Thursday, December 08, 2005

சில குறிப்புகள் - சுத்தம் பார்க்கின்


அதிகாலையில் பார்வைக்குத் தட்டுப்படுவார்கள் அவர்கள். வீடுகளின் கொல்லைப்புறத்தில் அமைந்திருக்கும் எடுப்புக் கழிவறைகளருகே அவர்கள் பன்றிகளோடு உலவிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தெருவுக்குள் அவர்கள் காக்கி ட்ரவுசர், சட்டையுடனும், தலையில் முண்டாசுடனும், கையில் நீண்ட கழியுடனும் வருவார்கள். கழியின் நுனியில் முக்கோண வடிவில் பிரம்புச் சுள்ளிகள் பின்னப் பட்டிக்கும். மண்ணை லேசாகக் கூட்டி மலத்தின் மீது மூடி ஆங்காங்கே குவித்து வைத்துக் கொண்டே செல்ல, பின்னால் தொடரும் பெண்மணி தகரத்தினாலான- கொத்தனார் சிமிண்ட் பூசும் கரண்டி போலிருக்கும்- கரண்டியால் மண் மேடுகளைச் சுரண்டியெடுத்துப் பிரம்புக் கூடையில் அள்ளிப் போட்டு, தெருக்கோடியில் நிற்கும் டயர் சக்கர மாட்டு வண்டியின் முதுகிலிருக்கும் தொட்டியில் போடுவார். சூரியன் முழு வீச்சில் எழுவதற்குள் சுத்தப்படுத்தும் பணி முடிந்திருக்கும். கொல்லைப்புறத்தைச் சுத்தப் படுத்தும் பணியைப் பெரும்பாலும் பன்றிகளே செய்துவிடும். இவர்களும் தொடர்ந்து 'எடுத்து'ச் சுத்தப் படுத்திக் கொண்டேயிருப்பார்கள்- தினமும்.

கொல்லைப்புறத்திற்கு இரவில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்கப் பார்ப்பேன். அப்படியும் குளிர் இரவுகளில் குறைந்தது ஒரு முறையாவது செல்லவேண்டியிருக்கும். கையில் முட்டைவடிவில் கண்ணாடி பொருத்திய எண்ணை விளக்கை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் செம்பில் நீருடன் மெதுவாகச் செல்லவேண்டும். சுவர்க் கோழி, சில் வண்டுகளின் ரீங்காரம், தவளைச் சத்தம் இடைவிடாது கேட்க, இருளில் நடக்கையில் தூரத்தில் நாய் ஒன்று ஊளையிட்டு இயற்கை உபாதையை விரைவு படுத்தும். கொல்லைப்புறத்திலிருந்த பிரம்மாண்டமான புளியமரம் ஊதல் காற்றில் தலைவிரித்தாடும் பேய் போன்று காட்சியளிக்கும். யாரோ பின்னால் வருவது போன்ற பிரமையோடு என் நிழலே பயமுறுத்தும்.

செடிகளூடே சென்று அமர்கையில் அடிவயிற்றைக் கிலி கவ்வும். பேய்க் கதைகள் நினைவுக்கு வந்து புளியமரக் கிளைகளில் அவை இறங்கி வருகிறதா என்று பார்ப்பேன். கிணற்றிலிருந்து வெள்ளை நிற ஆவிகள் எழுந்து வருகிறதா என்று பார்ப்பேன். திடீரென்று பின் பக்கம் புசு புசுவென்று குறுகுறுக்க, யாரோ மூச்சு விடுவதைத் தொடர்ந்து ஒரு மெலிதான உறுமலும் கேட்க அலறியடித்து, செம்பைக் கீழே போட்டுவிட்டு எழுந்து கொல்லைப் புறக் கதவை நோக்கிப் பாய்வேன். அந்தப் பன்றி எதுவும் நடக்காதது போல காரியத்திலேயே கண்ணாக இருக்கும். அவற்றுக்கெல்லாம் ஏன் பேய் பயம் இல்லை என்று நினைத்துக் கொள்வேன். காலையில் நான் அமர்ந்திருந்த இடத்தின் சுவடே இருக்காது.

பின்பு கொஞ்சம் வசதி கூடியதில், கொல்லைப்புறத்தில் எடுப்புக் கழிவறை ஒன்றை தாத்தா கட்டினார். கதவு கிடையாது. மேலே திறந்தவெளி. சுவர் மீது செம்பு இருந்தால் 'உள்ளே ஆளிருக்கிறது'.

செம்பை ஒரு நாள் யாரோ தூக்கிச் சென்றுவிட, தாத்தா கொல்லைப் புறத்தில் நின்று கொண்டு மொத்தத் தெருவின் கொல்லைப்புறத்திற்கும் கேட்கும் வண்ணம் தமிழிலுள்ள அனைத்து வசவுகளையும் வைதார். நான் யாராவது புதரிலிருந்து எழுந்து ஓடுவார்கள் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பின்பு செம்பு இருந்த இடத்திற்கு பழைய காம்ப்ளான் தகர டப்பா வந்து துருப்பிடித்து ஓட்டையாகும் வரை இருந்தது.

உள்ளே அமரும் முன் எழுந்து பக்கவாட்டாகப் பார்வையை வீசினால் அதே வரிசையிலிருக்கும் மற்ற வீடுகளின் எடுப்புக் கழிவறைகள் தெரியும். ஆங்காங்கே விதவிதமான செம்புகள் சுவர் மீது வைக்கப் பட்டிருக்கும். பாதி அறுத்த பிளாஸ்டிக் கேன், தகர டப்பாக்கள், வாளிகள், இன்ன பிற.

ரவுடிப் பையன்கள்; சொல்பேச்சு கேளாதோர் என்று பெயரெடுத்திருக்கும் நண்பர் குழுவில் அவ்வப்போது இணைந்து கொல்லைப் புறத்தில் பன்றி வேட்டையாடுவதுண்டு. வேட்டை என்றால் கல்லெறிந்து துரத்துவது. இரண்டு நாள் வயதான ஒரு குட்டிப் பன்றியை எப்படியோ தனிமைப்படுத்தி, கையில் தூக்கிப் பார்த்தபோது அது குறுகுறுவென்று என்னைப் பார்த்து 'வீ வீ!' என கால்களை உதைத்துக் கொண்டு அலற, பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு உறுமிக்கொண்டு வந்துவிட்ட தாய்ப் பன்றிக்குப் பயந்து, அதை மெதுவாக இறக்கிவிட அது மானை விட வேகமாக ஓடி தாயின் வயிற்றுக்கடியில் நின்று கொண்டது. கல்லடி பட்டு நொண்டிக்கொண்டு சென்ற இன்னொரு குட்டியைப் பார்த்ததிலிருந்து வேட்டையை விட்டுவிட்டேன். 'குட்டில பன்னி கூட அளகா இருக்கும்' என்பது யாருடைய டயலாக் என்று தெரியவில்லை.

இயற்கையின் அவசர அழைப்புகள் நேரங்கெட்ட நேரத்தில் வந்து கழுத்தறுக்கும் போது எழும் கோபமும், இயலாமையும் மிகுந்த சங்கடத்தைத் தரக் கூடியன. ஆனால் பார்ப்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் நகைச்சுவையாக இருக்கும்!

வத்திராயிருப்பு ஆரம்பப் பள்ளியில் படித்தபோது, பள்ளியிலும் கழிவறை வசதிகளில்லை. பையன்களுக்கு பள்ளியின் பின்பக்கச் சுவரையொட்டி மணல் ஓடிக் கொண்டிருந்த அர்ச்சுனா நதிதான் கழிப்பறை. சில நேரங்களில் அங்குச் செல்ல மறந்து போய் வீட்டுக்கு வரும் வழியில் உந்தப்பட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்து சேர்ந்து, பையைத் திண்ணையிலேயே எறிந்துவிட்டுக் கொல்லைப்புறத்திற்கு மின்னலாக ஓடியமர்ந்து விடுதலை பெற்றிருக்கிறேன்! மூன்றாம் வகுப்பு படித்த அதே தெருப்பையன் அரைக்கால் சட்டையிலேயே ஆய் போய் வாத்தியார் பாதி வகுப்பில் வீட்டுக்கு அனுப்பி விட்டார். அப்படியே கால்களில் சந்தன அபிஷேகத்துடன் நடந்து வந்து வீடு சேர்ந்த கதையை நீண்ட நாள்கள் சொல்லிச் சிரித்தோம். அவனை 'ஓட்டைக் கு**' என்று பட்டப் பெயரிட்டு அழைத்தோம்.

87-ல் நாயகன் படத்தை தீபாவளியன்று முதல் காட்சி பார்த்துவிட்டு- பெரும்பாலான தியேட்டர் கழிவறைகளில் கால் வைக்கவே முடியாது- வெளியே வரும்போதுதான் சிறுநீர்ப்பை முழுதும் நிரம்பியிருப்பதை உணர்ந்தேன். அடுத்த அடி எடுத்து வைப்பதே பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. சிரிக்கவோ பேசவோ முடியவில்லை. எவ்வித ஒலியெழுப்புவதற்கும் லேசாகவாவது அடிவயிற்றை எக்க வேண்டும். அந்நிலையில் எக்கினால் வெடித்துவிடும் அபாயத்திலிருந்தேன். காலைக் காட்சியானதால் நடுப்பகலில் தெருவில் எங்கும் ஒதுங்க முடியவில்லை. கொடுமைக்கு ஒரு சந்து கூடச் சிக்கவில்லை. அருகிலிருக்கும் பொதுக் கழிப்பறைக்குக் குறைந்த பட்சம் இரண்டு கிலோமீட்டர்கள் செல்லவேண்டும். அந்நிலையில் பைக் ஓட்டுவதை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அதிலும் என் வண்டி யெஸ்டி. அதை ஸ்டாண்டிலிருந்து விடுவிப்பதற்குள் அணை உடைந்துவிடும். இன்னும் ஐந்து நிமிடங்கள் கூடத் தாங்காது என்று தெரிந்து ஒவ்வொரு நிமிடமும் யுகமாகக் கழிந்தது. நான்காவது நிமிடத்தில் அனைத்து வெட்க, மான, அவமானங்களைப் புறந்தள்ளி அருகிலிருந்த வீட்டின் கதவைத் தட்டிக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு- பெரிய மனது பண்ணி அனுமதித்தார்கள்- முடிந்து வெளியே வந்து படிக்கட்டில் நின்றுகொண்டு ஆழமாக மூச்சு இழுத்தேன் பாருங்கள். சுதந்திரத்திலேயே மிகப்பெரிய சுதந்திரம் அதுதான் என்று தோன்றியது. அப்படியே நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளலாம் போல இருந்தது.

இதுமாதிரி மாட்டிக்கொண்டு தவித்த பல சந்தர்ப்பங்கள்!

முசிறியில் இருந்தபோது, தள்ளாத வயதில் 'ஒட்டன்' என்று அழைக்கப்பட்ட வயசாளியொருவர் வீட்டுப் பின்புறமிருக்கும் சாக்கடையை வாரித் தள்ள தினமும் வருவார். அங்கு கழிப்பறைகள் இருந்த வீடுகள் மிகச்சில. பெரும்பாலான வீடுகளில் கொல்லைப்புறத்தில் கிணற்றடியில் துவங்கி சாக்கடை ஒன்று இருபத்தைந்தடிக்கு நீண்டு நின்றுவிடும். அதற்கப்புறம் முட்புதர்கள். நீர் வடிந்து மண்ணில் கலந்துவிடும். வீட்டின் கழிவுகள் அதன் வழியாக வெளியேற, அதுவே கழிப்பறையாகவும் பயன்பட்டது. அடிக்கடி அடைத்துக் கொள்வதால், ஒட்டன் தினமும் வந்து அதைத் தள்ளி விடுவார். நிறைந்திருக்கும் சாக்கடையை அவர் தள்ளி முடித்ததும் தரை தெரியும்.

அவருக்குக் கூன் முதுகு. பாதத்திலிருந்து முதுகு வரை நான்கடி உயரமிருந்தார். நிமிர்ந்து நின்ற காலங்களில் ஐந்தரையடி இருந்திருக்க வேண்டும். முழங்கால் வரை கருப்பாக சாக்கடை அப்பியிருக்க, பாதங்கள் ஏதோ வேற்றுக்கிரக ஜந்து போன்று விரிந்திருக்கும் விரல்களுடன் அகன்றிருக்கும். சில வருடங்கள் கழித்து மதுரையில் ஈ.ட்டி. திரைப்படத்தைப் பார்த்தபோது அவர் நினைவுதான் வந்தது.

அம்மா அவருக்கென ஒரு அலுமினியத்தட்டை கொல்லைப்புறத்தில் வைத்திருந்தார். தினமும் தூர்வாரி முடித்ததும், அவருக்குப் பழையதும் புதியதும் கலந்த சாதமும் குழம்பும் தட்டில் வைத்துத் தருவார். கிணற்றடியில் கைகளை நன்கு கழுவிக் கொண்டு குத்துக்காலிட்டு அமர்ந்து சாப்பிடுவார். அப்பா வருகிறாரா என்று அடிக்கடி வாசலை நோட்டம் விடுவது என் வேலை. சாப்பிட்டு முடித்து தட்டைக் கழுவி வைத்துவிட்டுக் கொல்லைப்புற முட்புதர்களூடே சென்றுவிடுவார். முட்செடி சிறிது நேரம் ஆடிக் கொண்டிருக்கும்.

அவர் எங்கிருந்து வருகிறார்? அவர் வீடு எங்கே இருக்கிறது? எதற்காகக் கொல்லைப்புறமாகவே வந்து செல்லவேண்டும் போன்ற பல கேள்விகளுக்கு நீண்ட நாள்களாக விடை கிடைக்கவில்லை.

திடீரென்று அவர் வருவது நின்றுவிட்டது. வீட்டுவேலை செய்ய வரும் காமாட்சியிடம் அம்மா கேட்டதில் விசாரித்துக் கொண்டு வந்து அவர் செத்துப் போய்விட்டதாகச் சொன்னாள். அப்பாவிற்குத் தெரியாமல் நான் இரண்டு நாள்கள் சாக்கடையைத் தள்ளிப் பார்த்தேன். முதல் சில வினாடிகளுக்கு லேசான அருவருப்பு உணர்வு எழ, 'நமது கழிவுக்கு நாம் ஏன் அருவருக்க வேண்டும்?' என்று கேட்டுக் கொண்டு, ஒரு வேலையாக அதை எடுத்துக் கொண்டு தள்ளினேன். கிணற்றில் வாளி நிறைய நீர் இறைத்து, ஒரே வீச்சு. அந்த வேகத்திலேயே தள்ளினால் மூன்றாம் வாளி நீரை வீசும்போது சாக்கடை சுத்தமாகி விடும். அவருக்கான அலுமினியத் தட்டு நீண்ட நாள்கள் கொல்லைப்புறத்திலேயே இருந்தது. மழை நீர் மஞ்சள் நிறத்தில் தேங்கி பூச்சிகள் அதில் குடியிருந்தன.

யானை லத்தியைப் போடுவதற்காக அதன் பிருஷ்டத்தின் பின்னாலேயே ஒரு கோஷ்டி அலைந்து கொண்டிருக்கும். நானும் அதில் சேர்த்திதான். வாலைத் தூக்கி சிறுநீர் கழித்துவிட்டுப் போடும் லத்தி தரையைத் தொட்டதும்தான் தாமதம். 'யேய்...' என்று ஆரவாரத்துடன் எகிறிக் குதித்து அதன் மீது நர்த்தனமாடுவோம். லத்தியை மிதித்தால் 'படிப்பு' வரும் என்ற நம்பிக்கை. களிமண்ணை மிதித்திருந்தாலாவது குயவனுக்குப் பயன்பட்டிருக்கும் போல. சில சமயங்களில் பள்ளி முடிந்து வீடு வந்து சேரும் முன்பே யானை தெருவுக்கு வந்துவிட்டுப் போயிருக்கும். ஏற்கெனவே போட்டு மிதிக்கப்பட்ட லத்தியின் மீது ஏமாற்றத்துடன் நடந்து சென்றிருக்கிறேன். காட்டழகர் கோயிலுக்குச் செல்லும்போது காட்டு யானைகள் என்றோ போட்ட லத்திகள் காய்ந்திருக்கும். பார்த்து மிதிக்காவிட்டால் உள்ளங்கால்களுக்குச் சேதம் நிச்சயம்.

சிறு வயதில் அறியாமையினால் எத்தனையோ தவறுகள் செய்திருக்கிறேன். அசுத்தம் செய்திருக்கிறேன். இன்று அனைத்து வசதிகளிருக்கின்றன. குழந்தைகளை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறோம். அக்ஷரா பிறந்ததும், என் அம்மா அவருடைய பருத்திப்புடவைகளில் சிலவற்றை எடுத்து துண்டு துண்டாக அறுத்து என் மனைவியிடம் கொடுத்திருந்தார். அப்புடவை தரும் சில்லிப்புச் சுகம் தாயின் மடிக்குச் சமானம். குழந்தையை அப்புடவையில் படுக்கவைத்தோம். குழந்தை அடிக்கடி கழியும் போது, துணி மாற்றிக்கொண்டே இருப்பார் மனைவி. என் மடியை பலமுறை நனைத்திருக்கிறாள் அக்ஷரா. அம்மா, 'பன்னீராபிஷேகம்; சந்தனாபிஷேகம் - கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கணும்டா' என்பார். போதாக் குறைக்கு பாட்டி 'அது பருப்புத் துவையல் மாதிரி' என்று சிரிக்க, தங்கை 'ஐயே...' என்று ஓடுவாள். குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள். ஷாப்பிங் மால்-இல் பல மணி நேரம் செலவழித்ததும் திடீரென்று மூன்று வயது துர்கா கால்களை இடுக்கிக் கொண்டு 'ஐயோ.. ஒண்ணுக்கு வருது' என்று ஆணியடித்தாற்போன்று நின்றுவிட பரபரப்பாக கழிவறை தேடி ஓடுவதும் நடக்கிறது. குழந்தைகள் - நாமும் முன்பு இப்படித்தான் இருந்தோம் என்று நினைத்துக் கொள்கிறேன். என்ன. என் காலத்தில் ஷாப்பிங் மால் என்று எதுவும் கிடையாது. பக்கத்துச் சந்திலோ ஓரச்சாக்கடையிலோ போய்க்கொள்ள வேண்டியதுதான்.

எரிமேலியிலிருந்து பம்பைக்கு நடக்கையில் எங்கெங்கும் காற்றில் வியாபித்திருக்கும் மல நாற்றம். பேருந்து நிலையங்களின் பொதுக் கழிவறைகள். ரயில் பெட்டிக் கழிவறைகள். திரையரங்குகளின் இடைவேளையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு நுழையவேண்டியிருக்கும் கழிவறைகள்.. பேருந்திற்குக் காத்திருக்கையில் அருகில் நிற்கும் நபர் பேருந்தின் முதல் படிக்கட்டில் ஏறும் முன்பு புளிச்சென்று துப்பிவிட்டு ஏறுவது. திரையரங்குகளுக்குள் ஓர இருக்கை வரிசையிலிருக்கும் நபர்கள் துப்பி வைப்பது... மருத்துவ மனைகளின் கழிவு மலைகள்.. தனி அல்லது பொதுக்கழிவறை வசதிகளில்லா மக்கள் பயன்படுத்தும் பிரம்மாண்டமான ஆற்றங்கரையாகிய கழிவறை; தெருக்களின் இருள் சந்துக் கழிவிடங்கள்; இவற்றைப் பார்க்கும்போது கழிவிடங்களின் மத்தியில் வாழ்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது.

இதற்காகத்தான் சொல்கிறார்களோ 'இந்தியர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள்' என்று? அருவருப்பைத் தாங்குவது எளிதாகி, அருவருக்காமல்கூட இருக்க முடிகிறது.

காவிரிக் கரையையே கழிவறையாகப் பயன்படுத்தும் மக்கள் அநேகம்பேர். காவிரி என்ன- எந்த நதியின் கரைகளும் தப்பியதாகத் தெரியவில்லை. மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளிக்கச் செல்லும்போது, ஆங்காங்கே கரையில் நிழலாக அமர்ந்திருக்கும் பெண்கள் சட்டென எழுந்து கொண்டு நாங்கள் கடக்கக் காத்திருப்பார்கள். பரிதாபம். ஆண்களுக்கு நேரங்காலம் கிடையாதே. நாள் முழுதும் யாராவது ஆங்காங்கே அமர்ந்திருப்பார்கள். கவனமாக நடக்கவேண்டும். தவறினால் போச்சு. 'எங்கிட்டோ கழுவின தண்ணிதான இங்கிட்டு வருது. இதுலயா குளிக்கறது?' என்று நண்பர்களிடம் விசனப்பட, 'அதெல்லாம் மண்ணு வடி கட்டிரும். இது சுத்தத் தண்ணி. இங்க பாரு' என்று சொல்லிவிட்டு உள்ளங்கைகளில் நீரை ஏந்தி உறிஞ்சிக் குடிக்கும் நண்பனைப் பார்த்து இமைக்காது யோசித்திருக்கிறேன். சில இடங்களில் இடுப்பளவு நீர். சில இடங்களில் முழங்காலளவு நீர். சில இடங்களில் மணல் மேடுகள். படித்துறையை ஒட்டித் தேங்கிய நீர். இதுவே ஆடிப்பெருக்கைத் தவிர்த்த காலங்களில் காவிரியின் வடிவம். எவ்வளவோ விளையாட்டுகள் விளையாடுவோம். ஓடியாடிக்கொண்டிருந்த நண்பன் இடுப்பளவு நீரில் திடீரென்று அசைவின்றி இருக்க, 'என்னடா?' என்றால் 'ஒண்ணுக்கடிக்கறேண்டா' என்று ஈயென இளித்தான். வேறு வழியில்லை. தண்ணீரிலில்லாவிட்டால் கரையில் போவான். எப்படியும் நதி அசுத்தமாவது நிற்கப் போவதில்லை. ஒவ்வொரு முறையும் நதியில் நீராடச் செல்கையில் இவற்றைப் பார்த்து வெறுத்துப் போயிருக்கிறேன். அதுவும் நல்ல வசதிகளோடு வாழ்பவர்கள் கூட நதிக்கரையில் அமர்வதைப் பார்த்து ஆத்திரம் பொங்கும். 'எனக்கு மட்டும் சக்தியிருந்தால், தரைக்கடியில் அதிவேகமாகச் செல்லும் மிருகம் ஒன்றைப் படைத்து, அதை நதிக் கரைகளினடியில் உலவ விட்டு விட வேண்டும். யாராவது உட்கார்ந்தால் போதும். அந்த மிருகம் மின்னல் வேகத்தில் அந்த நபரை அடைந்து, திடீரென்று வெளிப்பட்டு ***க் கடித்து வைக்க வேண்டும். அதிர்ச்சியில் ஆயுசுக்கும் அவன் உக்காரக் கூடாது' என்று கற்பனை செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் இரும்புக்கை மாயாவியின் இரும்புக்கையை மாட்டிக் கொண்டு பல்பைக் கழற்றி ஹோல்டரில் கை வைத்து மாயமாக மறைந்து, கரையில் அசிங்கம் செய்பவர்களின் ***யை நசுக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

மிகவும் உணர்ச்சிப் பெருக்குடன் 'காவிரித் தாய்' என்று நாம் முரசறைந்து சொல்லிக் கொள்வதைப் பார்த்தால் கேவலமாக இருக்கிறது. 'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் *பிழைக்காதே*' என்று சொல்லி என்ன பிரயோஜனம்? தாயின் மீது மலமும் சிறுநீரும் கழிக்கும் பிள்ளைகள் நாம்- அசிங்கம்; அவமானம்.

அது சரி. ஏழை மக்களையும் குறைசொல்லிக்கொண்டேயிருக்க முடியாது. இருப்பதே தீப்பெட்டி வீடு- அதுவே சிலருக்கு ஆடம்பரம்- இல்லாவிட்டால் எங்கே போவார்கள்? பொதுஜனங்களுக்கு வசதி வாய்ப்புகளை இன்னும் அதிவேகத்தில் அரசாங்கம் மேம்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. பள்ளியிலேயே சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதை ஒரு ஒழுக்கமாகவே பயிற்றுவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பள்ளியில் படிக்காதவர்களுக்கும்கூட சுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரசாரங்களை முடுக்கிவிட வேண்டும். கோயில் போன்று பல பொதுவிடங்களைக் கூசாது அசுத்தப் படுத்துபவர்களைக் கடுமையாக எச்சரித்துத் தண்டிக்க வேண்டும். நாம் முன்மாதிரியாக இருக்கும் பட்சத்தில், குழந்தைகள் தவறு செய்ய வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போதைய நிலையில் குற்றம் பார்க்கின் மட்டுமல்ல- சுத்தம் பார்க்கினும் சுற்றம் இல்லாது போய்விடும் போல இருக்கிறது.
***

3 comments:

சீமாச்சு.. said...

Dear Sundar,
ellathaiyum kilariteenga.. :(
endredrum anbudan
Seemachu

Sundar Padmanaban said...

//அதை சுத்தம் செய்பவர்களின் நிலையை கொஞ்ஞம் யோசித்துப் பார்த்தீர்களா?
//

பல்லவி. கொஞ்சமல்ல. நிறையவே யோசித்திருக்கிறேன். அவர்களைப் பற்றி மட்டுமல்ல. அவர்கள் நிலையில் என்னை நிறுத்திப் பார்த்தும் யோசித்திருக்கிறேன்.

வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.

சீமாச்சு சார். உங்களுக்கும் நன்றி.

Unknown said...

சுந்தர்,
நிஜத்தை எழுதியுள்ளீர்கள்.

சுகாதாரத்தின் முக்கியம் தெரியாதவர்களுக்கு அது போதிக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே உள்ள கழிவறைகள் நல்ல முறையில் கவனிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் சுற்றுப்புறத்தை பாதுகாப்பதில் முக்கிய பொறுப்பு உள்ளது.