Monday, November 14, 2005

பரசுராம்

சிவப்பிந்தியர்கள் கோடரியைக் கொண்டு முஸ்தாங்குப் பள்ளத்தாக்குக் குதிரைகள் மீதேறிப் புயலென வந்து தாக்குவார்களாம். அம்புகளும் கோடரிகளும் கொண்டு வேட்டையாடி ஜீவித்திருந்தவர்களை வந்தேறிகள் துப்பாக்கியால் பொட் பொட்டென்று எளிதாகப் போட்டுத்தள்ளிவிட்டு, இப்போது பெரும் வல்லரசாக மற்ற நாடுகளைப் போட்டுத்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்மூரில் கோடரியைப் பேச்சுவழக்கில் 'கோடாலி' என்று குறிப்பிடுகிறோம்.

கோடாலியால் மரம் வெட்டி விறகு பிளப்பது ஒரு தனிக்கலை.


குறுக்காக போடப்பட்ட மரத்துண்டின் மீது இன்னொரு துண்டை நெடுக்காக இட்டு; கால் கட்டைவிரலால் அழுத்திக்கொண்டு, ஓங்கி ஒரே போடு. மரத்துண்டு இரண்டாகப் பிளக்க வேண்டும். குறி தப்பினால் இடமோ வலமோ வழுக்கிக்கொண்டு கோடாலி விலகிப்போகும். கால் கட்டைவிரல் சேதமடையும் வாய்ப்பு மிகவும் அதிகம். தவறான இடத்தில் கோடாலியை இறக்கினால், கட்டை தெறித்து நம்மையே தாக்கும்.

வீட்டில் விறகடுப்புதான் சமையலுக்கு. மரக்கடைக்குச் சென்று விறகுகளை இரண்டு அல்லது மூன்று 'தூக்கு' வாங்கிவர வேண்டும் (வாழையிலையை 'பூட்டு' கணக்கில் வாங்க வேண்டும். அடடா! இந்த அளவைகளைப் பற்றி இராம.கி. எழுதியிருக்கிறாரா என்று பார்க்கவேண்டும்!) பணமில்லையென்றால், வீட்டில் கொல்லைப்புறத்தில் இருக்கும் மரங்களில் ஏதாவது ஒன்று பலி கொடுக்கப்படும். அல்லது அவற்றின் சில கிளைகள் வெட்டப்படும்.

மரவெட்டிகள் கோடாலி கொண்டு அனாயசமாக விறகு வெட்டுவார்கள். கோடாலியின் மரக் கைப்பிடி லூசாகிவிடும் தருணங்களில் ஓங்கி இறக்கும்போது கோடாலி தனியே எகிறிப்போய் தூர விழும். அதை மீண்டும் கைப்பிடியில் இணைத்து, இறுக்கமாக இருப்பதற்காகச் சில சுள்ளிகளையும் செருகி வைப்பார்கள். அப்போதுதான் வெட்டிய மரங்கள் என்றால் கோடாலியில் துண்டாக்கும்போது பச்சை விறகு பிளந்துகொள்ளாமல் சிக்கலாக இருக்கும். காய்ந்த மரத்துண்டுகளைப் பிளப்பது எளிது. ஆனால் எகிறும் அபாயம் அதிகம்.


கோடாலியை தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, கைப்பிடிக் கழி மார்பில் சாய்ந்திருக்க, தலையில் துண்டு, பஞ்சகச்சம் ஸ்டைல் வேட்டியுடன் கைகளை வீசிக் கொண்டு சிந்தனையுடன் நடந்து செல்லும் பரசுராமர்களை நிறையப் பார்த்திருக்கிறேன்- ஒட்டிய வயிறுடன்.

***

1 comment:

Thangamani said...

நான் விறகு வாங்கிய காலத்தில் 'எடை' என்ற அளவு இருந்தது. ஒரு எடை=20கிலோ.