற்ற காட்சிகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருக்கும். ஆழ்மன ரகசியம் அது. தேடிப்பிடித்து அழிக்கும் அறிவியலுக்கும், புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து ஓடித் தப்பிக்கும் மனதுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைக் காட்சிகளாக வடித்திருக்கிறார்கள். கடைசியில் மனம் வெல்கிறது.

கேட் வின்ஸ்லெட் பரபரப்பாக இருக்கிறார். அழகாக இருக்கிறார். பனிக்கட்டியாக உறைந்திருக்கும் நீர்நிலையின் மீது இருவரும் படுத்துக்கொண்டு ஆகாயத்து நட்சத்திரங்களை ரசிப்பது கவிதையான காட்சி - எனது மொட்டைமாடி இரவுகளை நினைவுபடுத்தியது.


அழகிய தீயே-யில் சொல்வதுபோல "கமர்ஷியலுக்காக" Kirsten Dunst (சிலந்திமனிதன் பட நாயகியேதான்) - வீண். நினைவுகளை அழிப்பது போன்ற சிகிச்சையைச் செய்யும் உதவியாளர்கள் ஏதோ கல்லூரி மாணவர்களைப் போன்று ஒழுங்கற்று அமெச்சூர்தனமாக இருக்கிறார்கள்.

சம்பந்தமில்லாமல் "சிந்தனை செய் மனமே" பாடல் நினைவுக்கு வருகிறது :0) நன்றாகவே சிந்தனை செய்யத் தூண்டும் படம். சில புத்தகங்களைக் கீழே வைக்கவே மனம் வராமல் ஒரே வாசிப்பில் முடிப்பதுபோல, ஒரு காட்சியைக் கூடத் தவறவிடாது முழுவதையும் சிலையாக அமர்ந்து பார்க்க வைத்தது இப்படம்.

திரைக்கு முன்னால் இருப்பவர்களைவிட, பின்னணியில் வேலை பார்த்தவர்களே படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

இயக்கம் : Michel Gondry
திரைக்கதை: Charlie Kaufman
ஒளிப்பதிவு : Ellen Kuras
எடிட்டிங் : Valdís Óskarsdóttir

"பார்க்கலாமா?" என்று நீங்கள் கேட்டால் என் பதில்: "இன்னும் பார்க்கவில்லையா?"

***

Sunday, January 15, 2006

கசக்கும் கணுவை விடுத்து இனிக்கும் கரும்பைச் சுவைப்போம்!


உதடோரங்கள் எரிய எரியக் கரும்பு தின்ற நினைவுகள் நிழலாடுகின்றன. வாழ்க்கைப் பயணத்தில் கடந்து போன இனிய நினைவுகளைக் கரும்பு போல அசைபோடுவதுதான் இப்போதைய நிலையில் முடிகிறது. ஸ்ரீரங்கத்தில் இருந்தால் வாசல் படிக்கட்டில் கரும்போடு அமர்ந்து உமிழ்நீர் சுரக்கக் கடித்துத் தின்றிருப்பேன்.

பொங்கல் நினைவுகளை வைத்து நீண்ட நாள் முன்பு எழுதியது.
http://agaramuthala.blogspot.com/2005/01/blog-post.html

மறுபடி படித்துப் பார்த்துக்கொண்டேன் - வயதானால் நினைவுகள் மழுங்கிவிடும் என்கிறார்கள். முடிந்த வரை பதிவு செய்து வைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

சீராகக் குறுக்கே கோடுகளோடு பகுதி பகுதியாக இருக்கும் கரும்பில் தொக்கிக்கொண்டு தெரியும் கணுக்கள் வலுவானவை. கடித்துத் துப்புவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். கசப்பாகவும் இருக்கும். நம் ஒவ்வொருவரின் மனதிலும் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் சேரும் கசப்பான அனுபவங்கள் இக்கணுக்கள் போல வலுவாகவும் நீக்க முடியாமலும் சேர்ந்து போயிருக்கும். இனியவற்றைக் கிடைக்கச் செய்யாமல் தடுத்து நிறுத்துவன இக்கசப்புக் கணுக்களே.


இம்மாதிரி கணுக்களை பிரயத்தனப்பட்டாவது மனதிலிருந்து தூக்கியெறிந்து இனிய சிந்தனைகளோடு இனியவற்றையே எப்போதும் நினைத்து வாழ்வையும் இனிதாக அமைத்துக் கொள்வோம்.

நண்பர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். வளம் பெருகட்டும். வாழ்வு உயரட்டும். தீமைகள் விலகி நன்மைகள் நடக்கட்டும்.


வேற்றுமையை மனதிலிருந்து தொலைத்து ஒற்றுமையும் அன்பையும் சக மனிதனிடத்திலும், அனைத்து உயிர்களிடமும் பாராட்டும் மனப்பக்குவத்தை இறைவன் எல்லாருக்கும் அருள்வாராக.


அன்புடன்
சுந்தர்.

Wednesday, January 11, 2006

த டெர்மினல் - திரை விமர்சனம் (The Terminal - Film Review)



எனக்குப் பிடித்த ஹாலிவுட் நடிகர்களில் முக்கியமானவர் டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks). அசப்பில் ஆரம்பகால கயாமத் ஸே கயாமத் தக் பட அமீர்கான் போல இருக்கும் டாம், அந்தத் துறுதுறு கண்களுடன் அலட்டிக்கொள்ளாமல் நடிக்கும் மெக் ரயானுடன் (Meg Ryan), மென்மையான பாத்திரங்களில் நடித்த You've Got Mail, Sleepless in Seattle படங்களை மறந்திருக்க மாட்டோம்.

ஒரு சிறுகதை முடிச்சை வைத்துக்கொண்டு இயல்பான நிகழ்வுகளைப் பின்னிப் பிணைந்து ஆர்ப்பாட்டம், வெட்டு குத்து தொப்புள் நடனங்கள், பஞ்ச் டயலாக், ஐட்டம் சாங் என்ற குத்துப்பாட்டு, வெளிநாட்டு வழுவழு சாலை சந்திப்புகளில் கும்தலக்கடி கும்மா என்று ஆடுவது - போன்ற மசாலா அம்சங்கள் எதுவுமின்றி நேரடியாகக் கதை சொல்லப்படும் இம்மாதிரி படங்களை அசத்தலாக எடுக்கிறார்கள்.

இதே மாதிரி தமிழில் படங்கள் வராதா என்று நீண்டகாலமாக ஏங்கிக்கொண்டிருக்கிறேன். (பாடல்கள் தவிர்த்த) நம்மவர் படத்தை இவ்வகையில் சேர்க்கலாமா?

அந்த வரிசையில் டாம் ஹாங்ஸ் நடித்து 2004-இல் வந்த இன்னொரு படம் The Terminal. சமீபத்தில் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அசந்து போகச் செய்திருந்தார் மனிதர்.

விக்டர் நவோர்ஸ்கி என்ற நபர் சலாமியா மாதிரியான க்ரகோஷியா (Krakhosia) என்ற கற்பனை தேசத்திலிருந்து நியூயார்க்கின் JFK விமான நிலையத்திற்கு வருகிறார். வந்து இறங்கும் அதே சமயத்தில் உள்நாட்டுப் போரின் எதிரொலியாக க்ரகோஷியாவில் ஆட்சி கவிழ்ந்து ஆங்காங்கே கலவரங்கள் வெடித்து அரசியல் ரீதியாக எந்த அமைப்பும் ஆட்சியில் இல்லாமல், அதே ரீதியில் க்ரகோஷியா என்ற தேசமே இல்லாது போகிறது. அதாவது விக்டர் வைத்திருக்கும் கடவுச்சீட்டோ, அமெரிக்காவில் நுழைவதற்கான விசாவோ செல்லாதவை. விக்டர் எதற்காக அமெரிக்காவுக்கு வருகிறார் என்பதும் புரியாத புதிர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. விமானநிலைய அதிகாரிகளுக்கு விக்டர் பேசும் மொழியின் (பல்கேரியன்) அட்சரம் கூட தெரியாது (இதன் தொடர்ச்சியான விமானநிலைய அதிகாரிகளுக்கும் விக்டருக்குமான உரையாடல்கள் சரியான கலாட்டா). குடியேற்ற அதிகாரிகள் விக்டரை அனுமதிக்க மறுக்கிறார்கள். சரியான விசா இல்லாதவர்களைப் பொதுவாக வெளியேற்றிவிடுவது எல்லா நாடுகளின் வழக்கம். விக்டர் வெளியேறி எங்கே போவார் என்பதில் குழப்பம். ஆட்சி வீழ்ந்த க்ரகோஷியா தேசமே இல்லை. அதாவது ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை; ஒருமாதிரி திரிசங்கு சொர்க்கத்தில் - மன்னிக்க - நரகத்தில் மாட்டிக்கொண்டு விக்டர் படும் அனைத்து அவஸ்தைகளையும் சுவாரஸ்யமாகச் சொல்கிறார்கள்.

க்ரகோஷியாவில் நிலவரம் சரியாகும்வரை, ஒரு முடிவு கிடைக்கும்வரை, விமானநிலைய வளாகத்திலேயே இருக்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறார் விக்டர். அவரை என்ன செய்வது என்று தெரியாமல் பயங்கரமாக விழிக்கிறார் புதிதாக விமான நிலைய மேலாளராகப் பதவி ஏற்றுள்ள ப்ராங்க் டிக்ஸன் (Stanley Tucci). விக்டருக்கு அவர் கொடுக்கும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சட்டத்துக்குப் புறம்பாக விக்டரை விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லத் தூண்டி அவர் அப்படி வெளியேறும் பட்சத்தில் காவல்துறையிடம் சொல்லிக் கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளும் அவர் செய்ய, கடைசி வினாடியில் விக்டருக்கு மண்டைக்குள் மணியடிக்க வெளியேறாமல் திரும்பிவிடுகிறார். இப்படி ஏகக் களேபரங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

தனது அபாரமான இயல்பான நடிப்பால் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார் விக்டராக நடித்த டாம் ஹாங்க்ஸ். படம் துவங்கிய சில நிமிடங்களில் டாம் ஹாங்க்ஸ் மறைந்துபோய் விக்டர் நம் மனதில் அமர்ந்துகொள்கிறார். தவித்துக்கொண்டிருக்கும் விக்டருக்கு யாராவது உதவ மாட்டார்களா? அவருக்கு நல்லது நடக்காதா என்று நம்மைக் கவலைப்படச் செய்வதே டாம் ஹாங்க்ஸ்ஸின் நடிப்பின் வெற்றி.

கதையில் இடைச்செருகல்களாக சில உபகதைகள்.

தினப்படியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துகொண்டு போய் கவுண்ட்டரில் இருக்கும் பெண் அதிகாரி டாரஸ்ஸிடம் கொடுப்பதும் அவர் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து திருப்பி அனுப்பவதும் நடக்கிறது. டாரஸ் மீது காதல் கொண்டிருக்கும் நிலைய பணியாளர் என்ரிக் க்ரூஸ் விக்டருக்கு உதவ முன்வருகிறார். இருவரும் செய்து கொள்ளும் ஒப்பந்தப்படி விக்டருக்கு என்ரிக் உணவளிக்க, விக்டர் விண்ணப்பத்துடன் என்ரிக் சார்பாக கடிதங்களை டாரஸ்ஸிடம் கொடுக்கவேண்டும்.

சுத்தம் செய்யும் பணியாளராக வரும், பல வருடங்களாக அமெரிக்காவில் இருக்கும், குப்தா ராஜன் என்ற இந்தியரின் தொடர்பும் விக்டருக்குக் கிடைக்கிறது. குப்தா அமெரிக்காவுக்கு வந்த காரணம் சுவாரஸ்யமானது. சென்னையில் பொட்டிக்கடை நடத்தும் குப்தாவிடம் தினமும் லஞ்சம் பெற்றுச் செல்லும் போலீஸ்காரரை ஒரு நாள் குத்திக் கொன்றுவிட்டு அமெரிக்காவுக்கு விமானம் ஏறி வந்தவராம் அவர். வந்ததிலிருந்து விமானநிலையத்தில் துப்புரவுப் பணி! திரும்பப் போனால் பிடித்துக்கொள்வார்கள் என்பதால் போகாமல் இங்கேயே இருக்கிறேன் என்று விக்டரிடம் சொல்கிறார் குப்தா.

இதற்கிடையில் அடிக்கடி வந்து செல்லும் விமான பணிப்பெண் அமெலியா வாரனுடன் (Catherine Zeta Jones) விக்டருக்குக் காதல் மலருகிறது. விக்டரை ஒவ்வொரு முறை வரும்போதும் பார்க்கும் அமெலியா அவர் ஏதோ அலுவல் விஷயமாக அடிக்கடி பறக்கும் நிறுவன அதிகாரி என்று நினைத்துக் கொள்கிறார். காதலில் தடுமாறும் விக்டருக்கு, மொழிப் பிரச்சினையாலும், அமெலியாவிடம் அவரது நிலைமையைச் சொல்லமுடிவதில்லை.

இறுதிக்காட்சியில் நிறையவே சினிமாத்தனம். கிளம்பிக்கொண்டிருக்கும் விமானத்தைத் தடுக்கும் குப்தா, விக்டரை நியூயார்க்குக்குள் நுழைய விடாமல் தடுக்கத் துடிக்கும் மேலாளர், இறுதியில் பாதுகாப்பு அதிகாரி கருணைகொண்டு விக்டரை விமானநிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கிறார். இதெல்லாம் அமெரிக்காவில் நடைமுறையில் எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.


விமானத்தில் உள்ளிருந்து மனநிலை சரியில்லாத ஒருவர் அவரது பையுடன் நிற்காமல் ஓடினார் என்ற ஒரே காரணத்துக்காகச் சமீபத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். குப்தா மாதிரி விமான மறியல் செய்தால் என்ன ஆகும் என்று சொல்லவேண்டியதில்லை.

கொசுறு தகவல்கள்:

இப்படத்தை எடுக்கத் தூண்டிய உண்மைச் சம்பவம் : மேரன் நஸேரி (
Merhan Nasseri) என்ற ஈரானிய அகதி 1988-இல் ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட அகதிகளுக்கான சான்றிதழைத் திருட்டுக்கொடுத்ததால் இங்கிலாந்தில் அனுமதி மறுக்கப்பட்டு பிரெஞ்சு தேசத்திற்கு வந்திறங்க அங்கும் அனுமதி மறுக்கப்படுகிறார். அவரை அங்கிருந்து கிளம்பவும் விடாததால் Terminal One-லேயே - தேசமற்ற அகதியாக - தங்க நேரிடுகிறது. பிறகு திரும்பச் செல்லவோ, அல்லது பிரஞ்சு தேசத்துக்குள் நுழையவோ அனுமதி கொடுக்கப்பட்ட போது, அவர் எங்கும் செல்ல மறுத்து விமானநிலையத்துக்குள்ளேயே தங்க முடிவெடுத்துவிட்டாராம். 2004 கோடைக்காலம் வரை அவர் அங்கேயே வசித்துக்கொண்டிருந்ததாகச் செய்தி.

பாதுகாப்பு காரணங்களால் படபிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு, விமானநிலையத்தின் மொத்த உள்ளமைப்பையும் அட்டகாசமாகக் கட்டமைப்பு செய்து எடுத்திருக்கிறார்கள். செட் என்றால் நம்ப முடியவில்லை. ஆர்ட் டைரக்டரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஈ.ட்டீ., ஜாஸ், ஜுராஸிக் பார்க் போன்று பிரம்மாண்ட படங்களைத் தந்திருக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் த டெர்மினல் போன்ற மென்மையான படத்தை எடுத்திருக்கிறார் என்றால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது.

துபாயில் சரியான விசா இல்லாமல் அந்த பிரம்மாண்ட விமானநிலையத்தின் ஏதாவது ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கும் சில ரஷ்யர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரே உடை ஒரு சிறு பையுடன் நான்கைந்து நாட்கள் உள்ளேயே சுற்றித்திரிந்த பிறகு அதிகாரிகள் வந்து அழைத்துச் செல்வதை அருகிலேயே இருந்து பார்த்திருக்கிறேன்.

த டெர்மினலில் விக்டருக்கு ஏற்பட்ட கதி, நிஜத்தில் நடந்திருக்கிறது. நடக்கக்கூடிய சாத்தியங்களும் உண்டு.

மொத்தத்தில் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

***

Monday, January 09, 2006

நீங்கள் இவ்வுலகின் கடைசி மனிதனாக இருந்தால்?

ரொம்ப நாளுக்கப்புறம் அந்துமணியின் பா.கே.ப. பகுதியில் ஒரு உருப்படியான கட்டுரையை (கட்டுரையின் 80% வேறொருவர் எழுதிய கட்டுரையின் குறிப்புகளாக இருந்தாலும்) படிக்க முடிந்தது. அது சரி. இந்தப் பதிவில் நானும் 90% அந்துமணியின் கட்டுரையிலிருந்து தான் எடுத்துத் தந்திருக்கிறேன். :) இனி பா.கே.ப.விலிருந்து.....

***

"இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்படும்போது, அது, அவனுக்கு, "பொட்' என்று தலையில் குட்டியது போன்ற பாடம் கற்பிக்கிறது ஒவ்வொரு முறையும்... ஆனாலும், இவன் திருந்துவதில்லை!

இப்படித்தான் நடந்தது இங்கிலாந்தில்... இங்கிலாந்து நாட்டு பசுமாடுகளை "டிவி'களில் பார்த்து இருப்பீர்கள்... கொழு, கொழுவென இருக்கும்; 30-40 லிட்டர் பால் கொடுக்கும். இதற்கும் அதிகமாக பால் வேண்டும் என பேராசைப்பட்டனர். இதற்கென ஆராய்ந்து, விசேஷ உணவு தயாரித்தனர். சாக பட்சிணியான மாட்டுக்கு, மாட்டு எலும்புத் தூள் கலந்த உணவைக் கொடுத்தனர்... பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை "Mad Cow disease" என்றனர். இந்த நோய் பீடித்த மாடுகளை, சில ஆண்டுகளுக்கு முன் லட்சக்கணக்கில் கொன்று எரித்தனர்.

இங்கிலாந்தையும், பிரான்ஸ் நாட்டையும் ஆட்டிப் படைப்பது "காவா' நோய் எனப்படும், "Foot and mouth' நோய். நம் நாட்டில், இந்த நோய் கண்ட மாடுகளை தனியே பிரித்து, விளக்கெண்ணெயும், மஞ்சளும் தடவி வருவர்... இந்த நோய் கண்ட மாடுகள், உணவு எடுத்துக் கொள்ளாது... அதனால், மூங்கிலை வாயில் நுழைத்து, அரிசிக் கஞ்சி ஊற்றுவர். பத்து நாளில் நோய் ஓடிப்போகும். ஆனால், இங்கிலாந்திலோ, இந்நோய் கண்ட, மாடு ஆடுகள், ஒன்றல்ல, இரண்டல்ல... ஏழு லட்சத்தை கொன்று குவித்துள்ளனர். நினைத்தே பார்க்க முடியவில்லை... இதென்ன சோகம்...

இந்த நேரத்தில், கோவை பாரதியார் பல்கலைக் கழக, உளவியல் துறை பேராசிரியர் வேதகிரி கணேசன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது... அவர் கூறுகிறார்... மதங்கள் சொல்வதெல்லாம் மனித நேயத்துடன் மனிதர்கள் செயல்பட வேண்டும் என்பதே. ஆனால், தங்கள் சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையே மனிதர்கள் விரும்புகின்றனர்; அவர்களுக்கு, தங்களது சுயநலத்திற்கு எதிரானதாக மனிதநேயம் தோன்றுகிறது. பெரும்பான்மையினர், பெயருக்கு தங்கள் தாய், தந்தையரின் மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர்; இன்னும் சிலர் மதமாற்றம் செய்கின்றனர். ஆனால், அநேகமாக எல்லாருமே மதங்கள் கூறுவதைப் பின்பற்றுவதில்லை... உதாரணமாக, உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்... இந்தியா முழுவதும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சைவ உணவையே சாப்பிட்டதாக யுவான் சுவாங் என்ற சீன அறிஞர், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது பார்த்து எழுதியுள்ளார்.

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட குற்றவாளிகள் ஊரை விட்டுத் துரத்தப்பட்டு காடுகளில் வாழ்ந்தனர். "சண்டாளர்கள்' என்று கூறப்பட்ட இந்த மதத்தைச் சேர்ந்த இவர்கள் மட்டுமே வேறு வழியின்றி காடுகளில் வாழும்போது புலால் உணவை உண்டு வந்தனர். ஆனால், தற்போது இந்து மதத்தினரில் பெரும்பாலோர் மாமிச உணவு சாப்பிடும் பழக்கத்தில் சிக்கி விட்டனர்; அதை கவுரவமானதாகவும் கருதுகின்றனர்.

"புலால் மறுத்தல்' என்ற ஒரு அதிகாரத்தில் பத்து குறள்கள் மூலம் மாமிச உணவை மறுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார் திருவள்ளுவர். அவர், மாமிச உணவை உண்பவர் உள்ளவரையில் அதை விற்பவர்கள் இருப்பர் என்று கூறியுள்ளார். விற்பவர்கள் உள்ளவரை, வளர்ப்பவர்கள் இருப்பர்; வளர்ப்பவர் உள்ளவரை, மேய்ப்பவர்கள் இருப்பர்; மேய்ப்பவர் உள்ளவரை பூமியின் மேற்பரப்பிலுள்ள பச்சை பசேலென்ற பாதுகாப்புக் கவசம் தேய்வடையும்.

அதனால் சூரிய கதிர்வீச்சுப் பட்டு நிலபரப்பு பாலைவனமாகும். நிலத்தடி நீர் கீழே இறங்கி, நீர்வளம் வற்றிப் போகும்.

ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும்போது, அது பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு தான் காரணமாவதை உணர்வதில்லை.

"உயிர்களைக் கொன்று மாமிச உணவைச் சாப்பிடக் கூடாது' என்று கூறினார் புத்தர். ஆனால், இன்று மாமிச உணவைச் சாப்பிடுகின்றனர் புத்த பிட்சுகள். ஏனென்று கேட்டால், "நாங்கள் மாமிசத்திற்காக உயிர் வதை செய்வதில்லை; மாமிசத்தைக் கடையில் வாங்குகிறோம்...' என்கின்றனர்.

அசைவ உணவை இயேசுநாதர் உண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சைவ உணவையே உண்டு வந்தார் முகமது நபி. குர்ஆனில், "அல்பகறர் (பசு)' என்ற முதல் அத்தியாயத்தில், "அல்லாஹ் (இறைவன்) மரங்களைப் படைத்தேன். ஏனென்றால், அவை உங்களுக்கு (மக்களுக்கு) நல்ல (ஹலால்) உணவாகும் என்பதற்காக' என்று கூறியதாக குறிப்பிடுகிறார் நபிகள் நாயகம். மேலும், இறைவன், "பசுக்களை (பால் கொடுக்கும் மிருகங்களை ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை) படைத்தேன். அவற்றில் ரத்தத்திற்கும், சாணத்திற்கும் இடையில் பாலைப் படைத்தேன். ஏனென்றால் அது உங்களுக்கு நல்ல (ஹலால்) உணவாகும் என்பதற்காக' என்று குறிப்பிடுகிறார்.

"உணவாகும்' (மாமிசம்) என்பதற்காக என்று குறிப்பிடவில்லை. சொர்க்கத்தில் பாலும், பழங்களும், தேனும் கிடைக்கும் என்று கூறுகிறார் இறைவன். இதனால் , அவற்றின் சிறப்பை அறியலாம். தடை செய்யப்பட்ட உணவு என்று ரத்தத்தை கூறுகிறார் இறைவன்.
மாமிசத்திலிருந்து ரத்தத்தை முழுமையாக நீக்க முடியுமா? ஜைன மதத்தினரும், உயிர் வதையையும், மாமிச உணவையும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். புத்த மதத்தைப் பின்பற்றும் சீனர்களும், ஜப்பானியர்களும் சைவ உணவை பின்பற்ற இயலாமல் மதக் கொள்கைகளுக்கு முரணான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றாத வரையில், மக்களிடம் பிற உயிரினங்களிடமும் அஹிம்சை முறையைப் பின்பற்றாத வரையில், இந்துக்களோ, பவுத்த மதத்தினரோ, கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியரோ, யூதர்களோ, ஜைன மதத்தினரோ தங்கள் மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பெரும்பாலும், மாமிச உணவை உண்டு வந்த, இந்த உலகையே ஒரு காலத்தில் ஆண்டு வந்த மேலை நாட்டினர், நுõற்றுக்கு நாற்பது பேர் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறி விட்டனர். இதற்கு மதம் காரணமல்ல; மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் மூலம், மாமிச உணவு இதய நோயை உருவாக்கும் என்ற காரணத்தால்தான். இதிலிருந்து சிந்தனை பூர்வமாக செயல்படும்போது, தங்கள் செயல்களை மனிதர்கள் மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகிறது. எந்த மதமும் சிந்திக்காமல் செயல்படச் சொல்லவில்லை. மதங்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், அறிவுபூர்வமாகச் சிந்திக்க மறுக்கின்றனர். ஏனென்றால், தங்களது சொந்த ஆசாபாசங்களுக்கு முதலிடம் கொடுக்கும் போது, மதக் கோட்பாடுகளும், கருத்துகளும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

— இப்படி எழுதியுள்ளார்.

எந்த மதமுமே, ஒரு உயிரைக் கொன்று தின்னச் சொல்லவில்லை. விஞ்ஞானப் பூர்வமாகவும் அசைவம் நல்லதல்ல என தெரிய வந்துள்ளது. உணவுக்காக கால்நடைகளை வளர்ப்பதும், அதற்கு வியாதிகளை வரவழைத்து, பின்னர் லட்சக்கணக்கில் கொல்வதும் என்று முடிவுக்கு வருமோ?"

என்று அந்துமணி முடித்திருக்கிறார்.

***

ஆக புலால் உண்ணுதலை எந்த மதமும் ஆதரிக்கவில்லை எனும்போது ஏன் இன்னும் புலால் உண்கிறோம்?

பல்வேறு மதங்களின் சடங்குகளில் - சடங்குகள் மதங்கள் நம்பும் இறைவனுக்காக நடத்தப்படுவது என்னும் வகையில் - உயிர்வதை செய்து புலால் உண்ணுவது எப்படி ஆரம்பித்தது?

ஆட்டையும், மாட்டையும், கோழியையும் சாமியாடிவிட்டு கொன்று பலி போடுவதைப் பார்த்திருக்கிறேன் (அந்த உணர்ச்சியற்ற ஆட்டின் கண்கள்!). நண்பர்களின் வீடுகளுக்கு தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமதான் சமயங்களில் செல்லும்போதெல்லாம் தவறாமல் தரப்படும் மாமிச பிரியாணி. கோயில் திருவிழாக்களில் கும்பிடுகிறார்களோ இல்லையோ - கிடாவெட்டு கட்டாயம் இருக்கும். "இன்னிக்கு விசேஷம்ல? கோழியடிச்சுருக்கோம்" என்று ரப்பர் போல வழுவழு உடலில் மஞ்சள் போல் மசாலா பூசுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது பிறந்த குழந்தை போல, தலை மட்டும் நில்லாது இங்கும் அங்கும் சாய்ந்து விழும்!

வளைகுடாவில் வாழ்ந்த அனுபவத்திலிருந்து எனக்குத் தோன்றிவது, மனிதன் வாழும் இடங்களைச் சார்ந்து, அங்கு இருக்கும் இயற்கை வளங்களைச் சார்ந்துதான் தனது உணவுமுறையை அமைத்துக்கொள்கிறான் என்பது. பாலைவன வளைகுடா நாடுகளில் விவசாயம் செய்து சைவத்தை மட்டும் உண்டு ஜீவிக்கமுடியாது. மஸ்கட்டிலிருந்தபோது கரடுமுரடான மொட்டை மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரின் பிரதான உணவு பேரீச்சம்பழங்கள். அதைவிட்டால் நெருப்பில் சுட்ட ஆட்டின் மாமிசம். பேரீச்சம்பழங்கள் கிடைக்காத காலங்களில் மாமிசம் உண்பதைத் தவிர வேறு வழியே கிடையாது அவர்களுக்கு. இதைப் போலவே பனிப்பிரதேசங்களில் அல்லது அதிகக்குளிர் நிலவும் இடங்களிலும் விளைநிலங்கள் இல்லாத இடங்களிலும் மனிதனுக்குக் கிடைப்பதை வைத்தே உண்டு உயிர்வாழ்கிறான். கடலோரங்களில் வாழ்பவர்கள் மீன் உண்பதும் (கல்கத்தாவில் பிராமணர்கள் மீன் உண்பது சாதாரணம் என்று எனது பெங்காலி நண்பர் சொல்லியிருக்கிறார்), மலைப்பிரதேசங்களில் இருப்பவர்கள் அங்கு கிடைப்பதை உண்டும் வாழ்வதும் - இப்படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை - என்று இருக்கும் இடத்திற்கேற்ப உணவுமுறைகளை அமைத்துக்கொண்டிருக்கிறான் மனிதன். இதில் புலாலை மறுத்து சைவமாக இருப்பது அனைவருக்கும் சாத்தியமாக இல்லாமலிருக்கலாம் - போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற எந்த வசதிகளுமில்லாத அக்காலத்தில்.

ஆனால் இப்போது மனிதர்களை இரண்டே வகைகளில் பிரித்துவிடலாம். வறுமையிலிருக்கும் ஏழைகள். வசதி படைத்தவர்கள். வறுமையிலிருக்கும் ஏழைகள் பஞ்சத்தில் எலியைக் கூட தின்ன வேண்டியிருக்கிறது. வசதி படைத்தவர்கள் மினரல் வாட்டரில் கூட கழுவிக்கொள்ளலாம். பாலில் குளிக்கலாம். ஆக பிரச்சினை பொருளாதார ரீதியிலினான ஏற்றத் தாழ்வுகள். இவற்றை அறவே நீக்குவதென்பது முதலாளித்துவ உலகத்தில் எந்த அளவு நடைமுறையில் சாத்தியப்படும்; எத்தனையா (நூற்றா)ண்டுகள் பிடிக்கும் என்றும் தெரியவில்லை. ஆனால் உயிர்வாழக் குறைந்தபட்சத் தேவையான உணவாவது அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும்; பட்டினிச் சாவுகள் ஒழியவேண்டும். இது ஒன்றுதான் இப்போதைய நிலையில் வல்லரசுகளிலிருந்து எள்ளரசுகள் வரை அனைவரும் முனைந்து செயலாற்ற வேண்டிய விஷயமாக எனக்குப் படுகிறது. மெனக்கெட்டுச் செயலாற்றினால் சைவர்களாக அனைவரும் மாறுவதும் சாத்தியம்தான் என்று தோன்றுகிறது. சாதி, மதம், எல்லை யுத்தங்கள், பொருளாதாரத் தாக்குதல்கள், கொடுங்கோலாட்சியை அகற்றுவது, செவ்வாய்க்குப் போவது போன்றவை அஜெண்டாவில் கடைசிக்குத் தள்ளப்படவேண்டிய விஷயங்கள்.

"பொருளாதாரம் உயர்ந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும்; அரசுக்கும் வருவாய் கிடைக்கும்; அப்போது வறுமைக் கோட்டை எச்சில் தொட்டு அழித்துவிடலாம்" போன்ற அரதப் பழைய வசனத்தைச் சொல்லாமல் உண்மையிலேயே நிறைய அனைத்து அரசாங்கங்களும் மெனக்கெடவேண்டும் என்று நினைக்கிறேன். நம் நாட்டிலேயே ஐம்பது வருடங்களாகத் தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசிக்கொண்டு கடைசியில் நெஞ்சுவலி வந்து குளிரூட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அரசு செலவில் படுத்துக்கொண்டு விடுகிறார்கள்.

குற்றங்களின் ஆணிவேர் பசி. அது தீர்க்கப்பட்டால் மக்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நம்மைப் போன்று இலக்கியத் தேடல்களில் கூட ஈடுபட முனைவார்கள் என்று தோன்றுகிறது.

"ஒருவன்/ஒருத்தி எப்படி வாழவேண்டும் என்பதைக் காட்டுவது மதம்" அதாவது "வாழ்வியல் முறை"களைச் சொல்வது மதம். அப்படிப்பட்ட மதங்கள் புலால் உண்ணுவதை ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக அந்துமணி குறிப்பிட்டுள்ள வேதகிரி கணேசன் அவர்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது எந்த அளவு உண்மை?.

இதை அறிந்தவர்கள், அறிஞர்கள் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் - அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்.



அது சரி இப்போதைய ஆயுதக்குவிப்பு உலகில் இன்னொரு உலகப்போர் வந்தால், அணுகுண்டுகளைப் போட்டு பூச்சி பொட்டுகள் இல்லாது எல்லாவற்றையும் அழித்து, தின்பதற்கு புல் பூண்டு கூட முளைக்காதபடி செய்துவிடுவான் மனிதன். பிறகு சைவமென்ன அசைவமென்ன? அப்போது இவ்வுலகத்தில் நரமாமிச பட்சிணிகள்தான் இருப்பார்கள் - கடைசி ஆள் தன்னையே கொன்று தின்னும் வரை!

குழம்பு நன்றாக இருக்கிறது என்று ஆள்காட்டி விரலைச் சப்புக்கொட்டி நக்கியதுண்டு. அந்தக் கடைசி மனிதனாக இருந்து, என் ஆள்காட்டி விரலை நானே கடித்துத் தின்பதைக் கற்பனை செய்துகூட பார்க்க பயமாக இருக்கிறது!

***

நன்றி : அந்துமணி பா.கே.ப. வாரமலர்