Sunday, December 18, 2005

* அந்தம் * # 11



* அந்தம் * # 11

அது ஜனவரி 2.

மாலை கிளம்புமுன் நிலா வந்து 'நாளைல இருந்து நா லீவு. டூ வீக்ஸ்' என்றாள்.

'என்ன திடீர்னு?' என்று கேட்டுவிட்டு சட்டெனப் புரிந்து 'ஓ ராகவன் வரார்ல? கன்ஃபர்ம் ஆயிடுச்சா?' என்றேன்.

'ஆமா. அவன் பேரன்ட்ஸ் பழவந்தாங்கல்ல இருக்காங்க. அங்கதான் இருப்பான். நான் நாளைக்கு நைட்டு மெட்ராஸூக்குக் கிளம்பறேன். நாளன்னிக்கு நைட் ராகவன் மெட்ராஸ் வரான். அங்க இருந்துட்டு ரெண்டு வாரம் கழிச்சு ரெண்டு பேரும் இங்க வரோம். ஒரு மாசம் கழிச்சு அவன் கெளம்பறான்'

'ம்ம் சரி' என்று நான் தலைகுனிந்து கொண்டேன்.

'நான் மட்டும் ஆசையோட போறேன்னு நினைக்கறயா?' என்று என் முகத்தை நிமிர்த்தி கண்களை ஊடுருவ 'இல்லை' என்றேன்.

'போகாதேன்னு சொல்லு, போ மாட்டேன்'

'போகாதே..'

'போகணுமே.. வேற வழியே இல்லையே. ஒனக்கு ஏதாச்சும் தோணுதா?' என்று குழந்தை போல் கேட்டதும் மனதை கவலை சூழ்ந்து கொண்டது. மனம் முழுவதும் மந்திரம் போல் அவள் பெயரை மானசீகமாக உச்சாடனம் செய்து கொண்டிருக்க, நான் கூண்டிலிருந்து அவளை விடுவிக்க வழி தேடினேன். நான் செய்து கொண்டிருக்கும் காரியத்தின் விளைவுகள் சட்டென உறைத்தது. நிலா- மணமானவள்- என் சக பணியாளி. நானே இப்படித் தடம் பிறழலாமா? என்று என்னைக் கேட்ட மனசாட்சியை 'போடா பொறம்போக்கு, ஒனக்கு என்ன தெரியும்?' என்று திட்டினேன்.

'அதைக் கூண்டுன்னு ஏன் நினைக்கறே?'

'போடா கூமுட்டை. ஐ லவ் ஹர். அவ என்னோட பொண்டாட்டி. எங்க ரெண்டு பேருக்கும் அப்பயே கல்யாணம் ஆயிருச்சி'

'அவ ஒழுங்கா இருந்தா புருஷனோட. ஒனக்குத்தான் காமப் பித்து. அதான் பின்னாடி அலயுற. அவ சுலபமா பழகுறத பாத்து வந்துருவான்னு கணக்கு போட்டுட்ட. அவ தனிமைய பயன்படுத்திக்கப் பாக்குற. ஒரு தடவை படுத்து எழுந்துட்டேன்னா எல்லாம் சட்டுன்னு விலகிரும், சூரியன் பார்த்த மஞ்சு மாதிரி. எல்லாம் ப்ரேமை. இளவட்டத் துள்ளல்'

'ஷட் அப்'

'அரிப்பு'

'கெட் லாஸ்ட்'. எனக்குச் சினம் தலைக்கேறியது. தலையை உலுக்கிக்கொள்ள நிலா கவலையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என் சிந்தனையின் தீவிரத்தை என்னால் தாங்க முடியவில்லை. மூச்சு வேகமானது.

'என்னாச்சுடா?'

'க்ரைஸிஸ் மேனேஜ்மென்ட். ஒண்ணும் இல்ல விடு'

'எனக்கு போகப் பிடிக்கலை'

'போகாதே. என்னோட வா. என் சொந்தூருக்குப் போயிரலாம். திருஈய்ங்கோய் மலைக்குப் பின்னாடி சின்ன கிராமம். ஒரு பய கண்டுபிடிக்க முடியாது. தேவைன்னா மலைக்கு மேல கூட போயிக்கலாம்'

'ராகவன் கண்டுபிடிச்சுருவான். என்ன தான் மொதல்ல கொல்வான். அப்புறம் ஒன்ன'

'என்னைக் கொல்லட்டும். ஆனா ஒன்ன தொட விட மாட்டேன்'

'நா ஒன்ன சந்திருச்சுருக்கவே கூடாது'

'நோ அப்படி சொல்லாதே. நாந்தான் ஒன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேன்'

நிலா கோபத்துடன் 'யூ இடியட். டோன்ட் யூ லவ் மீ?'

'யெஸ். ரொம்ம்ம்ப'

'என்ன மறக்கச் சொன்னா மறந்துடுவியா?'

'செத்துருவேன் நிலா'

'தென் ஷட் அப்'

'........'

அங்கே கனத்த அமைதி நிலவியது, மனங்களில் சூறாவளியுடன்.

'நாளைக்கு எந்த டிரெயின்?'

'முத்து நகர். எட்டரை மணிக்கு'

'நானும் வரேன்'

'வழியனுப்பவா? வேண்டாம்'

'இல்லை மெட்ராஸூக்கு வரேன்'

'ச். ஒனக்கு பைத்தியமா? வேணாம். அப்பா கூட வரார்'

'என்னால ஒன்ன பாக்காம இருக்க முடியாது நிலா. நானும் வரேன்'

'என்னாலயும் தான். ஆனா நீ வராதே. ஒனக்கு கஷ்டம் வந்தா என்னால தாங்க முடியாது'

'என்னாலயும் ஒனக்கு கஷ்டம் வந்தா தாங்க முடியாது. நா ஒங்கூட இருக்கேன் நிலா'

அவள் விரக்தியுடன் சிரித்து 'லெட்ஸ் ஸ்டாப் ட்ரீமிங். ஓ.கே? நான் நாளைக்கு போகணும். அதான் நிஜம். நம்ம என்ன பண்ணாலும் மாத்த முடியாது. கீப் கொயட். ஒரு மாசம் கழிச்சு அவன் போனதும் நம்ம டிஸ்கஸ் பண்ணலாம். சரியா?' என்றாள்.

எனக்கு வேறு வழியில்லை என்று தெரிந்தும், மனம் கேட்கவில்லை. தவித்தேன். மறுநாள் இரவு ரயில் நிலைய முருகன் இட்லிக் கடையில் பார்சல் வாங்கி அவள் அப்பாவிடம் கொடுக்க, அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. டிரெயின் கிளம்ப இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்க, உள்ளே சென்று, அவர்களருகில் அமர்ந்து பொதுவாக உரையாடிக் கொண்டிருந்தோம்.

'இந்த தடவயாவது மருமகப் பிள்ளைட்ட நம்மூர்லயே இருந்துருங்கன்னு சொல்லணும். எத்தினி நாளைக்கு வருசத்துக்கு ஒரு மாசக் கணக்குல வாழறது? எனக்கும் பேரம் பேத்தி பாக்கணும்னு இருக்காதா? என்ன சொல்றீங்க தம்பி?'

நான் மையமாகச் சிரித்து வைத்தேன். 'பேரம்பேத்திதானே? பாத்துட்டா போச்சு'

'தம்பி சொல்றத கேட்டுக்கம்மா. இந்த வருசமாச்சும்..' என்றவரை மறித்து 'அப்பா. கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? இப்போ கொழந்தைக்கு என்ன அவசரம்?'

'இப்படித்தான் தம்பி. நா எப்போ சொன்னாலும் என் வாய அடச்சுப்புடுறா. என்ன ஒண்ணு, இத்தன நாள் இவளுக்கு மருமவன் ஊர்ல இல்லாதப்போ மொகத்துல சிரிப்பே இருக்காது. ஒங்க கம்பெனிக்கு வந்தப்புறம்தான் அவள நா ரொம்ப சந்தோஷமா பாக்குறேன். ஒங்கள மாதிரி நல்லவங்க கூட இருக்குறது எனக்கு நிம்மதி தம்பி' என்றதில் நான் இரட்டை அர்த்தம் கற்பனை செய்து கொண்டு மகிழ்ந்துகொண்டேன்.

நிலாவும் என்னைப் பார்த்து புன்னகைத்து 'ஆனா இந்தாளு ரொம்ப மோசம்பா' என்றாள்.

'ச்.. அப்படியெல்லாம் பேசக்கூடாது. அது நம்ம வீட்டுத் தம்பி. அவர அப்படிச் சொல்லாதம்மா' என்றார்.

'ஏதேது விட்டா என்ன வெளில போச்சொல்லிருவீங்க போல இருக்கு?' என்றாள் செல்லக் கோபத்துடன்.

'அதான் என்னிக்காவது ஒரு நாளைக்கு மாப்பிள்ளையோட போப்போறியே! தம்பி நம்ம வீட்டுல கூட இருந்துக்கலாம்' என்றார்.

கீழே இறங்கிக்கொண்டு, இருள் ப்ளாட்பாரத்தில் சன்னலை ஒட்டி நின்று நிலாவையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் கிளம்பும் சமயத்தில் கையை வெளியே நீட்ட, நான் அந்த மலரைப் பற்றி முத்தமிட்டேன். அவள் கையாட்டல் மறைந்து, ரயிலின் கடைசிப் பெட்டியின் சிவப்புப் புள்ளியும் இருளில் தேய்ந்து மறைய, நான் நெடுநேரம் அது சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனம் என்னை விட்டுச் சென்றது போல் உணர்ந்தேன். அடுத்த பதினைந்து நாட்கள் எல்லாமே அர்த்தமில்லாமல் மகா அறுவையாக இருந்தது. நான் ஒருமுறை கொச்சினும் ஒரு முறை திருவனந்தபுரமும் செல்ல நேர்ந்தது. சொனாட்டாவின் வரலாற்றில் இவ்வளவு வேகமான ராப்பிட் இம்ளிமன்டேஷன் நடந்ததில்லை என்று கெளதமின் மின்னஞ்சலைக் காட்டி குமார் கை குலுக்கி 'நீ மனுஷனே இல்லடா. க்ரேட். கலக்கிட்ட. கொச்சின் உன்னி ஃபோன் பண்ணான். சந்தோஷமா நஷ்டக் கணக்கு ப்ரிண்ட் எடுத்து கோவிந்துக்கு அனுப்ச்சி, சிஸ்டம் நல்லா இருக்குன்னு ஆனந்த கண்ணீர் விட்டு அழுதான்' என்றார். ட்ரெயினிங்கின் போது, அதுவரை கருப்பு வெள்ளை வாழ்க்கை நடத்திய ஆட்கள், வின்டோஸில் அட்டகாசமான வர்ணங்களுடன் ஸ்காலாவைப் பார்த்ததும், காதலாகி மானிட்டரை அணைத்துக் கொண்டதையும், முதன் முறையாக எலி பிடித்ததையும் சொல்ல, அறை அதிர சிரித்தார்கள்.

'யூ நோ ஜார்ஜ்? இவன் டிரெயினிங் அப்ப move the mouse to the right top corner of the screen and click the 'x' to close the window-ன்னு சொல்லிருக்கான். ஒரு யூஸர் என்ன பண்ணான்னு தெரியுமா? மெளஸைத் தூக்கி நெசமாவே மானிட்டர் வலதோர மூலை மேல வச்சு அமிக்கிட்டு ஒண்ணும் ஆலயேன்னு கேட்டிருக்கான்' என்று சிரிப்பினூடே சொல்ல ஜார்ஜ் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறி ஐந்து நிமிடங்கள் சிரித்துவிட்டு கண்ணில் நீருடன் திரும்ப வந்து அமர்ந்தார். எனக்கு அசுவாரசியமாக இருந்தது.

அங்கமாலி ப்ளான்ட் மேனேஜர் ரகசியமாக என்னிடம் 'யாரோ ஆஞ்சலீனாவாமே. கம்ப்யூட்டர்ல அவளோட படம்லாம் கெடைக்கும்னு சொல்றாளே. எங்கன்னு தெரியுமோ?' என்று கேட்டதையும் ஜார்ஜிடம் கேட்டுக்கொண்டு அனுப்புகிறேன் என்று சொன்னதையும் சொல்லவில்லை. சொன்னால், ஜார்ஜுக்கு நெஞ்சுவலி வருமென்று தெரியும்- மேலும் சிரித்து. ப்ளான்ட் மேனேஜருக்கு ஐம்பதுக்கு மேல் ஆகி, ஆஞ்சலீனா ஜோலி வயதில் பெண் இருக்கிறாள்.

இப்படியான ஒரு அவசரக் காலையில் அலுவலக வேலையில் முழ்கியிருக்க, தோளில் கை விழுந்ததும் திரும்பப்பார்த்து அசந்துபோனேன். பிளேடு விளம்பரத்துக்கு வரும் மாடல் மாதிரி, அகன்ற தோள்களுடனும், ஆறடி உயரத்தில், மழுமழு பச்சைத் தாடையுடன், ரோஸ் உதட்டுப் புன்னகையுடன் என்னைப் பார்த்து அந்த ஆள் 'நைஸ் டு மீட் யூ. ஐயாம் ராகவன்' என்றதும் நான் திடுக்கிட்டேன். அதற்குள் இரண்டு வாரங்கள் ஓடிவிட்டதா என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவன் பரந்த முதுகின் பின்னிருந்து நிலா வெளிப்பட்டு 'ஹாய். செளக்கியமா?' என்றாள். என்னிடம் வந்து என் கையை பிடித்துக் குலுக்கி விட்டு ராகவனைப் பார்த்து 'ஹி இஸ் த ஒன் ஐ டாக்டு டு யூ' என, எனக்குக் குழப்பமாக இருந்தது. என்ன சொல்லியிருப்பாள்? ராகவன் சினேகத்துடன் கை நீட்ட, பற்றிக் குலுக்கினேன். எங்கள் உள்ளங் கைகளுக்குள் ஒரு கல் இருந்திருந்தால் பொடியாகியிருக்கும்.

'ஜிம் போறீங்களா' என்று கேட்டுவிட்டுப் புன்னகைத்தான். 'இல்ல எப்பயோ போனது' என்றேன். அவர்கள் குமாரின் அறைக்குள் செல்ல நான் திரும்பி மானிட்டரில் ஆழ்ந்தேன். மனம் எங்கோ ஊசலாடியது. பத்து நிமிடங்கள் கழித்து மறுபடியும் தோள் தட்டப்பட, திரும்பினால் இம்முறை நிலா. ராகவன் குமாரின் அறைக்குள் இன்னும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்க, 'எப்படி இருக்கே?' என்றாள். 'இருக்கேன். நீ?'

'ம்ம். ஐ மிஸ்டு யூ'

'மீ டூ'

'ஒங்கிட்ட நிறைய பேசணும்.'

'நானும்தான்'

'ஆபிஸ்ல எவ்ளோ நேரம் இருப்பே?'

'எவ்ளோ நேரம் இருக்கணும்?' என்று கேட்ட என்னைக் கனிவுடன் பார்த்தாள். அவள் மனம் துடித்ததை உணர முடிந்தது.

'நான் பத்து மணி வாக்குல ஃபோன் பண்ணவா?'

'சரி. ஆனா வீட்டுல இருந்து எப்படி பண்ணுவ? ராகவன் இருப்பாரே?'

'அவனும் அப்பாவும் ஒம்பதரைக்கு அண்ணா நகர் ரிலேட்டிவ் வீட்டுக்கு போவாங்க. நான் வர்லைன்னுட்டேன். வர்றதுக்கு ரெண்டு மணியாயிடும். பத்து மணிக்கு ஒனக்கு நான் ஃபோன் பண்றேன்'

'வேண்டாம். நீ பண்ணாதே. நான் பண்றேன்'

'சரி'ராகவன் குமாரிடம் சிரித்துக்கொண்டே வெளியே வந்து கைகுலுக்கி விடைபெற்று, என்னைப் பார்த்து கையசைத்துவிட்டு நிலாவின் கையைப் பற்றி கிட்டத்தட்ட இழுத்துச் செல்ல, எனக்கு வலித்தது. அவள் திரும்பி என்னைப் பார்த்து வருகிறேன் என்று தலையாட்டிச் சென்றாள்.

குமார் வந்து தட்டி 'என்னப்பா. ஒன் வில்லன் வந்தாச்சு போலருக்கே?'

'குமார் ப்ளீஸ்.. போதும்..'அவர் என் தோளை அணைத்துக்கொண்டு 'ஸாரி. தப்பா நெனைக்காதேடா. ஐயாம் வொரீட் அபவுட் யூ. என்னோட சிறந்த தோழனை இழக்க விரும்பல. அதான். கொஞ்சம் யோசிப்பா. இந்த நிலா இல்லைன்னா இன்னொரு நிலா' என, நான் மெளனித்தேன்.

'ஒனக்கு ஏதாவது உதவி தேவைன்னா கேளு. எதா இருந்தாலும்' என்று திரும்பச் செல்ல நான் எட்டு மணிவரையில் இருந்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியேறி, ரோட்கிங்கை உதைத்துத் தேனி ரோடில் செலுத்தி, அடுத்த அரைமணி நேரத்தில் நிலா வீட்டைக் கடந்து சில நூறு மீட்டர் தள்ளி இருந்த டீக்கடையில் நிறுத்திவிட்டு, கடைக்கு வெளியே இருந்த மரப்பலகையில், மொய்த்த காட்டுக் கொசுக்களை விரட்டாமல் பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்தேன். கடையை ஒட்டியே ஒரு சிறு ஷெட்டில் மேலும் சில பெஞ்சுகள் போடப் பட்டிருக்க, ஈரம் தோய்ந்து ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்தன. சாலையோர மினி மோட்டல் போலும்.

'என்ன சாப்பிடுறீங்க தம்பி? சூடா பொரோட்டா சால்னா தரட்டுங்களா?'

'வேண்டாம்ணே. செலமான்ல இருந்து வர்ரேன். இன்னும் போவணும். ஒரு டீ மட்டும் தாங்க' என்றதும் 'அம்புட்டு தொல வண்டிலயா வந்தீங்க? பஸ்ஸூல வந்துருக்கலாம்ல?' என்றார்.

'பஸ் டைரக்ட் கெடயாதுண்ணே. அடச்சுக்கிட்டு வரணும். இதான் வசதி'

'அது சரி. எங்க போறிங்க? தேனிக்கா?'

'இல்ல கரும்பட்டிக்குண்ணே'

'கரும்பட்டி இதேன். யாரப்பாக்கணும்?'

'சாமிநாதன்னு.. யுனிவர்சிடில வாஜ்ஜாரா இருந்தார்ல. தெரியுமா?'

'ஓ ஐயாவ கேக்குறீங்களா? அவரு வீடு அங்கிட்டுல்ல இருக்கு' என்று நான் வந்த வழியைக் கைகாட்டி நிலாவின் வீட்டைக் காட்டினார். 'அதோ மஞ்ச லைட் எரியுதுல்ல? ரோட்ட ஒட்டி.. அதேன் அவுரு வீடு'

'அப்படியா. ரொம்ப நன்றிண்ணே. நல்ல வேளை. ஒங்க கடைல நிறுத்துனேன். இல்லாட்டி தேனிக்குல்ல போயிருப்பேன்?' என்றதை அவர் மகிழ்ச்சியுடன் ஆமோதித்து 'புதுப்பாலு போட்ருக்கேன். ஒரு அஞ்சு நிமிசம் இருக்கறீங்களா? புதுத்தூளு போட்டு இஸ்ட்ராங்கா ஒரு டீ தாரேன்' என்று வேலையில் கவனமானார்.


ஒன்பதரை மணியளவில் வெள்ளை அம்பாஸடர் வந்து நிற்க, நிலாவின் வீட்டிலிருந்து ராகவனும், அவள் தந்தையும் ஏறிக்கொண்டு சென்றது நிழலாகத் தெரிய, நான் டீயையும் சில பிஸ்கெட்டுகளையும் முடித்திருந்தேன். கடைக்காரரிடம் நன்றி சொல்லி பணம் கொடுத்துவிட்டு, வண்டியைக் கிளப்பி நிலா வீட்டின்முன் நிறுத்த, நிலாவின் முகம் ஜன்னலில் தெரிந்தது. நான் ஒரு புன்னகையுடன் காத்திருக்க, கதவு திறந்து நிலா 'ஓ மை காட். ஓ மை காட். உள்ள வா' என்று படபடத்து உள்ளே வந்ததும் 'ஒனக்கு எவ்ளோ தைரியம்? ஐ கான்ட் பிலீவ் திஸ்' என்றாள் புன்னகைத்து.

அவளுடன் இருப்பதே சுகம் என்பதால் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவளால் இன்னும் நான் அங்கிருப்பதை நம்பமுடியாமல் வெட்கமும் பயமும் கலந்து நிலைகொள்ளாமல் இருந்தாள். வீட்டில் சந்தடி சாக்கில் அடிக்கடி அவளை முத்தமிட 'ஸ்... பாட்டி இருக்காங்க.. நீ இவ்ளோ தைரியசாலின்னு தெரியாம போச்சே' என்று சிணுங்கினாள். பாட்டியை விழுந்து வணங்கிவிட்டு, அவருக்கு பிடித்த பழைய பாடல் ஒன்றைப் பாடி; அவர் அணைப்பைப் பெற்றுவிட்டு, நிலாவிடம் பனிரெண்டு மணிக்கு விடைபெற்றுக் கிளம்பினேன்.

தொடரும்...

No comments: