Thursday, November 17, 2005

புத்தா


'என்னடா புத்தர் மாதிரி ஒக்காந்துருக்கே' என்று டயலாக் கேட்காத நண்பர் குழாம் உண்டா? 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்று பரீட்சையில் பாசாகும் ஆசை(!)யோடு மனனம் செய்தது இன்னும் நினைவிருக்கிறது. 'கொழந்த குட்டிங்கள விட்டுட்டு நடுராத்திரில எந்திரிச்சி போயிட்டார்டா புத்தர்' என்று பேசிக்கொண்டு, 'போதி மரம் எங்கடா இருக்கு? எப்படி இருக்கும்? என்று கேட்டுக்கொண்டு, அலைந்தது ஒரு காலம்.

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம் இறுதி அத்தியாயத்தில், சூடாமணி விஹாரரத்தில் அருள்மொழிவர்மன் மற்ற கடவுள்களை ஒப்பிட்டு, எந்த வாக்கும் கொடுக்காமல், யாருக்கும் கடன்பட்டுச் செய்யாமல், மனித குல துன்பங்களுக்கு முடிவு தேட வேண்டும் என்ற ஒரே நோக்குடன் சம்சார சாகரத்தை உதறி சன்யாசம் மேற்கொண்ட புத்தரே மிகவும் உயர்ந்தவர் என்று படிக்கையில், ஒரு நிமிடம் மனதில் கற்பனை ஓடியது.

'நள்ளிரவு ஏ.ஸி-யின் மெல்லிய ரீங்காரத்தில், நாள்முழுதும் குழந்தைகளுக்காகவும் எனக்காகவும், வீட்டிற்காகவும் உழைத்துவிட்டு, அயர்ந்து தூங்கும் மனைவி ஒரு பக்கம்; இப்போதுதான் ஓரிரு வார்த்தைகள் கோர்வையாகப் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் இரண்டு வயது துர்கா என் நெஞ்சில் இடுங்கிக்கொண்டு தூங்க, மறுபக்கம் அக்ஷரா தூங்கும் முன் நான் சொன்ன கதையை கனவாகக் கண்டுகொண்டு கண்மூடிய முகத்தில் பாவனைகளும் புன்னகையும் காட்டிக்கொண்டு, காலை என்மேல் போட்டுக் கொண்டு தூங்க, அப்படியே எல்லாவற்றையும் விலக்கிவைத்து சட்டையை மாட்டிக்கொண்டு, சன்யாசம் போக முடியுமா?' என்று யோசித்தால் அடிவயிறு என்னவோ செய்தது.

காலையில் கமண்டலத்தில் தண்ணீர் அருந்துகையில், துர்காவின் முகம் வந்து 'அப்பா எங்கம்மா?' என கேட்க, அக்ஷரா 'டாடி ஆபிஸ் போயிருக்காரு, சாயங்காலம் வந்துருவாரு' என, மனைவி 'எங்கே போயிருப்பார் இவ்வளவு சீக்கிரம் எழுந்து?' என்று யோசித்து, என் செல்ஃபோனுக்கு எண்களை ஒற்றியதில், அது மேசை மேல் 'நான் இங்கிருக்கிறேன்' என்று கூக்குரலிட, கவலை கொள்ளத் தொடங்கியிருப்பார்கள். ஒரு மணி நேரம் கழித்து 'அப்பா வேணும்' என்று குழந்தைகள் அழத் தொடங்க, விழியோரத்தில் எட்டிப் பார்க்கும் கண்ணீருடன், ஊருக்குத் தொலைபேசி சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பி, திகிலுடன் இருக்கும் மனைவியின் முகம் நிழலாட, கமண்டலமாவது, காவியாவது என்று அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து, வீட்டுக்கு ஓடி வந்து விடமாட்டேன்?

கோழியின் சிறகில் ஒடுங்கிக்கொள்ளும் குஞ்சு போல், குடும்பத்தின் இதம் எப்போதும் வேண்டும். நான் புத்தர் இல்லை!

(தொடரும்...)

நன்றி: மரத்தடி.காம்

No comments: