Sunday, October 30, 2005

இங்கயும் வந்தாச்சு வந்தாஆஆஆச்சு...

நேத்து நைட்டு சரியான ஊத்து போல.. இன்னிக்குக் காலைல பாக்கும்போதே ஆகாசம் நல்ல 'மப்போட' தான் இருந்துச்சு. சரி பார்க்கலாம்னு மக்களோட ஒரு ட்ரைவ் போனா மொதல்ல லேசா தூற ஆரம்பிச்சு, இப்ப ஒரு மணி நேரமா 'பனி விழும் மலர் வனம்' தான். :)

குழந்தைகளுக்கு பனி விழறதைப் பாக்கறது இது முதல் அனுபவம். ஒரே குதூகலம்தான். ஸ்வெட்டரையும், ஜெர்க்கினையும், குல்லாவையும், கையுறைகளையும் போட்டுவிட்டுட்டு வெளில போய் வெளையாடுங்கன்னு அனுப்பிட்டேன். சின்னவ தலையைக் குனிஞ்சுக்கிட்டு பூ மாதிரி விழற பனியையே உத்து உத்து பிரமிப்பா பாத்துக்கிட்டு இருக்கா. பெரியவ தரைல விழறதை உதைச்சு ஐஸ் பறக்குதான்னு பாக்கறா. பனி தரையைத் தொட்டதும் தண்ணியாயிடுது. Wet Snow-வாம். இப்பக் கொஞ்ச நேரமா மரம் மட்டை எல்லாமும் நரைச்சுப் போன மாதிரி பனி மூட ஆரம்பிச்சுருக்கு.

இங்கிட்டெல்லாம் ஒரு அஞ்சு மாசத்துக்கு சூரியனை மறந்துடணுமாமே! வீட்டுக்காரம்மா இப்பவே அதை நெனச்சு நடுங்கறாங்க.

படங்களை இன்னும் கொஞ்ச நேரத்துல ராஜ பார்வைல பதியறேன்.

பாக்கலாம் - அமெரிக்கா!

அங்கே பூகம்பம், மழை, வெள்ளம்... இங்கே அடுத்தடுத்து மூணு சூறாவளிகள். இப்ப சத்தமேயில்லாம பனி பெஞ்சாலும், இந்த அந்தி இருளைப் பாக்கும்போது மனதோரத்துல என்னவோ கொஞ்சம் கவலை தொக்கிக்கிட்டு இருக்கறதை உதாசீனப் படுத்த முடியலை. என்னவோ தெரியலை. சின்ன வயசுலருந்தே இருள் சூழ்ந்து வரும் அந்திப் பொழுதைப் பார்த்தால் மனசுக்குள்ள இனம் புரியாத சோகம் இருக்கும். 'இன்னொரு நாளையும் தொலைத்து விட்டோம்'ங்கற குற்ற உணர்வான்னு தெரியலை.
கடவுள் நம்மைக் காப்பாராக!
***

1 comment:

rv said...

வந்தாச்சா? வாழ்த்துகள் சுந்தர்..

இங்க ஒரு நாள் பெஞ்சதுன்னு பதிவெல்லாம் போட்டேன். ஆனா, இப்ப பனியெல்லாம் காணாம போயிருச்சு! குளிரென்னவோ இருக்குது.

// 'இன்னொரு நாளையும் தொலைத்து விட்டோம்'ங்கற குற்ற உணர்வான்னு தெரியலை.//
இதில் நீங்க தனியாளில்லை. எனக்கும் தோணுவதுண்டு. :)