Tuesday, November 30, 2004

*** நினைவலைகள் - வற்றாயிருப்பில் ஒரு தீபாவளி ***

*** நினைவலைகள் - வற்றாயிருப்பில் ஒரு தீபாவளி ***

தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பாக ஆங்காங்கே கேட்கும் வெடிச் சத்தம், தீபாவளி நெருங்க நெருங்க தெருக் கோடியில் தொடங்கி, அடுத்த வீட்டு வாசல் வரை வீடு வீடாக அதிரும். என் வயதொத்த பையன்கள் யானை வெடி, கழுதை வெடி மற்றும் மத்தாப்புக்களை விட்டுக் கொண்டிருக்க, மீசை முளைத்த பெரியவர்கள் பச்சை வண்ண சணல் கயிறில் உருட்டிக் கட்டப்பட்ட அணுகுண்டு, நீளமான ராக்கெட், 100 சரம், 500சரம் மற்றும் லஷ்மி வெடிகளை, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சாவதானமாகக் கொளுத்திவிட்டு ஓடாமலும் காதை மூடிக் கொள்ளாமலும் ஒரு அடி தூரத்தில் நின்று அலட்டிக் கொள்ளாமல் மறுபடியும் தொடர்வார்கள்.

வீட்டில் இனிப்பு மற்றும் கார பட்சணங்கள் முதல் நாளே செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்கும். சாம்பிள் கூட கொடுக்க மாட்டார்கள். எனக்குத் தான் தாத்தா இருக்கிறாரே. பாட்டியிடம் அதிகாரமாகக் கேட்டு காரா பூந்தியும் லட்டுக்களையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு, கோயில் சொர்க்க வாசல் படிக்கட்டில் அமர்ந்து என்னை அழைத்துக் கொடுப்பார். அதைத் தின்னவே மனசு வராது. அப்படியே அதை வருடம் பூராவும் வைத்துக் கொண்டு வாசனை பிடித்துக் கொண்டிருந்தாலே போதும் என்று தோன்றும்.

தீபாவளிக்கு நானும், தாத்தாவும் நிறைய ஆயத்தங்கள் செய்வோம். கொல்லைப்புறத்தில் இருந்த நன்னீர் கிணற்றிலிருந்து வாளி வாளியாக நீரிறைத்து வீட்டுக் கூரை மேல் தினமும் தெளிப்போம். மழை பெய்த நாட்களில் இதைச் செய்ய தேவையில்லை. மற்ற நாட்களில் கட்டாயமாக ஒரு பத்து வாளி நீரை பக்கத்து காரை வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு எங்கள் வீட்டுக் கூரையில் தெளிப்போம். எரிந்து விழும் ராக்கெட் வெடிகளின் புகையும் மிச்சங்களினால் ஒரு முறை கூரை தீப்பிடித்ததால் பின் அனைத்து தீபாவளிகளிலும் இந்த முன்னேற்பாட்டைச் செய்து கொண்டோம். ஓவ்வொரு வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இல்லாவிட்டாலும் இரு வீடுகளுக்கு ஒரு கிணறு கட்டாயம் உண்டு. எங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் நீர் தளும்பிக் கொண்டு கிணறு ஒன்று இருந்தது. பின்னாளில் நீர் வற்றி குழாய் இறக்கி மோட்டார் போட்டு நீர் எடுக்கும் நிலை வந்து அப்புறம் மோட்டாருக்கு வேலையில்லாமல் எடுத்துவிட்டதும் வேறு கதை.

வெடியோ மத்தாப்போ வாங்க வசதியில்லாவிட்டாலும் அதற்காக வருந்தியதில்லை. `காசக் கரியாக்கறது இதாண்டா' என்பார் தாத்தா. தீபாவளி வாரத்தில் நானும் என் நண்பர்களும் ஒரு குழுவாக நான்கு தெருக்களிலும் வலம் வருவோம் (தெற்குத் தெரு, வடக்குத்தெரு, நடுத்தெரு மற்றும் தலகாணித் தெரு). எங்கள் குழுவைப் போலவே பல சிறுவர் குழுக்கள் சுற்றிக் கொண்டிருக்கும். எங்கள் வேலை கீழ்க்கண்டவாறு:

  1. சரவெடிகளில் வெடிக்காமல் சிதறிக்கிடக்கும் உதிரி வெடிகளைப் பொறுக்கிச் சேகரிப்பது
  2. திரி மட்டும் எரிந்து வெடிக்காமல் ஏமாற்றிய அனைத்து வகை வெடிகளையும் சேகரிப்பது. இத்தகைய வெடிகள் பற்றவைத்ததும் திரி புசுபுசுவென்று எரிந்துவிட்டு, இதோ வெடிக்கப்போகிறது என்று பற்ற வைத்தவரை ஓரிரு நிமிடங்கள் நகத்தைக் கடிக்கச் செய்துவிட்டு தேமேயென்று இருக்கும். சந்தேகத்துடன் சற்று அருகே நெருங்கி, சிறிய கல்லொன்றை அதன் மீது எறிந்து பார்த்து, வள்ளென்று குரைத்தும் பார்த்துவிட்டு அப்படியும்வெடிக்காவிட்டால் வெறுப்புடன் காலால் ஒரு உதை உதைத்துவிட்டு அடுத்த வெடிக்குப் போய்விடுவர். சில தைரியசாலிகள் (நானும்தான்) வெடியிலிருந்து மில்லிமீட்டரைவிடக் குறைவான நீளத்தில் லேசாகத் தெரியும் வெள்ளைநிறத் திரியை அதைவிட தடிமனான ஊதுபத்தியின் `கங்கை' (கங்கு-ஊதுபத்தியின் முனையில் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பு) வைத்து ஒத்த கண்ணிமைக்கும் நேரத்தில் அது வெடிக்கும். காதில் லேசாக கீய்ங் என்று இரைய, கண்ணுக்கு நீர் வட்டங்களாகச் சில வினாடிகள் தெரியும். அதன் திரில்லே தனி.
  3. பாதி எரிந்து அணைந்த தரைச் சக்கரங்களைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்வது.

அப்பா அவர் சக்திக்கு ஏற்றவாறு ரெடிமேட் டிரெளசரையும் பூப் போட்ட சட்டை ஒன்றையும் ஏதாவது ஒரு தீபாவளிக்கு வாங்கிக் கொடுப்பார். ஆடைகளின் வகைகளோ, மதிப்போ அறிந்திராத பருவம் அது. வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது சில வருடங்களுக்கு ஒரு முறையோ இவ்வாறு கிடைக்கும் புத்தாடையை சந்தோஷமாக தீபாவளியிலிருந்து பல நாட்களுக்கு துவைக்காமல் அணிந்து திரிந்திருக்கிறேன். புத்தாடை கிடைக்கா விட்டாலும் அதற்காக வருந்தியதேயில்லை. செருப்பு என்ற ஒன்றின் தேவையே இருந்ததில்லை. முசிறியில் ஒன்பதாவது சேர்ந்தபோதுதான் முதன் முதலில் ஹவாய் செருப்பு ஒரு ஜோடி கிடைத்தது. ஆனால் அதைப் போட்டுக் கொண்டு நடக்க ரொம்பவும் சிரமப் பட்டேன். வெட்கமாகவும் இருந்தது. நான் நடந்தால் செருப்பு என்காலிலிருந்து விடுபட்டு சில அடிகள் முன்னே போகும். பின்பு கால் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் (அந்த விரலை வைத்து ஆளைக்காட்ட முடியுமா என்ன? :) ) ஒருவாறு மடக்கி செருப்பை இறுக்கி பிடித்துக் கொண்டு நடந்து பழகினேன். என்ன இருந்தாலும் வெறும் கால்களில் மண்ணின் குளிர்ச்சியை அனுபவித்துக்கொண்டு நடக்கும் சுகத்தை செருப்பு தரவில்லை. நிற்க.

இவ்வாறு சேகரித்து மிச்சங்களைக் குவித்து ஆளுக்கு பிரித்துக் கொள்வோம். வெடிக்காதிருந்த உதிரி வெடிகளை தீபாவளியன்று உபயோகப் படுத்த வைத்துக் கொண்டு, அரைகுறையாக எரிந்த வெடிகளைப் பிரித்து ஒரு செய்தித் தாளில் வெடி மருந்தைக் கொட்டிக் கொள்வோம். எங்கள் கைகளெல்லாம் வெடி மருந்தின் அலுமினிய வண்ணத்தில் குளித்திருக்கும.; எல்லாரும் சுற்றி நின்று கொண்டு இரவில் ஒரு தீக்குச்சியைக் கொளுத்திப் போட, மின்னலுக்கான ஈடான ஒளியுடன் ஓரிரு வினாடிகள் குப்பென்று எரிந்து நாய்க்குடை புகை கிளம்பும்.

நாங்கள் மிகவும் விரும்பி விளையாடும் விளையாட்டு கள்ளன் போலீஸ் விளையாட்டுதான். நான் துப்பாக்கி இல்லாததால் திருடன் அணியில் இருந்து கொள்ள, துப்பாக்கி கிடைக்கும் பாக்கியம் பெற்றவர்கள் போலீஸ் அணியில் இருக்க, துரத்தல் துவங்கும். பகலில் விளையாடினாலும், இரவில் விளையாடுவது தான் மிகுந்த குஷியைத் தரும்.

போலீஸ் காரர்கள் கும்பலாக என் வீட்டுத் திண்ணையில் சுவரை நோக்கி முகம் பொத்தி நின்றுகொண்டு ஒன்றிலிருந்து பத்து வரை எண்ண, திருடர்களெல்லாம் பத்து எண்ணப்படுவதற்குள் தெருவில் சிதறி ஓடி ஒளிந்து கொள்வார்கள். பின்பு போலீஸ் குழு பிரிந்து திருடர்களைக் கண்டுபிடிக்கத் தேடுவார்கள். திருடனை முன் பக்கமாகவோ அல்லது பின் பக்கமாகவோ வந்து கண்டுபிடித்து Point Blank Range-லிருந்து போலீஸ் சுட்டுவிட்டால் அந்தத் திருடன் செத்துவிட்டதாகக் கருதப்பட்டு ஆட்டத்திலிருந்து அவுட்டாக்கப் படுவான்.

ரோல்கேப் மற்றும் பொட்டு கேப் `தோட்டாக்கள்' பரவலாக போலீஸ் காரர்களால் உபயோகப் படுத்தப் பட்டன. போலீஸின் பின்புறம் வந்து திருடன் பிடித்து விட்டால் அந்த போலீஸ் அவுட். நெருங்கிய நண்பன் திருடன் கட்சியில் மாட்டிக்கொண்டுவிட்டால் அவனை நீண்ட நேரம் ஓடி அலைய விடாமல் 'என்கவுண்ட்டர்' செய்து ஓய்வு கொடுத்துவிடுவதும் உண்டு.

ரோல் கேப்பும், பொட்டுக் கேப்பும் சிறிய டப்பிகளில் அடைக்கப்பட்டு அது போல ஒரு டசன் டப்பிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு Pack செய்து விற்கப் படும். சிலசமயம் அப்பா ஒரு டசன் ரோல் கேப்பும், ஒரு டசன் பொட்டுக் கேப்பும், ஒரு பாக்கெட் உதிரிவெடியும் (நூறு உதிரிகள் இருக்கும்) வாங்கிக் கொடுப்பார். அத்தைமார்களுக்காக ஒரு பாக்கெட் பூச்செட்டியும், கம்பி மத்தாப்பும், சாட்டை மத்தாப்பும் கொஞ்சம் வாங்கி வருவார்.

ரோல் கேப் எனக்குப் பிடித்தாலும் எனக்கு ரொம்பப் பிடித்தது அதிர்ஷ்ட வசமாகக் கிடைக்கும் பாம்புமாத்திரைகள் தான். அத்தனை சிறிய மாத்திரையைக் கொளுத்தும்போது கரும்பாம்பு நெருப்பைக் கக்கிக்கொண்டு படமெடுத்து வெளியே வரும் அழகே தனி. எரிந்து முடிந்ததும் நெளிநெளியாக இருக்கும் கருஞ்சாம்பல் பாம்பை உடையாமல் மிக மெதுவாக எடுத்துப் பார்க்கும் இன்பமே அலாதி.

எங்கள் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு கிராம்சீப் (கிராம முன்சீப் என்று பின்னாடி தெரிந்தது) வீட்டில் ஒரு ரங்கனும் எங்கள் வீட்டின் வலது புறம் அப்பால் இருந்த தலைகாணித்தெரு வீட்டில் இன்னொரு ரங்கனும் இருந்தார்கள். கிராம்சீப் ரங்கன் எல்லார் வீட்டுக்கும் எந்த வேலையானாலும் முன்னால் நின்று செய்வான். பற்கள் தேய்க்காமல் பல ஆண்டுகளானதால் மஞ்சள் காரை படர்ந்திருக்கும். அவனை எல்லாரும் `கோமாளி' ரங்கன் என்று அழைத்தார்கள். என்னைவிட பலவருடம் பெரியவனாக இருந்தாலும் நானும் அவனை `போய்யா, வாய்யா' என்றே அழைத்துக் கொண்டிருந்தேன். சிறுவர்முதல் பெரியவர்வரை எல்லோரிடமும் ஒரே மாதிரியாகப் பழகும் வெகுளி. சற்று படபடவென்று பேசுவான். தலகாணித்தெரு ரங்கனை `கூட்டு' ரங்கன் என்று அழைத்தார்கள். அந்த பெயர்க்காரணம் தெரியவில்லை. கூட்டு ரங்கன் எல்லோர் போல சீரியஸான பெரிய மனிதன் என்பதால் அவனை நான் `அண்ணா' என்றே அழைத்தேன். அவன் தம்பி வெங்கட் என்னுடன் பள்ளியில் படித்தான்.

கோமாளி ரங்கனின் வீடு மிகப் பெரியது. அவன் வீட்டுத் திண்ணையில்தான் பெரியவர்களின் சீட்டுக் கச்சேரி நடக்கும். அவன்தான் எனக்கு ரம்மி மற்றும் ஆஸ் விளையாடக் கற்றுத் தந்தான். தீபாவளிக்கு அவன் துப்பாக்கி வாங்கி கொஞ்ச நேரம் வெடித்துவிட்டு சலித்துப் போனதால் என்னிடம் இரவல் கொடுத்தான். வாழ்க்கையில் முதன்முதலாக துப்பாக்கியைத் தொட்டது அப்போதுதான். அதன் பளபளக்கும் கரிய உடலை ஆசையுடன் வருடிக் கொடுத்தேன். அலுமினியக் குழாயை ஆவலுடன் திறந்து பார்த்தேன். ஒரு ரோல்கேப்பை லோட் செய்து மெதுவாக குதிரையை இழுத்துவிட்டு முதல் வெடிப்பொட்டு மேலெழும்பி சட்டென்று உலோகம் அதைத் தட்டி வெடித்ததை ஆச்சரியத்துடன் கவனித்தேன். நெருப்புப் பொறி கையில் பட்டுவிடுமோ என்று லேசாக பயமாக இருந்தது.

கூட்டு ரங்கன் ஒரு ரோல் கேப்பை நீளமாக வால் போல கையில் திருப்பிப் பிடித்துக் கொண்டு வெடிப் பொட்டுக்களுக்கு சற்று கீழே ஆள்காட்டி விரல் நகத்தை வைத்து அழுத்தி, சுவற்றில் தேய்த்து அனாயசமாக சட்சட்டென்று ஒவ்வொன்றாக வெடித்தான். கை பொசுங்காமல் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

கோமாளி ரங்கன் துப்பாக்கியை திரும்ப வாங்கிக்கொண்டு விட்டதால் நான் வழக்கம் போல் என் துப்பாக்கியான இடுக்கியை சமையலறையில் இருந்து எடுத்துவந்து ஒவ்வொரு பொட்டு கேப்பாக இடுக்கியில் பிடித்து தரையிலடித்து வெடிக்கச் செய்வேன். சற்று சத்தம் பலமாக வேண்டுமென்றால் ஒரே சமயத்தில் மூன்று நான்கு பொட்டுக்கள் சேர்த்து வைத்து அடிப்பேன். `டேய்.. இடுக்கி லூசாயிடும்டா' என்ற அம்மாவின் கத்தலை சட்டை செய்யாமல் தொடர்வேன்.

இதைத் தவிர மிக முக்கிய தீபாவளி சாகசம் என்னவென்றால், உதிரி வெடியின் திரியைச் சுற்றியிருக்கும் வெள்ளைக் காகிதத்தைப் பாதி கிள்ளி விட்டு கையில் பிடித்துக்கொண்டு பற்ற வைத்து விட்டு, கருப்பு நூல்திரி மெதுவாக எரிந்து முடித்து, அதைச் சுற்றியிருக்கும் காகித கவசத்தை அடைந்ததும் சுறுசுறுவென்று எரிந்து வெடியின் உள்ளே போகும் கடைசி வினாடியில் சட்டென்று மேலே விட்டெறிய அது அந்தரத்தில் வெடிப்பதை கண்டுபெருமிதம் கொள்வோம். இதற்கு டைமிங் ரொம்ப முக்கியம். தப்பினால் போயிற்று.

வெடிப்பவர்களின் வயதுக்குத் தகுந்தவாறு வெடியின் வகைகள் வேறுபடும். கூட்டுரங்கன் சாதாரணமாக அணு குண்டையே கையில் பிடித்து பற்று வைத்துத் தூக்கிப் போடுவான். கையில் வெடியை வைத்துக் கொண்டு யாரிடமும் பேச்சு மும்முரத்தில் இருந்தால் போச்சு. சந்தடியில்லாமல் அருகே வந்து நமக்கே தெரியாமல் நம் கையில் இருக்கும் வெடியைப் பற்ற வைத்து விடுவார்கள்.

வீட்டின் கொல்லைப் புறத்தில் வெந்நீர் அடுப்புக்காக பாட்டி சேகரித்து வைத்திருக்கும் கொட்டாங்கச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து, பாதி சிரட்டைகளை வெடியின் மீது கவிழ்த்து பற்ற வைப்போம். வெடித்த வினாடியில் சிரட்டை காணாமல் போயிருக்கும். மண்ணெண்ணெய் வைக்கப் பயன்படும் பாட்டில்கள்தான் ராக்கெட் லாஞ்ச்சர்கள். தரையில் பாட்டிலை வைத்து, ராக்கெட்டை அதில் செருகிப் பற்ற வைத்ததும், அது சீறிட்டு விண்ணில் செல்லும் அழகே அழகு. குறும்பர்கள் கடைசிவினாடியில் கல்லெறிந்து பாட்டிலைக் கவிழ்த்து விடுவார்கள். ராக்கெட் தரையின் மேல் தறிகெட்டுச் செல்ல வாசலில் நின்று கொண்டிருப்பவர்கள் அலறி அடித்து துள்ளுவார்கள். சிலசமயம் வீட்டினுள் புகுந்து உள்ளே இருப்பவர்களை ஒரு வழி பண்ணிவிடும்.

தீபாவளி பட்சணம் தின்ற அவஸ்தையுடன் தொந்தியைத் தள்ளிக்கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்த சீனு மாமாவின் வேஷ்டிக்குள் ஒரு ராக்கெட் புகுந்துவிட அவர் ஆடிய ஆட்டமும், அதைத் தொடர்ந்த களேபரமும்...நான் கோமாளி ரங்கன் வீட்டுத் திண்ணையிலிருந்த மரப்பெட்டிக்குள் எலிப் புழுக்கை வாசனையுடன் ஒரு மணி நேரம் பதுங்கியிருந்தேன்.

துப்பாக்கியைத் தவிர இன்னொரு முக்கியமான ஆயதத்தைப் பற்றிச் சொல்கிறேன். நீண்ட கம்பியின் முனையில் ஒரு நட்டும் போல்ட்டும் இரண்டு வாஷர்களுடன் இருக்கும். போல்ட்டை லேசாகத் தளர்த்தி, இரு வாஷர்களுக்கு இடையில் பொட்டுக் கேப்பை வைத்து போல்ட்டை மறுபடியும் இறுக்கி விட்டு, கம்பியின் இந்த முனையைப் பிடித்துக்கொண்டு தரையில் அடித்தால் அழுத்தத்தில் பொட்டுக் கேப்பு வெடிக்கும். இது மிகவும் பாதுகாப்பான ஏழைகளின் துப்பாக்கி. ஆனால் ஒவ்வொரு முறையும் `தோட்டா' நிரப்ப பொறுமை வேண்டும். இந்த துப்பாக்கியும் கூட வாங்க முடியாமல் ஈர்க்குச்சியின் முனையில் உதிரிவெடியைச் செருகி வெடிப்பதும் உண்டு. ஆனால் இந்த முறையில் பிருஷ்டத்தில் துளையிடப்படுவதால் வெடிக்காமல் போகும் வாய்ப்புக்கள் அதிகம்.

"ரயில் வெடி" என்று இன்னொன்று இருந்தது. தீப்பெட்டியைப் போலவே இருக்கும் இதை நூலில் செருகி நூலை இரு சுவர்களுக்குக் குறுக்காக நீளமாக கட்டி, பற்ற வைத்தால் ரயில் அநாயசமாக குறுக்கேயும் நெடுக்கேயும் நூல் தண்டவாளத்தில் பயணிக்கும். தொங்கு ரயில். "ஓலைப் பட்டாசு" என்று ஒன்று இருந்தது எங்கள் காலத்தில் அது பிரபலமிழந்திருந்தது. மேலும் செய்கூலி அதிகம் என்பதால் தயாரிப்பு குறைந்துவிட்டது என்று தாத்தா சொன்னார். "வெங்காய வெடி" என்ற பெயரைக் கேட்டதும் சத்தம் குறைந்து கூட்டம் கலைந்துவிடும். அது அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வெடியாம். வற்றாயிருப்பில் தங்குதடையின்றி ஆனால் ரகசியமாகக் கிடைத்தது. விலை அதிகம். விசேஷம்? அதற்குத் திரி கிடையாது. வெடிக்கச் செய்யக் கொளுத்த வேண்டியதில்லை. சும்மா கையில் பிடித்து தரையிலோ சுவரிலோ எறிந்தால் போதும். மோதிய நொடியில் பெருஞ் சத்தத்துடன் வெடிக்கும். எனக்கும் கோமாளி ரங்கன் மூலமாக மூன்று வெங்காய வெடிகள் கிடைத்து, எதிரே இருந்த பெருமாள் கோயில் சுவரில் எறிந்து வெடிக்கச் செய்தேன்.

சினிமாவைக் காப்பியடித்து கழுதை வாலில் சரத்தைக் கட்டிக் கொளுத்த முயன்ற ராமுவுக்கு அது அவன் தாடையில் விட்ட உதையில் வாய் இறுக மூடி அடித்து முன்பற்கள் உடைந்தது மிச்சம்.

லஷ்மி வெடியை விட குண்டான பெரிய வெடியொன்றில் கவர்ச்சி நடிகைகளின் படம் ஒட்டியிருக்கும். அதை வெடிக்காமல் அம்பி மாமா நீண்ட நேரம் தடவிப் பார்த்துக் கொண்டேயிருந்து மனமேயில்லாமல் அடுத்த நாள்தான் வெடித்தார்.

தீபாவளிக்கு முதல் நாளிரவு புத்தாடைகளனைத்தையும் அப்பா சாமி படத்துக்கு முன் வைத்து விடுவார். இரவு தூக்கமே வராது. அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் தாத்தா எழுந்து கொல்லைப்புறத்திலிருக்கும் பெரிய வெந்நீர் அண்டாவில் நீரிறைத்து நிரப்பி அடுப்பைப் பற்ற வைத்து விடுவார். மூன்று மணி வாக்கில் அனைவரையும் எழுப்பிவிட்டு பெரிய பாய் ஒன்றை விரித்து வரிசையாக உட்கார வைப்பார்கள். நான் தூக்கக் கலக்கத்தில் சாமியாடிக் கொண்டிருப்பேன். பாட்டி எல்லோரின் உச்சந்தலையிலும் சாம்பிளுக்குஎண்ணை வைத்து குங்குமப் பொட்டிட்டு விட்டு, கையில் வெற்றிலை பாக்கை திணிப்பார்கள். அப்பா எல்லோருக்கும் சில்லறை காசுகளை விநியோகிப்பார். அம்மாவும் பாட்டியும் எல்லோருக்கும் பொதுவாக ஆரத்தி எடுக்க, வெற்றிலைபாக்கைத் திரும்ப ஆரத்தித் தட்டில் வைத்துவிட்டு, கொடுக்கப்பட்ட காசுகளை தட்டில் போடுவோம்.

பாட்டியும் அம்மாவும் பாடிக் கொண்டே ஆரத்தி எடுக்க, நான் கடைசிவரை போக்கு காட்டிவிட்டு காசு போடுவேன். ஆரத்தி முடிந்ததும், கிடுகிடுவென்று ஒவ்வொருவராக எண்ணெய் தேய்த்துக் குளிக்கத் தொடங்குவார்கள். அதிகாலைக் குளிரில் ஆவிபறக்க வெந்நீரில் குளிக்கும் சுகத்துக்கு ஈடு இணையே இல்லை. கொல்லைப் புறத்தில் கிணற்றங்கரையில் நின்று கொண்டு வாளியில் வெந்நீர் வைத்துக் குளிப்பேன். பெண்களுக்காக தாத்தா மண்ணைக் குழைத்து நான்கடி உயரத்திற்கு நான்கு புறமும் சுவரெழுப்பி பாத்ரூம் கட்டியிருந்தார். கதவில்லாத கூரையில்லாத எளிய பாத்ரூம். பெண்கள் அதன் உள்ளே உட்கார்ந்து குளிப்பார்கள்.

என்னதான் சீக்காப்பொடி (சிகைக்காய்ப் பொடி) தேய்த்துக் குளித்தாலும் எண்ணை போகாமல் காது மடல்களிலும் அக்குளிலும் வழவழவென்றுதான் இருக்கும்.

நான்கு மணிக்குள் அனைவரும் குளித்து முடித்து, ஒவ்வொருவராக தாத்தாவிடம் புத்தாடை வாங்கிக் கொள்வார்கள். நான் வீட்டின் அனைத்து பெரியவர்களுக்கும் வரிசையாக விழுந்து கும்பிட்டுக் கொள்வேன். புத்தாடை அணிந்ததும் எங்களைக் கையிலேயே பிடிக்க முடியாது.

நன்றாகச் சுற்றிவிட்டு பதினொரு மணிவாக்கில் பசி வயிற்றைக் கிள்ள, உள்ளங்கைகள் முழுவதும் வெடி மருந்து அப்பியபடி, வீட்டுக்குத் திரும்ப வருவேன். வெடிச்சத்தங்களும் சற்று குறைந்திருக்கும். ஆடையைக் களைந்து பழைய ஆடையொன்றை அணிந்து கொண்டு கைகால்களை நன்றாகக் கழுவிவிட்டு வந்தமர்ந்தால் அருமையான டிபன் பலகாரங்கள் கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மாலை நான்கு மணிவாக்கில் மறுபடியும் வீதி உலா.

அனைத்து மத்தாப்புக்களும் மாலை மற்றும் இரவில் தான் உபயோகப் படுத்தப்படும்.பகல் வெளிச்சத்தில் `ஒலி'களும் இரவில் `ஒளி'யும் நிரம்பிய இனிய தீபாவளி அது. இரவில் தெருமுழுவதும் பூச்சட்டிகள் நீரூற்று போல ஒளியூற்றாகச் சீறிட (அவ்வப்போது சில பூச்சட்டிகள் வெடித்து அதிர்ச்சி ஏற்படுத்துவதும் உண்டு), தரைச்சக்கரங்கள் சுழல, கம்பி மத்தாப்புகளும், சாட்டைகளும் ஒளித்துளிகளைச் சிதறவிட ஆனந்தமான நினைவுகள் அவை.

வீட்டுத் திண்ணையில் தரைச் சக்கரங்களை கொளுத்திவிட்டு சூரியன் போல ஒளிசிந்திச் சுழலுகையில் அதன் ஒளி ஆரங்களின் நடுவே நாங்கள் குதித்து நாட்டியமாடுவோம். பின்னாளில் இது போலவே சூரியனும் அதன் வீரியம் குறைந்து ஒளியிழந்து அணைந்து நின்று போகுமோ என்று யோசித்திருக்கிறேன்.

ஏழு மணிவாக்கில் கோமாளி ரங்கனின் வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று விடுவோம். தெருவில் சற்று உயரமான வீடாதலால், மூன்று தெருக்களின் வீட்டு மொட்டை மாடிகளையும் பார்க்கலாம். பெரும்பாலான ராக்கெட்டுகள் பாதுகாப்பு கருதியோ அல்லது அதிக உயரம் பெறவோ மொட்டை மாடியிலிருந்தும் ஏவப்படும். ரங்கன் வீட்டு மாடியில் நின்று கொண்டு சுற்றிப் பார்த்தால் ஆங்காங்கே ஒளி சிந்தியவாறே ராக்கெட்டுகள் விண்ணில் சென்று வெடிக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் காணலாம்.

கோமாளிரங்கன் தீபாவளி முடிவதை உணர்த்த ஆயிரம்வெடியுள்ள சரமொன்றை தெருவின் முச்சந்தியில் கொண்டு வந்து விரிப்பான். எல்லோரும் வேடிக்கை பார்க்க ரங்கன் அவன் பற்ற வைக்காமல் கண்ணில் படும் நண்பனொருவனைப் பற்ற வைக்கச் சொல்வான். சரம் பற்ற வைக்கப்பட்டதும் சில நிமிடங்கள் தொடர்ச்சியாக வெடித்து முடிக்க, ஒரு அமைதி நிலவும். தீபாவளி முடிந்து விட்டது என்ற சோகத்துடன் வீட்டுக்குத் திரும்புவேன்.

ஊரெங்கும் லேசான புகை மூட்டம் பரவியிருக்க, தெருவெங்கும் காகிதக் குப்பைகள் சிதறியிருக்க, இனிதே முடியும் தீபாவளி.

மறுநாள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று இன்னும் சோகப் பட்டாலும் அன்று சீருடை அணியாமல் தீபாவளி உடையையே அணிந்து வரலாம் என்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். பள்ளியில் ஆங்காங்கே சீருடை அணிந்து நடமாடிக் கொண்டிருக்கும் ஏழை மாணவர்களைக் காணும்போது குற்றவுணர்வாக இருக்கும். அடுத்த தீபாவளிக்கு அடுத்த நாள் தீபாவளி உடையை அணிந்து வரக்கூடாது என்று தீர்மானம் செய்து கொள்வேன்.

அன்புடன்.

சுந்தர்.
04-நவம்பர்-2002

நன்றி : மரத்தடி இணையக் குழுமம்


Sunday, October 17, 2004

நினைவலைகள் - *** நவராத்திரி ***

நினைவலைகள் - *** நவராத்திரி ***

சேந்தி என்பது கிட்டத்தட்ட மர ஊஞ்சல் மாதிரிதான். நல்ல பலகையும், இரும்புச் சங்கிலியும் இல்லாது, சுமாரான பலகை ஒன்றை நார்க்கயிற்றில் இருபக்கமும் பிணைத்து, கூரையிலுள்ள மூங்கில் கம்புகளில் ஏற்றிக் கட்டி, சுவரையொட்டி ஒரு க்ளாம்ப் அடித்துவிட்டால் பரண் தயார். இன்றைய நவநாகரீக சிமெண்ட் பெட்டி வீடுகளில் ஸ்டோர் ரூம் என்று பெட்டிக்குள் இன்னொரு தீப்பெட்டி வைத்குக் கொள்வது போல் அன்றைய வீடுகளில் வசதிகளில்லை. ஏன், இன்றும் சிமெண்ட் ஸ்லாப்புகளை வைத்து பரண் கட்டாத வீடுகள் மிகவும் குறைவே.

வத்திராயிருப்பு வீட்டிலும் மரப்பலகைப் பரண்கள் இருந்தன. வீட்டில் புழங்குவதைவிட அதிக சாமான்கள் பரண்களில் இருக்க வேண்டுமென்பது நியதி. அதுவும் கூட்டுக் குடும்பங்களில் குடி புகும் பெண்கள் பிறந்த வீடுகளிலிருந்து கொண்டு வந்த பாத்திரங்களையும், மற்ற சாமான்களையும் வைத்துப் பாதுகாக்க இருக்கும் ஒரே இடம் பரண்தான். இன்றும் ஸ்ரீரங்கத்து ·ப்ளாட் பரண்களில் இடைவெளியில்லாது பெட்டிகள் அடைக்கப் பட்டிருக்கின்றன. என் அம்மா அவரது திருமணத்திற்கு பாட்டி வீட்டிலிருந்து கொடுத்த வெண்கலப் பாத்திரங்களும் - இன்றைய தேதிகளில் திருமண மண்டப சமையலறையில் மட்டும் பார்க்க முடியுமளவிற்குப் பெரிய பாத்திரங்கள்! அக்காலக் கூட்டுக் குடும்ப வீடுகளில் சமைக்கத் தேவையான பெரிய பாத்திரங்களும் - டிரங்குப் பெட்டிகளும், மரப்பெட்டிகளும் (இதைப் 'பெட்டாரம்' என்று தாத்தா சொல்வார்) நிறைந்திருக்கின்றன். அக்கால மரப் பரண்களுக்கும், இக்கால சிமெண்ட் பரண்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் மாறாதது ஒட்டடை-எனப்படும் நூலாம்படை-யே!

பரணில் தூங்கிக் கொண்டிருக்கும் பெட்டிகளைப் பற்றிய நினைவு பறந்துபோகும் நிலையில் நவராத்திரி வந்துவிடும். வீட்டுக் கொல்லையில் கைவிடப்பட்ட படகைப் போல மண்ணில் பதிந்து கிடக்கும் ஏணியைக் கழுவி கொண்டு வந்து சாய்த்து நிறுத்தி, ஒவ்வொரு பெட்டியாக மெதுவாகக் கீழே இறக்குவதிலிருந்து நவராத்திரி களை கட்டத் தொடங்கி விடும். அதுவரை வீட்டில் பல்வேறு விதமாகப் பயன்பட்ட பெட்டிகளும், ஸ்டூல்களும், பலகைகளும் விடுவிடுவென்றுப் படிகளாக மாறிவிடும். அன்றாடப் பயன்பாட்டுக்குத் தேவையான எந்தப் பொருளும் அப்படிகளுக்குள் மாட்டிக்கொண்டு விடாமல் வேட்டிகளைப் போர்த்தி மூடுவதற்குள் சோதித்துக் கொண்டு விட்டால் நல்லது. இல்லையென்றால் நவராத்திரி முடிய காத்திருக்கவேண்டும். இப்படித்தான் ஒருமுறை புத்தகங்களைப் பெட்டியில் வைத்துவிட்டு என் அப்பாவிடம் அடிவாங்கியது நினைவிருக்கிறது.

வேட்டிகளைப் போர்த்தியவுடன் படிகளுக்கு ஒரு தனி அழகு வந்துவிடும். அவ்வப்போது கூரையிலிருந்து விழும் தூசிகளைத் துடைத்துவிட்டுக் கொண்டிருப்பேன். இதெல்லாம் கொலு பொம்மைகள் படிகளில் வைக்கப்படும் வரைதான். பொம்மைகள் வைக்கப்பட்டு, பூஜை செய்த வினாடியிலிருந்து, அந்தப் பகுதியைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத பக்தி வேலி ஒன்று முளைத்து எல்லாம் 'மடி'யாகிவிடும். தப்பித் தவறியும் பொம்மைகளையோ, படிகளையோ தொடக்கூடாது. தொட்டால் போயிற்று. பக்தி வேலி மின்சார வேலியாக மாறி அப்பாவின் கைகள் மூலமாக முதுகில் பளீரென்று இறங்கும்.

கொலு பொம்மைகள் அடைந்து கிடக்கும் மரப்பெட்டிகளைத் திறந்து, கத்தரித்த காகிதத் துணுக்குகள், வைக்கோல் பிரிகள், கிழிந்த துணி போன்றவற்றில் சுற்றிக் கொண்டிருக்கும் பொம்மைகளை ஒவ்வொன்றாய் எடுத்து துடைத்துக் கொடுக்கக் கொடுக்க அத்தைமார்கள் படிகளில் அவற்றை ஏற்றத் தொடங்குவார்கள். செட்டியார் பொம்மையும், தசாவதார வரிசையில் குழலூதும் கிருஷ்ணன் பொம்மையும் எனக்குப் பிடித்த பொம்மைகள். செட்டியார் அவரது தொந்திக்காகவும், கிருஷ்ணர் அந்த நீல நிறத்திற்காகவும். தனித்துத் தாழ்ந்து நிற்கும் வாமனர் பொம்மையும்தான். பின்பு மான்கள், யானைகள் போன்ற மிருகங்களும், மற்ற கடவுளர் பொம்மைகளும் வைக்கப் பட்டு, நடுநாயகமாக ஒரு செம்பில் தேங்காயைச் சுற்றி மாவிலைகள் நீண்டிருக்க கொலு களைகட்டி விடும். மரப்பாச்சி பொம்மைகள் கீழ்ப்படியில் வீற்றிருக்க, அவற்றுக்கு கிழிந்த சேலைத் துணியும், வேட்டித் துணியும் அணிவித்து ஆண்பெண் வித்தியாசங்களைக் கொண்டுவந்து விடுவார்கள்.
எனது அனைத்து உடைந்த, நல்ல நிலையிலிருந்த செப்புச் சாமான்கள் அனைத்தும் கொலுவில் குடிகொண்டுவிடும். கொலுப் படிகளைத் தவிர்த்து தரையில் மணலால் சிறு சுவர் எழுப்பி, அதற்குள் இலை, தழைகளையும், மரச்சாமான்கள், பிளாஸ்டிக் பெஞ்சுகள் கொண்டு சிறிய பூங்கா ஒன்றை எழுப்பிவிடுவேன். ஒரு நீச்சல் குளம் கூட கட்டி அதில் காகிதப் படகுகள் விட்டிருந்தேன்.

சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஏசுநாதரின் உருவம் எனக்கு மிகவும் பிடித்தமானது. காசிக் கயிற்றில் சிலுவையைக் கட்டி, கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்ளவேண்டும் என்ற எனது அந்நாளைய இலட்சியம் நிறைவேறவே இல்லை. பீங்கான் பொம்மைகள் வெகு விசேஷம். சந்தடி சாக்கில் ஒரு மேரிமாதா பீங்கான் பொம்மையை படியில் பொம்மைகளுக்கிடையில் ஏற்றிவிட்டு நவராத்திரி தொடங்கிவிட்டதில் அப்புறம் கவனிக்கப்பட்டு அடிவாங்கினாலும், மேரிமாதா நவராத்திரி முடியும் வரை கொலுவீற்றிருந்தார்.

அந்தி வேளையில் வீட்டு வாசல்களில் ஏற்றப்படும் அகல் விளக்குகள் தெருவெங்கும் ஜெகஜ்ஜோதியாக இருக்க, ஆங்காங்கே ஊதுவத்தி வாசனை காற்றில் மிதந்துவர கோயில் மணியோசை கேட்டுக் கொண்டேயிருக்க, கோபுரத்திலிருந்து அவ்வப்போது சடசடத்துப் பறந்து, வட்டமிட்டுவிட்டுத் திரும்பும் புறாக் கூட்டங்களின் பின்னணியோசையுடன் சூழ்நிலையே ரம்யமாக இருக்கும் அந்தச் சொர்க்கங்கள் காணாமல் போனதில் எனக்கு நிரந்தர வருத்தமுண்டு. அவ்வப்போது கடந்து செல்லும் மிதிவண்டிகளும், மாட்டு வண்டிகளும் மட்டுமே வாகனப் போக்குவரத்தாக இருந்த காலகட்டம் தொலைந்து போய் இப்போது தெருக்களில் தார் போடப்பட்டு, இருசக்கர வாகனங்கள் இடைவிடாது சீறிக்கொண்டிருக்க, வீட்டுக் கதவுகள் எந்நேரமும் பூட்டப்பட்டேயிருப்பது சோகம்.

பெண்மணிகள் பரஸ்பரம் ஒருவரையொருவர் அவரவர் வீட்டு கொலுவைப் பார்ப்பதற்கு வெற்றிலை பாக்குத் தட்டுடன் அழைப்பு விடுத்துக்கொண்டு, அலங்கரித்துக் கொண்டு வீடுவீடாகச் சென்று அவரவர் சங்கீத ஞானத்தையும், பாடும் திறனையும் பரிசோதித்துக் கொள்ளும் களமாக கொலு வைக்கப் பட்ட வீடுகள் விளங்கும். விசேஷத்திற்கென்றே பூட்டிவைத்திருக்கும் புடவைகள் பீரோவிலிருந்து வெளிக் கிளம்பி வீதிகளில் உலா வரும். அத்தைகளுடனும், அம்மாவுடனும் ஒட்டிக்கொண்டு அழைப்பு விடுத்த உறவினர்கள், அக்கம் பக்கத்து வீடுகளுக்குச் செல்வேன். என் அம்மா கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றுப் பாடுபவர். கணீரென்று பாடுவார். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. கொலு முன் கும்பலாக அமர்ந்ததும் அவர் சம்பிரதாயமாகப் பாடுவார். கூடவே ஏகப்பட்ட பெண்மணிகளும் ஆடாது அசையாது பாடுவார்கள். என் கண்கள் கொலு பொம்மைகளில் உறைந்திருக்க, மூக்கு 'இங்கு என்ன சுண்டல் இன்று?' என்று வாசனையைத் தேடி அலைந்து கொண்டிருக்கும். அந்த வீட்டுக்கார பெண்மணியொருவர் பவ்யமாக வந்திருக்கும் பெண்களுக்கு வெற்றிலைபாக்கு குங்குமம் கொடுத்துவிட்டு, சுண்டல் பொட்டலம் ஒன்றையும் கொடுக்க, பொட்டலத்தின் வடிவத்தை வைத்தே அது எந்தச் சுண்டல் என்று பெரும்பாலும் கண்டுபிடித்துவிடுவேன். முண்டுமுண்டாக இருந்தால் நன்றாக ஊறிய கொண்டைக்கடலை சுண்டல்; எண்ணெய் படிந்திருந்து, வளைவுகளின்றி இருந்தால் பருப்புச் சுண்டல். மிகப்பெரிய பொட்டலமாக இருந்தால் கால்கிலோ பொரியும், ஒரு ஸ்பூன் கடலையும் கலந்த பொரிகடலை ; ஈரம் படிந்திருந்தால் வேகவைத்த வேர்க்கடலை - இப்படிப் பலவிதம்.

பெண்மணிகளுடன் தொற்றிக் கொண்டு குழந்தைகளுடன் வந்திருந்தால் வீட்டுக்காரப் பெண்மணிக்கு இரத்த அழுத்தம் எகிறிவிடும். 'அதைத் தொடாதே இதைத் தொடாதே' என்று எச்சரித்துக்கொண்டும் அதட்டிக்கொண்டும் இருக்க, குழந்தைகளைக் கொண்டுவந்த பெண்மணிகள் அரட்டைகளில் ஆழ்ந்திருப்பார்கள். அவ்வளவையும் மீறி, பொம்மைகளை எடுத்தும், உடைத்தும் சில குழந்தைகள் செய்த விஷமங்களினால் இருவீடுகளுக்கிடையே ஜென்மப் பகை நிலவியதும் உண்டு. பகை கொலுவோடு முடியாமல் நல்ல தண்ணீர் பொதுக்குழாயின் குடங்களின் வரிசைகளில் குடத்தை இடித்து நெளிவு ஏற்படுத்துவதுவரை வந்து முடியும். எவர்சில்வர் குடங்களின் விளிம்புப் பகுதியில் உள்கூட்டில் பால்ரஸ் எனப்படும் மணிகளை நிரப்பி குடங்களைக் கையாளுகையில் சிலிங் சிலிங் என்று அவை ஏற்படுத்தும் சத்தம், அதைச் சுமந்து இடை நனைய வரும் பெண்களுக்கு இன்னும் அழகு சேர்க்கும்!

அம்மாவுடனோ அத்தைகளுடனோ போவதில் பெரிய சிரமம் குறைந்த வீடுகளையே அடைய முடிவது. மாலை ஆறுமணிக்குத் தொடங்கினால் ஐந்தாறு வீடுகளில் பாடிமுடித்து அரட்டை முடித்து சுண்டல் வசூல் முடிப்பதற்குள் ஒன்பது மணியாகிவிடும். நவராத்திரியின் முதல் சிலதினங்களில் இத்தகைய உலாக்களை முடித்துக்கொண்டு பின்பு நண்பர்களோடு வீடுகளுக்கு வெட்கங் கெட்ட விஜயத்தைத் தொடங்கி விடுவேன். ஆமாம் - நானும் நண்பர் படையும் சுண்டல் வசூலுக்குக் கிளம்பி விடுவோம். அழைப்பு இருக்கிறதோ, இல்லையோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் எங்கள் நடுத்தெருவிலிருக்கும் வீடுகளில் ஒன்று விடாமல் நுழைந்து வெளி வருவோம். ஜிம்மி மட்டும் வாலை ஆட்டிக் கொண்டு வீடுகளின் வாசல்களில் காத்திருக்கும். அனேகமாக தெருவில் நாங்கள் வளர்த்த நாய்கள் எல்லாமே சைவ நாய்கள்தான். சுண்டல், வாழைப் பழம், அப்பளம் என்று எல்லாவற்றையும் தின்பவைதான். புலியொன்று இருந்தால் அதையும் புல் தின்ன வைத்திருப்போம்.

இப்படி அழைப்பின்றி திடுமென வீடுகளில் நுழைந்ததும் மூன்றுவிதமான வரவேற்புகள் கிட்டும். ஒன்று - சுண்டலை அளவு தெரியாமல் நிறைய செய்துவிட்டு வந்தவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்தது போக இன்னும் பாதி பாத்திரம் மீதியிருக்கும் வீடுகளில் கிடைப்பது - முகம் நிறைய சிரிப்புடன் 'அம்பீ... வா...வா.... வந்து சுண்டல் வாங்கிக்கோ' என்று கொலுவைக் கூட பார்க்க விடாமல் திண்ணையிலேயே நிறுத்தி, பெரிய செய்தித்தாள் நறுக்கில் சுண்டலை நிரப்பிக் கொடுத்துவிடுவார்கள். அன்றைய கோட்டா அத்துடன் முடிந்து வேறு வீடுகளுக்குச் செல்லவேண்டிய அவசியமே இராது - அவ்வளவு சுண்டல். இரண்டாவது அளவாகச் சுண்டல் செய்து பெற்றோர், தாத்தா, பாட்டியில் முகதாட்சண்யத்திற்காக எங்களை உள்ளே விட்டு கையை நீட்டச் சொல்லி ஸ்பூனில் சுண்டலை உள்ளங்கை நெல்லிக்கனியளவிற்குக் கொடுத்தனுப்புவது - இல்லாவிட்டால் பொரிகடலை கொடுத்து நிரப்பியனுப்புவது. மூன்றாவது ஒரு வயசாளியைத் திண்ணையில் காவலுக்குப் போட்டு, திண்ணைக் கதவை மூடிவிட்டு, வாசலிலேயே நிற்கவைத்து, "கொலு கிடையாது - போங்கப்பா" என்று துரத்துவது - நீளமான அவ்வீடுகளின் உள்ளே பெண்கள் அமர்ந்து பாடிக்கொண்டிருப்பது தெரியும்.

அழைத்தும் யாரும் வராத ஏழைபாழை (அதென்ன பாழை?) வீடுகளில் சிலசமயம் ஊசிப்போன சுண்டல் கிட்டும் - முகஞ்சுளிக்காது அவர்கள் முன்பே தின்று அவர்களை மகிழச் செய்வோம்.

சில நாட்கள் கையில் தூக்குச்சட்டி ஒன்றை வைத்துக்கொண்டு வசூலான சுண்டல்களைச் சேர்த்துவைத்து (பொரி கடலையும் தான்) மூடி போட்டு மொத்தமாகக் குலுக்கி 'கதம்பச் சுண்டலாகச்' சாப்பிடுவோம்.

பணக்கார வீடுகளில் பிரம்மாண்டமாக கொலுப்படிகள் கட்டி நூற்றுக் கணக்கில் பொம்மைகளும், தரையில் பூங்கா, காடுகள், பொருட்காட்சி, ராட்டினங்கள், திருடன் போலீஸ் என்று தூள் பறக்கும். சீரியல் செட் விளக்குகள் மின்னிக்கொண்டு வண்ணவண்ணமாக வெளிச்சம் தூவும்.

சில வீடுகளை நெருங்கும் முன்பே நண்பர்களில் யாராவது ஒருவன் 'டே, இங்க இந்த வருஷம் கொலு கிடையாதுடா! மூணு மாசம் முன்னாடிதான் அந்தத் தாத்தா செத்துப் போனாரு' என்று எச்சரிக்கை விட, நாங்கள் அமைதியாக அந்த வீட்டைக் கடந்து செல்வோம். கடந்து செல்கையில் திண்ணையில் முக்காடிட்டு மொட்டைத்தலையுடன் கால்களை நீட்டிக் கொண்டு தடிமனான கண்ணாடியணிந்து அமர்ந்திருக்கும் பாட்டியை ஓரக் கண்ணால் பார்க்கத் தவறுவதில்லை.

உறவினர்கள் வீட்டுக்குப் போனால் ஒரு தொல்லை. 'யாரு? சுலோச்சனா மகனா? வா.. வா... ஒங்க அம்மா நன்னா பாடுவாளே. நீயும் ஒரு பாட்டுப் பாடு. கேப்போம்' என்று தவறாது கேட்க நானும் எனக்குத் தெரிந்த (கேள்வி ஞானம்!) 'மருக்கே ல ரா'வை பாடிவிட்டுச் சுண்டல் வாங்கி வருவேன். நேயர் விருப்பம் எதுவாயினும் எப்போதும் 'மருக் கே ல ராஆஆஆ' தான். முசிறிக்குச் சென்றதும் சற்று முன்னேற்றமடைந்து 'நமோ நமோ பிருந்தாவன'வும் 'பண்டூ..ரீ...த்தி...கோலு'-வும் பாடியிருக்கிறேன். 'நமோ நமோ'வின் வேகமான தாள லயம் மிகவும் பிடிக்கும்.

கொத்துக் கடலைச் சுண்டலைவிட சுண்டல் பாத்திரத்தின் அடியில் மிஞ்சியிருக்கும் எண்ணையும், காரமும், நீரும், கடுகும் கலந்திருக்கும் திரவத்தின் சுவை அபரிமிதமானது. அதை அப்படியே குடித்தும், சோற்றில் போட்டு குழம்புபோல் பாவித்துப் பிசைந்தும் எச்சிலூறத் தின்பேன். அதீதமாகச் சுண்டல் தின்றதின் 'பின் விளைவு'கள் மறுநாள் காலையில் கொல்லைப் புறத்தில் வேகமாகத் தெரியும் - இருந்தாலும் சுண்டல் தின்ன அலுத்ததே இல்லை.

நவராத்திரி சமயத்தில் ஒவ்வொரு வருடமும் வத்திராயிருப்பு இராமகிருஷ்ணா டூரிங் கொட்டகையில் 'நவராத்திரி' படத்தைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சி வந்த பிறகு, தூர்தர்ஷனில் அதே படத்தைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது சாட்டிலைட் தொலைக்காட்சி ஊடகங்கள் வந்தும் இன்னும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று, பாடல் முதல் வரி பொருந்தியிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக சகலகலா வல்லவனில் வரும் 'இளமை இதோ இதோ' பாடலைப் போடுவதைப் போல.

சட்டென்று நவராத்திரி முடிந்து தெருவில் அமைதி குடிகொண்டுவிடும். பெண்களும் மாலைவேளை வீதியரட்டைகளுக்குத் திரும்பிவிடுவார்கள். பூஜை முடித்துவிட்டு அப்பா சைகை காண்பிக்க, பரணிலிருந்து காலிப் பெட்டிகளை இறக்கி, பொம்மைகளை ஒவ்வொன்றாய் காகிதம், துணி கொண்டு சுற்றி பவ்யமாக எடுத்து வைப்போம். பெட்டிகள் பரண் ஏறியதும், படிகளைப் போர்த்தியிருக்கும் வேட்டித் துணிகளை - நிறைய அட்சதைகளும், குங்குமமும் படிந்து கலவையானதொரு வண்ணத்திலிருக்கும் - எடுத்து உதறிச் சலவைக்குப் போடுவதற்காக மூலையில் போடுவேன். சிலசமயம் வேட்டியின் ஓரங்களில் சுண்டலின் எண்ணைப் பசை தேய்க்கப் பட்டிருக்கும்.
படிகளை - பெட்டிகளையும் மரப்பலகைகளையும் - ஒவ்வொன்றாகப் பிரித்து அதனதன் இடங்களில் வைத்துவிட்டுத் தரையைக் கூட்டினால் முடிந்தது. சுவற்றையொட்டி வைக்கப்பட்ட உயரமான பெட்டாரத்தைக் கடைசியில் நகர்த்தி மூலையில் தள்ள வேண்டும். பெட்டாரம் முழுவதும் பாத்திரங்கள் நிறைந்து கனமாக இருக்கும். சில சமயம் பெட்டாரத்தை நகர்த்தியதும் அதற்கும் சுவருக்கும் இடையிலான இடைவெளியில் ரோஜாநிற எலிக்குட்டிகள் தரையில் கண்மூடி புரண்டு கொண்டிருப்பதுண்டு. அப்பொழுது பெட்டாரம் அங்கேயே நிலைகொண்டுவிடும் - அவை வளர்ந்து, இடைவெளியிலிருந்து வெளிவந்து ஓரிரவில் காணாமல் போகும் வரை.

அக்காலங்களில் வீடுகளைத் தொலைக்காட்சிகளும் மெகா சீரியல்களும் ஆக்கிரமிக்கவில்லை. தெருக்களை வாகனங்கள் ஆக்கிரமிக்கவில்லை. தனிக் குடித்தனங்கள் பெருகி 'உனக்கு நான்; எனக்கு நீ' என்று உழக்குப் பெட்டிகளில் வாழவில்லை. அடுக்கடுக்காகக் கட்டிடங்கள் கட்டியதில் வாசலில் சாண நீர்த் தெளித்துக் கோலம் போடுவது என்பது தொல்பொருள் விஷயமாக ஆகி விடவில்லை. பிளாஸ்டிக் பூஞ்செடித்தொட்டிகள் ஆங்காங்கே மூலையில் சாய்ந்திருக்கவில்லை.

இன்றைய தலைமுறைக் குழந்தைகள் கொலுவென்றால் என்னவென்று தெரிந்துகொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அடுக்குமாடி வீடுகளில் அவர்களை சோபாக்களில் ஸோனி ப்ளே ஸ்டேஷனில் ஆழ்த்தி, தனிக்குடித்தன, வேலைக்குச் செல்லும் அப்பாவும் அம்மாவும் ஆளுக்கொரு புத்தகத்திலோ கணினியிலோ 'நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை' என்று காதுகளுக்குக் கேட்காமல் மனதிற்குள் அனிச்சையாய் பாடிக் கொண்டு நவராத்திரியை நினைவுறுத்தி, பீங்கான் கிண்ணத்தில் ஸ்பூன் ·போர்க்குகளுடன், மென் தாள் சகிதமாகச் சமையல்காரப் பெண்மணி கொண்டுவந்து தரும் சுண்டலை அசைபோட்டு கோக்கையோ பெப்ஸியையோ உறிஞ்சிக் கொண்டிருக்கலாம்.

***

Monday, October 04, 2004

ஒற்றை இறகு

*** ஒற்றை இறகு ***

ஆல மர நிழலின்

சில்லிப்பில்

ஆனந்தமாய் கண்மூடி

கண்டதொரு கனவு

*
படபடத்துப் பறந்த

காலங்கள்

மரக் குடில்களில்

கூட்டங்கூட்டமாய்

இரவிலும் கத்திக்

கும்மாளமிட்ட நாள்கள்

அதீத உணவு கிட்டிய

மமதையில் அரையரையாய்

கடித்து வைத்த

பழங்கள்

மரப்பட்டைகளில் கூர்தீட்டிய

செவ்வலகின் பளபளப்பு

பச்சை முகத்தில்

மின்னிய

கருமுத்து விழிகள்

*
விரல் சொடுக்கின் சத்தத்தில்

திடுக்கிட்டு விழித்ததும்

முகத்தில் அறையும் நிஜம்

பிடிக்கப்பட்டு

இறகொடிக்கப்பட்டு

இச்சிறு சிறையில்

படபடத்துப் பறக்கத்

தவித்துச் சிறு

குடுவையில் தண்ணீரும்

பிச்சையிட்ட எச்சில்

பழமும் தின்னும்

பரிதாபம்

*

தற்காலிக விடுதலையில்

வெளிவந்து முன்

அடுக்கிய

அட்டைக் குவியலில்

ஒன்றைக்

கொத்திக் கொடுத்ததும்

கிடைக்கும்

தானியக் கூலி

*

மறுபடி கூடு திரும்பிப்

பெருமூச்சுடன்

சோகை விழிகளை மூடி

யோசிக்கையில்

காலடியில் நிரடுகிறது

அதன்...

ஒற்றை இறகு

***

Saturday, October 02, 2004

Mahatma Gandhi

மகாத்மா காந்தி
நான் வத்திராயிருப்பு ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, வார பாட அட்டவணையில் 3 நாட்களுக்காவது "கைத் தொழில்" பாடம் இருக்கும். பள்ளியில் இதற்கென்றே ஒரு விஸ்தீரணமான அறையில் கைத்தறிகள் நான்கும், இராட்டைகள் நான்கும் வைத்திருந்தார்கள்.
ஆறு, ஏழு வகுப்பு மாணவர்களுக்குத் "தக்கிளி"யும், எட்டாம் வகுப்புக் காரர்களுக்கு இராட்டையும், ஒன்பது,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கைத்தறியும் பயிற்றுவிக்கப் பட்டன.
பெரும்பாலும் அனைத்து வகுப்பினருக்கும் கைத் தொழில் பாடம் ஒரே நாளில் வருமாறு அட்டவணை அமைத்திருப்பார்கள். தக்கிளியையும் அரையடி நீள பஞ்சுக் கொத்தையும் கடையில் வாங்கிக்கொண்டு வந்துவிட வேண்டும். தக்கிளிக் கம்பியின் முனையிலிருக்கும் கொக்கி போன்ற அமைப்பை வைத்துப் பஞ்சின் நுனியில் பிடித்துக்கொண்டு, தக்கிளியைச் சுற்றி நூல் நூற்க வேண்டும். தக்கிளியின் கீழ்ப்புறம் எட்டணா அளவிலான வெண்கலக் காசைச் சொருகி வைத்தது போல் இருக்கும். காசுக்கு மேற்புறம் நூற்கும் நூலைச் சுற்றிச்சுற்றிச் சேர்க்கவேண்டும்.
முதல் சில வகுப்புகளுக்கு தக்கிளி பஞ்சைப் பிய்த்துக்கொண்டே இருந்தது. பின்பு பழகியதும் உத்திரத்திலிருந்து தொங்கிக்கொண்டு வலைபின்னும் சிலந்தியைப் போல் தக்கிளி உயர்த்திப் பிடித்த இடது கையிலிருக்கும் பஞ்சுக் கொத்திலிருந்து தொங்கிக் கொண்டே அழகாக அறுந்து போகாமல் நூல் நூற்றது. :)
பெரிய மாணவர்கள் சத்தமில்லாது இராட்டை சுற்றுவாகள். கைத்தறிகளில் அமர்திருக்கும் மாணவர்கள் ஒரு கை நெற்றிக்கு எதிரே தொங்கும் கயிற்றை இடவலமாக இழுக்க, கால்களினால் மாற்றிமாற்றி கட்டைகளை மிதித்து நூல் தொகுப்பை மாற்ற, இன்னொரு கையால் எலி போன்று நீளமாக வாலில் நூல் கோர்திருக்கும் ஒரு வஸ்துவை இடவலமாக குறுக்காய் எறிந்து அனாயசமாகக் கதர்த் துணி நெய்வார்கள் அதைப் பார்க்கையில் ஏதோ மாயாஜாலம் போன்று இருக்கும்.
"ரிகார்டு ப்ளேயர் இசைத்தட்டு வடிவ" இராட்டையை என் காரைக்கேணி மாமாவும், பக்கத்து வீட்டுக் கோமாளி ரங்கனும் வைத்திருந்தார்கள்.

நாங்களெல்லாம் தரையில் அமர்ந்துதான் தக்கிளி நூற்போம். பிடிக்காத மாணவன் ஒருவனை முரட்டு மாணவன் ஒருவன், அமரும் போது உட்காருமிடத்தில் தக்கிளியை வைத்துக் கழுவேற்றிய அசம்பாவிதமும் நடந்தது.
மதுரையில் கைத்தறி நெசவாளர்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. திருநகரின் கொனேயில் ஒரு தெரு முழுவதும் செளராஷ்டிரர்கள் ஓயாது கைத்தறியில் நூற்றுக்கொண்டே இருப்பார்கள். அடுத்த இரண்டு தெருக்களுக்கு அச்சத்தம் கேட்கும். மதுரைக் கல்லு¡ரிக்கு எதிரேயுள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் முன்புறம் நீஈஈஈஈஈளமாக வண்ணநூல்களை ஒரு தாங்கியில் வைத்து, நெசவாளர்கள் சிக்கு பிரித்துக்கொண்டிருப்பார்கள்.
இராட்டைக்கு வந்து சில வகுப்புகளே ஆன நிலையில் தந்தைக்கு இடமாற்றத்தினால் முசிறி சென்று ஒன்பதாவது படிக்கச் சேர்ந்த அரசு மேல் நிலைப் பள்ளியில் கைத்தொழில் வகுப்புகளே இல்லை. :(
காந்தித் தாத்தா அவரது பிரபல பொக்கைவாய்ச் சிரிப்புப் புகைப்படத்தின் மூலம் அறிமுகம். அப்புறம் பள்ளியில் நடத்திய பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் மூலம் இன்னும் சிறிது அவரைத் தெரிந்துகொள்ள முடிந்தது (பேச்சோ, எழுத்தோ - அவற்றை "மனப்பாடப் போட்டி" என்றுதான் சொல்லவேண்டும்). பின்பு வந்த ரிச்சர்ட் அட்டன்பரோவின் பென் கிங்ஸ்லி மூலம் சற்றுக் "காண" முடிந்தது.
மதுரையிலிருந்தவரை காதிகிராப்டிற்குத் தவறாது சென்று கதர் ஜிப்பா, பைஜாமா வாங்குவோம். என் தந்தை அவரது உடைகளை, தோல்ச்செருப்பு உள்பட, அங்கேதான் இன்னும் வாங்குகிறார். திருமண விசேஷங்களுக்கு இலவம்பஞ்சு மெத்தை வாங்க காதிக்கு ஓடுவோம். காதி கிராப்ட், கோ-ஆப்டேக்ஸ்-இன் நிரந்தர வாடிக்கையாளராக இருப்பதில் ஒரு பெருமை எங்களுக்கு.
ஆங்காங்கே வெயிலில் காய்ந்தும், பறவை எச்சங்களில் குளித்தும், பிறந்த தினத்தன்றும் நினைவு தினத்தன்றும் மட்டும் சுத்தமாகி மாலைகள் சாத்தப் பட்டும் இழிவுக்குள்ளாகும் அவரது சிலைகளை சற்று நல்லவிதமாகப் பராமரிப்பது அரசுகளும் அரசியல்வாதிகளும் அவருக்குச் செய்யும் குறைந்தபட்ச மரியாதை.
"Need of the hour" எனத் தேவைப்படும் பொறுமை, சகிப்புத்தன்மை, அகிம்சை, விடாமுயற்சி போன்ற குணநலன்களால் உதாரண புருஷராகத் திகழ்ந்து, சுதந்திரத்துக்கு வித்திட்ட மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவரை நினைவுகூர்வோம்.
யுத்தங்களும், இரத்தச் சிதறல்களும் நின்று, வன்முறை ஒழிந்து, உலகம் அமைதியாய்ச் சுழல பிரார்த்திப்போம்.
அன்புடன்
சுந்தர்.
பி.கு.: நேற்று என்டிடிவியில் இலண்டன் மேடம் துஸ்ஸாத் மெழுகுச் சிலைகள் அரங்கத்தில் ஐஸ்வர்யா ராயின் சிலை திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா ராயே வந்திருந்து "என்னுடைய இரட்டைச் சகோதரியைப் பார்ததுபோல் இருக்கிறது" என்று அவர் அதிசயித்ததைக் காட்டினார்கள். நிகழ்ச்சி குறித்து வர்ணணை செய்த நிருபி நம்மைப் பார்த்துப் பேச, நமக்கு முதுயையும், பளபளக்கும் பின் வழுக்கைத் தலையையும் காட்டிக்கொண்டு திரை ஓரமாகக் கையில் ஊன்றுகோலுடன் நின்று கொண்டிருந்தது காந்தி சிலை.......

Wednesday, September 15, 2004

சுஜாதா - வலைப்பூ - கற்றதும் பெறாததும்

*** சுஜாதா - வலைப்பூ - கற்றதும் பெறாததும் ***
ஆறிப்போன கஞ்சிதான். இருந்தாலும் கண்ணில் பட்ட தகவலைப் பகிர்ந்து கொள்ளலாமென்ற எண்ணத்தில் இக்குறிப்பு.
Blogger வலைத்தளத்தில் கண்ட தகவல் இது.
***
What's a Blog?
"Blog" is short for Web log, which can be anything from a news site to an online journal. Blogs allow you to instantly publish your thoughts and ideas from anywhere.
People all over the world have blogs. It's a fun and easy way to keep in touch with your friends, post links to interesting webpages, or just record your thoughts.
***
For your information please.
***

Sunday, September 12, 2004

புதுக் கவிதை ** துள்ளித் துள்ளி **

** துள்ளித் துள்ளி **

வில்லாய் வளைந்தெழும்பிய வாலுடன்
விரைவாய்ச் சிறுநீர் கழித்து
வழுக்கும் தரையில் கால்பரப்பி
கருகருவென ஒளிரும் கண்களுடனும்
தொழுவத்திலிருந்து தடுமாறி வெளிவந்து
தெருவில் துள்ளிய கன்றுக் குட்டி

கனத்த மடிகளுடன் உச்சி முகர்ந்து
கன்றினைச் சுத்தமாக்கிய தாய்ப்பசு

அருகில் நெருங்கித் தலையை வருட
நடுங்கும் உடலுடன் இளங்குளம்புகளில்
என் பாதம் ஏறி நின்ற அவ்விளம் கன்று

கால்களுக்கிடையே தலைகொடுத்துத்
தூக்கிடத் துள்ளிய கன்றுக் குட்டி
ம்மாவென ஆமோதித்துக் கத்திப்
பதறும் கன்றினைக் கேலிசெய்த தாய்ப்பசு
தரையில் இறக்கிட தறிகெட்டு ஓடித்
தெருமுனைக்குச் சென்றது கன்று

புதிய வரவினைக் கண்டதும்
உற்சாகத்துடன் குலைத்த நாயை
அதட்டிவிட்டு உள்ளே வந்தேன்
துள்ளித் துள்ளி ஓயட்டும் பின்பு
கட்டிப் போட்டுக் கொள்ளலாமென்று

*

கண்களிலிருந்து கீழ் பாய்கின்றன
வற்றிய ஓடைகளாய் கருங்கோடுகள்
ஆதரவாய் கன்றினை நக்கும் தாய்ப்பசு
ஆனாலும் தொலைந்திட்ட உற்சாகம்

கனத்த மடிகளை வருடியே யாதவன்
கறக்கின்றான் பாலை வழக்கம்போலவே
நீட்டிய முன்கால்களில் தலைசாய்த்து
அமர்ந்து கொண்டு வாலாட்டாது
விழியுருட்டி நோக்கும் நாய்

வைக்கோலைச் சுவைத்திராத அக்கன்று
இப்பொழுதுதன் உடலெங்கும்
வைக்கோல் அடைத்தங்கே நிற்கிறது
அசைவில்லாமல்.


ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி - "அப்பாவியின் கனவு"

*** ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி -அப்பாவியின் கனவு ***

முன்னுரை:

சிறு வயதில் மாஸ்கோ பதிப்பகம் பால் வெண்மைக் காகிதங்களை வாசனை பிடித்துக் கொண்டு நிறைய கதைகள் படித்திருக்கிறேன். அவ்வயதிலிருந்தே ரஷ்ய மொழிபெயர்ப்புக் கதைகள் மீது பெரும் ஈர்ப்பு எனக்கு உண்டு. கதைகளை வாசித்து இன்புறுவது தவிர அதை இலக்கியம், உலக்கியம் என்றோ அவர் இலக்கியவாதி இவர் இலக்கிய வியாதி என்றோ எந்த வகைப் படுத்துதல்களும் இல்லாத வாசிப்பு மட்டும் நோக்கமாய்க் கொண்ட எளிமையான வாசகனாகவே இருந்தேன். இருக்கிறேன். ரஷ்யா என்றாலே கடும் பனிப் பொழிவுக் காலங்களும், ஸ்லெட் வண்டிகளும், பைன் மரங்களும், தோல் ஆடை, தொப்பியணிந்த மனிதர்களும், புசுபுசுவென்ற நாய்களும் பூரிக் கன்னங்களுடன் குழந்தைகளும், கருப்பு வெள்ளை ஓவியப் புகைப்படங்களும் நினைவுக்கு வரும் வகையில் இக்கதைகளின் பாதிப்பு சிறுவயதிலிருந்தே என்னில் உண்டு. தமிழில் வெளிவந்துள்ள தலைப்புகள் நினைவில்லாத பல ரஷ்ய கதைகளைப் படித்திருக்கிறேன். அவற்றை எழுதிய எழுத்தாளர் பெயர் எதுவும் நினைவிலில்லை. ஆனால் கதைகள் நினைவிலிருக்கின்றன. மாறுதலாக எழுத்தாளர் பெயர் நினைவிலிருந்து அவர் எழுத்துகளை நினைவு வைத்துக் கொள்ள முடியாத தவித்ததும் உண்டு. அதில் முதன்மையானவர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி. அவர் ருஷ்ய இலக்கிய உலகின் மாபெரும் எழுத்தாளர் என்று பின்னாளில்தான் தெரிந்துகொண்டேன். அவர் எழுத்துகளை நினைவுறுத்திக் கொள்ள முடியவில்லை என்று சொன்னேன். உண்மைதான். அவரது புத்தகங்களை - ரஷ்யக் கதை என்ற ஒரே காரணத்திற்காகவே - படித்தது மிகச்சிறு வயதில் - பதிமூன்று அல்லது பதினான்கு வயதிருக்கலாம். அவ்வயதுச் சிறுவர்கள் படிக்கும் எழுத்துகள் அவரது எழுத்துகளில்லை என்று இப்போது மறுவாசிப்பின் போது தெரிகிறது. அப்படியே படித்தாலும், அவ்வெழுத்துகளின் முழு வீச்சையும் உணர்ந்து கொண்டிருக்க முடியாது என்றே நான் இன்றும் கருதுகிறேன். தீவிர இலக்கியங்களை குமுதம், விகடன் மாதிரி போகிற போக்கில் படித்துக் கொள்ள என்னால் முடியவில்லை. என்னைப் பொருத்தவரை நான் இவ்வகைப் படைப்புகளைப் படித்து உணர்ந்து கொள்ள மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. சடசடவென்று படித்துக் கொண்டு பக்கங்களை என்னால் புரட்டிக் கொண்டு செல்ல முடியவில்லை. மிகுந்த பொறுமையுடன், இடையூறுகெளெதுவும் இன்றி, ஒவ்வொரு வார்த்தையும் படித்து, பலமுறை மறுபடியும் மறுபடியும் படித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இம்மாதிரியான தீவிர எழுத்துகளில் வரும் ஒரு கதையை படிக்கும் நேரத்தில் ஒரு பத்து ஜனரஞ்சகக் கதைகளை வாசித்துவிடுவேன். இல்லாவிட்டால், விடுமுறைக்காக ஊருக்குச் சென்று மஸ்கட் திரும்பும் போது பெட்டியில் பாதியிடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் பழைய குமுதம், விகடன் புத்தகங்களில் பாதியை படித்து முடித்து விடுவேன் (சமீப காலமாக இம்மாதிரி பழைய இதழ்களை அள்ளி வரும் வினோத பழக்கத்தின் காரணமாக என்னை 'பழைய பேப்பர்க் காரன் வந்துட்டான்யா' என்று ஊரில் கேலி செய்கிறார்கள்). "ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும்" என்ற - இருபது வருடங்களுக்கு முன்பு வாங்கிய - புத்தகம் கண்ணில் பட்டது. 'ஆஹா. பள்ளியில் படிக்கும் போது வாசித்ததாயிற்றே. என்ன படித்தோம் என்று மறந்து விட்டதே" என்று எடுத்து வாசித்ததில் முந்தைய வாசிப்பில் புரியாத பல பரிமாணங்களை விளங்கிக் கொள்ள முடிந்தது. எழுத்திலும் நடையிலும் உள்ள வித்தியாசங்களை இனம் கண்டு கொள்ள முடிந்தது. இந்த வாசிப்பனுபவத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ·ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகளையும், குறு நாவல்களையும் குறித்து ஒரு சிறு வரைவுக் கட்டுரை - உங்கள் பார்வைக்கு.
"அப்பாவியின் கனவு"
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல, மேட்ரிக்ஸ் திரைப்படத்தை இப்போது உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறென். தாவிக் குதிக்கையில் அந்தக் காட்சியை உறையச் செய்து, பலப்பல கோணங்களில் காட்டுவார்கள். அந்த ஒரு மைக்ரோ வினாடியில் அந்த இயக்கத்தின் நிலையைக் காட்டுவார்கள். பிரதான பாத்திரத்தோடு அதைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் பல பாத்திரங்கள், பொருள்கள் என பலவற்றின் இயக்கத்தையும் நிறுத்தி மொத்த உலகத்தையும் அந்த ஒரு மைக்ரோ வினாடி நிறுத்திக் காட்டுவார்கள். நாமும் சற்று கடிகாரத்தை நிறுத்திவிட்டு திரையில் நிலைபெற்றிருக்கும் ஒவ்வொன்றையும் ஆற அமர கவனித்துப் பார்த்து உள் வாங்கிக் கொள்ளலாம். 'அப்பாவியின் கனவு' படிக்கும் போது பல முறை மாட்ரிக்ஸ்ஸில் வரும் உறைந்த காட்சிகளைப் போன்று, உறைந்த காட்சிகளை நிதானமாகப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 'கவனிப்புத் திறமை'க்குச் சவால் விடும் புற இயக்கங்களின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுத்து ஒரு எழுத்தாளனானவன் எந்த அளவிற்கு உள்ளும் புறமும் இயக்கங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதை ஜே.ஜே. சில குறிப்புகள் படித்தபோது விளங்கிக்கொண்டேன். ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துகளைப் படித்தபோது உறுதிப்படுத்திக் கொண்டேன். இரண்டும் வேறுவிதமான எழுத்துகள் - வேறுவித பின்புலன்களில் எழுதப்பட்டவை. இப்போது 'அப்பாவியின் கனவு'க்கு வருவோம். அப்பாவியின் கனவு ஒரு புனைகதை. என்ன கதை என்று சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் 'இவ்வுலகத்தின் துயரங்களையும், துன்பங்களையும் பார்த்து மனம் வெறுத்த ஒருவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து மேசை மீது தோட்டா நிரப்பிய கைத் துப்பாக்கியைத் தயாராய் வைத்துக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதையும், அதற்கு முன்பாக அவன் வாழ்ந்திருக்கும் வாழ்க்கையைப் பற்றியும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் உறங்கி, ஒரு கனவு காண்கிறான். அது ஒரு அற்புதக் கனவு. அதில் அவன் இன்னொரு உலகைக் காண்கிறான். துயரங்களில்லாத, துன்பங்களில்லாத மகிழ்ச்சியான உலகு அது. இருங்கள். சொர்க்கத்தைச் சொல்லவில்லை. அதுவும் ஒரு பூமிதான். அதிலும் அவன் இருக்கிறான். இவ்வுலகில் இருப்பது போன்றே அவ்வுலகிலும் மனிதர்களும், விலங்கினங்களும், பறவையினங்களும், செடிகொடிகளும், மலைகளும் பள்ளத்தாககுகளும், கடல்களும், நதிகளும் நிரம்பியுள்ளன. ஆனால் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கும் உலகம் அது. ஒருவருக்கொருவர் அன்பு காட்டிக் கொண்டு ஆதரவாக இருக்கும் உலகம் அது. கவலை என்றால் என்னவென்றே தெரியாத உலகம் அது. அக்கனவு கலைந்து விழிக்கும் அவன் திடுக்கிட்டு, வாழ வேண்டிய, வாழ்ந்து மற்றவர்களிடம் அன்பு காட்ட வேண்டிய அவசியத்தை, அப்படி வாழ்வதன் மூலம், கனவில் கண்ட பொற்காலத்தை இந்த உலகமும் அடைந்து விடும் என்ற நிதர்சனத்தை, தீர்க்க தரிசனத்தை, உணர்ந்து, மேசை மீதிருக்கும் துப்பாக்கியைத் தட்டிவிட்டு, கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, வாழும் உத்வேகத்துடன் எழுகிறான்'. இதுதான் அப்பாவியின் கனவு என்ற கதை. ஆனால் இதை இப்படிச் சாதாரணமாகக் குறிப்பிட்டுவிடமுடியவில்லை. இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்.
கதை முழுதும் தற்கொலை செய்ய முடிவெடுத்த அம்மனிதனின் சிந்தனைகளே வியாபித்திருக்கின்றன.
"இந்தப் பூமியில் வாழ்கின்ற திறமையை இழந்துவிடாமலேயே மனிதர்கள் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தீமையே மனிதனின் இயற்கையான நிலைமை என்பதை நம்ப முடியாது, அதை நான் நம்ப மாட்டேன்" என்ற வரிகளில் எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வியல் நடைமுறைகள் குறித்த அவரது அதீத நம்பிக்கை பிரதிபலிக்கிறது. தன்மை ஒருமையில் எழுதும்போது இது ஒரு வசதி. புனைக் கதையாகவே இருந்தாலும், முற்றிலும் புனையப் பட்டதாக இல்லாமல், நெடுகிலும், எழுத்தாளனது அனுபவங்களையும், சித்தாந்தங்களையும், நம்பிக்கைகளையும் கதையின் பாத்திரங்கள் மூலமாக வாசகர்களிடம் சேர்ப்பித்து விடுவதோடு அல்லாமல், வாசிப்பவனையும், அதிலும் எழுத்தாளரது அலைவரிசையை ஒத்த அலைவரிசை கொண்டவனாக இருக்கும் பட்சத்தில், அதில் அமிழச் செய்து விடுவது சுலபமாகி விடுகிறது.
ஆரம்பத்தில் ஏகப்பட்ட கழிவிரக்கச் சிந்தனைகளுடன் கதை துவங்குகிறது. "நான் ஒரு அப்பாவி. அவர்கள் இப்பொழுது என்னைப் பைத்தியக்காரன் என்று கூறுகிறார்கள். நான் எப்பொழுதும் போல் அவர்களுக்குக் கோமாளித் தனமாகத் தோன்றாமலிருந்தால் அது எனக்குப் பதவி உயர்வாக இருக்கும் - ஆனால் நான் இனிமேல் அதைப் பொருட்படுத்துவதில்லை - அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தால் கூட இப்பொழுது அவர்கள் எல்லோருமே எனக்கு மிகவும் வேண்டியவர்க்ள் - ஏதோ ஒன்று அப்பொழுது தான் அவர்களை எனக்கு மிகவும் நெருக்கமாகச் செய்கிறது என்பது உண்மையே. நான் அவர்களோடு சேர்ந்து சிரிப்பேன் - என்னைப் பார்த்து அல்ல, அதாவது அவர்களை நான் நேசிப்பதால் - அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நான் மிகவும் வருத்தமடையாதிருந்தால் நானும் சிரிப்பேன். உண்மை என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அது எனக்குத் தெரிகிறது. ஓ! உண்மையைத் தெரிந்த ஒரே ஒரு நபராக இருப்பது எவ்வளவு கஷ்டமானது! ஆனால் அவர்கள் இதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். இல்லை, அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். நான் ஒரு அப்பாவி மாதிரி தோன்றுவது எனக்கு அதிகமான வருத்தத்தைக் கொடுப்பதுண்டு. அப்பாவி மாதிரியல்ல, நான் அப்பாவிதான். நான் எப்பொழுதுமே அப்பாவியாகத்தான் இருந்து வந்திருக்கிறேன், நான் பிறந்த நாளிலிருந்தே அது எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்"
"நான் எப்படிப்பட்ட அப்பாவி என்பது உலகத்துலுள்ள எல்லாரையும் காட்டிலும் எனக்குத்தான் மிகவும் நன்றாகத் தெரியும் என்பதை அவர்களில் எவரும் அறிந்திருக்கவோ, ஊகித்திருக்கவோ மாட்டார்கள். அவர்களுக்கு இது தெரியாது என்ற உண்மைதான் என்னை மிகவும் அதிகமாகப் புண் படுத்தியது. ஆனால் அதற்கு நானே முற்றிலும் பொறுப்பு. நான் எப்பொழுதுமே மிகவும் ஆணவத்தோடியிருந்தபடியால் இந்த உண்மையை நான் எவரிடத்திலும் ஒத்துக் கொள்வதில்லை. வருடங்கள் உருண்டோடியபோது என்னிடத்தில் ஆணவமும் பெருகியது. நான் ஒரு அப்பாவி என்பதை எவரிடமாவது ஒத்துக் கொள்வதற்கு நான் என்னை அனுமதித்திருந்தால் அந்த இரவிலேயே என் தலையில் சுட்டுக் கொண்டு செத்துப் போயிருப்பேன் என்று நம்புகிறேன்."
தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவனின் மனத்தில் அலைபாயும் எண்ணங்களை அற்புதமாக எழுதியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. கடலின் கொந்தளிப்பைப் போல கொந்தளித்துக் கொண்டிருக்கும் மனத்தின் சீரற்ற சிந்தனைப் படலங்களை, பல பரிமாணங்களில் சொல்கிறார். ஒவ்வொரு வாக்கியத்தையும் சில முறை இரண்டு தடவை படிக்க நேர்ந்ததற்கும் இதுவே காரணம். வாசித்து வரும் போது நம்முள் கோர்வையாக விரிந்து படரும் புரிந்து கொள்ளலுக்குச் சவாலாக சட் சட்டென்று சிந்தனை மாறுகிறது - கிளைகிளையாகத் தாவிச்செல்லும் குரங்கைப் போல, வழித்தடத்தை, திசையை சட்டென மாற்றிப் பறக்கும் தட்டானைப் போல, பறக்கும் பாதையைத் தொடர்ந்தால் கண் வலிக்கச் செய்யும் வெளவாலின் பறக்கும் தடம் போல. அதைப் பிடித்துக் கொண்டு கூடவே தொங்கிச் செல்வது சவாலே. அவன் கண்ட கனவு சிறிய அளவில் துவங்கிப் பெரிதாக விரிந்து செல்கிறது. கனவுகளில் நனவுகளில் நாம் பயன்படுத்தும் நேர அளவுகோல்கள் பயனற்றவை; அர்த்தமற்றவை என்ற உண்மையை எவ்வளவு சிறப்பாகக் கையாண்டு அவன் கண்ட அந்த பொற்காலம் பற்றிய கனவை தஸ்தயேவ்ஸ்கி எழுதியிருக்கிறார்! கனவுகளில் பல லோகங்களுக்கு அவன் சஞ்சாரம் செய்து அண்டப்பெருவெளியில் பறந்து சென்று அந்த இன்னொரு பூமியை அடைகிறான். அப்பயணத்தை விளக்குகையில் கால நேரங்களுக்கு அப்பாற்பட்டு அது செல்வதை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். கனவைப் பற்றிச் சொல்லுமுன் ஒரு முன்னுரையாக, நாம் சாதாரணமாகக் காணும் கனவுகளின் தன்மையைத் தொட்டு, நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.
"கனவுகளில் சில சமயங்களில் நீங்கள் பெரும் உயரத்திலிருந்து கீழே விழுகிறீர்கள் அல்லது கத்தியால் குத்தப்படுகிறீர்கள் அல்லது அடிக்கப்படுகிறீர்கள். ஆனால் நீங்கள் துள்ளிக்குதித்து கட்டில் கம்பின் மீது மோதிக் கொண்டால் தவிர வலியை ஒரு போது உணர்வதில்லை. அப்படி மோதிக்கொள்கின்ற பொழுது நீங்கள் வலியை உணர்வீர்கள். அது உங்களை நிச்சயமாக உறக்கத்திலிருந்து எழுப்பிவிடும்" என்று தொடங்கிவிட்டு பின்பு அவன் கனவு காணத்துவங்குவதை இப்படி விவரிக்கிறார்
"நான் இறந்துவிட்டேன், முற்றிலும் இறந்துவிட்டேன் என்ற எண்ணம் திடீரென்று முதல் தடவையாக எனக்குத் தோன்றியது. சிறிதும் சந்தேகமில்லாதபடி அதை அறிந்தேன். என்னால் பார்க்க முடியவில்லை, அசைய முடியவில்லை; ஆனால் என்னால் உணர முடிந்தது, சிந்திக்க முடிந்தது. சீக்கிரத்திலேயே இதற்கு என்னைச் சரிபடுத்திக் கொண்டேன். வழக்கமாகக் கனவுகளில் நடப்பதைப் போல அந்த உண்மையை மறுக்காமல் ஒத்துக் கொண்டேன்".
பின்பு அந்தப் புதிய உலகிற்குப் பறந்து செல்கிறான் அவன். அங்குப் பாவம் செய்யாத மனிதர்களைச் சந்தித்து அவர்களுடன் சஞ்சரிக்கிறான். சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து அம்மக்கள் வீழ்ச்சியடைந்தார்கள்! அந்தப் பூமியில் அவன் பாவத்தைப் பரப்பி அதன் விழைவாக, பொய்மையும், சூதும் பெருகி, அவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். பிரிவுகள் ஏற்பட்டன. அவமானம் என்ற ஒன்றை அறிந்து அதை நற்பண்பாக ஆக்கிக்கொண்டார்கள். கெளரவம் என்று ஒன்றை உருவாக்கிக்கொண்டார்கள். பல மொழிகள் பேசத் துவங்கினார்கள். துயரமடைந்தார்கள். முந்தைய மகிழ்ச்சியான காலகட்டங்கள் எல்லாமே கட்டுக்கதை என்று சொன்னார்கள், அதில் எல்லா நம்பிக்கையையும் இழந்து விட்டார்கள். இப்படி மாறிப்போன அந்த நல்லுலகத்திற்கு அவனே காரணம் என்று நினைத்து துன்பப்பட்டு அவர்களாலும் அவன் துன்பப்பட விரும்புகிறான். அவனை அவர்கள் பைத்தியக்கார விடுதியில் பூட்டிவைப்பதாக அறிவித்ததும் அவன் அந்த நீண்ட கனவிலிருந்து விழித்துக் கொள்கிறான். தற்கொலை எண்ணத்தை உடனடியாகக் கைவிட்டு அவன் வாழ விரும்புகிறான். பாவமறியாத, துன்பங்களறியாத சமூகம் என்பது முன்பு எப்போது ஒரு காலகட்டத்தில் இருந்து பின்பு எல்லாவற்றையும் மனிதர்கள் ஏற்படுத்திக்கொண்டு, பிரிவுகள் ஏற்பட்டு, பல பரிணாம வளர்ச்சிகளைக் கடந்து இப்போதைய நிலையில் இருக்கிறான் என்று சொல்லாமல், மனிதர்கள் ஒத்த மனத்துடன் முயன்றால், முனைந்தால் கனவில் கண்ட நல்லுலகத்தை இவ்வுலகத்திலேயே ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற அவரது சித்தாந்தமே 'அப்பாவியின் கனவு'-ஆக விரிகிறது.
***

Tuesday, September 07, 2004

மனதுக்குள் ஒரு பயணம் # 2

மனதுக்குள் ஒரு பயணம் # 2

தடித்த சிந்தனைகளின் வசப்படும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நாக்கு தடித்து வார்த்தைகள் குழறுவதுபோல், மனம் தடித்த தருணங்கள் உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருந்திருக்கும். அதென்ன தடித்துப் போன மனம்? ஆமாம். மனம் தடித்துத்தான் போகிறது சில சந்தர்ப்பங்களில். சாலை நிறுத்தத்தில் கையேந்தும் மழலையைப் பாராது புறக்கணித்துச் செல்கையிலும், பளீரிடும் கண்களுடன் நம்மையே குறுகுறுப்பாகப் பார்த்து, காதுகளை அசைத்து, துடிப்பாக வாலாட்டிக் காத்திருக்கும் நோஞ்சான் நாயைப் பார்த்துக்கொண்டே முழு வடையையும் தின்று, டீ குடித்துச் சாவதானமாகச் செல்கையிலும், செருப்பின்றி வயிறொட்டி பலவீனமான ரிக்க்ஷாக் காரனை அதட்டி அவனுடைய பலவீனமான ரிக்ஷா வண்டியில் அமர்ந்து கொண்டு செல்கையிலும், சாலையைக் கடக்கக் காத்துக் கொண்டிருக்கும் குருடரை முந்திக் கொண்டுச் சாலையைக் கடக்கையிலும், நமக்குக் காய்கறி விற்றுவிட்டு, கனமான கூடையை முயன்று, தடுமாறி, தலையில் ஏந்திச் செல்லும் வயதான பெண்மணியை கைகட்டி வேடிக்கை பார்க்கையிலும், ஆத்திரம் கண்ணை மறைக்க, சிறு தவறு செய்துவிட்ட குழந்தையைக் கன்னத்தில் அறைந்து, கனத்த விழிகளுடன் நம்மையே உதடு துடிக்க அது பார்க்கையில், ஆத்திரத்தை நியாயப்படுத்த தொடர்ந்து அதை முறைத்துப் பார்க்கையிலும், கையும் களவுமாகப் பிடிபட்ட தருணங்களில் பொய் சொல்லி சக மனிதனுக்கு அப்பொய் ஏற்படுத்தும் விளைவுகளைச் சற்றும் சிந்திக்காமல் தப்பிப்பதொன்றே குறிக்கோளாகச் செயல்பட்டு, அவன் விழிகளில் தெறிக்கும் உண்மையின் உஷ்ணத்தைச் சந்திக்கத் திராணியின்றி நிலம் பார்க்கையிலும் - இப்படி எத்தனை எத்தனை சந்தர்ப்பங்கள் -மனம் தடித்துத்தான் போய்விடுகிறது - நாம் அறிந்தே. அதன் மென்மையைச் சிறுகச் சிறுகக் கொன்று விடுகிறோம். மனத்தைக் கீழே தள்ளி மிதித்து மிதித்து உணர்வற்றதாக்கச் செய்யும் ஆணவமும், அகங்காரமும் நமக்குள்ளே எக்களித்துச் சிரிப்பதை நமது முகம் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். நம்மீது மண்டும் வெறுப்பை சுண்டுவிரலால் சுட்டி எறிந்துவிட நமக்கு இலகுவாக முடிகிறது.

அவன் எனது நண்பன். நடந்து செல்லும் யானையைச் சுற்றி அதன் அணிகலன்கள் எழுப்பும் ஓசைச் சத்தம் போன்று, அவனை நாங்கள் சுற்றிக் கொண்டு ஓசையெழுப்பிக் கொண்டிருப்போம். ஆனால் கவனம் பெறுவதென்னவோ அவன் தான். நாங்களில்லாவிட்டாலும் அவன் கவனம் பெறுவான் என்பது எங்களுக்குத் தெரிந்தேயிருந்தது. ஆகையால் எங்களால் அவனின்ல்லாமல் ஓசையெழுப்ப முடிந்ததில்லை. நாங்கள் ஓசை எழுப்பினால் ஆரம்பத்தில் கவனம் பெற்றாலும், அவனில்லை என்பதை கவனிப்பாளர்கள் உணர்ந்துகொண்ட அடுத்த வினாடியில் நாங்கள் பெற்ற கவனம் காற்றில் கரைந்துவிடும். இது இன்னும் அபாயம். அடுத்தமுறை நாங்கள் என்னதான் சத்தமாக ஓசையெழுப்பினாலும், அவர்கள் அவனில்லை என்று அனுமானித்துக்கொண்டு ஒரேயடியாக எங்கள் ஓசையைப் புறக்கணித்துவிடுவார்கள். அவர்களின் அப்புறக்கணிப்பு அவனுக்குரியதல்ல என்பதை அவன் உணர்ந்தேயிருப்பதால், அது அவனை வருந்தச் செய்வதில்லை என்பது இன்னும் கூடுதல் சோகம் எங்களுக்கு.

யானையின் உள்ளங்கால்களை நீங்கள் யாராவது வருடிப் பார்த்ததுண்டா? யானையின் மேல் கால்களைப் பரப்பி அமர்கையில் அதன் கூரிய முடிகள் உங்கள் தொடைகளைப் பதம் பார்த்ததுண்டா? அழகிய சிவந்த நாசித் துவாரத்திற்கப்பால் பாதாளமாய் ஓடும் தும்பிக்கையிலிருந்து வினாடிக்கும் குறைவான நேரத்தில் குபீரென்று பீறிட்டு அடிக்கும் தண்ணீரை முகத்தில் வாங்கிக்கொண்டதுண்டா? கால் பந்து அளவிலிருக்கும் சோற்றுருண்டையைக் கீழே விழுந்து விடாமல் கவனமாய் ஏந்தி அதன் செவ்வாய்க்குள் ஊட்டியதுண்டா? அதன் வாய்க்குள் சட்டெனத் தோன்றி மறையும் பெருங் கல்லின் அளவான பற்களைப் பார்த்ததுண்டா?

அதன் சீரற்ற கோடுகள் நிறைந்த தடித்த தோல் மடிப்புகளில் வழி தொலைந்து அலைந்து கொண்டிருக்கும் எறும்பினைப் பார்க்கிறேன். கட்டெறும்பு யானையை மிரண்டு ஓடச்செய்யும் என்பார்கள். இது மெல்லிய, கடிக்காத கருமையான சிற்றெறும்பு.

பூக்கூட்டம் போல ஓடிக்கொண்டிருக்கும் 'பிள்ளையார் எறும்பு'. சாரைசாரையாக ஓடிக்கொண்டிருக்கின்றன. என்னே சுறுசுறுப்பு! நான் அதைக் கூர்ந்து கவனிக்கிறேன். சில எறும்புகளின் முகத்தில் வெண்மை நிறத்தில் துருத்திக்கொண்டிருக்கும் உணவுத் துகள். சீரான, சுறுசுறுப்பான இயக்கத்தை அவை தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றன. என் வீட்டில் வாசலிலிருந்து கிளம்பி நேராக எதிரே இருக்கும் பெருமாள் கோயில் வெளியே பந்தலைத் தாங்கி நிற்கும் அந்த மூங்கிலின் பாதத்தில் சரணடைந்து கொண்டிருக்கின்றன. மாவிலைத் தோரணத்திலும், வாழை மரத்திலும் சாரிசாரியாக எறும்பு வரிசைகள். தெருவில் ஆள் நடமாட்டமில்லை. என் மனதில் இப்போது திடீரென்று பெருங்கவலை குடிகொண்டுவிட்டது. தெருவில் நடமாட்டம் நிகழும்போது இவை மிதிபட்டு, அறைபட்டுச் சாகும். கூட்டம் கூட்டமாக நசுக்கப்படும். தெருவில் கடந்துபோகும், மனிதர்களின், பிராணிகளின், வாகனங்களின் அடியில் நசுங்கிச் சாகும். எறும்பின் ஆயுசு எவ்வளவு நாள்கள் என்று யாரிடமாவது கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தெரு இன்னும் பரபரப்பாக இயங்கத் தொடங்கவில்லை. சாலையின் குறுக்கே ஓடும் அவற்றின் வழித்தடத்தை எப்படி மாற்றுவது என்று யோசித்தேன். நேரம் கடந்துகொண்டிருந்தது. தெருவில் சென்ற ஒருவனது கால்கள் வரிசையைக் கடந்த போது நான் மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டேன். அவை எறும்புகளைத் தொடாமல் தாண்டியபோது நிம்மதி பெருமூச்சுவிட்டேன். அடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தெரு முக்கில் தோன்றிய சைக்கிள் என் வீட்டைத்தாண்டிச் சென்றபோது வரிசையில் சலசலப்பு. நான் மெதுவாக எழுந்து சைக்கிள் சக்கரத்தின் பதிவை கவனித்தேன். சில எறும்புகள் அசைவற்றுப் புதையுண்டிருக்க, சில பாதியுடல்கள் புதைந்திருக்க மீதி உடல்களுடன் அல்லாடிக் கொண்டிருந்தன. இரு புறமும் அலைபாய்ந்தன எறும்புக்கூட்டம். சில வினாடிகள்தான். வரிசை மீண்டும் சேர்ந்து இயக்கம் பெற்றுவிட்டது. திரும்ப வந்து அமர்ந்தேன். இம்முறை கடந்தது ஒரு நான்குசக்கர வாகனம். இப்போது எனக்கு வரிசையே தெரியவில்லை. படுகொலை நிகழ்ந்த மைதானம் போன்ற அமைதி. சற்றே கூர்ந்து பார்க்கையில் கூட்டம் கூட்டமாக உடல்கள். ஆங்காங்கே படுகாயங்களுடன் அசைய இயலாது, ஒலியெழுப்பாது அல்லாடும் எறும்புகள். சக்கரங்களுக்கு மாட்டாது தப்பிப் பிழைத்தவை நகராமல் திகைத்து நிற்கின்றன. அதன் தலைகள் அங்குமிங்கும் தேடியலைய எனக்கு ஆயாசமாக இருந்தது. கையாலாகாத நிலையை எண்ணிச் சினம் எழுந்தது. அடுத்த பத்து நிமிடங்களில் சோகையானதொரு வரிசை உருவாகி மெதுவான இயக்கம் நிகழ நான் கவனத்தைத் திசை திருப்பினேன். இப்படி எத்தனை எத்தனை ஆயிரம் உயிர்கள் சத்தமின்றிப் பிரிகின்றன ஒவ்வொரு நொடியும் என்று நினைத்துப் பார்க்கிறேன். சிந்தனையிலாழ்கிறது என் மனம். நேரம் போனதே தெரியவில்லை. எறும்பு வரிசையைக் கவனித்த அடுத்த வினாடி திண்ணையிலிருந்து எழுந்து வீதிக்குச் சென்று கைகளை இருபுறமும் வீசி, அங்கு போக்குவரத்தைத் தடை செய்ய உரத்து என்னை அலற விடாமல் செய்தது எது என்று கேள்வி எழுப்பிக் கொண்டேன். அதைச் செய்வதால் அவர்கள் கேலி செய்வார்கள் என்ற வெட்கமா? அல்லது எனக்கு எதுவும் பேரிழப்பு நிகழ்ந்திருக்குமா? அந்த எச்சரிக்கையை எழுப்ப எனக்கு அதிக நேரமோ முயற்சியோ வேண்டியிருந்திருக்காது. நூற்றுக்கணக்கில் உயிர் நீத்துவிட்ட எறும்புகளைக் கட்டாயமாகக் காப்பாற்றியிருக்க முடியும். ஏன் செய்யவில்லை என்ற என் கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதி காக்கிறது என் மனம். இல்லையில்லை. நான் கேட்ட கேள்வியையே அது காதில் வாங்கிக்கொள்ளாமல் தடித்துப் போய் சுரணையற்றிருக்கிறது.

தெருவில் பையன்கள் குதித்து குதித்து விளையாடுகிறார்கள். என் கவனம் எறும்புகளிலிருந்து விலகி அவர்கள் மீது திரும்புகிறது. பையன்கள் குதூகலமாகவும், சுறுசுறுப்பாகவும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தெருவில் ஆங்காங்கே புதைந்திருக்கும் சிறு கற்களை அடிப்படையாக வைத்து அவர்கள் விளையாடுகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு குச்சி. பத்துப் பேர் கொண்ட அந்தக் குழுவில் ஒவ்வொருவனுக்கும் ஒரு முறை வைத்துக்கொண்டு மற்ற ஒன்பது பேரும் தெருவில் ஆங்காங்கே தென்படும் கல்லின் மீது குச்சியை வைத்துப் பரவி நிற்கிறார்கள். சட்டென்று இடம் மாற்றி வேகமாக ஓடி, பிடிக்கப்படும் முன் இன்னொரு கல்லின் மீது குச்சியை ஊன்றிக் கொள்கிறார்கள். அதற்குமுன் பிடிபட்டுவிட்டால், பிடித்தவன் கையில் குச்சியைக் கொடுத்துவிட்டு பிடிபட்டவன் மற்றவர்களைத் துரத்தவேண்டும். விளையாட்டு சூடு பிடித்துவிட்டிருந்தது. யானை வந்து கொண்டிருக்கிறது மணியோசையுடன். பாகன் யானையைக் கண்டுகொள்ளவே இல்லை. அதன் காதில் அங்குசத்தை மாட்டி வைத்துவிட்டு மூன்றாம் வீட்டுப் பண்ணையாரிடம் இறைஞ்சி பேசிக்கொண்டிருந்தான். அவன் முதுகும் யானையைப் போலவே வளைந்திருந்தது. அவன் இன்னும் வளைந்து கைகளைக் குவித்து வணக்கம் சொல்லிக்கொண்டிருக்க, பண்ணையார் பெரும் வயிற்றைச் சிரமப்பட்டுச் சுமந்துகொண்டு அவனை ஏறிட்டும் பார்க்காது எதிரே எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். அவர் நீலம் கலந்து துவைத்த வேட்டியை அணிந்து மேலே துண்டு மட்டும் போர்த்தியிருந்தார். விரல்களிலும்,கழுத்திலும் தங்கம் மின்ன நெற்றியை திருநீறு ஆக்கிரமித்திருந்தது. பாகன் இப்போது கொஞ்சம் நம்பிக்கை இழந்திருந்தான் போல. திரும்ப எத்தனித்தவன் பண்ணையார் பின்புறம் இருந்து வெளிப்பட்ட அவர் மனைவியைக் கண்டு நின்றான். அப்பெண்மணி கையில் மரக்காலும் அதில் நெல்லும் இருக்க, துண்டை விரித்து நீட்டி அதை வாங்கிக்கொண்டு, இன்னும் குனிந்து பின்னால் நகர்ந்து வெளிவந்தான்.யானை இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தா என்று தெரியவில்லை. அதற்கு அதன் கண்ணில் மொய்த்துக்கொண்டிருந்த ஈக்களையும் கொசுக்களையும் விரட்டுவதே பிரதானமான வேலையாக இருந்தது. இப்போது பையன்களில் சிலர் அதன் பக்கவாட்டிலும் பின்புறமாகவும் வந்து தைரியமில்லாமல் குச்சிகளால் அதைத் தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். யானையின் வாலசைவிலும் தும்பிக்கை அசைப்பிலும், தலையின் குலுக்கல்களிலும் அவர்கள் பயந்து சிதறி, திரும்பக் கூடினார்கள். பாகன் அடுத்த வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தான். அழுத்திக் குத்திய பையனது கையிலிருந்து சட்டென்று யானை குச்சியைப் பிடுங்கிச் சுழற்ற அவன் அதிர்ச்சியின் உச்சத்தில் அலறிக் கீழே விழுந்து புரண்டு முழங்கால்களிலும் கைகளிலும் சிராய்ப்புகளைப் பெற்றுக்கொண்டு எழுந்து தலைதெறிக்க ஓட அவனைத் தொடர்ந்து மற்ற பையன்களும் ஏக இரைச்சலுடன் ஓட, அந்தக் களேபரத்தில் யானை 'ப்ர்' என்று ஒரு முறை பிளிற பாகன் திடுக்கிட்டுத் திரும்பினான். ஆங்காங்கே வீடுகளிலிருந்து தலைகள் வெளியே நீண்டு வேடிக்கை பார்த்தன. அவன் கண்களுக்கு ஓடிக்கொண்டிருந்த பையன்களும், யானையின் தும்பிக்கையில் ஊசலாடிக் கொண்டிருந்த குச்சியும் தென்பட, ஆத்திரமடைந்தான். விடுவிடுவென்று யானையை நெருங்கி, அக்குச்சியைச் சுலபமாக கையில் வாங்கி, அதன் தும்பிக்கையில் கடுமையாக அடித்தான். தும்பிக்கையைச் சுழற்றிக் கொண்டிருந்த யானை, அதன் உள்புறத்தில் குச்சியடி ஒரு முறை பட்டதும், உதறிப் பின்னால் நகர்ந்தது. பாகன் இன்னும் கடுமையாக அதை அடித்து, அங்குசத்தைக் கீழ் நோக்கி இழுத்தான். யானை இயக்கங்களை நிறுத்திச் சிலையாக நிற்க, பாகன் இன்னும் ஆத்திரம் தீராமல் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான். பின்பு பயணத்தைத் தொடர்ந்து தெருவைக் கடக்கும்வரை பையன்களில் ஒருவரும் அவரவர் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருக்க பாகனுக்கும் யானைக்கும் காசோ நெல்லோ பழங்களோ பின்பு கிட்டவில்லை. யானையின் உள்ளங்காலைப் போன்று தடித்துப் போய் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த என் மனதை வெறுத்தேன்

வீட்டினுள்ளிருந்து அழைப்புக் குரல் கேட்க, சிந்தனை கலைந்து சட்டென எழுந்து உள்ளே சென்றேன், உள்ளங்கைகளில் ஒட்டிக் கொண்டிருந்த எறும்புகளின் நசுங்கிய உடல்களை ஊதிவிட்டுக்கொண்டு.

என்றாவது யாரிடமாவது இம்மாதிரி மனம் தடித்தத் தருணங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள தைரியம் இருக்கிறதா எனக்கு என்று என்னை நானே ஒருமுறை, வாழ்நாளில் ஒருமுறையாவது கேட்டுக்கொள்ள வேண்டும் - நம் மனம் தடித்ததாக இல்லாதிருக்கும் ஏதாவதொரு சமயத்தில் - என்று நினைத்துக் கொள்வேன்.

மனதுக்குள் ஒரு பயணம் # 1

மனதுக்குள் ஒரு பயணம் # 1

நடந்து சென்று கொண்டிருக்கிறேன். நல்ல மதியவெயில். என் நெடிய நிழல் காலடியில் ஒளிந்து கொண்டிருப்பதைக் குனிந்து பார்க்கிறேன். நிழலும் காலடியிலிருந்து எட்டி என்னைப் பார்க்கிறது. எங்கும் நிசப்தம். என்னைச் சுற்றி நிகழும் இயக்கங்களின் சத்தங்கள் என் காதுகளில் ஒலிக்கவில்லை. என்னுடைய இச்சிந்தனையை மட்டும் உள்குரலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நெற்றியில் எண்ணையில் பட்டையிட்டது போன்று வியர்வை. ஒரு துளி மட்டும் விடுவித்துக்கொண்டு நிலத்தில் விழுந்து உலர்ந்து காணாமல் போவதைப் பார்க்கிறேன்.

நிர்மலமான நீல வானம். எதிரே நண்பன். என் மனத்தின் குரல் அவனுக்குக் கேட்கிறதா என்று தெரியவில்லை. நான் அவன் கண்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். அவன் என் கண்களைச் சந்தித்த வினாடி தலையைக் கவிழ்ந்து கொண்டான். அவனது நிழல் மூலமாக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரிகிறது. இப்படி இருளில் நின்று கொண்டு, வெளிச்சத்திலிருப்பவர்களைப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் என்றிலிருந்து மனிதனுக்கு வந்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

இவ்வுலகத்திற்கான எனது பங்களிப்பை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவை இதோ தெரு ஓரத்தில் அனாதரவாக நிற்கும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கவனிப்பாரற்று கிடக்கிறது. இதில் எனக்கு வருத்தமில்லை. நான் குப்பையை எனது பங்களிப்பாகக் கொடுக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். அதை 'குப்பை'யாகப் பார்ப்பது அவர்கள் பார்வையில் உள்ள கோளாறு.

மற்ற நேரங்களில் என் மனதைப் பெருக்கி வெளியே தள்ளும் குப்பைகளை இவர்கள் கோபுரத்தில் வைத்துக்கொண்டு கொண்டாடுவது எனக்கு வினோதமாக, ஆரம்பத்தில் வியப்பளித்து கொண்டிருந்தது. பின்பு இதை நான் பழகிக் கொண்டுவிட்டேன் என்று சொல்வதில் எனக்குள் ஒரு குற்றவுணர்வு இன்னும் இருக்கிறது.

இவர்களுடைய எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்யமுடியாது என்பது தெரியும். எனக்குத் தெரியும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள முற்படாமல் என்னைத் துரத்துகிறார்கள். அவர்களின் பசிக்கு என்னைத் தின்னச் சொல்வது என்ன் நியாயம் என்று யாரிடம் கேட்பது? நான் தனியனாக இவ்வுலகில் இருக்கும் பட்சத்தில் இம்மனிதர்கள் எவரிடமும் என் மனத்தின் நம்பிக்கைகளையும், சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வது என்பது சாத்தியமேயில்லை.

என்னைப் போலவே இதோ இந்த நாய் சாலையின் ஓரத்தில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருக்கிறது. உடலெங்கும் பொட்டுபொட்டாக முடி உதிர்ந்து, விலா எலும்புகள் துருத்திக்கொண்டு, வாயைத் திறந்து நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு, மெல்லிய வால் இன்னும் மெலிந்துபோய் பின்னங் கால்களிடையே விட்டுக்கொண்டு, வளைந்த கால்களுடன் மெதுவாய் நடந்து சென்று கொண்டிருப்பதை கவனிக்கிறேன். அது அதன் நிழலைப் பார்த்துக் கொண்டு செல்வது போல் தோன்றுகிறது. நிழல் அதைச் செலுத்துகிறதா அல்லது அது நிழலைச் செலுத்திக் கொண்டு போகிறதா என்று தெரியவில்லை. அது தலையைச் சற்றுகூட தூக்கி எதிரே உள்ளவற்றைப் பார்க்காமல், ஆயிரமாயிரமாண்டுகள் இச்சாலையில் நடந்து பழகியதுபோல் மெதுவாய் நடந்து போகிறது. மனிதர்கள் சாலைகளில் விரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் புறப்படுமிடமும் சேருமிடமும் தெரிந்திருக்கிறது. தீர்மானமாய்ச் சென்று கொண்டிருக்கிறார்கள். அன்றாட புறவாழ்க்கை அலைச்சல்களை அலைந்து திரிந்து முடித்துக் கொண்டு தங்குமிடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களாக அவர்களுக்குக் கட்டிக்கொண்ட தங்குமிடங்கள். நானும் இந்த நாயும் புறப்படுவது சேருவது என்று ஒன்றுமில்லாமல், திரும்பச் செல்கிறோமா அல்லது போய்க் கொண்டிருக்கிறோமா என்று புரிந்து கொள்ள முடியாமல், இலக்கின்றி, முடிவும் ஆரம்பமும் இன்றி, தங்குமிடங்கள் என்று எந்தத் தற்காலிகப் பெட்டிகளிலும் அடைந்துகொள்ளும் உத்தேசங்களின்றி நடந்துகொண்டிருக்கிறோம்.

எங்கள் சிந்தனைகளின் ஆதாரம் ஒன்றுதான். எங்களுக்கு இந்தப் புற இயக்கங்களில் நாட்டமில்லை. நான் துருத்திக்கொண்டிருக்கும் என் விலா எலும்புகளை வருடிவிட்டுக்கொண்டேன்.

அனுமானங்களில் வாழும் வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது என்பது இவர்களுக்குப் புரிந்திருக்கிறதா என்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. நண்பன் என்னைக் கடந்து சென்றுவிட்டான் என்பதை என் முன்னே என்னை முறைத்துக்கொண்டிருந்த நிழல் இல்லாததிலிருந்து உணரமுடிகிறது. இவர்கள் அபாயங்களின் கடைவாயில் எப்போதும் விழுந்து கொண்டிருக்கிறார்கள். அனுமானங்கள் இவர்களை விழுங்கி ஒவ்வொரு கணமும் ஏப்பம் விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னால் விரக்தியாகச் சிரிக்கத்தான் முடிகிறது. நான் சிரிப்பதைப் பார்த்து இவர்கள் தங்களது அனுமானங்களை இன்னும் விரிவுபடுத்திக்கொண்டு அவற்றுள் இன்னமும் ஆழத்தில் விழுகிறார்கள். அவற்றுள் மூழ்கிக் காணாமலேயே போய் விடுகிறார்கள். அவர்களைத் தேடி வெளியிலெடுப்பது என் வேலையில்லை.

இவர்கள் ஒவ்வொருவரைச் சந்திக்கும்போது இவர்கள் கண்களிலிருந்து விகாரமாய்ப் பிளந்துகொண்டு காத்திருக்கும் அனுமானங்களை நான் புறக்கணித்துப் போவதில் இவர்களுக்கு அதீத சினம். இச்சினத்தின் வெம்மை என்னைத் தீண்டாது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் இன்னும் சினமடைகிறார்கள். உரக்கக் கத்துகிறார்கள். ஆனால் நான் தான் புறச் சத்தங்கள் கேட்பதிலிருந்து எனது செவிகளைத் தப்புவித்து விட்டேனே? இவர்கள் எவ்வளவு உரக்கக் கத்தினாலும் மூடிக்கொண்டிருக்கும் என் செவிகளைத் தாண்டி என்னைச் சேரப்போவதில்லை. இதை நினைக்கையில் என்னையறியாமல் என் உதடுகளில் நெளியும் ஏளனப் புன்னகை அவர்களைச் சுட்டெரிக்கிறது. அவர்களின் அனுமானங்களின் வெம்மையை எனது ஏளனப் புன்னகை எரித்துக் கொன்று விடுகிறது. இதன் காரணமாகவே என் முன்னால் அவர்கள் நிற்பதே இல்லை. எனது நண்பர்கள் உள்பட.

விரல்கள் ஒருபோது ஒரே அளவில் யாருக்கும் அமைந்திருப்பதில்லை என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள். நான் எனது விரல் நகங்களை ஆரம்பத்தில் வெட்டிச் சீராக்கிக்கொண்டிருந்தேன். அதற்காகச் செலவிட்ட நேரம் அதிகம் என்பதை உணர்ந்ததிலிருந்து நகங்களைச் சீந்துவதில்லை. அவை கோபித்துக்கொண்டு வளருகின்றன. வெகுவேகமாக வளர்ந்து என்னைப் பயமுறுத்த முயற்சிக்கின்றன. இம்முயற்சிகளை கீறல்களில் கசியும் இரத்தத்திலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் இன்னமும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. இரத்தம் என்னை பயமுறுத்துவதில்லை. நான் நிறைய கீறல்கள் பட்டாகிவிட்டது. நிறைய இரத்தம் பார்த்தாகிவிட்டது. என் உடலிலிருந்து இரத்தம் முழுவதும் வெளியேறிவிட்டாலும்கூட நான் பயப்படப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். என் சிந்தனைகளுக்கு இரத்தம் தேவையில்லை. கீறல்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது. கோபித்துக் கொண்டு வளர்ந்த நகங்கள் பயந்தன. அவை என்னிலிருது விலகிச் செல்லச் செல்ல பலவீனமடையத் தொடங்கியதை உணர்ந்தன. அவையே நான் கவனிக்காத பல சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உடைந்து கொண்டு விழுந்துவிடுகின்றன. என் நகக்கண்களுக்குள் அடங்கி ஒடுங்கி விடுகின்றன. அப்போதாவது என்னிடம் நல்லபெயர் கிட்டும் என்ற நப்பாசையில் அவை இப்படி நடந்து கொள்வதை நான் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் அவற்றின் ஜாலங்களை நான் ஒரு போதும் கண்டுகொள்வதில்லை. அவை இன்னும் சீற்றமடைந்து நகக் கண்களைக் குத்தி இரத்தம் வரச்செய்கின்றன. யாருக்கு வேண்டும் இந்த இரத்தம்?

இரைச்சலுடன் விழுகிறது அருவி. நீரின் ஆவேச நர்த்தனங்கள். சீராக நடனமாடுவது போன்ற ஓசை எழுப்பிக்கொண்டு விழும் அருவியின் தாரைகளை நன்கு கவனித்தீர்களென்றால் அதன் ஒழுங்கீனம் உங்கள் கண்களுக்கு ஒருவேளை புலப்படலாம். ஒழுங்கான ஓசையை எழுப்பி உங்கள் காதுகளை அடைப்பதோடு, அதன் ஒழுங்கற்ற தன்மையை, நீங்கள் கவனிக்கவொட்டாமல் உங்கள் மனதுகளையும் அடைத்துவிடுகிறது இப்பொல்லாத அருவி. நீங்கள் அருவிகளைப் பார்ப்பதே இல்லை அவற்றை தூரத்திலிருந்து பார்த்ததும், ஓசையில் மயங்கி, ஓடிப்போய் சரணாகதி அடைந்துவிடுகிறீர்கள். அருவிகளின் பிரம்மாண்ட வாய்களுக்குள் புகுந்து அடைக்கலம் தேடிக்கொள்ளும் உங்களால் அதன் ஒழுங்கீனத்தை உணரவே முடியாது. நான் அதன் பிரம்மாண்டத்திலும், ஓசையிலும் மயங்கி விழுந்து விடுவதில்லை. தூரத்தில் அதன் அழகு என்னைப் பரவசம் கொள்ளச் செய்தாலும், அதை நெருங்க நெருங்க பரவசம் விலகி, ஒரு ஜாக்கிரதை உணர்வை நான் மனத்துள் நிரப்பிக் கொள்கிறேன். அதை மிகவும் அருகிலும் நெருங்கி விட மாட்டேன். அப்படி ஒருவேளை தவறுதலாக நெருங்கி விட்டேனென்றால் என்னை உள்ளிழுத்து மயக்கிவிடும் என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். வெகுதூரத்திலும் இல்லாமல், அதனிடம் சரணடையும் அருகாமையிலும் இல்லாமல் இந்த இடத்தில் நின்று கொண்டு அதைப் பார்ப்பது எவ்வளவு நன்மை பயத்திருக்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். எனது கவனிப்பைத் தாங்கமுடியாமல் அருவி இன்னும் ஓசை எழுப்புகிறது. எம்பித் தெளிக்கும் துளிகளிலிருது அதன் இயலாமையையும் ஆவேசத்தையும் நான் கண்டுகொள்கிறேன். எனது தீவிரப் பார்வையில் அது தடுமாறுகிறது. இந்தத் தடுமாற்றம் அதன் ஒழுங்கீனத்தை இன்னும் அதிகப் படுத்துகிறது. என்னுள் எழும் பரிதாப உணர்வை எதிர்பார்த்தே அது இப்படி அடங்காமல் விழுகிறதோ என்று எண்ணி நான் சுதாரித்துக் கொள்கிறேன். அருவி மீது குற்றமில்லை. அது படர்ந்து விழுந்து கொண்டிருக்கும், யாரும் பார்க்க முடியாத ஒழுங்கற்ற பாறைகள் முழுக் காரணம். இதை நான் சொன்னால் எள்ளி நகையாடுவார்கள். அவர்கள் அருவிகளின் திரைக்குப் பின்னே ஒளிந்து கொண்டு ஓலமிடுகிறார்கள். அவர்களது ஓலத்தினை அருவியின் ஒழுங்கான ஓசை மறைத்துவிடும். ஒழுங்கற்ற பாறைகளுடன் சேர்ந்த ஒழுங்கற்ற இவர்களை மறைத்து ஓசையிடும் இந்த அருவியின் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.

அனுமானங்களில் அரித்துக்கொண்டிருக்கும் மனங்களுடன் ஒரு கூட்டமென்றால், எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டு, நிகழ்காலத்தை இகழ்ந்து கொண்டிருக்கும் கூட்டம் இன்னொரு பக்கம்.

இறந்த காலத்தில் வாழப்போகும் நான் நிகழ்காலத்தைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், எப்போதோ பிறந்த எதிர்காலத்தை ஏன் பார்க்கவேண்டும்? இதிலிருந்து தெரிகிறதா நான் ஏன் தனியனானேன் என்று?

Monday, September 06, 2004

துபாய்

துபாய்க்குச் செல்லவேண்டுமென்றாலே ஒரே சமயத்தில் சலிப்பும் சந்தோஷமும் சேர்ந்து வரும். சலிப்பு - சாலையில் வாகனக் குவியல்களின் மெதுவான ஊர்வலம். எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி என்பது இப்போதெல்லாம் மிகவும் சகஜமாகிவிட்டது. சந்தோஷம் துபாயின் முடிவற்ற அசுர வளர்ச்சி கண்டு ஒவ்வொரு முறையும் பிரமிப்பது. வருடம் முழுக்க எதையாவது கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். உலகத்தின் உயரமான கட்டிடம், வெளிநாட்டவர்களும் சொத்து வாங்கும் வசதி, சாலைகள், ரயில் போக்குவரத்துத் திட்டம்என்று அவர்களது அடுத்த பத்தாண்டு திட்டங்களைப் பார்த்தால் அதிலுள்ள தொலை நோக்கும் தெளிவும் ஆச்சரியப்பட வைக்கும். புதிதாக குடியிருப்புகள், அதற்குத் தேவையான சாலை, மின்சாரம், தண்ணீர் என்று அனைத்தையும் கச்சிதமாகத் திட்டமிட்டு ஒரே சமயத்தில் பல வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. வீடுகள் விற்றுத் தீர்கின்றன. எங்கிருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறதோ என்று வழக்கம் போலவே யோசித்தேன்.

பர்ஜுமான் ஷாப்பிங் மால்-ஐ அதன் அளவைவிட பன்மடங்கு விரிவாக்கியிருக்கிறார்கள். ஒரு கிலோ மீட்டர் நீளம் இருக்கும் போல. ஜனங்கள் ஷாப்பிங் செய்துகொண்டே இருக்கிறார்கள். பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாகப் பெருகி; ஆடைகள் குறைந்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட நூற்றைம்பது நாட்டைச் சேர்ந்த மக்கள் துபாயில் குடியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. உடை விஷயத்தில் எவ்வித சட்ட திட்டமும் பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. சுதந்திரமாக உடையணிந்து காற்றோட்டமாக இருக்கிறார்கள். அவர்கள் பாணியில் உடையணிகிறார்களா அல்லது அழைப்பு விடுப்பவர்களா என்று இனங்கண்டு கொள்வது மிகவும் கடினம்.

பர்ஜுமானில் சிறிது நேரம் அலைந்து திரிந்துவிட்டு, வழக்கம்போல் அங்கு டாக்ஸி ஓட்டிக்கொண்டிருக்கும் நண்பர் எட்வினை அழைத்து அவருடன் சிறிது தமிழ் விஸிடிக்களைத் தேடி அலைந்தேன். முன்பு தெருக்குத் தெரு பரப்பி வைத்து பகிரங்கமாக விற்றுக் கொண்டிருந்தவர்களைக் காண முடியவில்லை. கெடுபிடி செய்திருக்கிறார்கள் போல. எட்வின் என்னை அழைத்துச் சென்றது முடிதிருத்தும் தொழிலகங்கள்! அங்கு கத்திரிக் கோலுடனும் வாடிக்கையாளருடனும் மும்முரமாக இருந்த அன்பர் வேலையைச் சற்று நிறுத்திவிட்டு, அலமாரியைத் திறந்து சில காகிதங்களைக் கொடுத்து 'எது வேணுமோ டிக் பண்ணிக் கொடுங்க' என்றார். அது ஒரு கையெழுத்துப் பிரதி கேட்டலாக். 'சிவாஜி, எம்ஜியார், ரஜினி, கமல்' என்று வகைப்படுத்தி அவர்களது திரைப்படங்களின் பெயர்கள் வரிசைப் படுத்தப்பட்டிருந்தன. கமல்-இன் வசூல்ராஜாவும் இருந்தது. 'விஸிடின்னா அஞ்சு திர்ஹாம். டிவிடின்னா பத்து. எது வேணுமோ குறிச்சுக் கொடுத்துட்டு, ஒங்க மொபைல் நம்பர் தாங்க. நாளைக்கு ரெடிபண்ணிட்டு கூப்பிடறோம். வந்து வாங்கிக்குங்க' என்றார் அவர். நான் அன்றே கிளம்ப வேண்டியிருந்ததால் மறுநாள் வந்து வாங்கிக் கொள்வது சாத்தியமில்லை; அடுத்தமுறை வந்து பார்க்கிறேன் என்று தெரிவித்துவிட்டுக் கிளம்பினேன். இன்னொரு மு.தி.கடையில் 'மதுரெ-யும், அளகேசனும் இருக்கு வேணுமா?' என்று கேட்டு அதிர்ச்சியளித்தார்கள்.

திருட்டு விஸிடிக்களை ஒழிப்பது சாத்தியமேயில்லை என்று தோன்றுகிறது. இப்போது டிஜிட்டல் சினிமா வரப்போகிறது என்று பேசிக்கொள்கிறார்கள். தொழில் நுட்ப எத்தர்கள் முன்பு எந்த நுட்பமும் பயனளிக்காது என்று தோன்றுகிறது. திரையரங்குகளில் திரையிடும் நேரத்திலேயே அதிகாரப்பூர்வ விஸிடிக்களையும், டிவிடிக்களையும் சகாய விலையில் வெளியிட்டு விடுவது நல்லது என்றே தோன்றுகிறது. தியேட்டருக்குச் சென்று எல்லாராலும் பார்க்கமுடியாது. அதே நேரத்தில் வரிசையில் நிற்பவர்கள் தோள் மீது ஏறிச் சென்று முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கும் ரசிகர் கூட்டமும் என்றும் இருக்கும். காகிதங்களைக் கத்தரித்து மழை பொழிவதும், பட்டாசு வெடிப்பதும், தீபாராதனை காட்டுவதும், கட்-அவுட், கொடி தோரணங்கள் எல்லாம் திரையரங்குகளில் மட்டுமே சாத்தியம். இரு தரப்பு ரசிகர்களையும் திருப்திப் படுத்துவதே திரையுலகினர் செய்யும் நல்ல காரியமாக இருக்கும். இது திருட்டைத் தடுக்க உதவாது; குறைக்க உதவும் என்பது என் சொந்தக் கருத்து. டிவி சானல்களிலும் திரை விமர்சனம் என்ற பெயரில் முக்கால் படத்தையும் துண்டுதுண்டாகக் காட்டி விடுகிறார்கள். அப்படியிருக்க திருட்டு விஸிடி என்று அழாமல், மரியாதையாக நல்ல விஸிடியையே வெளியிட்டுவிடுவது நல்லது.

கம்ப்யூட்டர் ப்ளாசாவிலும், கலீஜ் ஷாப்பிங் செண்ட்டரிலும் அனைத்தும் கிடைக்கிறது. ஐ-மேட் என்ற கைப்பேசி/கைக்கணினி என்று எல்லாம் சேர்ந்த ஒரு புதிய வஸ்துவைப் பற்றி விசாரித்து விவரங்கள் கேட்டுக் கொண்டிருக்கையில் கடைக்காரர் (மலையாளி என்று சொல்லத் தேவையில்லை), 'எதாவது சினிமா வேணும்னா சொல்லுங்க. ஒரு டிவிடி மூவியை 256 எம்பி இருக்கற ஐமேட்-ல ஓடற மாதிரி மாத்தித் தர்றேன்'என்று திடுக்கிட வைத்தார். 'எப்படி?' என்று கேட்டால் 'எல்லாம் டெக்னாலஜிதான்' என்றுவிட்டுக் கண்ணடித்தார். தொலைக்காட்சிப் பெட்டிகளை ஒழித்து, தட்டையான திரைகளிலேயே டிவியும் பார்த்துக் கொள்கிற மாதிரி (எல்ஸிடி) நிறைய குவித்து வைத்து விற்கிறார்கள். ஐ-மேட் போன்றே, க்யூ-டெக், டங்க்ஸ்டன், ஐ-பேக் என்று கால்குலேட்டர் அளவிற்கு அனைத்தையும் உள்ளடக்கிய எலெக்ட்ரானிக் வஸ்துகள் மலிந்து கிடக்கின்றன. இன்னும் கொஞ்சம் விலை குறையக் காத்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சிபியூவில் முன்பெல்லாம் ஒரு ·ப்ளாப்பி ட்ரைவ்; ஒரு ஸிடி/டிவிடி ட்ரைவ் மட்டும் இருக்கும். இப்போது சிபியூவில் இடமே இல்லாமல் பத்து பதினைந்து டிவிடி ரைட்டர்களை அடைத்து விற்கிறார்கள். எதாவது ஒரு ட்ரைவில் ஒரு டிவிடியைப் போட்டு மற்ற ரைட்டர்களில் ஒரே சமயத்தில் பத்துப் பிரதிகள் எடுக்கலாம். ஒருபுறம் புதிது புதிதாக டிவிடி ரைட்டர், விஸிடி-ட்டு-டிவிடி கன்வர்ட்டர் என்று தொழில்நுட்ப வசதிகள் பெருகி, டிவிடி ப்ளேயர், டிஸ்க்குளைக் கிலோக் கணக்கில் சல்லிசாக விற்றுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் திருட்டு விஸிடியை ஒழிக்க வேண்டும் என்று கோஷமிட்டும் ஊர்வலம் போயும் உண்ணா விரதமிருந்தும், குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர்களை நினைத்துப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது.

பிரசன்னாவிடம் தொலைபேசியில் பேசி வழக்கமாகச் சந்திக்கும் கடற்சிப்பி (Sea Shell) ஹோட்டல் முன்பு டாக்ஸியிலிருந்து இறங்கிக்கொண்டு அவர் வந்ததும் அளவளாவிக்கொண்டே பர்-துபாயின் நெருக்கடித் தெருக்களில் நடந்தோம். ப்ரெளசிங் செண்ட்டருக்குச் சென்று மரத்தடி ஆண்டுவிழாக் கொண்டாட்ட நிறைவு நாள் மாலையில் அருளின் அரட்டை அரங்கத்தில் சு.ரா. என்ற பெயரில் அரட்டையடித்து (கணேஷ் கடைசிவரை நான் பிரசன்னா என்று நம்பினார். உஷா முதலில் கண்டுபிடித்துச் சொன்னார்) விட்டு, பின்பு வசந்த பவனுக்கு நடந்தோம்.

நடுவில் பலமுறை ஆசி·ப்-ஐ தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அவர் வேலையில் மும்முரமாக இருந்திருப்பார் போல.

வசந்த பவனுக்குக் குறுகிய சந்து ஒன்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. கடைகளெங்கும் ஓடிக் கொண்டிருக்கும் குளிர்சாதன இயந்திரங்களின் வெப்பம் தெருக்களில் வியாபித்து, ஈரப்பதமும், வெப்பமும் சேர்ந்து வியர்க்கவைத்துக் கொண்டிருந்தது. அச்சந்தில் - எதிரெதிரே இரண்டு நபர்கள் மட்டுமே கடக்குமளவு குறுகிய சந்து - இருளில் மெதுவாய் நடந்து கொண்டிருக்கையில் சற்று தூரத்தில் கீழே யாரோ அமர்ந்திருப்பது புலப்பட்டது. முதலில் இருளில் சரியாகத் தெரியவில்லை. அருகில் நெருங்கியதும் அது பெண் என்று தெரிந்தது. இன்னும் அருகே சென்றதும் அப்பெண் அரைகுறை ஆடையுடன் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டு ஒரு தெருப்பூனையின் தலையைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. அது ஒரு அழுக்கான வெள்ளைப் பூனை. முக அமைப்பை வைத்து அவள் ஒரு ·பிலிப்பினோவாக இருக்கலாம் என்று நினைத்தேன். அந்தத் தெருவின் அழுக்கிற்கும், இருளிற்கும், அந்நேரத்திற்கும், அந்த அழகான பெண் பொருத்தமற்று இருந்தாள். அவள் அங்கிருக்க எந்த முகாந்திரமும் இல்லை. துபாய் எங்கும் நிறைந்திருக்கும் விலைமாதுகளில் அவளும் ஒருவளாய் இருக்கலாம். வாடிக்கையாளர்கள் யாராவது அழைப்பார்களா என்று எதிர்பார்த்து அங்கு இருக்கலாம். சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையொட்டி, பல தரப்பட்ட விலைமாதுகள் எங்கும் மலிந்து கிடக்கின்றனர் என்று எட்வின் ஒருமுறை சொல்லியிருக்கிறார். அப்பெண் கடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை - அவளை எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதை நிச்சயமாய் அவள் உணர்ந்திருந்தாள். பூனையும் அவளுடைய வருடலில் சுகமாய் அரைக்கண் மூடி தலையைச் சாய்த்துக் காட்டிக்கொண்டிருந்தது. அவள் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் என்று கற்பனை செய்ய முனைந்தேன். அப்பெண்ணின் முகத்தில் உணர்ச்சிகளெதுவும் தென்படவில்லை. பூனையையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தத் தருணத்தில் அவளும் அப்பூனையும் மட்டுமே அவள் உலகமாய் இருந்திருக்க வேண்டும். இருவரும் அனாதைகள். அவளின் அவ்வருடலில் அப்பூனை கிறங்கிக் கொண்டு அமர்ந்திருந்தது. அப்பூனையின் ஆமோதிப்பே அவளுக்கும் ஒரு வடிகாலாக, ஒருவித ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அதீத முகப்பூச்சுடன், உதட்டுச் சாயத்துடன், தெருக்களென்றும் அலைந்துகொண்டு கண்களால் அழைப்புவிட்டு உயர் வகைக் கார்களில் தொற்றிக்கொண்டு செல்லும் பெண்களின் மத்தியில் இப்படி இருளில் ஒரு அழுக்குச் சந்தின் தரையில் அமர்ந்து கொண்டிருந்த அப்பெண்ணைப் பார்க்க மனம் வல்லித்தது. பிரசன்னாவுடன் பேசிக்கொண்டு, அவளையும் கவனித்துக்கொண்டே சற்றே ஒதுங்கி அவளைக் கடக்கையில் ஒரு கணம் கையை நீட்டி அவளின் கூந்தலைக் கோதிவிடத் தோன்றியது. நின்று அவளைப் பற்றி விசாரிக்கவேண்டும் என்று தோன்றியது. இவையனைத்தும் நடந்தது ஒரு சில வினாடிகளே. மனம் அங்கேயே நிற்க, தொடர்ந்து நடந்து வசந்த பவனில் இரவு உணவைச் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின் என் இருப்பிடத்திற்குச் சென்றேன்.

மறுநாள் காலையில் துபாயிலிருந்து கிளம்பினேன். மேலெழுந்த விமானத்தின் சன்னல் வழியே தூசுப் படலம் மூடி ஆங்காங்கே தலைநீட்டிக் கொண்டிருந்த காங்க்ரீட் கட்டிடங்கள் நிறைந்திருக்கும் துபாய் நகரத்தைப் பார்த்துவிட்டுக் கண்மூடி இருக்கையில் சாய்கையில், முந்தைய இரவு பார்த்த அப்பெண்ணின் அந்த உணர்ச்சியற்ற முகமும் அரைக்கண் மூடிய பூனையின் முகமும் நீண்ட நேரம் மனதில் நிழலாடின.


Wednesday, August 25, 2004

சுஜாதா - வலைப்பூ - கற்றதும் பெறாததும்

'வந்துட்டான்யா வந்துட்டான்' என்று வடிவேலு ஸ்டைலில் எகிறிக் குதிக்காததுதான் குறை.

பாய்ஸ் படத்திற்காக வாங்கிய சொல்லம்புகளின் காயமே இன்னும் மறைந்திருக்காது. இப்போது உயிர்மை இணையத்தைப் பற்றி எழுதி அப்படியே இணையப் பதிவுகளின் சாராம்சத்தைத் தொட்டுவிட்டு, வலைப்பதிவு/வலைப்பூக்-களைப் பற்றி லேசாக, சுஜாதா விகடன் கற்றதும் பெற்றதும்-இல் எழுதினாலும் எழுதினார். வலைப்பதிவாளிகள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டனர்.

சுஜாதா க.பெ.-இல் சொன்னது இரு விஷயங்கள். ஒன்று 'உயிர்மை' போன்று இக்கால கட்டத்தில் ஒன்றை நடத்துவதும் அதன் வெற்றிக்கான சாத்தியங்களும். அதை இப்படிச் சொல்லியிருக்கிறார்:

"வாரப் பத்திரிகைகளில் சினிமாச் செய்திகள் விரிவாகப் படிக்கப்படுகின்றன. யார் கர்ப்பமாக இருக்கிறார்கள்; யார் கர்ப்பமாகப் போகிறார்கள் என்பதெல்லாம் சுவாரஸ்யமான விஷயங்கள். "சங்க இலக்கியத்தில் தாவரங்கள்" என்றால் எஸ்கேப். காதல் கவிதைகளும் மூன்று வரிகளுள்ள ஹைக்கூ என்ற பெயரில் நிகழும் பாவச்செயல்களும் படிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் 'உயிர்மை' போன்ற பத்திரிகைகள் உயிர் வாழ்வதே அதிசயம்தான்."

"வலையில் யார் பத்திரிகை படிக்கிறார்கள் என்பது பற்றி எனக்குச் சந்தேகங்கள் உள்ளன. ஹிட் ரேட் ஒரு மாயை. வலையில் என்னைக் கவர்வது அதன் சாஸ்வதம்தான். இன்று வலைக்குள் போட்டுவிட்டால் அது கி.பி.2014 ஆகஸ்டில் கூட யாரோ ஒரு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம் அதன் சிறப்பு. இதனால் வலைப்பதிவுகளை நம் பழங்காலத்துக் கல்வெட்டுகளுக்கு ஒப்பிடலாம்."

இரண்டாவது விஷயம் வலைப்பதிவுகளும் அதன் வாசிப்புகளும். அதைப் பற்றி:

"இப்போது புதிதாக பிலாக்ஸ் என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். 'இதோ பார் என் கவிதை' 'இதோ பார் என் கருத்து' 'இதோ பார் உலகுக்கு என் உபதேசம்' என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப் படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்".

இது அவர் கருத்து. உடனே 'எப்படிச் சொல்லப்போச்சு?' என்று ஏன் இப்படி எதிர்வினைகள் வீசப்படவேண்டும்? அவர் சொன்னது 'தவறு' 'சரி' 'உதிர்த்த பொன்மொழிகள்' என்று வரையறுக்கவேண்டியதில்லை. வலைப்பதிவுகளில் காணப்படும் ஆதாரப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து விடை காண முயல்வது நலம்.

அவர் குறிப்பிட்டுள்ள 15 நிமிட புகழ்-இல் எனக்கு(ம்) உடன்பாடில்லை. பதினாறு நிமிடங்களாவது புகழ் நிலைக்கும் என்று நினைக்கிறேன். சிலவற்றுக்குப் பதினைந்து நிமிடப் புகழ்; சிலவற்றுக்கு 30 நிமிடங்கள்; சிலவற்றுக்கு அதிகபட்சமாக 300 நிமிடங்கள் கிடைக்கலாம். இப்போதைய புகழும், செய்தியும், புதிதாக இன்னொரு புகழும் செய்தியும் வரும் வரையே! கும்பகோணத்து விபத்தன்றுகூட வானொலியில் நேயர் விருப்ப நிகழ்ச்சிகளும் மன்மத ராசாக்களும் ஓடிக்கொண்டிருக்கும் சொரணையற்ற சமூகச் சூழ்நிலை நிலவும் இக்காலகட்டத்தில், நல்ல விஷயங்களுக்கெல்லாம் பதினைந்து நிமிடப் புகழே அதிகம் என்றுதான் தோன்றுகிறது!

ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலிருந்த வலைப்பதிவுகள் இப்போது மண்டிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றும் எத்தகைய உள்ளீடுகளைக் கொண்டிருக்கும் என்று வலைப்பதிவாளிகளுக்கே வெளிச்சம். வாசகர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமில்லை. 'புடிக்கலைன்னா அடுத்ததுக்குப் போய்க்கோ' என்று எளிதாகச் சொல்லிவிடலாம். இப்படி ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்து, தேடிப் படிக்கவேண்டுமென்றால், வாசகன் ஆயுள் முழுமைக்கும் வலைப்பதிவுகளில் அலைந்துகொண்டேயிருக்கவேண்டும்.

வலைப்பதிவுகளில் இப்போதிருக்கும் எந்த சஞ்சிகைகளையும் விட மிக நல்ல விஷயங்களும் படைப்புகளும் கிடைக்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இணையத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்க்குழுமங்களிலும் பொக்கிஷங்கள் கிடைக்கின்றன. குழுமங்கள் - குழுமங்களாக இருக்கும் வசதியினால் ஒரே இடத்தில் மேய்ந்து வேண்டியதைப் படித்துக்கொண்டு வேண்டாததைத் தள்ளிவிட்டுக்கொண்டு போவது ஓரளவுக்கு சுலபமாகிவிட்டது. வலைப்பூக்கள்/பதிவுகள் அப்படியல்ல. இதைத்தான் சுஜாதா சொல்கிறார்.

வலைப்பதிவுகள் (Blog) பற்றி, முன்பு ஒரு முறை (29-Dec-03) அவர் அளித்த பதில்:

**blogs are nothing but handwritten magazines and non personal diary entries Searching them is equally tedious There must be a blog selection blog Are there any?**

தற்போது திரு காசி அவர்கள் அமைத்திருக்கும் தமிழ் மணம் Portal (http://www.thamizmanam.com) சுஜாதாவின் பதிலின் கடைசி வாக்கியக் கேள்விக்குத் தகுந்த பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன். தமிழ் மணம் ஒரு நல்ல ஆரம்பம்.

வலைப்பதிவுகளை/பூக்களை "அறிவியல், தொழில்நுட்பம், விளம்பரவியல்.." என்று காசி அவர்களின் Portal போன்ற ஒரு தளத்தில் 'வகைப்படுத்தப்பட்டு தொகுக்கப்படும் வரை' வாசகர்களுக்கு விஷயங்கள் போய்ச் சேராது. சுஜாதாவின் கருத்துகளில் குறையேதும் இல்லை.

ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான வலைப்பதிவுகளைப் படித்து விஷயமறிந்துகொள்வதென்பது சாத்தியமில்லை. அதே போல் பெரும்பாலான வலைப்பதிவுகள் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் (விளம்பரவியல், தொழில்நுட்பம்) மட்டும் விஷயங்களைக் கொண்டிருக்கவில்லை. தமிழில் நான் படித்தவரையில் வெகுசில வலைப்பதிவுகள் தவிர, பெரும்பாலான வலைப்பதிவுகள் கதம்பமான பல விஷயங்களையே கொண்டிருக்கின்றன. இவை இப்படி "ஒழுங்காக ஒழுங்கற்று" இருக்கும்வரை யார் யாருக்கு விஷயங்கள் போய்ச் சேருகிறது என்றும், எந்த விஷயங்களை எந்த வலைப்பதிவுகளில் போய்த் தேடுவது என்றும் வலைப்பதிவாளிக்கும் வாசகர்களுக்கும் தெரியாமலே போகும்.

வலைப்பதிவுகள் இன்னும் வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காலகட்டங்களில் வலைப்பதிவும் ஒரு பரிமாணம். டாப், திஸ்கி என்று பஸ்கி எடுத்துக்கொண்டிருந்தபோது யூனிகோடு வந்திருக்கிறது. இணையதளம், இணையக்குழுமம், இப்போது வலைப்பதிவு/வலைப்பூக்கள் - நாளைக்கு இன்னொன்று முளைக்கலாம்.

க.பெ.யில் அவர் சொன்னதன் சாராம்சம் 'இணையத்தின் உள்ளீடுகள் சாஸ்வதம்' என்பதே. இதை வசதியாக விட்டுவிட்டு "(வலைப்)பூக்களைப் பறிக்காதே" - என்று உச்சஸ்தாயியில் பாடுவது தேவையல்ல என்பது எனது கருத்து.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Sunday, August 01, 2004

*** ஜே.ஜே. சில குறிப்புகள் பற்றிச் சில குறிப்புகள் - 5 ***

வாசித்துச் செல்லும்போது சில விவரிப்புகளில் ஒளிந்திருக்கும் நுட்பங்களைக் கிட்டத்தட்டத் தவற விட்டுவிட்டேன். கடைசி வினாடிகளில் சுதாரித்துப் பிடித்துக்கொண்ட நுட்பங்கள் அநேகம். அவை ஜே.ஜே.சில குறிப்புகளில் எங்கெங்கும் விரவியிருக்கின்றன. ஒவ்வொரு வாசிப்பிலும், தூண்டிலைச் சளைக்காமல் வீசிக் குளத்தைக் காலி செய்துவிடும் உத்தேசத்துடன் மீன் பிடிப்பவனைப் போன்ற மனோ நிலையில், புதிய மீன்களைப் பிடிக்கிறேன். மீன்கள் வந்துகொண்டேயிருக்கின்றன ஒவ்வொருமுறை தூண்டில் வீசுகையிலும். குளத்தில் இருப்பது தெளிவாக அலையும் மீன்கள் மட்டுமல்ல. இம்மீன்கள் உற்பத்தி செய்யும் மீன்குஞ்சுகளை எண்ணி மாளாது. பெரிய மீனைப் பிடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கையிலேயே இன்னும் எத்தனை நூறு மீன்குஞ்சுகள் பொரிந்திருக்குமோ என்ற நினைப்பு சில சமயங்களில் ஆயாசத்தைத் தருகிறது. ஆனாலும் மீன்பிடிக்கக் கசக்குமா என்ன? குளம் காலியாகாது என்ற நினைப்பே அலாதியானது.

இவ்வகையான சில மீன் குஞ்சுகள் உங்கள் பார்வைக்கு:

"இன்று ஒரு செய்தி காலையில். பொதுக்கிணற்றில் விஷம் கலக்கப் பட்டிருக்கிறதாம். .மயக்கம், தலைசுற்றல், வாந்தி, தொடர்ந்து என்னற்ற ஹேஷ்யங்கள், எண்ணற்ற சந்தேகங்கள், வேறுபட்ட உரைகள், முன் விரோதங்கள், மதச்சண்டை, ஜாதிச்சண்டை, என்னென்னவோ. காலையில் அங்கு போனேன். அந்தக் கிணறு அமைதியாகச் செய்துகொண்டிருந்த காரியத்தை தண்ணீர் சப்ளை செய்யப் புறப்பட்ட முனிசிபாலிட்டி அலங்கோலமாகவும், அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் செய்ய முற்பட்டு, தத்தளித்து, மனித வாய்களில் மிக மோசமான வசைகளையும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது. பொதுக்கிணற்றில் விஷம் கலந்தபோது ஜனங்கள் பளிச்சென்று தெரிந்துகொண்டுவிட்டார்கள். குடல் காட்டிக்கொடுத்துவிட்டது. உடல் எதிரியைத் தெரிந்துகொள்வது போல், மன எதிரியை இனங்காணத் தெரிவதில்லை. பழைய நார்க்கட்டிலில் படுத்தபடி கீழ்த்தரமான ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் தோமா எப்போதும் மூட்டைகளைப் பற்றிப் புகார் சொல்கிறான். புத்தகத்தின் பக்கங்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத மூட்டைகள் அவன் ரத்தத்தை உறிஞ்சுவதைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை".

"சம்பார மடம் நாராயண அய்யர் இறந்துவிட்டார் என்ற செய்தி தெருவில் காதில் விழ, பேசிக்கொண்டு போனவர்கள் அளித்த முக்கியத்துவத்திலிருந்து ஏதேதோ கற்பனைகள் மனதில் விரிய, அவர்கள் பின்னாலேயே சென்றேன். சரியான கூட்டம். 250 ஏக்கர் நஞ்சை ஹரிப்பாடில் இருக்கிறதாம். அப்படியென்றால் சட்டுபுட்டென்று சிதையில் ஏற்ற முடியுமா? காலையில் ஒன்பது மணியிலிருந்து தொடர்ந்து காரியங்கள், மதச்சடங்குகள், மந்திரங்கள், ஹோமப்புகை, தவணை வைத்து அழுகை, ஏழைப் பிராமணர்களின் அட்டகாசம். கொளுத்தும்போது சாயங்காலம் மணி ஆறேகால். அவர்கள் குடும்பத்துக்கென்று தனிச் சுடுகாடு, கற்கோட்டைபோல் சுவர் எழுப்பிப் பெரிய பூட்டுப்போட்டு வைத்திருக்கிறார்கள். அவரைக் குளிப்பாட்டி முடித்ததும், கால் சிரங்கிற்கு என்றும் மருந்து போடும் பேத்தி அன்றும் அழுதுகொண்டே களிம்பு போட்டது எல்லாருடைய மனத்தையும் உருக்கிவிட்டது. பாவம், சம்பார மடம் நாராயண அய்யர்! நான் முதல் தடவையாக அவரைப் பார்த்தபோது இறந்து விட்டிருந்தார். எப்படிப் பேசுவார் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை".

"உலகச் சிந்தனை வளத்தையும், உலக இலக்கிய வளத்தையும், நம் பின்னணி தெரிந்து, தேவையை உணர்ந்து, வாசகனின் கிரகிக்கும் சக்தியைப்பற்றிய பிரக்ஞையுடன் மொழிபெயர்ப்புகள் கொண்டுவந்தால், நம் கருத்துலகில் ஒரு பெரிய மாற்றத்தைச் சிறுகச் சிறுக நிகழ்த்திவிடலாம்.....பலர் இங்கு மொழிபெயர்ப்பது வேறொரு பாஷையும் தெரியும் என்று பயமுறுத்த"

"மாணவர்கள் கூடி, எதிர்படுபவர்கள் அனைவரையும் நிறுத்தி, வற்புறுத்தி, 'பாரத மாதாவுக்கு ஜே', 'மகாத்மா காந்திக்கு ஜே' என்று குரல் எழுப்பச் செய்தார்கள். சிறு பையன்களின் தலையில் குட்டியும், செவியைத் திருகியும் இதைச் செய்யச் சொன்னார்கள். வற்புறுத்தல் இன்றியே பல சிறுவர்கள் ஆர்வமாகப் புரட்சிவசப்படக் கத்தினார்கள். ஒரு வயதான கிழவி மறுத்துவிட்டாள். 'கொன்றாலும் கத்த மாட்டேன்' என்றாள். கொள்கை காரணம் என்று நான் நினைக்கவில்லை. வற்புறுத்தலுக்கு இணங்கக்கூடாது என்ற வீம்பு அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த மனோபாவம்தான் சுதந்திரத்தை எப்போதும் காப்பாற்றி வந்திருக்கிறது'.

"கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்துகொண்டுவிட்டோம் என்றும், அதிகமாகத் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக்கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதைப் பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன? திறப்பதே திறக்காத கதவுகளைப் பார்க்கத்தானா?"

"நண்பர்களைத் தேடிப்போவதை அவர்களுடைய மனைவிகள் வெறுக்கிறார்கள். மனைவிகளின் பெரிய எதிரி கணவனின் இலக்கிய நண்பனே. கணவர்களைத் தங்கள் கைகளிலிருந்து தட்டிப் பறித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். ஆழந்த பேச்சும் ஈடுபாடும் அவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. லெளகீகத்தில் பற்றுக் குறைந்து, தங்கள் மீது பற்றுக் குறைந்து, வாழ்க்கையை நிமிர்த்துவதற்குக் கணவன் பயன்படாது போய்விடுவானோ என்று பயப்படுகிறார்கள். நாளாவட்டத்தில் அவர்களுடைய மனோபாவத்தைத்தான் நண்பர்களும் பிரதிபலிப்பார்கள்".

"விமர்சனத்திற்கு ஆளாகும்போது எதிராளியின் முகத்திரையைக் கிழிப்பது அல்ல, என் மனத்திரையைத் தூக்கிப் பார்த்துக்கொள்வதுதான் என் முதல் வேலை என்று நினைக்கிறேன்".

"தன்னுடனேயே இருந்து, தன்னைக் கவனித்துக்கொள்ளும்படி மனிதன் கடவுளிடம் கேட்டுக்கொள்கிறான். ஆனால் தன்னை ஒப்படைத்துக்கொள்ள, மனிதன் மீது கடவுள் காட்டும் அக்கறைகள் அவனுக்குப் போதுமானதாகவும் இல்லை. மன நிறைவைத் தரக்கூடியதாக, முற்றாக நம்பத்தகுந்த, பரவசமூட்டக்கூடிய, பூரணமான ஒன்று மனிதனுக்கு வேண்டும். அது அவனை வழிநடத்திச் செல்லவேண்டும். மனிதனின் மிகப்பெரிய சங்கடம் முடிவுகள் எடுப்பது. வெவ்வேறு சாத்தியக்கூறுகளின் முன்னால் அவன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எது தவறு? எது சரி? அவனுக்குச் சரி இவனுக்குத் தவறாகவும், இவனுக்குச் சரி அவனுக்குத் தவறாகவும் இருக்கின்றன. இப்போது மூன்றாவது ஒருவன் தோன்றி புதிய தவறையோ, ஒரு புதிய சரியையோ முன் வைக்கிறான். குழப்பம் மேலும் வலுக்கிறது. ஆராய்ந்து அறியும் பொறுப்பு மிகப் பயங்கரமானது. கடுமையானது. சிக்கலானது. பின்பற்றலோ மிக எளிமையானது. சரணாகதி நிம்மதியைத் தரக்கூடியது".

இறுதியாக...

**

"செயலின் ஊற்றுக்கண்ணான சிந்தனையைப் பாதிப்பதே என் வேலை. எண்ணங்கள் இன்றிச் செயல்கள் இல்லை. எண்ணங்களைப் பாதிப்பவன் ஒவ்வொருவனும் காரியத்தையே பார்க்கிறான். நம்பிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் மனித குலத்தையே மாற்ற முடியும். இம்மாற்றம் நிகழ வேண்டுமென்றால் மனிதனுக்கு அவன் கொள்ளும் உறவுகளில் சகல உறவுகளிலும் மெய்மையை ஸ்பரிசிக்கத் தெரியவேண்டும். உறவுகளில் பழக்கத்தையே ஸ்பரிசித்துக்கொண்டிருக்கிறான் மனிதன். இத்தடுப்பு இருக்கும் வரையிலும், போதனைகள் பழக்கத்தின் பாசியில் வழிந்துகொண்டே இருக்கும். இந்தப் பாசி பயங்கரமானது. கலவியை முற்றாக மறந்துவிட்ட சமூகம் காதல் வயப்பட்டு நிற்பதன் மூலம் மட்டும் வம்ச விருத்தி எப்படிக் கூடும்? மெய்மையை ஸ்பரிசிப்பதே படைப்பு. மனத்தைப் படைப்பு நிலைக்குத் திருப்பவேண்டும். அவன் தன்னைக் கற்றுக்கொள்ளத் தவறினால் அவன் காலடி மண்ணைக்கூட அவன் தெரிந்துகொள்ளப் போவதில்லை. மனித மனத்தில் தூர்ந்துபோய்விட்ட படைப்பின் ஊற்றுக் கண்ணைக் கீறி விடுவதுதான் என் வேலை".

**

ஜே.ஜே. என்ற அந்த எழுத்தாளனைப் பார்க்கத் துடிக்கிறது மனம். அவன் முன் நின்று அவன் மனதோடு உரையாடவேண்டும் என்ற எண்ணத்தை - கதைசொல்லியின் மனதில் சதா சர்வ காலமும் ஓடும் அதே எண்ணத்தை- நம்மிடம் கொண்டு வருவதன் மூலம் சு.ரா. வெற்றியடைந்திருக்கிறார். எக்ஸ்டென்ஷியலிசம், போஸ்ட் மாடர்னிஸம், என்று ஏகப்பட்ட இஸங்களில் எழுத்தை வகைப்படுத்துவதாகக் கேள்விப்பட்டேன். எழுத்தை எழுத்தாக வரையறைகளின்றிப் படிக்க விழைவதால், ஜே.ஜே.-ஐ எந்த இஸத்திற்குள்ளும் பார்க்க/படிக்கத் தோன்றவில்லை. முழுப்புத்தகத்தையும் படித்து முடித்ததும் பல்வேறு மனங்களின் வரையறையற்ற, முடிவற்ற சிந்தனைப் போராட்டங்களின் பிரதிபலிப்பாக அதை உணர்ந்தேனேயொழிய, கதாபாத்திரங்களையோ அல்லது அவை பேசிக்கொள்ளும் வசனங்களையோ உணரவில்லை. படித்து முடித்ததும் சில மணிநேரங்கள் ஆழ்ந்த மெளனத்தில் இருக்கவேண்டியிருந்தது. தாவிப்பறக்கும் புரவிகளைக் கடிவாளமிட்டு அடக்கமுயற்சிப்பதுபோல், பேரலைகளை உள்ளங்கையில் அடக்கமுயற்சிப்பதுபோல, எங்கெங்கோ தறிகெட்டுப் பாய்ந்துகொண்டிருந்த சிந்தனைகளை அடக்கிக் கட்டுப்படுத்த போராடவேண்டியிருந்தது. பின்பு முயற்சியைக் கைவிட்டு, அதுவே அடங்கட்டும் என்று விட்டுவிட்டேன். இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கையில், உலையில் கொதிக்கத்துவங்கும் நிலையிலுள்ள நீரைப்போலிருக்கிறது என் மனம். கொதிப்பதற்குள் இதை எழுதிமுடித்துவிட்டு ஆசுவாசப்படுத்திவிடவேண்டும் என்பதே என் அவா. அந்த மனச்சுழற்சியில் இன்னொருமுறை சிக்க வலுவில்லை என்றே சொல்லவேண்டும்.

சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' ஒரு நாவலே அல்ல; இலக்கியமும் அல்ல என்று நிறைய குற்றம் சாட்டப் பட்டிருக்கும் ஜே.ஜே.சிலகுறிப்புகளை நான் ஒரு ஓவியமாகக் காண்கிறேன். ஓவியம் என்றால் நவீன ஓவியம் அல்ல. மிகவும் திருத்தமாக வரையப்பட்ட ஓவியம் - தவறு - ஓவியங்கள். ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கான ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியமும் திருத்தமான ஒரு பகுதி. இதுபோல திருத்தமான ஆயிரக்கணக்கான ஓவியங்கள் சிதறியிருக்கும் மிகப்பெரிய மைதானமாக ஜே.ஜே.சில குறிப்புகள். ஒவ்வொரு ஓவியத்தைப் பார்க்கும்போதும் 'ஒரு ஓவியமாக' புரிவது, மைதானத்தின் நடுவில் நின்று பார்க்கும்போது கண்கட்டிக் காட்டில் விட்டதைப் போன்று உணர்கிறோம் - ஆரம்பத்தில். இதோ கீழே கிடக்கும் ஓவியம் ஒவ்வொன்றும் ஒரு சிறகுகள். இரண்டை எடுத்து மாட்டிக்கொண்டு பறக்கவேண்டும் என்று நினைத்தாலே போதுமானது; சிறகுகள் நம்மைத் தூக்கிக்கொண்டு உயரே உயரே பறந்து செல்லும். உயர இருந்து மைதானத்தைப் பார்க்கையில் அவ்வாயிரக்கணக்கான ஓவியத் துணுக்குகள் சேர்ந்து ஒருங்கே பிரம்மாண்டமானதொரு ஓவியமாகத் தெரிகையில் நெஞ்சடைக்கிறது. அவ்வுண்மை மிகவும் சுடுகிறது. அதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றுகிறது. 'இது மட்டுமல்ல. இன்னும் உயரே உயரே உன் மனத்துள் பறந்து செல். இது போன்ற ஆயிரக்கணக்கான மைதானங்களைக் காண்பாய். அவையும் ஒருங்கே இணைந்து இன்னொரு ஓவியமாக - பிரம்மாண்டமான அதிசயமாக உன் மனத்துள் விரியும்' என்று உள்ளுக்குள் குரல் ஒலிக்கிறது. இன்னும் உயரே பறந்து சென்று பார்க்க ஆசைதான். ஆனாலும் பயமாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். ஒரு மைதானத்தைப் பார்த்ததற்கே மூச்சடைக்கிறதென்றால் ஆயிரக்கணக்கான மைதானங்களை ஒருங்கே பார்ப்பதென்றால் உயிரை விட்டுவிடுவேன் போல இருக்கிறது.

அதற்கு உயிரை விட்டுவிட்டு அப்புறம் பார்த்துக் கொள்கிறேனே?

வணக்கம்.

அன்புடன்

சுந்தர்.

நன்றிகள் : "ஜே.ஜே.சில குறிப்புகள்" - சுந்தர ராமசாமி


Sunday, July 25, 2004

*** ஜே.ஜே.சில குறிப்புகள் பற்றிச் சில குறிப்புகள் -4 *** 

ஜே.ஜே. ஓமனக்குட்டியுடன் சுற்றுகிறான் என்று கேள்விபட்டதும், நிம்மதியின்றித் துடிக்கும் அவன் திருமண வாழ்விற்குத் திரும்பினால் சரியாகிவிடுவான் என்று பேராசியர் அரவிந்தாட்ச மேனன் நம்பினார். திடீரென்று சில நாள்களாக ஜே.ஜே.யையும், ஓமனக்குட்டியையும் காணவில்லை என்றதும் மேனன் சந்தோஷப்படத்தொடங்கினார். அவருடைய மகிழ்ச்சி வெகு சீக்கிரமே முடிவுக்கு வந்தது இரண்டு நாள்கள் கழித்து தனியே வந்து சேர்ந்த ஜே.ஜே.யினால். ஓமனக்குட்டியுடன் ஜே.ஜே. கொண்டிருந்த உறவு ஒரு ரயில்வே ஸ்டேஷனில், ஓமனக்குட்டி அவள் எழுதிய கவிதைத் தொகுப்பை ஜே.ஜே.யிடம் காட்டிக் கருத்துக் கேட்டதும் முடிவுக்கு வந்துவிட்டது. ஜே.ஜே. அவளுடன் இருப்பதைவிட, அக்கவிதைத் தொகுப்பைப் பற்றிய அவனது உண்மையான அபிப்ராயத்தைச் சொல்வெதென்று முடிவெடுத்ததே காரணம்! 

"உண்மை பயங்கரமானது. அது மனிதனைத் தனிமைப்படுத்திவிடுகிறது. உறவுகளை ஈவிரக்கமின்றித் துண்டித்து விடுகிறது. உலகின் விதூஷகக் குணத்தைக் கண்டு சிரிக்கும் நுட்பமான ஹாஸ்ய உணர்வு கொண்டவன் ஜே.ஜே. பெரும் துக்கத்தில் அவன் சிரிப்பான். ஆனால் அது சிரிப்பல்ல. பிராண்டல்களில் கசியும் ரத்தம். நண்பர்களுக்குக்கூட அந்த ரத்தத்தைத் துடைக்கத் தெரியவில்லை. மோசமான வதந்தியிலிருந்து கிடைக்கும் பரபரப்பையே அவர்கள் அடைகிறார்கள். மறைந்து நிற்கும் துக்கம் எவருக்கும் தெரிவதில்லை. 

தத்துவங்களை அவன் பார்த்துக்கொண்டே போகிறான். அவற்றிலிருந்து ஒரு ஒளிக்கீற்று வெளிப்பட்டு, இந்த உலக வாழ்வின் மீது- மாறி மாறிக் காட்சி தரக்கூடிய சிக்கல்களும், முரண்களும் நிறைந்த, தனது புதிய வெளிப்பாடுகளால் நம் ஆராய்ச்சி முடிவுகளைப் புறம் தள்ளிவிடுகிற கடல்போல், நிறங்களிலும், கொந்தளிப்புகளிலும், அமைதிகளிலும் விதவிதமான புறந்தோற்றங்களைக் கொள்கிற இவ்வுலகின்மீது பட்டு விளக்கம் பெற அவன் துடிக்கிறான். உண்மையின் கீற்றுகள். முழுமையாக ஏற்று மனம் ஒப்பிப் பின் தொடர எங்கு அவை குவிந்து கிடக்கின்றன? எங்கு அவை தொகுக்கப்பட்டிருக்கின்றன? தேடியவர்களில் கீற்றுகளை ஸ்பரிசிக்காதவனும் இல்லை. முழுமையாக ஸ்பரிசித்தவனும் இல்லை. ஒரு பகுதி புதிய பரிமாணங்கள். மறுபகுதி மீண்டும் சரிவுகள். இவனிலிருந்து ஒரு பகுதியையும் அவனிலிருந்து ஒரு பகுதியையும் சேர்த்து முழுமைபடுத்திவிடலாம் என்று கற்பனை செய்கிறோம். முழுமைக்கு அலையும் பேதை மனத்தின் சபலம் இது. மாறுபட்ட அடிப்படைகளை எப்படி இணைக்கமுடியும்?" 

நமக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றிய நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டே போகும்போது, தெரிந்தவரைப் பற்றிய உண்மைகளுக்கும், நமது நம்பிக்கைகளுக்கும் உள்ள தூரம் புறச்செயல்களாலும், போலித்தனங்களாலும் அதிகமாகிக்கொண்டே போய், உண்மை நம்பிக்கைக்கு எதிராகத் திரும்பும் தருணத்தில் நாம் பலமிழந்து போகிறோம். போக்கிடமில்லாது தவிக்கிறோம். உறவுகள் முறிவது இத்தருணங்களில்தான். நேரெதிராக நிற்கும் நிலைகளில் அவரவர் நம்பிக்கைகள் அவரவர்க்குச் சரியெனத் தோன்ற உண்மை நடுவே நின்று கைகொட்டிச் சிரிக்கிறது. ஆனால் வெவ்வேறு நிலைகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு உண்மையைப் பார்க்க முடிவதில்லை; விருப்பமுமில்லை. இது என்னுடைய சிந்தனை ஓட்டங்கள். சார்புநிலை எடுத்துக்கொண்ட பின் வேறு எந்த விவாதங்களாலும் எனது நம்பிக்கையைத் தகர்க்கமுடிவதில்லை. எனது வாழ்வின் கடந்த சம்பவங்களை எடுத்துக்கொண்டு பார்த்தால், எனது நம்பிக்கைக்கு எதிரான நிலையை எதிர்கொள்ள மறுத்து, நம்பிக்கையின் உச்சத்திலேயே வாசம் செய்திருக்கிறேன் என்றும், எதிர்நிலையின் ஆழத்திற்குச் சென்று உண்மையைக் கண்டுபிடித்து, என் நம்பிக்கையோ, எதிர் நிலையின் நம்பிக்கையோ மாற்ற எந்த அளவு முயற்சித்திருக்கிறேன் என்றும் என்னை நானே கேட்டுப்பார்த்தால் வெட்கமே மிஞ்சுகிறது. இவ்வுணர்வு என்னில் எதிர்நிலை கொண்டிருக்கும் உங்களுக்கும் தோன்றலாம். இருவருக்கும் இப்படித் தோன்றும் பட்சத்தில், நமது வெட்கச் சுவர்களை உடைத்து, நாமிருவரும் உண்மையைக் காண்பதற்கு வழிவகை செய்வது எது என்று நமது இருவருக்கும் தெரியாததால் வாய்மூடி மெளனியாக இருக்கவே பிரியப்படுகிறோம். எனது இந்தப் புரிந்துகொள்ளலை, சுந்தர ராமசாமி வேறுவிதமாக ஜே.ஜே.சில குறிப்புகளில் சொல்கிறார். அதைப் பார்ப்போம். 

"மனித மனத்தின் கூறுகள் மிகப்பயங்கரமான அடர்த்தி கொண்டவை. பெரிய பள்ளத்தாக்கு அது. ஆழம். இருட்டு. அடர்த்தி. கண்களுக்குப் புலப்படாத தொலைதூரங்கள். இவற்றை வகைப்படுத்தமுடியாத ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு நிமிஷமும் இந்த உலகை முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. அந்தரங்கமான காரணங்கள் பல இருக்க, வேறொரு வெளிப்படையான காரணம் சொல்லிக்கொண்டு, முகமூடிகள் அணிந்து, உடலை இழுத்துப் போர்த்திக்கொண்டு, இருட்சுவர்களில் சாய்ந்து, ஆயுதங்களை உடலுக்குள் மறைத்து, முகங்களில் புன்னகைகளுடன் பீறிடுகின்றன. கருத்துகளை உற்பத்தி செய்கின்றன; புணருகின்றன; குழந்தைகளை உற்பத்தி செய்கின்றன. இயந்திரங்களை உருவாக்குகின்றன. இவற்றின் ஆணைப்படி இயந்திரங்கள் இடையறாது அசைந்து கத்திக்கொண்டே இருக்கின்றன. சிக்கல்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. வியாக்கியானங்களைப் பிறப்பித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த அகன்ற இருட்காட்டுக்குள் ஒருவன் எப்படி நுழைந்து வெளியே வரமுடியும்? எல்லாவற்றையும் அறியவும், குறை நிறைகளைத் தொகுக்கவும் சாத்தியமா? எத்தனை நிலைகள்? எத்தனை எதிர் நிலைகள்? அதன்பின் எதிர்நிலைகளுக்குமான பதில்கள். பெரும் சுமடாய்ச் சுமந்துவிட்ட சிந்தனையின் அச்சுறுத்தலில் மனிதன் கடவுளின் கால்களில் சரணாகதி அடைந்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  பகுத்தறிவுக்குப்பின் எப்போதும் ஒரு நம்பிக்கை ஒளிந்துகொண்டிருக்கிறது. கொள்கை சார்ந்த முடிவுகளுக்குப்பின் தனி நபர் உறவுகள் பல்லை இளிக்கின்றன. ஸ்திதியின் உக்கிரம் மனிதனை வாட்டி வதைக்கிறது. பழைய நம்பிக்கைகள் கழன்று தெறிக்கின்றன. புது நம்பிக்கைகளை, அவற்றின் குறைகளைப் பார்க்க பயந்து, சூன்யத்திற்குள் விழப் பயந்து, முழுமையானதாகக் கற்பனை செய்துகொண்டு இழுத்துத் தழுவிக் கொள்கிறான் மனிதன். வாழ்க்கையில் உரசி தத்துவங்களின் முலாம் கழல்கிறது. வியாக்கியானங்கள் ஆரம்பிக்கின்றன. இட்டுக்கட்டும் வியாக்கியானங்கள். தத்துவத்திற்கு ஒட்டுப் பிளாஸ்திரிகள். மனிதனுடைய ஆசை, கனவு லட்சியங்கள். கடவுளை உருவமாகப் பார்க்க, நம்பிக்கையின் வடிவமாகப் பார்க்க, பகுத்தறிவுக்குள் பார்க்க மனிதனின் பிரயாசைகள். பாவம் மனிதன். சத்திய தரிசனங்களுக்கு வெற்றி தேடித்தரும் சிறு பொறுப்பும் வாழ்க்கைக்கு இல்லை. அது சுழன்று கொண்டிருக்கிறது. அதன் இச்சையும் சுழற்சியும் புத்திக்கு என்றேனும் மட்டுப்படுமோ?" 

தொடரும் 

***