Friday, November 11, 2005

வராக


பன்றியைப் பற்றி எழுதுவது உசிதமா என்று தெரியவில்லை. அருவருப்பாக இருந்தால் தயவுசெய்து அடுத்த அவதாரத்திற்குப் போய்விடுங்கள்.

கிராமம் என்றால் பன்றியில்லாமலா? நகரத்திலும் பன்றிகள் உண்டு- வேறு வடிவத்தில்- அது பற்றி இப்போது வேண்டாம். வத்திராயிருப்பில் ஏராளமான பன்றிகள் இருந்தன. ஊர் அமைப்பு நகரங்களைப் போல கச்சடாவாக இல்லை - ஒரே தெருவில், கோயிலும், பொதுக் கழிப்பறையும், ஒயின் ஷாப்பும், தெருவோரக் கடைகளும், குப்பைகளும், பள்ளியுமாக. ஊரினுள் நுழைந்ததும் சாவடி/கடைத்தெரு. கடைகள் மட்டுமே. அப்புறம் மூன்று அக்ரஹார தெருக்கள். அதற்குத் தாண்டியதும் மேலப் பாளையம்- தேவர் சமுதாயத்தினர் வாழும் பகுதி. அதற்கும் தாண்டி ஒதுக்குப்புறமாக குடிசைகளில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினர். அர்ச்சுனா நதிக் கரையை ஒட்டிய தெருவில் சலவைத் தொழிலாளர்கள். நான் இருந்தவரை அந்த அமைப்பு மாறாதிருந்தது (1980).

அக்ரஹாரங்களில் சைக்கிள் விட்டுக்கொண்டு மற்ற சமூகத்தினர் செல்ல மாட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் செருப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். பெரிய வெள்ளை வேட்டியில் துணிகளைத் திணித்து மூட்டை கட்டித் தோளில் சாய்த்து 'துணி இருக்கா?' என்று வண்ணான் ஒருவர் தினமும் வந்து கேட்டு வாங்கிச் செல்வார். 'நாம் துவைத்தால் மட்டும் ஏன் இவ்வளவு வெண்மை வருவதில்லை?' என்று யோசித்திருக்கிறேன்.

வீடுகள் அகலம் குறுகலாகவும், நீளமாகவும் இருக்கும். வீட்டுக்குப் பின்புறம் இன்னொரு வீடெல்லாம் அங்கு கிடையாது. ஒரு தெருவில் இட வலமாக இரு வரிசைகளில் வீடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். வலப்புற வரிசையின் பின்புறம் அடுத்த தெருவின் இடப்புற வரிசை தானே நகரங்களில் இருக்கும்? அங்கும் இருந்தன. ஆனால் இரண்டு வீடுகளுக்கும் நடுவே உள்ளே இடைவெளி அரைக் கிலோ மீட்டராவது இருக்கும்! இரண்டு வீடுகளின் கொல்லைப்புறங்களும் சந்திக்கும் இடம் வீட்டை விட்டு தொலைவில் இருக்கும் கழிவறைகள். அந்த இடைவெளியில் தான் பன்றிகள் உலவும். ஏனென்று சொல்ல வேண்டியதில்லை.

பன்றிகள் அதன் குட்டிகளுடன் கூட்டமாக உலவிக் கொண்டிருக்கும். எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி இல்லை. வீட்டுக் கொல்லைப் புறத்தில் குத்துக் காலிட்டு அமர வேண்டும். சற்றுத் தொலைவில் குப்பைமேனி செடிகளுக்கு மத்தியில், ஒரு பன்றி நம்மையே உற்றுப் பார்க்கும்- 'எப்போது முடிப்பாய்?' என்று கண்களில் கேள்வியுடன். சில முரட்டுப் பன்றிகள் காத்திருக்க பொறுமையின்றி, நம்மை மிரட்டி ஓடச்செய்துவிடும். அப்போதெல்லாம் கையில் ஒரு கழியோடு அமர வேண்டியிருக்கும். இரவென்றால் இன்னும் சிக்கல். கூட்டு ரங்கன் ஒருமுறை அவ்வாறு குப்பைச் செடிகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கையில், பின்புறம் ஏதோ உறுத்த முதலில் ஏதோ செடி என்று அசட்டையாக இருந்தான். உறுத்தலுடன் மூச்சு விடும் சத்தமும் கேட்கவே, திரும்பிப் பார்த்தவன், பிடரி சிலிர்த்து நின்ற பன்றியைப் பார்த்து அலறி அடித்துக்கொண்டு ஓடியதைப் பார்த்து நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.

குறவர்கள் என்றழைக்கப்பட்ட காக்கி சிராயும், சட்டையும், தலையில் துண்டு அணிந்த மனிதர்கள் பெரிய கேரியர் உள்ள சைக்கிளில் நான்கு கால்களும் வாயும் இறுகக் கட்டப்பட்ட பன்றிகளைக் கொண்டு செல்வதை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். பன்றிகள் பெருகிப் போன காலங்களில் அவர்கள் நீண்ட கழியின் முனையில் இரும்புக் கம்பி வளையங்களுடன் வந்து பன்றிகளைப் பிடிப்பார்கள். தப்பிக்க ஓடும் பன்றிகளின் வேகம் பிரமிக்க வைக்கும். அவர்களால் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. கூடவே ராஜபாளைய நாய்கள் வைத்திருப்பார்கள். அவைகள் பன்றிகளைத் துரத்தி பிடரியில் கவ்வி மடக்கி வீழ்த்தும். நாய்களையும் சில முரட்டுப் பன்றிகள் சிலிர்த்து நின்று எதிர்க்கும்.

பன்றிகளின் தொகையைக் குறைக்க அவர்கள் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் நெஞ்சை அதிர வைத்து இதயத்தை உலுக்கும். பொதுபொதுவென்று திரியும் குட்டிகளைத் தூக்கித் தரையில் அடித்துக் கொல்வார்கள். 'ம்க்க்க்' என்று ஒரே அலறலுடன் அவை மடியும் காட்சிகளைப் பார்த்து பல நாட்கள் உறக்கம் வராமல் தவித்திருக்கிறேன். ஆண் பன்றிகளை காயடித்து விடுவார்கள் - அனஸ்தீஷியா இல்லாமல்.

இந்த வேட்டை முடிந்த சில மாதங்களுக்கு கொல்லைப்புறம் வெறிச்சொடியிருக்கும். 'ம்ஈஈஈஈஈ ம்ஈஈஈஈஈ' என்று பாடிக்கொண்டே வரும் பன்றிக்குட்டிகள் காணாமல் போயிருக்கும். 'ம்ர்ர்ர் ம்ர்ர்ர்' என்று உறுமலுடன் உலவும் பன்றிகள் உயிர்பயத்தில் அடர்ந்திருந்த முட் செடிகளின் மறைவில் பதுங்கியிருக்கும்.

காட்டுப்பன்றிகளை மேற்குத்தொடர்ச்சிமலையில் இருக்கும் காட்டழகர் கோயிலுக்குச் செல்லும் வழியில் சில முறை பார்த்திருக்கிறேன். கடைவாயிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் கூரான பற்களுடன்.

***

நன்றி : மரத்தடி.காம்

No comments: