Tuesday, December 13, 2005

* மூன்றாம் உலகத்திலிருந்து ஏழாம் உலகம் பற்றி.. *

* மூன்றாம் உலகத்திலிருந்து ஏழாம் உலகம் பற்றி.. *


கருப்பு அட்டையுடன் நெளியான "ஏழாம் உலகம்" என்ற தலைப்பைப் பார்க்கும் போதே உள்ளே என்னவோ செய்தது. புத்தகம் வாங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் ஏனோ அதைப் படிக்கவே தோன்றாமலிருந்தது. படிக்கத் தொடங்கியதும், அட்டையின் கருமை உள்ளிறங்கி, நம்மை அந்த இருள் உலகத்திற்கு இழுத்துச் செல்கின்றன நிகழும் சம்பவங்கள்.

சபரிமலைக்கு முதன்முதலாகச் சென்றபோது "அழுதை ஏறும் போது அழாதவர்களும் அழுவார்கள்" என்று என்னுடைய குருசாமி சொல்லக் கேட்டிருக்கிறேன். மனோ பலத்தைச் சோதிக்கும் மலையேற்றங்கள் அழுதையும் கரியும். புறம் மறுத்து வலி மறுத்து மதம் கடவுள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பிரபஞ்சத்தை இயக்கும் அருவச் சக்தியையே நினைத்து ஒரு மோன நிலையில் பெரிய பாதையில் நடந்து சென்ற எட்டு வருடங்களிலும் - கடந்து செல்ல முடியாத - உடல் கடந்தும் மனம் நிலை கொண்ட இடம் - அழுதை ஏற்றமும் கரிமலை ஏற்றமும் - அந்த ஏற்றங்களில் நிறைந்து சரிந்திருக்கும் ஏழாம் உலகத்தின் மனிதர்கள். புகழ்பெற்ற ஸ்தலங்களிலெல்லாம் அவர்கள் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சாதாரண மனிதர்களுக்கே வலியின் உச்சத்தைக் காட்டும் அவ்வேற்றங்களில் அவர்கள் மிகவும் சாதாரணமாக பாதையோரத்தில் கையேந்திக்கொண்டு கிடப்பது அசாதாரணமாக எனக்கு அப்போது தோன்றிற்று.

அவர்களது இறைஞ்சல்களிலும், கையேந்துதல்களிலும் தெரிந்த இயந்திரத் தன்மை உறுத்தியது. 'இவர்கள் எப்படி இவர்களாகவே இம்மாதிரி இடங்களுக்கு வந்திருக்க முடியும்? இருள் சூழ்ந்ததும் எங்கு செல்வார்கள்? சபரிமலை யாத்திரை காலம் முடிந்ததும் எங்கு செல்வார்கள்? எப்படிச் செல்வார்கள்?" என்று மனதைப் பல கேள்விகள் குடையும். அப்படி மனதுக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு மனமே மேலோட்டமாக விடையைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் "இதோ பார் நிதர்சனமாக" என்று இழுத்து அதன் விஸ்வரூபத்தை காட்டியிருக்கிறது ஏழாம் உலகம்.

Heal the World என்ற மைக்கேல் ஜாக்ஸனின் பாடலைப் கேட்டிருக்/பார்த்திருக்-கிறீர்களா? ஒவ்வொரு முறை அழுதை ஏறும்போது அதுவரை வாயில் புரண்ட சரணங்கள் நின்று இப்பாடலும் ஏற்றத்தின் ஓரங்களில் கிடக்கும் ஏழாம் உலக மனிதர்களையும் பொருத்திப் பார்த்து மனம் உழலும். ஏற்றம் ஏறி முடிக்கும் வரை சிந்தனைகள் இயக்கமற்று இருக்கும். அப்படிக் கடந்து செல்லாமல் அவர்களோடு அமர வைத்து அவர்களது வாழ்வை வாழச் செய்த பயங்கர அனுபவத்தை ஏழாம் உலகம் வாசகனுக்குத் தருகிறது.

இங்கு சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரியைப் பற்றியும் குறிப்பிட (கவனிக்க: ஒப்பிட அல்ல) விரும்புகிறேன். ஸீரோ டிகிரிக்கும் ஏழாம் உலகத்திற்கும் எனக்குப் பட்ட முக்கியமான ஒற்றுமை - "வலி". ஸீரோ டிகிரியைப் படிக்கும் போது, இருட்டறையில் தள்ளப்பட்டு கண் மண் தெரியாமல் யாராரோ அடித்ததைப் போன்ற வலி எழுந்தது.

ஏழாம் உலகத்தில் அடித்து நொறுக்கப்பட்டு, முடக்கப்பட்ட காயங்களுடன், பேசா மடந்தைகளாக சமூகத்தின் அடித் தட்டிற்கும் கீழே -மனிதர்களாகவே பாவிக்கப்படாத - பாவப் பட்டவர்களாக - தன் மீதே கூட தான் உரிமை கொண்டாட முடியாத - அவல மனிதர்களிடையே வாழ்ந்த வலியை உணர முடிந்தது. இதில் கொடுமையின் உச்சம் அவர்களைச் சுற்றியிருக்கும் வியாபாரிகள் செய்யும் குரூரங்கள் கூட இல்லை. இந்தக் குரூரத்திற்குப் பலியாகும் இம்மனிதர்கள் - அவர்களது கதியே அதுதான் என்று ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை தொக்கி நிற்கும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடத்தி வருவதுதான். அவர்களது மனதில் வன்மம் என்ற ஒரு உணர்வே இல்லாததுபோல் மரத்துப்போய் இருப்பதுதான் நெஞ்சை அறுக்கிறது.

ஒவ்வொரு முறையும் அவர்களை நாம் தாண்டிப் போவோம். காசு போட்டு - சில சமயம் முகம் திருப்பிக்கொண்டு - அவர்களது "அம்மாஆஆ"வும் "அய்யா சாமிஈஈஈ"யும் நம் புலன்களால் புறக்கணிக்கப்பட்டு.

கசாப்புக் கடைக்காரன் இறைச்சியைத் துண்டு போடும் போது சலனமற்ற அந்த முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா?அவனுக்கு ஆடுகளும், புல்லும் ஒன்றுதான். ஆடுகளைக் கொல்லும்போதும் அறுக்கும் போதும் அது அவன் மனதில் எவ்விதச் சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவற்றை அவன் உயிருள்ள பிராணியாகவே பாவிப்பதில்லை. அன்பு பாராட்டுவதில்லை. வாளை இறக்கியதும் துண்டான தலை தனியே கிடக்க, உடல் தள்ளாடித் தள்ளாடி விழுந்து துடித்து ஓயும். ரத்தம் பீறிட்டு அடிக்கும். அவன் அதைப் பாத்திரத்தில் பிடித்து, தோலுரித்து கூறுபோட்டு கம்பியில் தொங்கவிடும் அனைத்துச் செயல்களும் இயந்திர கதியாக இருக்குமேயொழிய எந்தவித உணர்வுகளுக்கும் அவற்றில் இடமில்லை. ஆனால் வீட்டுக்குள் அவன் ஒரு மனிதன். அவனுக்கும் பாசம், நேசம், குடும்பம், குழந்தைகள் என்று உண்டு. காமம் உண்டு; காதல் உண்டு; கூடலும் ஊடலும் உண்டு. பிள்ளைகள் தூங்கும்போது பார்த்து நெகிழும் இதயம் உண்டு. வலி உண்டு. ஆனால் வாசல்படி தாண்டி விட்டால் அவன் வேறு மனிதன். கோழியின் படபடக்கும் இறக்கைகளைச் சட்டை செய்யாது கழுத்தைத் திருகிக் கொல்லும்போது அது குழம்பாகவோ கறியாகவோ காசாகவோ அவன் மனதில் மாறிக் கொண்டேயிருக்குமே தவிர உயிர் வதையோ வலியோ அல்ல. இந்த நுட்பமான மனநிலையை அற்புதமாக பண்டாரம் என்ற பாத்திரத்தின் மூலம் ஏழாம் உலகத்தில் விவரித்திருக்கிறார் ஜெயமோகன்.

அங்கஹீன மனிதர்களைப் பிச்சையெடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் அந்தப் பண்டாரத்தை ஒரு விதத்தில் என்னால் கசாப்புக் கடைக்காரனோடு ஒப்பு நோக்க முடிகிறது.

கதையில் வரும் பிரதான வியாபாரியான பண்டாரத்தைப் பொருத்தவரை, அந்தக் குறை மனிதர்கள் அனைவரும் 'வியாபாரப் பண்டங்கள்'. பண்டாரத்தின் பாஷையில் 'உருப்படிகள்'. அந்தக்காலத்தில் கிராமங்களில் சலவைத் தொழிலாளர்கள் வீடு வீடாகப் போய் 'உருப்படிகளை' எண்ணி எடுத்துக்கொண்டு சலவை செய்து தரும்போது வீட்டுக்காரர்கள் 'உருப்படிகளை' எண்ணிச் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கூலி கொடுப்பது வழக்கம். இந்தக் கதையின் உருப்படிகள் ரத்தமும் சதையுமுள்ள மனிதர்கள். காலோ கையோ கண்ணோ இல்லாத உடற் குறைபாடுள்ள மனிதர்கள். அவர்களைப் பண்டாரமும் அவரைப் போல அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் - கசாப்புக் கடைக் காரனைப் போல - எவ்வித உறுத்தல்களும் உணர்வுகளும் இன்றிக் கையாளுவதும், நடைபெறும் கொடூரச் சித்திரவதைகளும், நெஞ்சைப் பதறச் செய்கின்றன.

'இம்மாதிரி அரக்க மனிதர்கள் இருக்கிறார்களா?' என்று மனம் கேள்வி கேட்டுக்கொண்டு, நம் சொந்த அனுபவங்களை ஒப்புமைப் படுத்திப் பார்க்கும் போது 'ஆமாம். இருக்கிறார்கள்' என்று பதிலும் சொல்லிக்கொண்டு பதட்டத்துடன் படிக்கிறது.

நாவலைப் படிக்க நிறையவே மனோதைரியம் வேண்டும். கதையைப் படிக்கும்போது அதில் ஒன்றிப் போகச் செய்து கதாசிரியனை மறக்கடிக்கும் எழுத்து நல்ல எழுத்து. ஏழாம் உலகம் நல்லெழுத்துகளால் எழுதப்பட்டு ஜெயமோகனைச் சிந்தனையிலிருந்து காணாமல் போக்குகிறது.

'உருப்படிகளின்' உலகத்தில் நாம் செய்யும் அதே புறக்கணிப்பை அவர்கள் நமக்குச் செய்கிறார்கள். அவர்களது உலகம் தனியாக இயங்குகிறது. எந்தவித எதிர்ப்புகளும் இல்லாமல் உத்தரவுக்குக் கீழ்ப்பட்டு நடக்கும் பிராணிகளைப் போல - வதைபடுகிறார்கள்.

மகாநதி திரைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனம் "அய்யோ" என்று அலறி பதறும். நமக்கு இந்நிலை வந்துவிடக் கூடாது என்று தன்னிச்சையாக இறைவனை நினைத்துக் கொள்ள வைத்த படம் அது. ஆனால் ஏழாம் உலகத்தை வாசித்தபின்பு முகத்தில் அறையும் நிஜம் நம் சமூகத்தின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்து எள்ளி நகையாடுகிறது.

எல்லாம் வல்ல இறைவனின் காலடிகளில் நடைபெறும் மனிதத்தன்மையற்ற குரூரங்களையும் இந்தப் பாவப்பட்ட உருப்படிகளையும் இறைவன் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கும்போது சமூகம் என்ற பிடிப்பின் மீதே நம்பிக்கை போய்விடுகிறது. இறைஸ்தலங்களைச் சுற்றி நிகழும் அவலங்கள் - அதுவும் தவறு செய்கிறோம் என்ற உணர்வின்றி நிகழும் அவலங்கள் - இதுவரை வாழ்வுக்கு ஆதாரம் என்று நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளையெல்லாம் தவிடுபொடியாக்குகிறது. எதைத்தான் இனிமேல் நம்பி வாழ்வது என்று பயமாகவும் இருக்கிறது.

புரையோடிய புண்ணின் மேல் தோலைச் சுற்றிச் சுரண்டிச் சுகம் காணும் சமூகத்தைத் தோலுரித்துக் காட்டி -புண்ணின் வலியை, எரிச்சலை உணரச் செய்கிறது இந்நாவல்.
கொடூரத்தின் உச்சமாக முத்தம்மையை மலக்காட்டில் அவளது மகனை வைத்தே வன்புணர்ச்சி செய்ய வைப்பது. முத்தம்மையைத் தவிர வேறு யாருக்கும் அவன் அவளது மகன் என்று தெரியாது. தெரிந்திருந்தாலும் பண்டாரமோ அல்லது அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ எந்தவித சிலிர்ப்பும் காட்டியிருக்க மாட்டார்கள். அது எப்படியும் நிகழ்ந்திருக்கும் என்பது முகத்திலறையும் நெஞ்சை உலுக்கியெடுக்கும் உண்மை. காவலர்கள் இயலாத பெண்ணைக் கொண்டுசெல்வதும், இடுப்பொடிந்து மலவண்டியில் அவளைக் கிடத்திக்கொண்டு திரும்பக் கொண்டுவந்து கோவில் படிகளில் வசூலுக்காகப் போட்டுவிட்டுப் போவதும் - இதுபோன்ற பதறவைக்கும் குரூரங்கள் கதை நெடுகிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. படிப்பது இருக்கட்டும். இதை எழுதவே மிகுந்த மனோதிடம் வேண்டும்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் வெளிவாசலையொட்டி முன்பு கழிவறைகள் இருந்தன. அவ்வப்போது காவல்துறையினர் லத்தியைச் சுழற்றிக்கொண்டு அங்கு போவதும், திடீரென்று கழிவறைகளிலிருந்து அலங்கோலமாக பெண்கள் தலைதெறிக்க ஓடுவதை நான் பல முறைக் கண்டிருக்கிறேன். எலும்புக் கூடுகளோ என்று சந்தேகப்படும்படி மிகப் பரிதாபமாகக் காட்சியளிக்கும் அப்பெண்கள் ஓடும்போது அவர்களது பின்னேயும் மேலேயும் கீழேயும் நெருக்கி மிதிக்கும் சமூகக் கட்டமைப்பை நினைத்து மிகவும் வருந்தியிருக்கிறேன். அவர்களின் கண்களில் வயிற்றுப்பசி தெரியும்.

அருவருப்பு என்று நாம் புறந்தள்ளும்; ஒதுக்கும் ஒரு சமூகத்தின் அவலத்தை - எடுப்புக் கக்கூஸில் அமர்ந்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு காரியத்தை முடித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் - பார்க்க மறுத்து - ஓடி வருவதுபோல, பாதாளத்தில் வாழும் பாவப்பட்ட ஜென்மங்களை மறுத்துக்கொண்டே வாழும் இச்சமூகத்தில் வாழ்வதையே அருவருப்பான செயலாக உணர வைத்திருப்பது இந்நாவலின் வெற்றி என்பது என் கருத்து.

ஒரு படைப்பின் வாசிப்பனுபவத்தை எழுதும் போதெல்லாம் படைப்பிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகளை உள்ளிடுவது என் வழக்கம். ஏழாம் உலகத்தைப் பொருத்தவரை என்னால் அதைச் செய்ய இயலவில்லை. குரூரங்களும் வக்கிரங்களும் பாவகாரியங்களும் கொட்டிக்கிடக்கும் எழுத்துகளை எடுத்து மேற்கோள் காட்டுவது - ஜெயமோகனே முன்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது போல - என் புலன்களை கூசச் செய்வதாக இருக்கிறது. முடியவில்லை.

சுருக்கமாக - இப்புத்தகத்தின் வாசிப்பு ஒரு பயங்கரக் கனவு - இவையெல்லாம் கனவுகளாகவே இருக்கக்கூடாதா என்று அழ வைக்கும் பயங்கர நிஜங்கள் - ஒரு விதத்தில் பார்த்தால் 'உருப்படிகள்' அவர்களல்ல - நாம்தான் என்று தோன்றுகிறது.

நிறையவே வலிக்கிறது. நீண்டகாலம் வலிக்கும்.

***

7 comments:

Unknown said...

//எல்லாம் வல்ல இறைவனின் காலடிகளில் நடைபெறும் மனிதத்தன்மையற்ற குரூரங்களையும் இந்தப் பாவப்பட்ட உருப்படிகளையும் இறைவன் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கும்போது சமூகம் என்ற பிடிப்பின் மீதே நம்பிக்கை போய்விடுகிறது. இறைஸ்தலங்களைச் சுற்றி நிகழும் அவலங்கள் - அதுவும் தவறு செய்கிறோம் என்ற உணர்வின்றி நிகழும் அவலங்கள் - இதுவரை வாழ்வுக்கு ஆதாரம் என்று நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளையெல்லாம் தவிடுபொடியாக்குகிறது. எதைத்தான் இனிமேல் நம்பி வாழ்வது என்று பயமாகவும் இருக்கிறது.//

சுந்தர்,
இதில் அபத்தம் என்ன என்றால் இது போன்றவர்களுக்கு பிச்சை போடுவதே புண்ணியமுன்னு நினைக்கும் நம்ம சனங்களின் மன நிலை. இதுவே இறைத்தலங்களில் இந்த வியபாரத்தை கூட்டுகிறது. அதுவே அடிப்படையும் கூட. எல்லா ஊர், நாடுகளிலும் தான் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிச்சையை ஒரு கார்ப்பரேட் தொழிலாக கடவுளின் நம்பிக்கையில் தோய்த்து நடத்துவது நம் ஊரில் மட்டுமே.பழனியாகட்டும்,நாகூராகட்டும் அல்லது வேளாங்கன்னியாகட்டும் இதே நிலைமைதான்.

ramachandranusha(உஷா) said...

சுந்தர் 'ஏழாவது உலகம்" பற்றி முன்பு தோழியர் வலைப்பதிவில் எழுதியது.

//எனக்கு தெரிந்த ஒருவர், பிறரை தரக்குறைவாய் பேசுவது, கொஞ்சமும் உண்மையில்லாமல் பழிப் போடுவது என்று சகல மோசமான குணங்களும் கொண்டவர். வயது ஆக, ஆக அவரின் இந்த குணங்கள் மாறாமல் அதிகரிக்கத்தான் செய்தது. அவரின் இந்த நடத்தை அவரின் பிள்ளைகளைப் பாதித்தப் பொழுதும் அவர் பேச்சில், நடவடிக்கையில் எந்த குற்றவுணர்வும் இல்லாமல் நிம்மதியாய் வாழ்ந்து, உயிரை விட்டார்.

"ஏழாவது உலகம்" ஜெயமோகன் அவர்களின் சமீபத்திய படைப்பு. குறையுள்ள பிறவிகளை வாங்கி, விற்பது, உருவாக்குவது, அவர்களைக் கொண்டு பிச்சை எடுத்து சுக போக வாழ்க்கை வாழ்வது என்று எந்த மனசாட்சி உறுத்தலும் இல்லாமல் பண்டாரமும் அவர் மணைவியும் வாழ்கிறார்கள். செய்த பாவம், செல்லமாய் வளர்த்த பெண் ஒரு கேடு கெட்டவதுடன் ஓடிப் போய் விபசாரியாய் மாறுகிறாள். இன்னொரு மகள் திருமணத்திலும் பிரச்சனைகள், ஏமாற்றங்கள்! அப்போதும் பண்டாரத்துக்கும், அவர் மனைவிக்கும் நாம் யாருக்கும் மனமறிந்து
எந்த கெடுதியும் செய்யவில்லை, அதனால் நமக்கு நல்லதே நடக்கும் என்ற நினைப்பு

கையில் எடுத்தால் வைக்க முடியவில்லை. நெஞ்சை நெகிழவைக்கும், பதறவைக்கும், சிரிக்க வைக்கும் சம்பவங்கள் நிறைய உண்டு. படித்து முடித்ததும் தோன்றிய எண்ணம்- இனி பழனிக்குப் போக மனம் வராது. எந்த பிச்சைக்காரருக்கும் காசு போடவும் கூடாது. ஆனால் இதில் ஜெயமோகனின் மற்ற நாவல்களில் இருக்கும் இலக்கிய செறிவு இல்லை என்று நண்பர் ஒருவர் கூறினார்.
வாசகனை திணற அடிக்கும் எழுத்துதான் இலக்கியமா? நேர்கோட்டில் பயணிக்கும் கதைகள் இலக்கியமாகாதா? ஜெயமோகனின் நடை இனி இதேப்போல சரளமாய் இருக்குமா? கதையும் இனி இப்படி சாதாரண வாசகர்களுக்கும் புரியும்படி இருக்குமா?//

Boston Bala said...

நாவலை இனிமேல்தான் படிக்க வேண்டும். படித்தாலும், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறேன் என்னும் கழிவிறக்கமே விஞ்சி நிற்கலாம்...

---வலியின் உச்சத்தைக் காட்டும் அவ்வேற்றங்களில் அவர்கள் மிகவும் சாதாரணமாக பாதையோரத்தில்---

திருப்பதி மலையில் செங்குத்தான் தொடர் படிக்கட்டுகளில் ஏறும்போது இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இருபது அடிகள் கூடவே நடந்து வந்து 'அண்ணா... அண்ணா..' என்று இறைஞ்சும் போது பயமாக இருந்தது. இதே போல், ஒவ்வொரு நாளும் இவ்வொருவரிடமும் 20 படிகள் ஏறி, இறங்கி பிச்சையெடுக்கிறாள். என்ன உழைப்பு... எவ்வளவு அலுப்பாக இருக்கும்...

கொடிய நோய்.

SnackDragon said...

முன்பு வாசித்த "எழாவது உலக" விமர்சனங்களோடு ஒத்துப்போவதாகவே உள்ளது. நல்லதொரு பார்வை. நாவலை இனி வாசிக்கவேண்டும்.

Sundar Padmanaban said...

கல்வெட்டு

//இது போன்றவர்களுக்கு பிச்சை போடுவதே புண்ணியமுன்னு நினைக்கும் நம்ம சனங்களின் மன நிலை//

கண்ணு முன்னாடி அலங்கோலமா நகரக்கூட முடியாம ஒரு உயிர் கிடக்கும்போது எந்தக் கல்மனசானாலும் ஈரம் கசியத் தான் செய்யும். அதுதான் இதுபோன்ற வியாபாரிகளுக்குச் சாதகமான விஷயம். இவ்வியாபாரிகளை ஒழிச்சுட்டா இந்த 'உருப்படிகளை' யார் காப்பாத்தறது?

அரசு கடுமையா நடவடிக்கை எடுத்தா இதைச் சரிசெய்ய முடியும். நடவடிக்கைங்கறது போலீஸை விட்டு இவங்களை அடிச்சு வெரட்றது இல்லை! உடலால் ஊனமடைந்தவர்களுக்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைச்சு, இவங்களை - அவங்களே மறுத்தாலும் - வலுக்கட்டாயமாகக் கொண்டுபோய் சேர்த்துடணும்.

Sundar Padmanaban said...

உஷா, நன்றி.

//இலக்கிய செறிவு இல்லை //

அது என்ன செறிவோ அவங்களுக்குத்தான் வெளிச்சம்!!

Sundar Padmanaban said...

பாலா

//கொடிய நோய். //

மிகவும் சரி. உடனடியாக ரணசிகிச்சை செய்து குணப்படுத்தவேண்டிய கொடிய நோய்தான். இல்லாவிட்டால் இச்சமூகத்தைக் காப்பாற்றுவது கடினமாகிவிடும் - மனித மனங்களில் தொக்கி நிற்கும் ஈரத்தையும்தான்.