Friday, November 18, 2005

கிருஷ்ண


வாழ்க்கையில் அனுதினமும் எத்தனை எத்தனை கிருஷ்ணர்களைப் பார்க்கிறோம். தூக்கிக் கொஞ்சியிருக்கிறோம். சேட்டைகளைக் கண்டு மகிழ்ந்திருக்கிறோம்.

கல்லூரியிலும் சில தோழர்கள் கிருஷ்ண லீலா வினோதங்களை நடத்தும்போது கூட இருந்து கண்டு அதிசயித்திருக்கிறோம். 'அவனுக்கு மச்சம்டா' என்று சக நண்பர்கள் பொறாமையுடன் கூறுவதையும் கண்டு சிரித்திருக்கிறோம். 'அது எப்பிடிரா ஒங்கிட்ட மட்டும் வந்து பேசறாளுங்க?' என்று தலையைத் தட்டிக் கேட்டால், சிரித்து மழுப்பிவிட்டுப் போகும் கிருஷ்ணர்கள் எத்தனை பேர்!

என் மகள் அக்ஷராவைக் 'குட்டிக் கிருஷ்ணி' என்று எல்லோரும் அழைத்தார்கள். இப்போது அவள் தங்கை துர்கா அந்தப் பெயரைத் தட்டிக்கொண்டு போய்விட்டாள். எத்தனை எத்தனை சேட்டைகள்! சாப்பிடும்போது வழக்கமாக அவளுக்கு தட்டில் சோறு இட்டுவிட்டு அதன் மீது கொஞ்சம் நெய் ஊற்ற வேண்டும். பிஞ்சுக் கைகளால் அதை ஒரு மாதிரி பிசைந்துவிட்டு இறைத்துச் சாப்பிடுவாள். ஒரு நாள் சாப்பிட அமர்ந்ததும் என் மனைவி மறதியாக முதலில் நெய்யை ஊற்றிவிட்டு அதன்மேல் சோறிட்டார்கள். துர்கா வந்து அமர்ந்ததும் நெய்யைக் காணாது கேட்டதில், 'அடில இருக்கு பாரு' என்று சொன்னதும், டக்கென்று மேசையின் கீழ் குனிந்து தேடினாளே பார்க்கலாம்! ஸ்ரீரங்கம் கோயிலில் யானைமேல் ஏறிக்கொள்ளச் சொன்னதற்கு 'அய்ய.. இது கருப்பு யானை.. என் ட்ரெஸ்லாம் அழுக்காயிடும்.. வெள்ளை யானை கொண்டுவாங்க தாத்தா' என்று என் தந்தையிடம் மறுத்துச் சொன்னது; 'வானம் என்ன வர்ணம்?' என்று ஒரு அமாவாசை இரவில் கேட்டதற்கு 'இப்ப இருட்டா இருக்கு.. நாளைக்கு காலைல சூரியன் வந்ததும் பாத்துட்டுச் சொல்லவா?' என்று கேட்டது; எவ்வளவோ சேட்டைகள்.

தொலைக்காட்சியின் தொலை இயக்கியைக் காணாது வீடுமுழுதும் தேடியதில் ஒரு வாரம் கழித்து அதைத் நீர் நிரம்பியிருந்த குடத்தில் கண்டுபிடித்தோம். வழக்கமாக பள்ளிவிட்டு வந்ததும், சமையலறையில் தட்டின்மீது ஒரு வேகவைத்த முட்டையை வைத்திருப்போம். அக்ஷராவிடம் அதை எடுத்துக்கொள்ளச் சொல்வதும், அவள் அதை முன்னறைக்குக் கொண்டுவந்து உட்கார்ந்து கொள்வதும், முட்டையின் ஓட்டை நீக்கித் தருவதும் என் மனைவியின் அன்றாட அலுவல்களில் ஒன்று. அன்றும் முன்னறையில் உட்கார்ந்து கொண்டு, அக்ஷரா கொண்டுவந்த முட்டையின் லேசான சில்லிப்பை உணராது உடைத்ததில், வேகாத முட்டை சிந்தி வீணாகியது. 'ஒரு வேளை அடுப்பை பற்றவைக்கவேயில்லையா.. சே சே அப்படி இருக்காது' என்று குழம்பிப் போய் கேட்டதில் நிதானமாக பதில் வந்தது. 'அந்த முட்டை சூடா இருக்கும்மா. அதான் ப்ரிட்ஜில இருந்து ஜில் முட்டை கொண்டு வந்தேன்'.

நான் பள்ளியில் படிக்கும்போது பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு 'தா' உச்சரிக்க வரவில்லை என்று அம்மா சொன்னபோது என்னால் நம்பமுடியவில்லை. என் குழந்தைப் பருவத்தில் எனக்கும் சக குழந்தைகளுக்கும் அப்படிப்பட்ட பிரச்சினை இருந்ததாக நினைவில்லை. பக்கத்து வீட்டுக்குப் போய் அதனிடம் ஒரு உரையாடல்:

'இது யாரு?'

'எங்க காக்கா'

'இந்த குட்டிப் பையன்?'

'என் கம்பி'

'அவங்க?'

'அக்கை'

'ஒங்க ஊரு பேரென்ன?'

'கிருச்சி'

'எங்க சொல்லு பார்க்கலாம். தா தை தத்தத்தை'

'கா கை கக்ககை'அதற்குமேல் அடக்கமுடியாமல் சிரித்துவிட்டு, அதைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு வந்தேன்.

சுருளிராஜன் படமொன்றில் ஒரு பையனுக்கு 'ச'வை உச்சரிக்க வராது. அவர் பையனின் பெற்றோரிடம் 'ஒங்க பையனுக்குச் சாவே வராதா?' என்று கேட்டு நன்கு திட்டு வாங்குவார்!

(தொடரும்...)

2 comments:

குமரன் (Kumaran) said...

மிக நன்றாய் இருக்கிறது சுந்தர் இந்த 'க்ருஷ்ண' பதிப்பு. எங்கள் வீட்டிலும் ஒரு குட்டி கிருஷ்ணி இருக்கிறாள். அதனால் நன்கு ரசித்துப் படிக்க முடிந்தது.

Sundar Padmanaban said...

நன்றி குமரன்.

எல்லாக் குழந்தைகளும் கிருஷ்ணன் மாதிரி சேட்டைக் குட்டிகள்தான்! :)